வெள்ளி, 20 ஜனவரி, 2012

14. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம் - அனுபவப் பகிர்வுகள்.

நான்காம் நாள் நிகழ்வுகள்-29-12-2011
வியாழக்கிழமை (நண்பகல்/பிற்பகல்)

அருவியில் ஆசைதீரக் குளித்து விட்டு திரும்பி கோவிலுக்கு வந்ததும் பூசை சிறப்பாக நடைபெற்றது.அன்பர்கள் கூடி நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்கள். எனது மொபைலில் இருந்து சிவபுராணத்தை இசைத்தேன். காட்டுக்குள் இருந்த கோவிலில் நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்று சிவபுராணம் இசைக்க எனக்கு கிடைத்த வாய்ப்பினை எண்ணி மகிழ்ந்தேன். அனைவரும் உணவுண்ண அமர்ந்தார்கள். இலைகள் போடப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவுடன் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. பழங்கள், இனிப்பு அவல் அதனுடன் சர்க்கரை பொங்கலும், தக்காளி சாதமும் வழங்கப்பட்டது. உணவருந்து முன்னர் பிரார்த்தனை செய்து முடித்ததும் உணவு உண்ணத் தயாரானார்கள். 

சமைத்த உணவைப் பார்த்ததும் எல்லோரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துத் தயங்கியதைக் கண்டு நான் உடனே நேற்றிரவு முகாமில் இருந்து திரும்பிய போதே இயற்கை நலவாழ்வியல் முகாம் நிறைவு பெற்று விட்டது என்று அறிவித்தேன். 

அதைக் கேட்டு தெளிவடைந்து, முகாம் வந்த நாளில் இருந்து சமைத்த உணவை சாப்பிடாமல் இருந்த அன்பர்கள் ஆர்வத்துடன் பிரசாதத்தை விரும்பி ருசித்து மீண்டும் பலமுறை கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள் நானும், பிரேமும் அவற்றை இறையருட் பிரசாதமாக ஒரு கை வாங்கி அருந்தினோம்.  

 திருமதி யுடன் திரு பாஸ்கர் (பி.எஸ்.என்.எல்)

 உணவுண்ணுமுன் பிரார்த்தனையில் நாகராஜன், 
சென்னை பாஸ்கர், குடந்தை ரமேஷ்.

பிரியா விடை பெறுகிறோம். 

 பூசாரி அவரது மனைவி மற்றும் காட்டைக் கடக்க  உதவி செய்தோருடன் 

கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்த பின்னர், பூசாரி, அவரது மனைவி, வழிகாட்டிவந்த பெரியவர் அனைவருக்கும் நன்றி சொல்லி வணங்கி மரியாதை செய்தோம். பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து திரும்பினோம். அணைக்கட்டுக்கு நாங்கள் சென்றபோது அப்போது தான் பழனி செல்லும் பஸ் புறப்பட்டு போயிருந்ததாக அறிந்தோம்.

உடனே உள்ளூர் அன்பர்கள் ஒரு மினி லாரியை ஏற்பாடு செய்து அதில் அனைவரும் ஏறி செல்லும் வழியில் ஒரு அன்பர் வீட்டில் நிறுத்தி இளநீர் அருந்த ஏற்பாடு செய்தார்கள். பின்னர் பாப்பம்பட்டி சந்திப்பில் இறங்கி உதவி புரிந்த அன்பர்களுக்கு மனதார நன்றி சொல்லி பழநிக்குச் செல்லும் பஸ்சில் ஏறி மாலை ஆறுமணி அளவுக்கு யோகாசாரியாவின் வீட்டை அடைந்தோம். 

அந்தக் களைப்பிலும் பழனி மலைக் கோவிலுக்குச் செல்லவிரும்பிய அன்பர் பன்னீர்செல்வம் ஐயாவுக்கு சிறப்பு அனுமதி நுழைவுச் சீட்டை யோகாசாரியா தந்தனுப்பினார்.கூட்டமாக இருக்குமோ நேரம் ஆகுமோ என்று நாங்கள் அவரைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க அவரோ வி.ஐ.பி வரிசையில் அனுமதிக்கப்பட்டு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி அருள்மிகு பழநியாண்டவரின் திருத்தரிசனம் கண்டு வணங்கி அகமகிழ்வுடன் திரும்பி வந்து எங்களுக்கு பிரசாதங்களை அளித்தார். 

கால்களும், உடலும் வெகுவாகவே தளர்ந்து போயிருந்த நிலையில் நான் யோகப் பயிற்சி மையத்திலேயே ஓய்வெடுக்க விரும்பினேன். நாளை காலை நிகழ்வாக அடிகளாரின் இருப்பிடத்தில் சுவாமி அபிஷேகம், பூசை நிகழவிருப்பதால் அதில் எங்களை கலந்து கொள்ள அடிகளார் எங்களை அழைத்திருந்தார். காலையில் முன்னதாகவே எழுந்து குளித்து விட்டு ஆறரை மணிக்கு அங்கே செல்ல வேண்டும் என்று தீர்மானமானது. முழு நாள் ஓய்வின்றி காட்டுப் பகுதிகள் சுற்றித் திரிந்து அருவியில் குளித்து விட்டு வந்திருந்த நாங்கள் இரவு உணவாக கொஞ்சம் பழங்களை உண்டு உடனே உறங்கிப் போனோம். 
(பகிர்தல் தொடரும்)
அடுத்து வருவது ஐந்தாம் நாள் நிறைவு விழா நிகழ்ச்சிகள்.

13. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வில் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்.

நான்காம் நாள் நிகழ்வுகள்-29-12-2011
வியாழக்கிழமை (முற்பகல்) 
தொடர்கிறது.
வண்ண ஓவியங்களாய் இயற்கை அன்னை எண்ணும் ஓவியக்காரி வரைந்து இறைத்திருந்த அழகிய சுற்றுச் சூழல்களை கண்களால் பருகிக் கொண்டே நாங்கள் சுமார் அரை மணிநேரம் நடந்த பின்னர் காட்டுக்குள் இருந்த கோவிலை அடைந்தோம். 
அதோ தெரிகிறது கோவில்.
உயரமான பாறை ஒன்று பின்னணியில் இருக்க ஆலமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க அந்த இடத்தில் கோவில் நேர்த்தியாக அமைந்திருந்தது.வலசு கருப்பண்ணன் என்கிற கிராம தேவதை (நம்மூர் ஐயனார் மாதிரி) சிவனின் அம்சம் என்கிறார்கள்.கோவில் பூசாரியும் அவரது மனைவியும் இன்முகத்தோடு வணங்கி எங்களை எதிர்கொண்டு வரவேற்றார்கள்.  விருந்தோம்பலின் அடையாளமாக எங்களுக்கு குடிக்க நீரும், மென்று தின்று பசியாற பச்சைக் கம்பும், இனிப்பு அவலும், பழங்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடந்த களைப்பு தீர முதலில் தண்ணீரை அருந்திய பின்னர் கடவுளை மனசாரத் தொழுதோம். பின்னர் அனைவரும் அமர்ந்திருந்து அவல் மற்றும் பழங்களை உண்டு கொஞ்ச நேரம் எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். 

 கோவில் வாசலில் யோகாசார்யாவுடன்...

 மலைக்கோவில் வாசலில்...

ரம்மியமான சூழலில் மலைக்கோவில்..

