சனி, 20 நவம்பர், 2010

நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்


பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம். அதாவது மானம், கல்வி, அறிவு, தவம், தாளாண்மை, பலம், வன்மை, தானம், முயற்சி, காதல் என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும். ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின் பத்துடன் பதினொன்றாக அரிய உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.


மனித வாழ்விலே சந்தோஷம் என்றாலே இனிப்பு என்பதே பொருள். ஆனால் அளவுக்கு மீறினால் அமர்தமும் நஞ்சு என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாறே இன்மையைக் கொடுக்கும் இந்த இனிப்பு நமது இரத்தத்தில் அதிகமாகும்போது அதுவே நமது உயிரைக் குடிக்கும் விஷமாக மாறுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.


நம் வயிற்றுப் பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும் சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறி இரத்தத்தில் கலக்கும்போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரை நமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen) சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிளைக்கோசன் குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டுமென்றால் நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.


நீரிழிவு நோய் இன்சுலின் அளவு குறைவதாலும் (Insulin Deficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின் சரிவர உபயோகப்படுத்தப் படாமல் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிHyperglycemia என்ற நிலை ஏற்படுகிறது. இதையே நாம் சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyaria)
2. அடிக்கடி சிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (Excesssive Thirst)
3. களைப்புத் தன்மை (Weakness)
4. எடை குறைவு (Weight Loss)
5. பசி அதிகரித்தல் (Increased appetite)
6. நாவறட்சி (Dry mouth)
7. காயம் ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.


நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்
ரெட்டினா பகுதி பாதிப்படைவதனால் கண் பார்வையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு டயபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) என்று பெயர். அதிகளவு சிறுநீர் கழிப்பதனாலும் சிறுநீரகங்களின் அதிகளவு செயற்பாட்டின் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு டயபடிக் நெவ்ரோபதி (Diabetic Nepropathy) என்று பெயர். இரத்தக்குழாய்கள் சுருக்கமடைவதினால் கை, கால் என்பனவற்றின் இழையங்களுக்குத் தேவையான போஷாக்குச் சரிவரக் கிடைக்கப் பெறாததினால் கலங்களுக்குத் தேவையான போஷாக்கின்மையால் கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதன் அறிகுறியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கறுத்தும் உணர்ச்சியற்றும் போகின்றன. இதுவே டயபடிக் கங்கரின் (Diabetic Gangrene) என்றழைக்கப்படுகிறது. இதனால் நாம் பாதிப்பேற்படும் உறுப்பை இழக்க வேண்டியும் வரலாம். இது மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய்கள் என்பனவும் ஏற்படவும் வாய்ப்புண்டு. அத்துடன் சர்க்கரை வியாதி கை, கால் நரம்புகள், எலும்புகளையும் பாதிக்கின்றன. இது டயபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) எனப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பிடிப்பு, வலி, எரிச்சல் மற்றும் மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தெரியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளை எடுத்த பின்னர் உணவு உட்கொள்ளத் தவறுவதும் அதாவது உண்பதில் நேரந்தவறாமை கடைப்பிடிக்கப்படாமையும், பயத்தினால் சர்க்கரையின் அளவை அளவிற்கு மீறிக் குறைப்பதும் கூட ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரையின் அளவு குறைந்தால் (Low Blood Sugar) மயக்கம், உடல் வியர்த்தல் போன்றவை ஏற்படும்.


இந்நிலையைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரையோ அன்றி இனிப்புகள் எதாவதோ கைவசம் வைத்திருத்தல் அவசியம். சர்க்கரைக் குறைவை கவனித்து நிவர்த்தி செய்யவிடின் மேலும் குறைந்து கோமா (Coma) நிலை ஏற்படும் அபாயம் உண்டு.

நமது உடலில் சர்க்கரை அதிகமானாலும் சரி, குறைந்தாலும் சரி பாதிப்பு நமக்குத்தான். எனவே நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூலிகைகள், உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொள்வதன் மூலம் எந்தவிதமான பின்விளைவுகளும் இன்றி நன்றாக வாழலாம் என்பது உறுதி.


