செவ்வாய், 26 ஏப்ரல், 2011

4. கனி இருப்ப..
(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்)

பகுதி நான்கு.

இந்தத் தொடருக்கு பொருத்தமான செய்தியை ஒரு வலைப்பூவில் கண்டேன் அதனை இங்கே மீள் பதிவாக இடுகிறேன்.

உலகில் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என ஒவ்வொருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மருத்துவ முறையை நாடுகின்றனர்.

சமீபகாலமாக ‘இயற்கை மருத்துவம்’ உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.

இயற்கை மருத்துவம் என்றால்…?

தாவரங்கள் ஊசி போடுமா…?

மரங்கள் மருந்து தடவுமா…?

என்றெல்லாம் கேலியாகக் கேட்கலாம்.

ஆனால் இயற்கை மருத்துவத்தின் தாத்பரியம் அதுவல்ல.மனிதன் ஆரோக்கியமாக வாழவும், அவனது உடலில் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்யவும் இயற்கையிலேயே எண்ணற்றத் தீர்வுகள் இருக்கின்றன.

மருத்துவ மாத்திரைகளை நம்பி வாழும் நவநாகரிக மனிதனுக்கு வேண்டுமானால் இயற்கை மருத்துவம் என்பதும், அதன் தாத்பரியங்களும் புதிதாக, புதிராக இருக்கலாம்.

ஆனால் ஆதி மனிதனுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமல்ல. மனிதன் படைக்கப்பட்ட புதிதில் இயற்கையோடு கை கோத்துக் கொண்டு தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆதிமனிதனின் ஆரோக்கியத்திலும் எந்தக் குறையும் இல்லை. அதில் குறைபாடு ஏற்பட்டாலும் இயற்கையில் இருந்தே அவனது பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது.

இயந்திரங்களின் பெருக்கத்தால் காற்று, நீர், அண்டவெளி, மண் போன்ற இயற்கையின் செல்வங்கள் அனைத்தும் மாசடைந்தன. அதன் விளைவாக, மனிதன், விலங்கு, பறவை, தாவரங்கள் மற்றுமுள்ள உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இயல்புக்கு மாறான தோற்றங்கொண்டு, நோய்களைப் பெற்றுக் கொண்டன.

நாகரிகமும் விஞ்ஞானமும் வளர வளர மனிதன் இயற்கையில் இருந்து விலக ஆரம்பித்தான். பிரச்னைகளுக்கான தீர்வுகளை மனிதன், தனது ஆதாரமான இயற்கையில் தேடாமல், செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தான்.

அதில் அவனுக்கு வெற்றியும் கிடைத்தது.

அந்த வெற்றியின் காரணமாக 'இயற்கையை வெல்லமுடியும்’ என்கிற ஆசையும், நம்பிக்கையும் அவனிடத்தில் உருவாகின. அதன் விளைவாகக் கண்டுபிடிப்புகள் பெருகின. இயந்திரங்கள் அதிகரித்தன.மனிதன், இயற்கையில் இருந்து முற்றிலுமாக அந்நியப்பட்டுப் போனான்.

தமிழ் மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும்போது, மொத்தமுள்ள நோய்களின் எண்ணிக்கை 4448 என்று தெரிய வருகிறது. அக்கணக்கு சுமார் ஆயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும்.

ஆனால், இன்றைய மருத்துவர்களை நோய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால், விழிக்கின்றனர். தினந்தோறும் புத்தம் புதிய நோய்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன.

அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், பல நோய்களுக்கு மருந்துகள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.

வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டிய உயிரினம், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறது. எந்த மருந்தாவது, எந்த நோயைத் தீர்த்து வைக்காதா? என்ற ஏக்கம் அனைத்து உயிரினங்களின் முகத்திலும் தெரிகிறது.

விலங்குகளையும் பறவைகளையும் தாவரங்களையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் மனித இனத்தையாவது காப்பாற்றியாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றது, மருத்துவம். அதனால்தான் பல்வேறு மருத்துவமுறைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு வழிவகைகளைக் கையாண்டு மனிதன் தன்னைத் தாக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடித்தான். அத்தகைய வழிகள் தான் சித்தா, ஆங்கிலம், ஆயுர்வேதம் எனப் பிரிந்தன.

இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பழங்கால மனிதன், ஆரோக்கியம் பாதிக்கப்படாத வகையில் தனது வாழக்கை முறையை அமைத்துக் கொண்டான். அதையும் மீறிஉடல் நிலை பாதிக்கப்பட்டபோது, இயற்கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டே அவற்றைச் சரிசெய்து கொண்டான். அவனது வாழ்க்கை முறையையும், தனக்குத்தானே அவன் செய்து கொண்ட சிகிச்சைகளையும் ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தித்தான் இயற்கை மருத்துவம் உருவாக்கப்பட்டது.

இயற்கையிலிருந்து உருவான என்பதால்தான் மற்ற மருத்துவமுறைகளை விட, இது மேலானதாகவும், சிறந்ததாகவும் கருதப்படுகிறது.