கம்பும் மலையூத்து தண்ணீரும் தந்த புத்துணர்வில் மேலும் அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். 
 கம்பும், வேர்க்கடலையும்.

கோவில் பூசாரி, அவரது மனைவியுடன் 
எங்கள் வழிகாட்டி.

அருவியில் குளித்து முடித்து நாங்கள் திரும்பி வருகையில் மதிய பூசை நடத்தப்பெற்று மதிய உணவாக இயற்கை உணவு, பழங்கள், மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் எங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என்று யோகா முருகன்ஜி சொன்னார். அருவியை அடைய மேலும் ஒரு மணி நேரத்துக்கு குறையாமல் நடக்க வேண்டிவரும் என்ற வழிகாட்டி எங்களை தொடர்ந்து வரச் சொல்லி விட்டு முன்னே நடக்கத் தொடங்கினார். 

நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம். மேலே செல்ல செல்ல பாதை கடினமாக இருந்தது. சில இடங்களில் தாவியும், குதித்தும், கம்பியில் நடப்பது போல பாலன்ஸ் செய்தும் செல்ல வேண்டி இருந்தது. குறுகலான பாதைகளை கடந்தோம். சில இடங்களில் பாறைகளில் நடக்க வேண்டி வந்த போது நீர் வழிந்து அந்த பாறை வழுக்குப் பாறையாக இருந்த போது கவனமாக அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டி இருந்தது. மேலே மேலே சென்ற பின்னர் வந்த வழியை திரும்பிப் பார்த்தோம். நாங்கள் கிட்டத் தட்ட அணைக்கட்டின் நேர்ப் பின்னால் இருந்ததை அறிந்து கொண்டோம். மலைகளில் வழிந்தோடி வரும் சிறு நீரோடைகள் ஒன்று திறந்து ஒரு அருவியாய் மாறி குதிரையாறு என்ற அருவியாறாக மாறுகிறது. 

செல்லும் வழியில் சில புற்களை பார்த்தோம். சாதாரண கோரைப் புற்களை போல இருந்த அவற்றை கசக்கி முகர்ந்து பார்க்கச் சொன்னார் எங்களது வழிகாட்டி. ஆஹா. என்னதொரு அற்புதம்! அது வெளிப்படுத்திய வாசனை தலைவலித் தைலத்தின் வாசனையாக இருந்தது.இந்த வாசனை தலைவலியை நீக்கி புத்துணர்ச்சியை தரவல்லதாம். இயற்கை அன்னையின் தைலப் புல்லைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்.  நவீன மருத்துவத்தில் இரசாயனங்களை கலந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட தைலங்களைத் தானே நாம் பயன்படுத்துகிறோம். அதைப் பார்க்கையில் இந்த வாசனையும் அது தரும் பயனும் எவ்வளவு மேம்பட்டது என எண்ணி வியந்தோம்.

மேலும் முன்னேறி செல்கையில் யானை போட்டிருந்த லத்தி(சாணம்)களைக் கண்டோம். யானைக் காலடித் தடங்களும் ஆங்காங்கே தென்பட்டன. மாலை நான்கு மணிக்கு மேலே யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்த நீர்நிலைப் பக்கமாக வருமாம். அவை வருவதற்குள் நாம் இந்த இடத்தில் இருந்து திரும்பிச் சென்று விட வேண்டும். 

செல்லும் வழியில் செத்துக் கிடக்கும் கழுதை.

 
மனசை உருக்கி திகிலையும் ஊட்டிய காட்சி.

நாங்கள் செல்லும் ஒரு குறுகிய வழியில் கழுதை ஒன்று செத்துக் கிடந்ததைக் கண்டு நாங்கள் அனைவரும் திகைத்தோம். துஷ்டமிருகங்கள் ஏதாவது அதனை கொன்றிருக்கலாமோ என்ற கலவரம் ஏற்பட்டது. வழிகாட்டி எங்கள் பயத்தைப் போக்கினார். 

அவர் சொன்ன முதல் பாயின்ட்:- 
  • கழுதை எந்த விலங்காலும் தாக்கப்படவில்லை. அதன் உடம்பில் எந்தக் காயமும் இல்லை.  எனவே உடல்நலக் குறைவால் அது இறந்திருக்கலாம். 
  • இரண்டாவது பாயின்ட்: இது காட்டுக் கழுதை அல்ல. பழக்கிய கழுதை. சுமை தூக்கி வந்த போது இயலாமல் இறந்திருக்கலாம்.அதனால் பயப்பட ஏதுமில்லை .
காரணம் என்னவாக இருப்பினும் தனிமைக் காட்டில் உயிரற்ற ஒரு சடலத்தை கண்ட காட்சி மனசை என்னவோ செய்தது. வாழ்க்கையின் நிலையாமையை எண்ணிக கொண்டே மேலே நடந்தோம். இன்னமும் சற்று தூரம் மலையேறிய பின்னர் தூரத்தில் அருவியைக் கண்டோம்.



 தொலை தூரம் காத்திருக்கு.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் மலையின் உச்சியில் இருந்து காணக் கண் கொள்ளாமல் ஓவென்று இரைச்சலோடு ஒரு அருவி கொட்டிக் கொண்டிருந்தது. 
அதுதான் குதிரையாறு அருவி
வழிகாட்டியுடன் பேசிக் கொண்டே வந்தோம். 'ரொம்பத் தொலைவில் ஒரு அருவி தெரிகிறதே அதுதான் குதிரையாறு அருவி.' என்றார் அவர். நான் கேட்டேன்: 'நாம் அங்கேயா செல்லப் போகிறோம்.? '

அவர்: 'இல்லையில்லை. நாம் இந்த சீசனில் அங்கே செல்ல முடியாது. இப்போது அங்கே செல்ல சரியான வழி இல்லை. மார்ச்சு மாதத்தில் தான் அங்கே செல்லலாம்.'  

நான்: 'அப்படியானால் இப்போது நாம் செல்லப் போவது?'

அவர்: 'நாம் இப்போது போகப் போகும் இடம். ஜமுக்காளப் பாறை அருவி (carpet falls) எனும் இடம். அந்த அருவியை அடைவதற்கு இன்னமும் நிறைய தூரம் கடந்தாக வேண்டும். அதற்கான நேரம் போதாது. எனவே அதற்கு முன்னதாக வரும் வண்ணான் துறை எனப்படும் இடத்தில் விழும் சிறு நீரருவியில் குளிப்பது பாதுகாப்பானது. இதற்கு மேல் பயணித்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மதிய உணவுக்கு கோவிலுக்கு திரும்ப இயலாமல் போய்விடும்.'

கொடைக்கானல் உச்சியில் இருந்து பேரிஜம் வழியாக பாப்பம்பட்டி பகுதிக்கு வரும் காட்டுப்பாதையில் தான் நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். இந்த மலைப்பாதையில் நிறைய ஊர்கள் உள்ளன. அவர்களது விளைபொருட்களை கீழே கொண்டுவர கழுதைகள் பயன்படுத்தப்படுமாம். அதில் ஒன்றுதான் நாங்கள் வரும் வழியில் பார்த்த செத்துப் போன கழுதை. இது போலவே கீழே உள்ள கிராமங்களில் இருந்தும் பல பொருட்கள் காட்டுப் பாதை வழியாக மலே உள்ள இந்த மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் கொண்டு செல்லப்படுமாம்.