தேவையான மூலிகைகள்
வேப்பிலை, வில்வம், அத்தியிலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, மாவிலை, வெற்றிலை எல்லா இலைகளையும் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதிலிருந்து இரண்டு தேக்கரண்டி தூள் எடுத்து நீரில் கலந்து காலை, மாலை இரவு உணவிற்கு முன்பாக உண்டுவர பலன் கிடைப்பது உறுதி.


உணவு முறைகள்
தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்தமல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடியளவு அவித்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் இயற்கை உணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போது சர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இயற்கையுணவுகளினால் இன்சுலின் இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும் பக்க விளைவுகளான பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.


சாதாரணமாகவே மனிதனாகப் பிறந்த எவரும் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் என்றும் நலமாக வாழலாம். 


கட்டுப்பாடு என்பது உணவில், உடலில், உணர்வில் என்று மூன்றிலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.


1. அதாவது முதலில் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதாவது சுயக்கட்டுப்பாடு (Self Control). தமக்கு வந்திருக்கும் நோயைப் பற்றியே சிந்தித்துப் பயந்து இன்னும் நோயை அதிகரித்துக் கொள்ளாது இது நோயே கிடையாது, இதை என்னால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என உணர்தல் வேண்டும். இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் தவிர்க்கப்படும்.


2. தம்மை உணரப் பழகிக் கொள்ள வேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் அன்றாடப் பழக்க வழக்கங்களில் ஒரு முறைப்பாட்டை உண்டாக்கிக் கொள்ளல் என்று பொருள். அதாவது Systematic எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது. இதில் மருந்து பாவிக்கும் முறைகள், உணவுமுறைகள் என்பன அடங்கும்.

3. தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளல்.


4. மனம் ஒரு குரங்கு. எனவே அதை அடக்கியாளப் பழகுதல், அதாவது எதையும் சாதிக்கும் ஆர்வம் நம்மை நாம் தன்னம்பிக்கைக்குள் தோய்ப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தன்னம்பிக்கையே எந்த ஒரு வெற்றிக்கும் உரமாக அமைகிறது. இதுவே நோயை வெல்வதற்குரிய சக்தியை வழங்குகிறது.


5. மனவுறுதி என்பது அதாவது எதையும் தாங்கக் கூடிய இதயம். அது இயற்கையாகவே நம்மிடத்தில் அமைத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.


இவையே நாம் நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். இத்தகு பயிற்சிகளை மேற்கொள்வதனாலேயே நாம் இந்த நோயிலிருந்து விடுபடும் உணர்வை (Relax) அடைவதோடு நோயிருப்பினும் நோயற்ற நூற்றாண்டு வாழ்வைப் பெற்றவர்களாவோம்.

ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நீரிழிவு நோய் வந்தாலும், அதனை ஒரு நோய் உபாதையாகக் கொள்ளாமல் நோயையே வென்று வாழ்வோமாக.


சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் பாதிப்பும்


இரத்தக் கொதிப்பு நோயை Silent Killer என்கிறார்களே அதன் காரணத்தைப் பார்ப்போம். 


டைபாய்டு, மலேரியாவைப் போல ரத்தக் கொதிப்பு 200/120 இருப்பவர் கூட சர்வ சாதாரணமாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவருடைய உடலில் விபரீத விளைவுகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கும். அது அவருக்குத் தெரியாது. முக்கியமாக ரத்தக் கொதிப்பினால் இதயம் வீங்கிவிடும். இதயச் செயலிழப்புக்கும் பாதை தரும். மூளையில் ரத்தக் குழாய் வெடித்து பக்க வாதம் வர வழிவகுக்கும். கண்களில் உள்ள விழித்திரையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பார்வை இழக்க நேரிடும். இதயத்தமனி ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி மாரடைப்பைத் துரிதப்படுத்தும்.


சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து அது சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். நீரிழிவு நோய்க்குரிய சிக்கல்களைத் துரிதப்படுத்தும். இத்தனை கொடிய விளைவுகளும் ஒரே நாளில் நிகழந்துவிடாது. சிறுகச் சிறுகத் தான் நிகழும். ஆனால் அது நோயாளிக்குத் தெரியாது. ஆகையினால் தான் இந்தப் பெயர். 