பரம்பரை நோய், ஓட்டு நோய், தொற்று நோய், உணவு நோய், உடை நோய், உறவு நோய், உவகை நோய் போன்ற எல்லாவிதமான நோய்களில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைச் சொல்வதுதான் இயற்கை மருத்துவம்.

தற்போது பூமியில் நிலவிவரும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் உருவாகிற நோய்ப்பெருக்கம் மனித இனத்துக்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தன்னையும் தன்னினத்துச் சந்ததிகளையும் பாதுகாக்கும் வல்லமையை இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கிறது.

இயற்கை மருத்துவம் அந்த வல்லமையைத்தான் உலகுக்குப் புரிய வைக்கிறது.

உண்மையில் இயற்கை மருத்துவத்தின் அடிப்படை என்ன?

மனிதன் உயிர் வாழவதற்கு வேண்டிய முதன்மை உணவாக சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவை உள்ளன. இவை இருக்கும் வரை, மனித உடல் இயங்குவரை பட்டினி என்பதே இருக்காது-. மனிதன் உண்ணும் உணவெல்லாம், மனித உடலுக்குத் தேவைப்படாதவை. சூரிய சக்தியே உலகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் தேவையான முதன்மை உணவு. அதுவே, ஆற்றலின் இருப்பிடம்.

இம்மண்ணில் பட்டினியால் இறப்போரைவிட, முறையற்ற உணவுப்பழக்கதால் இறப்போரின் எண்ணிக்கையே அதிகம். உணவுப்பழக்கத்தால், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் உண்டாகும் நச்சுகளை வெளியேற்றத் தெரியாமலும் பலர் இறக்கிறார்கள்.

உணவுப்பொருள்களினால் உடம்பில் ஏற்படும் நச்சுத்தன்மையை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்தி, உடல் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாக்கும் முறையே காய சுத்தி அல்லது அக சுத்தி எனப்படுகிறது. காய சுத்தி முறையைக் கற்றவர்களுக்குப் பட்டினி என்பதே கிடையாது.

மேலே சொல்லப்பட்டவை அனைத்துமே இயற்கை மருத்துவத்தின் கூறுகளே. காயசுத்தி முறையில் உடலைச் சுத்தம் செய்து, சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை உண்டு வாழ்ந்து ஆரோக்கியத்தைப் பராமரிப்பதே இயற்கை மருத்துவத்தின் மையமான அம்சம்.

பெருவாழ்வு ரகசியம்

நியாயமாகப் பார்த்தால் மனிதன் 300 ஆண்டுகள் வாழ வேண்டும்.

பழங்கால மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதற்குரிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சமைக்காத இயற்கை உணவை உண்டு வாழும் முயல் இனத்தில், முயல்குட்டி, பிறந்த 3 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. முயலின் வாழ்நாள் 60 மாதங்கள்.

ஆட்டுக்குட்டி, 6 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. ஆட்டின் வாழ்நாள் 120 மாதங்கள். பசு மாட்டின் கன்று, ஓர் ஆண்டில் பருவத்துக்கு வந்து கன்று போடுகிறது. பசுவின் வாழ்நாள் 240 மாதங்கள்.

மனித இனம் 15 ஆண்டுகளில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராவதால், மனித இனத்தின் வாழ்நாள் 3600 மாதங்களாக இருக்க வேண்டும்.

முயல்: 20*3=60/12=5 ஆண்டுகள்

ஆடு: 20*6=120/12=10 ஆண்டுகள்

பசு: 20*12=240/12=20 ஆண்டுகள்

மனிதன்: 20*180=3600/12=300 ஆண்டுகள்

மனிதனும் விலங்கும் பருவம் எய்தும் காலத்தைக் கொண்டு ஆயுள்காலம் கணிக்கப்படுகிறது.

இதுவே இயற்கை நியதியாகக் கருதப்படுகிறது.

உணவாகக் கருதப்படும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் இயல்புநிலை மாறாமல், பச்சையாக (அல்லது குறைந்த பட்சம் ஆவியில் வேகவைத்து) உண்டால் நீண்ட நாள் வாழலாம்.

ஆனால், நாம் அப்படிச் செய்வதில்லை. முறையற்ற உணவுப் பழக்கத்தையே நாம் பின்பற்றுகிறோம். நமது உணவில் பெரும்பான்மையாக இடம்பெறும் தாளித்த, வறுத்த உணவுகள் நமது வாழ்நாளைக் குறைக்கின்றன. அதோடு அசுத்தமான காற்றும் அசுத்தமான குடிநீரும் வாழ்நாளைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் புகை, மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு 60 வயதுக்கும் குறைவாகவே வாழ்நாள் அமைகிறது.

இவற்றையெல்லாம் மீறி நாம் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?

(நன்றி: http://thendral-thangavel.blogspot.com/2010/12/blog-post_25.html)

(தொடரும்..)


அடுத்த பகுதிக்கு: கனி இருப்ப... பகுதி ஐந்து
--

'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?