பேசிக் கொண்டே நாங்கள் நடந்து வண்ணான் துறையை அடைந்தோம். அழகான சிற்றருவி ஒன்று எங்கள் கவனத்தை ஈர்த்தது. வண்ணான்துறை பகுதியில் பாதுகாப்பான ஒரு பாறையில் இருந்து நீர் அருவியாக கொட்டி கொண்டிருந்தது. அது ஒரு ஆழமான இடத்தில் தேங்கி மீண்டும் குறுகலான வழியில் ஒன்று திரண்டு குதிரையாறு அருவியில் சென்று சேர்கிறது. ஆழமான இடத்தில் அதிக பட்சமாக ஒரு ஆள் ஆழம்தான் இருக்கும். முதலில் இறங்கிக் குளித்த வழிகாட்டி எங்களை நீரில் இறங்கிக் குளிக்கச் சொன்னார்.

 
கச்சிதமாய் ஒரு சிற்றருவி

பாறையில் வழிந்தோடும் நீரருவி.

இந்த இடம் எங்(பெண்)களுக்கு ரொம்ப ரொம்ப பாதுகாப்பா இருக்கு.

யோகாசார்யா முருகன்ஜீயும் மற்றும் சில அன்பர்களும் தங்களுக்கு தேவையான இடங்கலாகப் பார்த்து தேர்ந்தெடுத்து குளிக்கப் போனார்கள். வண்ணான் துறை சிற்றருவிக்கும் சற்று தொலைவில் மேல் புறமாக ஏறிச் சென்று சரிவான பாறையில் வழிந்து வரும் அருவி நீரில் படுத்தும், அமர்ந்து தியானம் செய்தும், ஆசனங்கள் செய்தும் குளித்தார்கள். நானும் பிரேம்குமாரும், பி.எஸ்.என்.எல் பாஸ்கரும் சிற்றருவியில் குளித்தோம். 

தண்ணீர் தொடமுடியாத அளவுக்கு குளிராக இருந்தது. 

இறங்கி ஒரு முழுக்கு போட்ட பின்னரே குளிர் அடங்கியது. 

  பயணம் 'success' என்கிறார் பிரேம்.

 நடுக்கும் குளிரில் பனியன் பேண்டுடனே குளிக்கிறார் BSNL பாஸ்கர்.

எங்களுடன் வந்த இரு பெண்களும் இந்த இடம் பாதுகாப்பு என்பதினால் மகிழ்ச்சியாக குளித்தார்கள்.

 திருமதி பாஸ்கர், திருமதி தமிழ்செல்வி.

 மழலையாய் மனசு மாறி....

நேரம் போனது கூடத் தெரியாமல் குழந்தைகள் போல கவலை மறந்து குளித்துக் கொண்டிருந்த எங்களை வழிகாட்டி பெரியவர் இனிமேல் காலம் கடத்த வேண்டாம் என கூறி கோவிலுக்குத் திரும்ப சொன்னார். 

 
 மனமே இல்லாமல் கரை ஏறி..

 என்னாங்க அதுக்குள்ளவே வர சொல்றீங்க.?. (பிரேம்)

 டா.டா. பை. பை. போய் வருகிறோம்.

  'பசிக்குது பாஸ். கோவிலுக்குப் போலாமா?' -சொலாரிஸ் பாஸ்கர்.

'ச்சான்சே இல்லே.ரொம்ப ஜாலியா இருக்கு' -நாகராஜன்.

பிரிய மனமின்றி அனைவரும் அந்த அருவிப் பகுதியை விட்டு பிரிந்தோம். நன்கு குளித்ததில் பசி அதிகரித்து கோவிலை நோக்கி நடந்தோம்.
(பகிர்தல் தொடரும்)

வியாழன், 19 ஜனவரி, 2012

12. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் அனுபவப் பகிர்வுகள்.

நான்காம் நாள் நிகழ்வுகள்-29-12-2011
வியாழக்கிழமை (முற்பகல்)

குதிரையாறு நீர்த்தேக்கம் மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்டிருக்கிறது. மார்கழிக் குளிரில் கொடைக்கானல் மலைச்சாரலின் காற்று சில்லென்று வீசி எங்களை நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தது.மரங்களும், செடிகொடிகளும் செழித்து வளர்ந்திருக்க நீர்வளமும், நிலவளமும் செழுமை கூடி மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் கொடைக்கானல் மலைப்பகுதியில் பசுமை நிறம் மட்டுமே பல பரிமாணங்களில் ஒளி வீசிக் கொண்டிருக்க நாங்கள் அருவியை நோக்கிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.
குதிரையாறு அணைக்கட்டு.

 அருவியில் குளிக்கப் போகும் மகிழ்ச்சியில் 

 மனமொருமித்த அணி.

பாஸ்கர் சாப்பிடும் பழத்தை பறிக்க முயல்கிறார் நாகராஜன், 
'இது என்ன கலாட்டா?' என்கிறார் பன்னீர்செல்வம். 
கலாட்டாவை ரசிப்பவர் ஹரிஹரன்(அஷ்வின்ஜி).

பறவைகள் எல்லாம் மீன் பிடித்து பசி தீர்ந்த களிப்பில் பல ராகங்களில் கீதங்களை இசைத்து இயற்கையின் உன்னதமான ஒலியான அமைதியைக் கவலைப்படாமல் கலைத்துக் கொண்டிருந்தன.முன்பின் அறிமுகம் இல்லாத புதியவர்கள் காட்டுக்குள் நுழைந்தால் அவை தமக்குள் சங்கேதங்களைப் பறிமாரிக் கொள்ளும் வகையில் ஒலி எழுப்பிக் கொள்ளும் என்று எங்கோ புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. 

''யாரோ நம்ம காட்டுக்குள்ளே வராங்க. எல்லாரும் கவனமா இருங்க'' என்று அவை அறிவிப்பதை மற்ற மிருகங்களும் புரிந்து கொண்டு பாதுகாப்புக்காக அடுத்த நகர்வுகளை (தப்பிப்போ அல்லது திருப்பித் தாக்கு) மேற்கொள்ளும் என்றும் படித்திருக்கிற நினைவு வந்தது.

நாங்கள் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தோம். ஒருபுறம் மலைப் பகுதி உயர்ந்து கொண்டே செல்ல, மற்றொரு புறத்தில் நீர் நிலை விரிந்து எங்கள் பாதை நடுவில் வளைந்து பாம்பு போல நீண்டு சென்று கொண்டிருந்தது. கொஞ்சமாக உயர்ந்து கொண்டே பாதை எங்களை வனத்துக்குள் அழைத்துச் சென்றது.முதலில் சமவெளியாக தொடங்கிய பாதை பின்னர் கரடு முரடான, சீரற்ற, குண்டும், குழியுமான பாதையாக மாற ஆரம்பித்தது. உயரம் அதிகரித்த அதே வேளையில் மரங்களின் அடர்த்தியும் அதிகரித்துக் கொண்டே போனது.

ஓங்கிய பெருங்காடு...

நெடிய பயணம் துவங்கிவிட்டது..

 
எழிலோவியமாய்..

 
நீர்ப்பரப்பின் பின்னணியில் மேற்கு தொடர்ச்சி மலைகள்.

 
இயற்கை அன்னை வரைந்த எழிலோவியம்.

 அணைக்கட்டுக்கு பின்னே வந்தாச்சு.

இன்னொரு வண்ண ஓவியம்..

 நீண்டு செல்லும் மலைப் பாதை.