மேலே சொல்லப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்குத் தென்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. உடனடியாக அவர் தனது மருத்துவரை கலந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மாறாக நூற்றுக்கு நாற்பது பேருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சர்க்கரை நோய் இருக்கலாம். அவர்கள் வேறு ஏதாவது நோய்களுக்காக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் போது தான் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதையும் அறிய முடியும்.


ஆகையால் நடைமுறையில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பது ரத்தப் பரிசோதனைதான், குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் இந்த நோயை உறுதிப்படுத்தலாம். ரத்தச் சர்க்கரை அளவும் இதற்கு உதவும். உணவு உட்கொள்ளாத நிலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 120 மில்லி கிராம் சதவீதமும், உணவு உட்கொண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும்போது, சர்க்கரையின் அளவு 120 முதல் 160 மில்லி கிராம் சதவீதமும் இருக்க வேண்டும். இதற்குக் கூடுதலாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இருந்தால் அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது எனத் தீர்மானிக்கலாம்.


பொதுவாகவே இந்த சர்க்கரை நோய் என்பது, பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய் இருந்தால், தங்கள் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்பு 100 சதவீதம். இவை தவிர உடல் பருமனாக இருப்பது, உடற்பயிற்சி இல்லாதது, மனக்கவலை, உற்சாகமற்ற வாழ்க்கை முறைகள், தொடர்ச்சியாக ஏற்படும் தொற்று நோய்கள், அடுத்தடுத்து கருத்தரிப்பது ஆகிய காரணங்கள் சர்க்கரை நோய் ஏற்படுத்த வாய்ப்பாகும். அவற்றில் இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய், இன்சுலின் சாரா சர்க்கரை நோய் என்று இரு வகைகள் உண்டு. முதலாவது வகை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது வகையினர் தேவைப்படும் காலங்களில் மட்டும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம். மற்றபடி சர்க்கரை நோய் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டாலே போதும். அது கட்டுப்படுவதோடு பிற பிரச்னைகளையும் ஏற்படுத்தாது.


முக்கியமாக கொழுப்புச் சத்துள்ள உணவை குறைத்து உணவை கட்டுப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் அளவோடு உண்டு, தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்த பலனை அளிக்கும். உடற்பயிற்சியும் கூட முடிந்தால் காலை, மாலை என இருவேளைகளிலும் செய்தல் நல்லது.


உடல் எடையை உங்கள் வயதிற்கேற்ப கட்டுப்படுத்துங்கள். மனக் கவலைக்கு இடம் அளிக்காதீர்கள். பழங்களை சாப்பிடும்போது கூட ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, கொய்யா இவற்றில் ஏதாவது ஒன்றில் தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம். நாவின் ருசிக்கு ஆசைப்பட்டு அளவு கூடினால் ஆபத்துதான். பழங்களில் கூட வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை விலக்க வேண்டும். புரதச் சத்து உணவுகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம். சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு தினமும் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். இடைவேளை நேரங்களில் சுண்டல், காய்கறி சூப் சாப்பிடலாம். காபியில் சர்க்கரையை குறைத்தல், நார்ச்சத்துள்ள காய்கறிகள், இனிப்பு குறைந்த எந்த வகை உணவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றியுடன் பகிரப்படுகிறது: றொசாரியோ ஜோர்ஜ்யின் ''வளமான வாழ்விற்கு உணவே மருந்து.''

செவ்வாய், 16 நவம்பர், 2010

10.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 

 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 

பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.



என் குறிப்பு: 
அன்பு வாசகர்களுக்கு.வணக்கம். இயற்கை நலவாழ்வியல் தொடரை படித்து வரும் உங்களுக்கு ஒரு சில வரிகள். வெளிச் சுத்தம் எவ்வளவு முக்கியமானதோ அதைப் போலவே உள்ளுறுப்புக்களை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். கீழே காணும் குறிப்புகள் மிகவும் முக்கியமானவை. அலட்சியம் செய்யாமல் சரியான இயற்கை நலவாழ்வியல் பயிற்சியாளரின் உதவியுடன் இந்த முறைகளை பின்பற்றினால் உங்கள் ஆரோக்கியம் என்றென்றும் நீடிக்கும். மேலே படியுங்கள். 
அஷ்வின்ஜி. 
வாழி நலம் சூழ.. 
  