 அடர்ந்து காணும் காட்டு மரங்கள்.

இயற்கை தீட்டிய ஓவியம்..

கண்ணாடியாய் விரியும் நீர்ப்பரப்பில் மலையின் பிம்பம்..

மற்றொரு எழிலோவியம்...

எங்களுக்கு வழிகாட்டியாக வந்த பெரியவர் முன்னே செல்ல நாங்கள் அவரைப் பின்பற்றி முன்னேறிச் சென்றோம். நண்பர் பிரேம்குமார் காமிராவில் இருக்கும் இயற்கை காட்சிகளை வரும் வழியெல்லாம் படம் பிடித்துக் கொண்டே வந்தார். சில நேரங்களில் அவர் பின் தங்கிய போது வழிகாட்டி குரலெடுத்து அழைத்து எங்கள் அனைவரையும் ஒன்றாகவே தொடர்ந்து வரச் சொன்னார். 

ஒண்ணா நடக்கக் கத்துக்கணும்; 
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும், 
என்கிறார் யோகா முருகன்.

சில சமயங்களில் காட்டுப் பன்றி போன்ற சில மிருகங்கள் தனியாக வருபவரை மிரட்டவோ தாக்கவோ செய்யுமாம். வருபவர் தம்மை வேட்டையாட வருகிறார் என்ற அச்சமே இதற்குக் காரணம். கூட்டமாக செல்லும் போது இந்த மிருகங்கள் நம் பார்வையில் படாமல் பின் வாங்கி விடும் என்றார் யோகாச்சார்யா முருகன்ஜி. எனவே காட்டுவழிப் பாதையில் ஒன்றாகச் செல்லுவது நல்லது என்றார்.
(பகிர்தல் தொடரும்)

செவ்வாய், 17 ஜனவரி, 2012

11. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் அனுபவப் பகிர்வுகள்.

நான்காம் நாள் நிகழ்வுகள்-29-12-2011-
வியாழக்கிழமை (முற்பகல்/பிற்பகல்/மாலை)

அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து பழனிக்கு செல்லத் தயாரானோம்.முதல் நாள் இரவிலேயே மூன்று டூவீலர்களை எங்களிடம் தந்து விட்டார்கள். இனியன் குடும்பத்தினர் நால்வர் முதல் நாளிரவே சென்னைக்குப் புறப்பட்டு சென்று விட்டதால், எஞ்சி இருந்த நபர்களில் அறுவர் இருந்த மூன்று டூவீலர்களில் புறப்பட்டு பழநிக்குச் சென்றனர். இது போக மீதி மூவர்  பரிமளாதேவி, தமிழ்ச்செல்வி மற்றும் நான். எங்களை  கார் கொண்டு வந்து அழைத்துச் செல்வதாக முருகன்ஜி சொல்லி இருந்தார். வாகனத்தை எதிர்பார்த்து பள்ளி வளாகத்தில் நாங்கள் காத்திருந்த போது ஆறரை மணிக்கு முருகன்ஜியுடன் திருச்செந்தில் அடிகளார் எங்களை காரில் வந்து அழைத்துப் போனார். காலையிலேயே இரு சக்கர வாகனங்களில் சென்ற அன்பர்கள் எங்கள் பாதுகாப்பில் விட்டுச் சென்றிருந்த அனைத்து உடமைகளையும் வந்த காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு நாங்கள் பழனிக்குத் திரும்பினோம். உடைமைகளை யோகாச்சாரியாவின் வீட்டின் மேல் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள யோகபூரணவித்யா குருகுலத்தில் வைத்து விட்டு, அருவியில் குளிக்கத் தேவையான மாற்றுடை/துண்டு எடுத்துக் கொண்டு பழனி பேருந்து நிலையம் சென்றோம். 

அதற்கு முன்னதாக பரிமளாதேவி எங்களுடன் குதிரையாறு அணைக்கட்டுக்கு வராமல் பழனியில் உள்ள அவரது சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றுவிட்டு அன்றே கோவை செல்வதாக கூறி எங்களிடம் விடை பெற்றுக் கொண்டார். 

பேருந்து நிறுத்தத்தில் குதிரையாறு அணைக்கட்டுக்கு செல்லும் நகரப் பேருந்து எங்களுக்காக காத்திருந்தது. எங்களுடன் யோகாசாரியா முருகன்ஜி, BSNLபாஸ்கர் அவரது துணைவியார் மற்றும் முருகன்ஜீயின் நண்பர்கள் இருவர் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் முருகன்ஜீயுடன் பணிபுரிபவர்கள். குதிரையாறு அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இவர்கள் தாம் எங்களை குதிரையாறு அணைக்கட்டு மற்றும் அருவிப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்.

குதிரையாறு அணைக்கட்டு பழனி பஸ் நிலையத்தில் இருந்து இருபது கி.மீ தூரத்தில் உள்ளது. அணைக்கட்டுக்கு அடிக்கடி செல்லும் நேரடி பஸ்கள் அதிகம் இல்லை என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும் பஸ்சில்தான் சென்றாக வேண்டும் அல்லது பாப்பம்பட்டி சாலை சந்திப்பில் இறங்கி அங்கிருந்து நான்கு கி.மீ. நடந்து சென்றால், அணைக்கட்டினை அடையலாம். பழனியில் இருந்து குதிரையார் அணைக்கட்டுக்கு பேருந்து கட்டணம் ஒரு நபருக்கு எட்டு ரூபாய் வசூலிக்கிறார்கள். செல்லும் வழியெல்லாம் பசுமையாக இருந்தது.பழனம் என்றாலே வயல் பொழில்கள் என்றல்லவா பொருள்? இப்போதும் பழனி மலை மேலிருந்து பார்த்தாலே நாலாப்புறமும் நிறைய நீர்நிலைகளும்,பசிய வயல்பொழில்களும் தென்படுவதை கண்டு மனம் குளிரலாம்.  

இன்னமும் நகரத்தின் கான்க்ரீட் காடுகள் பழனியின் புறநகர்ப் பகுதிகளை பெருமளவில் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் ஆங்காங்கே லேஅவுட்டுகள் உருவாகி வருவதைக் காணமுடிகிறது.விளைநிலங்களை வீடுகட்ட விற்றுவிட்டால் பின்னர் எதை உண்பது என்ற கவலை கொஞ்சம் கூட அரசுக்கோ,ரியல்எஸ்டேட் வியாபாரிகளுக்கோ,மக்களுக்கோ இல்லை.பழனி முருகன் தான் இவர்கள் கண்களைத் திறக்கவேண்டும் என வேண்டிக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

காலை ஒன்பது மணி:
குதிரையாறு அணைக்கட்டு:
இந்த எண்ண ஓட்டத்தில் பயணித்த இருபது நிமிடத்தில் பஸ் எங்களை குதிரையாறு அணைக்கட்டுப் பகுதியில் சென்று சேர்த்தது.  பஸ்சில் இருந்து இறங்கி நடை தூரத்தில் உள்ள அணைக்கட்டுப் பகுதிக்கு சென்றோம்.   குதிரையாறு அணையின் உயரம் எழுபத்தெட்டு அடி நேற்று நாங்கள் பார்த்த வரதமாநதி அணைக்கட்டை விட உயரம் சற்றே அதிகம். வரதமாநதி அணைக்கட்டு பழனி-கொடைக்கானல் செல்லும் பிரதானசாலையில் அமைந்திருப்பதைப் போலல்லாமல் குதிரையாறு அணை மிகவும் ஒதுக்குப்புறமாக அமைந்து அமைதிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது.பறவைகள் ஒலி எழுப்புவதைத் தவிர வேறொரு சப்தமும் இல்லாமல் மிகவும் ரம்மியமான அமைதி நிலவும் இடம் இந்தப் பகுதி. 

சென்னை நரகின் (பிழையில்லை!) ஒலி, காற்று, நீர் மாசு எதுவுமின்றி இங்கே மாசில்லா சூழலை உணரமுடிகிறது. எங்களது உடலில் அமைந்துள்ள கோடானுகோடி உயிரணுக்களும் சுத்தமான மாசற்ற காற்றையும், நீரையும் கடந்த நான்கு நாட்களாக அருந்தி சுவாசித்து குதூகலித்து புத்துணர்வு பெற்று இறைவா நன்றி இறைவா நன்றி என சொல்லிக் கொண்டிருந்தன. மனமும் மாசின்றி இருந்ததை உணர முடிகிறது.

எல்லோரும் அணைக்கட்டுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கையில் கொண்டு வந்திருந்த பழங்களை காலைச் சிற்றுண்டியாக சாப்பிட்டோம்.

இந்த அணைக்கட்டின் பின்புறமாக நீர்நிலையை ஒட்டிய மலைப்பாதையில் சுமார் ஆறு கி.மீ நடந்து சென்றால் அருவிப் பகுதியை அடையலாம். மான்கள், யானைகள், சிறுத்தை, ஓநாய், கழுதைப் புலி போன்ற காட்டு மிருகங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் பகுதி என்பதால் இந்த பகுதி வாழ் மக்களின் துணையின்றி உள்ளே நடந்து செல்வது அபாயகரமானது. சில நாட்களுக்கு முன்னர் தொடர் மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துக் கொண்டு தப்பித்தவறி ஊர்ப் பக்கமாக வந்த முதலை ஒன்றினை ஊர் மக்கள் பிடித்து வைத்த செய்தி ஒன்றினைப் பத்திரிகையில் படித்த நினைவு வந்தது.  

மேலும் மலைப்பாதை கரடு முரடானது மற்றுமின்றி அங்கங்கே வழி இரண்டு மூன்றாக பிரிவதால் சரியான பாதையை தவற விட்டு விட்டால் காட்டுக்குள் திசை மாறிச் சென்று விடக் கூடிய அபாயமும் இருக்கிறது. எனவே அந்த ஊரைச் சேர்ந்த இருவருடன் மேலும் ஒரு பெரியவரை வழிகாட்டியாக கொண்டு நாங்கள் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் காட்டுக்குள் செல்ல அந்தப் பகுதி வனச்சரகரிடம் ஏற்கனவே அனுமதியும் பெற்று வைத்திருந்தார்கள் உள்ளூர் நண்பர்கள்.அதுமட்டுமின்றி அருவிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் வலசுகருப்பன் கோவிலில் காலை போகும் போது இளைப்பாறி விட்டு திரும்பும் வழியில் எங்களுக்கு மதியம் இயற்கை உணவும், கோவிலில் பூசையும் நிகழ்த்திடவும் ஏற்கனவே முருகன்ஜீயால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலைக்கோவில் பூசை, மற்றும் மதிய உணவுக்கான பொருட்கள் யாவும் முன்பே அங்கே கொண்டு செல்லப்பட்டிருந்தன.பழனித் திருப்பதியில் அருள்பாலிக்கும் வேலவனே,எங்களுக்கு யோகாச்சாரியா முருகன்ஜி வடிவிலும், திருச்செந்தில் அடிகள் வடிவிலும், மற்றும் தமிழ்நாடு இரும்பு வணிக அதிபர் மணி அவர்கள் வடிவிலும் எங்களுக்கு எல்லா உதவிகளையும் அருளிக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. 
(பகிர்தல் தொடரும்)

திங்கள், 16 ஜனவரி, 2012

10. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் அனுபவப் பகிர்வுகள்.

மூன்றாம் நாள் நிகழ்வுகள் :- 28-12-2011: புதன்கிழமை முற்பகல்/பிற்பகல்/மாலை 


யோகாச்சாரியாவின் அன்புக் கட்டளைக்கிணங்கி நான் கீழ்க்கண்ட செய்திகளை பகிர்ந்து கொண்டேன். 


இந்த அருமையான முகாம் துவங்கி மூன்றாவது நாளுக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். யோகம் எனும் சொல் யுஜ் என்கிற சமஸ்கிருதச் சொல்லில் கிளைத்த சொல்லாகும். ஆங்கிலத்தில் யோக்(yoke) என்ற சொல் இருக்கிறது. அதன் பொருள் இணைத்தல் என்பதாகும். தமிழில் நுகத்தடி இருக்கிறதல்லவா? அது எப்படி ஒரு காளை மாடு அல்லது குதிரையை வண்டியுடன் இணைக்கிறதோ அதைப் போல யோகம் என்ற சொல் ஒருங்கியைவு என்ற பொருளில் அமைந்துள்ளது. இந்த உடல், மனம், ஆன்மா மூன்றையும் ஒருங்கிணைக்கும் அரியதொரு பணியினை யோகம் செய்யவல்லது.  தவராஜயோகி திருமூலநாயனாரும், பதஞ்சலி முனிவரும், யோகம் என்பதினை ஒரு ராஜயோகமார்க்கமாக அஷ்டாங்க யோகம் எனும் பெயரில் திருமந்திரம், பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூல்கள் வாயிலாக வழங்கிச் சென்றிருக்கிறார்கள்.

யோகம் என்றால் என்ன? என்று கேட்டால் பலரும்  பலவிதமாக சொல்வார்கள். பதஞ்சலி தனது இரண்டாவது சூத்திரமாக சொல்லுகிறார்.. ‘யோகஸ்சித்தவ்ருத்தி நிரோதஹ அதாவது மனதில் தோன்றும் எண்ண அலைகளை நிறுத்துவதே யோகம் எனப்படுவது என்கிறார் பதஞ்சலி. அப்படி எனில் யோகம் என்பது கையைக் காலை உடலை வளைத்து செய்யும் ஆசனம் இல்லையா? ஆசனம் மட்டுமே யோகம் இல்லை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.  யோகம் என்பது எட்டு நிலைகளை கொண்டது. அதனை அட்டாங்க யோகம் என்று அழைக்கிறார்கள்.

அட்டாங்க யோகம் எனப்படும் எட்டுப்படி நிலைகளை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

1.         இயமம்.
2.         நியமம்
3.         ஆதனம்
4.         பிராணாயாமம்
5.         பிரத்தியாகாரம்
6.         தாரணம்
7.         தியானம்
8.         சமாதி

எனப்படும் எட்டுப் படிநிலைகள் மூலம் ஒரு சாதகன் பெறக் கூடிய பயன் என்பது மனத்தின்(அ)சித்தத்தின் எண்ண அலைகளை நிறுத்துவதே என்கிறார் பதஞ்சலி முனிவர்.

மனம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு கருவி. அதனை சிந்தனை செய்யாதே! உன் எண்ண அலைகளை நிறுத்தி விடு! என்று அந்த மனத்திடம் நாம் கட்டளையிட்டால் அது கேட்குமா?