பகுதி 10

கண் குவளை
இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும்.  அல்லது ஒரு  நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம்.  இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி.  பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும்.  இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும். இந்த குவளையில் கண்ணை  வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக  இருக்கும்.  இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.  

மூக்கு குவளை
இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும்.  சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்கி  கொள்ளவும்.  அதற்கென உள்ள சாதனத்தில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும்.  முன்புறம் வளைந்து தலையை மேல்புறமாக திருப்பி வைத்து  கொள்ளவும்.  வாயின் வழியாக மூச்சு விட்டுக் கொண்டு நீரை சிறிது சிறிதாக வலது நாசியில் விடவும்.  நீர் இடது நாசி வழியாக வெளியேறும்.   இதையே இடது நாசிக்கும் மாற்றிச் செய்யவும்.  இது சுவாச சம்பந்தமான பிரச்சனைகளான சளி, சைனஸ், ஆஸ்துமா, டிபி(காச நோய்) போன் றவைகளுக்கு பயன் தரும். 

எனிமா
இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கிறது.  மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும்.  எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும்.  உடல் நோய் வாய்ப்படும்.   மலச்சிக்கலினால் உடல் உஷ்ணம் அடைகிறது.  இது மூல வியாதிக்கு காரணம் ஆகிறது.  நாம் வாய் கொப்பளிப்பது போல எனிமா குவளையை  குடலை கழுவ பயன்படுத்தலாம்.  மலச் சிக்கல் இருந்தால் இதனை தினமும் பயன் படுத்தவேண்டும்.  மலச்சிக்கல் இல்லாமல் இருக்க அதிக நார்ச்  சத்துள்ள உணவு(இயற்கை உணவு) உண்ண வேண்டும்.  இயற்கை உணவும் உண்டு நாக்கில் வெள்ளை படலமும் இல்லாமல் இருந்தால் வாரம் 1 முறை எனிமா எடுத்தால் போதுமானது.  மலம் ஒட்டுவது மலச்சிக்கலை குறிக்கிறது.  குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாம். தலை வலி,  காய்ச்சல், சளி தொந்தரவுக்கு இதை பயன்படுத்தலாம்.  சமையல் உணவில் இருப்பவர்களுக்கு இது பயன் தரும்.
 
எப்படி உபயோகப்படுத்துவது?
எனிமா கப்பை தண்ணீர் ஊற்றி தலைக்கு மேலே ஒரு உயரத்தில் தொங்க விடவும்.  பின் நாசில் வழியாக தண்ணீரை மலத்து வாரத்திற்குள் முன்புறம் குனிந்தவாறு செலுத்தவும்.  நாசிலில் சிறிது எண்ணெய் பூசிக் கொள்ளலாம்.  தண்ணீர் அனைத்தும் குடலுக்குள் சென்ற  பிறகு 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும்.  படுத்திருந்தால் மலத்தை அடக்க எளிதாக இருக்கும்.  பலனும் நன்றாக இருக்கும்.  பிறகு மலம்  கழிக்கலாம்.  குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கழிவுகள் எல்லாம் வெளியேறும்.  குடிப்பதற்காக பயன்படுத்தும் நீரையே இதற்கும் பயன்படுத்த  வேண்டும். 

(தொடரும்)
நன்றி: திருமதி இரதி தேவி, கோவை.

திங்கள், 15 நவம்பர், 2010

 
இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


இடம்: இயற்கை வாழ்வு நிலையம் 
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்) 
குலசேகரன் பட்டினம் 
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். 







 
ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள: 
 
திரு. மூ.ஆனையப்பன், 
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )
 
 
9944042986, 9380873465 




நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.