தாயுமானவர் எனும் ஞானியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தாயுமானவரின் தந்தை கேடிலியப்ப பிள்ளையின் காலத்திற்கு பிறகு திருச்சிராப்பள்ளியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் பெருங்கணக்கராக இருந்தார் தாயுமானவர். அரசு பணிகளை செவ்வனே செய்து வந்த போதிலும், அவருள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது.  அவர் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோயிலுக்கு தினமும் சென்று வழிபடுவது வழக்கம். சுவாமியை தரிசித்து விட்டு வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி சுவாமியின் சன்னதியில் சென்று வழிபடுவதையும் வழக்கமாக கொண்டவர். ஒரு நாள் அப்படி வலம் வந்து தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு வந்த தாயுமானவரை ஒரு ஞானி கவர்ந்தார். தட்சிணாமூர்த்தி சன்னதியில் தட்சிணாமூர்த்தி திருஉருவுக்கு நேராக எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த அந்த ஞானியின் பெயர் மௌனகுரு ஸ்வாமிகள். மௌனமே வடிவாக இந்த ஞானி அமர்ந்திருப்பது தென்முகக் கடவுள் என்று நாம் வழிபடுகின்ற தட்சினாமூர்த்தியைப் பார்த்தபடி. தட்சிணாமூர்த்தி எப்படி அமர்ந்திருக்கிறார் தெரியுமா? கல்லாலின் அடியில் சனகாதி முனிவருக்கு ஞானத்தை போதிக்கிறார். அங்கே சொற்கள் இல்லை. சின் முத்திரையைக் காட்டி அருட்பார்வையால் நான்கு வேதங்களையும், உபநிடதங்களையும், அனைத்து தத்துவங்களையும், ஞானத்தையும் சில நொடிகளில் போதிக்கிறாராம் தட்சிணாமூர்த்தி சுவாமி. அந்த அழகான கண் கொள்ளாக் காட்சியை நீங்கள் காண விரும்பினால் சுவாமி தயானந்த குருகுலத்துக்கு வாருங்கள். மிக அழகிய படம் ஒன்று இந்த காட்சியை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் வைத்திருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இதே போன்ற ஒரு முகாமுக்கு வந்திருந்த போது அந்தப் படத்தைக் கண்டு வணங்கி இருக்கிறேன். அந்த தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் தான் மௌனகுரு வடிவில் வந்து தாயுமானவரை ஆட்கொள்கிறார். அவர் பின்னாலேயே சென்ற தாயுமானவர் துறவியாகி விட்டார். பதவி, பொன், பொருள், வீடு, மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்ற பந்தங்களை துறந்து அவரும் ஒரு துறவி ஆகிவிட்டார். 

அந்த தாயுமானவர் மனசைப் பற்றி தனது தேஜோமயானந்தம் எனும் பாடலில் சொல்கிறார்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடிவெம் புலிவாயையும் கட்டலாம்;
ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்; கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம் விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு சரீரத்தி னும்புகுதலாம்; சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம், தன்னிகரில் சித்திபெறலாம்; சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது; சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே! தெசோ மயானனந்தமே         
- தாயுமானவர் (கிபி 1608 - 1662)
  • குதிரை, மதயானையை நம் வசமாக்கி நடத்தலாம்.கரடி வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின் மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். 
  • பாம்பை (கட்செவி) நம் இஷ்டப்படி ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலோகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம்.  
  • வேறு யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம். 
  • தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். 
  • சதாகாலமும் இளமையோட இருக்கலாம். 
  • வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம். 
  • நீரின் (சலம் - ஜலம்) மேல் நடக்கலாம். 
  • நெருப்பின் (கனன் - கனல்) மேல் தங்கி இருக்கலாம். 
  • தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம். 


ஆனால், மிக்க கடினம் யாதெனில் ''மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது' 
உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே என்றெல்லாம் பாடுகின்ற தாயுமான சுவாமிகள்  நாம் அட்டமாசித்தியைக் கூட அடைந்து விடலாம். 
ஆனால் இந்த மனத்தை அடக்கி சும்மா இருப்பது என்பது கடினமே என்கிறார். ஆனால் இந்த திறனை யோகம் மூலமாக அடையலாம்; 
அட்டாங்க யோகத்தின் மூலம் எண்ண அலைகளின் வளர்ச்சியை நிறுத்துவது இயலும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.
மனசை வசப்படுத்துவது என்பது கொக்கு பிடிப்பது போலத்தான். 
‘கொக்கை எப்படிப் பிடிப்பது? என்று ஒருவன் ஒரு அதி புத்திசாலியிடம் கேட்டானாம். 
கொக்குதானே பிடிக்கணும்? ரொம்ப சுலபம். கொக்கு தலையில் கொஞ்சம் வெண்ணையை வைக்கணும். கொஞ்ச நேரம் கழித்து வெண்ணை உருகி கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது கொக்கு திகைத்து போய் பறக்க இயலாமல் நிற்கும். அப்போ கொக்கை கப் என்று பிடித்து விடலாம் என்றானாம் அந்த அதிபுத்திசாலி. 
‘அது சரி. கொக்கை வெண்ணை தலையில் வைக்கும் போதே அதைப் பிடித்து விடலாமே. இவனிடம் போய் யோசனை கேட்டோமே என்று நினைத்தானாம் கேள்வி கேட்டவன்.
என்னடா இது? இந்த ஆள் கொக்கு வெண்ணை என்று சம்பந்தமே இல்லாமல் பேசுகிறானே என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம். எல்லாத்துக்கும் தொடர்பு இருக்கு.
உடல் மனம் ஆன்மா மூன்றையும் இணைப்பதுதான் யோகம்னு முதல்லே பார்த்தோம். யோகம்னா மனசின் எண்ண அலைகளை தடுத்து நிறுத்துவது என்று இரண்டாவதாக பார்த்தோம். அட்டாங்க யோகம் என்பது என்னன்னு பார்த்தோம். எண்ண அலைகளை தடுத்து நிறுத்தும் படிநிலை எட்டாவது படியான சமாதி நிலைதான். மனசை கட்டவேண்டும் என்றால், அசையாத நிலையை உருவாக்கணும்னா முதலாவதாக நாம் இயமம் என்கிற சமூக ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்.. இரண்டாவதாக நாம் நியமம் என்கிற தனி மனித ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். மூன்றாவதாக இந்த உடலை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆசனங்களை பயில வேண்டும். நான்காவதாக மனதை கட்டுக்குள் கொண்டு வர பிரணாயாமம் (மூச்சைக் கட்டு), ஐந்தாவதாக பிரத்தியாகாரம் (ஐம்புலன் ஒழுக்கம்), ஆறாவதாக தாரணம்(ஐம்புலன் ஒடுக்கம்), ஏழாவதாக தியானம்(ஏழாவது அறிவு) போன்ற படி நிலைகளைக் கடக்க வேண்டும். அப்போது தான் அந்த மனமற்ற (எண்ணமற்ற) சமாதி நிலை கிட்டும் என்பதால் தான் மனமென்னும் அந்த கொக்கைப் பிடிக்க அட்டாங்க யோகம் எனப்படும் வெண்ணையை அதன் தலையில் வைக்கவேண்டும் என்று அந்த அதிபுத்திசாலி சொல்லி இருப்பான் என்று நான் நினைக்கிறேன்.

ஆக பதஞ்சலி சொல்கிற மாதிரி எண்ண அலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அட்டாங்க யோகத்தினை பயில வேண்டும். அந்த எட்டுப்படி நிலைகளை கடக்க வேண்டும்.

இவ்வளவையும் இந்த ஐந்து நாள் முகாமில் கற்றுத் தேற முடியுமா? என்றால் இயலாது தான். ஐந்து நாட்கள் போதாது தான். ஆனால் ஒரு இனிய துவக்கத்தை இந்த ஐந்து நாள் முகாம் உங்களுக்கு தரப் போகிறது. இயம, நியம, ஆசன, பிராணாயாம பயிற்சிகளை இங்கே நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம். ஷட்க்ரியா எனப்படும் ஆறு கிரியைகள் இங்கே நமக்கு கற்றுத் தரப்போகிறார்கள். சில பயனுள்ள முத்திரைகளை கற்றுக் கொள்ளலாம். அதிர்ஷ்டம் இருந்தால் இந்த பிறவியிலேயே மனமற்ற நிலையை அடைய வழி வகுக்கும் சில பயிற்சிகள் உங்களுக்கு இந்த முகாமிலேயே கூட கைகூடலாம். இவற்றின் துணை கொண்டு இந்த பிறவியை வெல்லக்கூடிய உபாயங்கள் பிற்காலத்தில் உங்களுக்கு கிடைக்கலாம். அந்த இனிய நிலை அதாவது சமாதி நிலை உங்களது தேவைகளை தேடல்களை அடிப்படையாக கொண்டது.

வாழ்க்கையை நலமாக, வளமாக வாழ வேண்டும்... எனக்கு இந்த சமாதி நிலையெல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு நல்ல உடல், நல்ல மனம் என்கிற அருமையான வாழும் கலையை கற்றுக் கொள்ள தேவையான பயிற்சிகளை இங்கே பெறலாம். 

ஒரு புதையலின் அருகே உங்களை அழைத்துச் செல்லும் பணியை ஸ்வாமிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எந்த அளவுக்கு அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதை... கை நிறையவா? பை நிறையவா? மூட்டை மூட்டையாகவா, லாரி லாரியாகவா? நீளநீள கண்டெயினர்களிலா? என்பதையெல்லாம் நீங்கள்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும். எது எப்படியோ, இங்கே நாம் இருந்து கற்றுக் கொள்ளப் போகிற செய்திகள், இது வரை நாம் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்ட விஷயங்களை, நமது பழக்க வழக்கங்களை, சிந்தனை அமைப்புக்களை எல்லாவற்றையும புரட்டிப் போடக் கூடியதாக இருக்கும் என்று மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். அந்த விழிப்புணர்வினை நீங்கள் பெற்று விட்டால் உங்களை நீங்கள் வெற்றி கொள்ள முடியும்.

இன்னமும் அதிகம் பேசி நேரத்தை வீணாக்காமல் இந்த முகாமில் எனது எதிர்பார்ப்பு என்ன என்பதைப் பற்றிக் கூறி முடிக்கிறேன். தியானம் என்று நேரடியாக ஒன்றினைப் பயிற்றுவிப்பதாக நிறைய குருமார்கள் எல்லா மீடியாக்களிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பலர் அவர்களிடம் சென்று பயில்கிறார்கள். ஒருநாள் பயிற்சி எனத் துவங்கி விதவிதமான பேக்கேஜ்களில் தியானம் பயிற்றுவிக்கப்படுகிறதை காண்கிறோமே. 

இது முறையா? சரியா? எட்டுப் படி நிலைகளில் ஏழாவது படி நிலையான தியானத்தை இயம, நியம, ஆசன, பிரணாயாம, பிரத்தியாகார, தாரணை போன்ற படிகளில் பயிற்சி பெறாமல் நேரடியாக எப்படி பயிற்றுவிக்க முடியும்? பயிலத்தான் முடியுமா? அப்போது யாரோ நம்மை ஏமாற்றுகிறார் என்பது பொருள். முதல் நான்கு படிநிலைகளை சொல்லித் தந்து நாம் அதில் தேர்ச்சி பெற்ற பின்னர் நமக்கு பிரத்தியாகாரமும்,  தாரணையும் பயிற்றுவிக்காமல் தியானத்தைப் பற்றி பேசுவது முறையா? இது குறித்து யோகாச்சார்யாவோ அல்லது திருச்செந்தில் அடிகளோ தான் நமக்கு விளக்கவேண்டும்.

ஆர்வத்தேடல்களுடன் கற்றுக் கொள்ள காத்திருக்கும் மாணவன் என்ற முறையில் எனது கேள்விகளுக்கு இந்த முகாம் நிறைவேறுவதற்கு முன்னதாக விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யோகாச்சாரியாவுக்கு நன்றி பாராட்டி அவரது சத்சங்கத்தினை தொடர அழைக்கிறேன். 

எனது சிற்றுரைக்குப் பின்னர் யோகாச்சாரியா இதற்கான விடைகளை மதியம் வருகை தரவிருக்கும் அடிகளாரிடம் கேட்டுப் பெறலாம் என்று கூறி அனைவரையும் தியானப் பயிற்சியில் ஈடுபடுத்தினார். 

அமைதியான இந்த இயற்கைச் சூழ்நிலையின் ஒலிகளை மனத்தில் நிறுத்தி, கண்களை மூடி அமர்ந்திருந்து அனைவரும் தியானம் செய்தோம். பின்னர் அன்பர்கள் அவர்களது தியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். சற்று நேரம் கழித்து அனைவரும் முகாமுக்கு திரும்பினோம். நாங்கள் முகாமுக்கு திரும்பும் போது நண்பர் பிரேமும், குடந்தை ரமேஷும் தடபுடலாக மதிய உணவை தயாரித்து வைத்திருந்தார்கள். சுவாமிஜி நாங்கள் அணைக்கட்டில் இருந்து திரும்பும் போது காரில் வந்து எங்களில் சிலரை ஏற்றிக் கொள்ள மற்றவர் முன்னதாகவே பஸ்சில் சென்றனர். எல்லோருக்கும் நல்ல பசி. மதியம் ஒன்றரை மணியளவில் நாங்கள் அனைவரும் மதிய உணவுக்காக அமர்ந்தோம். 






உணவு பரிமாறப்பட்ட பின்னர் பிரார்த்தனை பாடலைப் பாடி பின்னர் உணவருந்தினோம். 

இன்று தயாரிக்கப்பட்ட இயற்கை உணவு விருந்து:
  1. முளை கட்டிய பயிறு. 
  2. சுவையூட்டப்பட்ட வெண்டைக்காய், 
  3. பசுங்கலவை
  4. காய்கறிக் கூட்டு.
  5. இஞ்சி துவையல்
  6. எள்ளு சுவை சேர்த்த கார அவல்
  7. மல்லி சுவை சேர்த்த கார அவல்.
  8. மற்றுமொரு கார அவல்.
  9. தேங்காய், வெல்லம், முந்திரி, திராட்சை கலந்த இனிப்பு அவல் பாயசம்.
  10. பழங்கள்.
மதிய உணவு பலமாக இருந்தது. அனைவரும் வேண்டிய அளவுக்கு வாங்கி சாப்பிட்டார்கள். பின்னர் முருகன்ஜி, சுவாமிஜி, பரிமாறிய அன்பர்களை அமர வைத்து உணவு பரிமாறினோம்.

அனைவரும் உணவு அருந்திய பின்னர், சற்று நேரம் ஓய்வு எடுத்த பின்னர் மாலை நிகழ்வாக திருச்செந்தில் அடிகளின் சத்சங்கம் துவங்கியது.   அடிகளார் காலையில் வரதமாநதி அணைக்கட்டில் பேசிய போது முன் வைத்த சில கேள்விகளுக்கு விடையாக நிறைய விவரங்களைக் கூறினார். 

பின்னர் அவர் எழுதிய பாடல்களை வாசித்துக் காட்டினார். அப்பாடல்களில் சிலவற்றை அடிகள் பாட நாங்கள் அவருடன் சேர்ந்திசைத்தோம். தொடர்ந்து 'நாத விந்து கலாதி நமோ நம' எனும் திருப்புகழை நான் பாட அடிகளார் உள்பட அனைவரும் சேர்ந்திசைத்தார்கள்.

வங்கக் கவி ரபீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியில் வரும் ஒரு பாடலான 'நின் திரு யாழில் என் இறைவா' என்ற தமிழாக்கப் பாடலை பாடினேன். கோவையைச் சேர்ந்த திருமதி.பரிமளாதேவி தனது இனிய குரலில் ஒரு பாடலைப் பாடி மகிழ்வித்தார். அவர் தொழில் முறை மேடைப் பாடகர் என்று அப்போது தான் தெரியவந்தது. எங்களோடு இருந்த நாட்களில் ஆரம்பத்தில் இருந்தே நிறையப் பாடல்கள் பாடி எங்களை அவர் மகிழ்வித்திருக்கலாம். ஏனோ தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவர் வாளா இருந்து விட்டார்.

இப்படியாக இன்றைய நாள் மிகவும் மகிழ்வுடன் கழிந்தது. மாலை ஐந்தரை ஆகிவிட்ட சூழலில் இனிமேல் நகர்ப்புறம் சென்று கோவில்களுக்கு சென்று திரும்புவது இயலாத என்ற யதார்த்த சூழலில் அனைவரும் முகாமிலேயே இருந்துவிடுவது என தீர்மானித்தார்கள். 

நான்காம் நாளான நாளை நிகழ்வாக குதிரையாறு அணைக்கட்டுக்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டது. எனவே முகாமை இன்றிரவே காலி செய்து விடுவது எனவும், இரவு ஹாஸ்டலில் தங்கி அதிகாலை புறப்பட்டு பழனி வந்து யோகாச்சாரியாவின் யோகா நிலையத்தில் தங்குவது எனவும், பின்னர் சுமார் எட்டுமணி அளவில் பழனி பஸ் நிலையத்தில் இருந்து குதிரையாறு அணைக்கட்டுக்கு செல்லும் பஸ்சில் அனைவரும் செல்வது என முடிவாயிற்று. 

குதிரையாறு அணைக்கட்டுப் பகுதியில் அந்தப் பகுதி நண்பர்கள் மூலமாக  இயற்கை உணவு உள்பட விரிவான ஏற்பாடுகளை செய்திருப்பதாக முருகன்ஜி அறிவித்தார். 


இன்று மாலை நேரத்து கடமையாக முகாமுக்குள் கடந்த ஞாயிறு அன்று இரவு நானும், பிரேமும், ரமேஷும், பன்னீர்செல்வம் ஐயாவும், கொண்டு வந்து சேர்த்த பொருட்களை அன்றிரவே ஒரு லாரியில் ஏற்றி பழனிக்கு திருப்பி அனுப்புவதாக ஏற்பாடு ஆயிற்று. பொருட்களைக் கொண்டு செல்ல லாரி இரவு எட்டு மணிக்கு முகாமுக்கு வரும். 


அதற்கு முன்னர் அனவைரும் இரவு உணவை முடித்து பாத்திரங்களை காலி செய்து தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் முடிவாகியது. இதன் அடிப்படையில் எல்லா அன்பர்களும் முகாமை காலி செய்ய அன்புடன் உடனிருந்து உதவி பெரிதும் உழைத்தார்கள்.


இரவு நேரத்து உணவை நாங்கள் அனைவரும் உட்கொண்ட பின்னர் அனைத்துப் பொருட்களும் பட்டியலில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு தோட்டம் பூட்டப்பட்டு சாவி பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. தோட்டப் பொறுப்பாளர் திரு.சுப்பையாவின் உதவிகளை எப்போதும் எங்களால் மறக்க இயலாது. இரவு சுமார் எட்டரை மணியளவில் நாங்கள் அனைவரும் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு ஹாஸ்டல் சென்றோம். 


ஹாஸ்டல் வார்டனிடம் நாங்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து புறப்பட வேண்டியதிருப்பதை அவருக்கு நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டோம். அதிகாலை ஆறுமணிக்கு பிரார்த்தனை மையத்தில் அனைவரும் கூடுவது என்று தீர்மானித்துக் கொண்டு இரவு ஒன்பது மணி அளவில் அனைவரும் உறங்க சென்றனர். 


ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த எங்களை இரவு ஒன்பதரை மணிக்கு பெங்களூரு அன்பர் இனியன் எழுப்பினார். அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் சென்னையில் சீரியஸ் நிலைமையில் இருப்பதால் உடனே குடும்பத்துடன் புறப்பட்டு சென்னை சென்றாக வேண்டிய நிலைமையில் இருந்தார். நகரை விட்டு காட்டுக்குள் இருப்பதால் எப்படி இவர்களை பஸ் நிலையத்துக்கு அனுப்புவது? யோகாச்சாரியா முருகன்ஜீக்கு செய்தி சொல்லப்பட்டு அவர் ஒரு வாடகைக் காரை எடுத்து கொண்டு வருவதாக கூறினார். 


கார் வரவுக்காக இனியன் குடும்பத்தினர் காத்திருந்த பொழுதில் நானும், நண்பர் நாகராஜனும் அவருக்கு பக்கத் துணையாக கார் வரும் வரை கீழே சென்று காத்திருந்தோம். திரு.இனியன் எனது வலைப்பூவில் வந்த செய்தியைப் பார்த்து விட்டு என்னுடன் மொபைலில் தொடர்பு கொண்டு பேசி இந்த முகாமுக்கு குடும்பத்துடன் வந்தவர். இதற்கு முன்னதாக அவருடன் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை.அவரது அன்புக் குடும்பத்தினர் முகாமின் ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்று மகிழ்ந்திருந்த வேளையில் அவசரஅவசரமாக புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது எங்களை மிகவும் வருந்தச் செய்தது. 


நானும் நண்பர் நாகராஜனும், சில மணி நேரம் அவருடன் இருந்து ஆறுதல் சொல்லி கார் வந்த பின்னர் வழியனுப்பி விட்டு உறங்கச் சென்றோம். காரை ஏற்பாடு செய்து வந்த யோகா முருகன்ஜி அதே காரில் அவர்களுடன் திருச்சி வரை சென்று சென்னைக்கு அவர்களை பஸ் ஏற்றி விட்டு வருவதாகக் கூற, இனியன் குடும்பத்தினர் அன்புடன் முருகன்ஜியின் திருச்சி வருகையை மறுத்து விட்டு அவருக்கு நன்றி கூறி எங்கள் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று சென்றனர். கொடைக்கானல் பயணம் இரத்தாகியதில் வருந்திக் கொண்டிருந்த இவர்கள், நாளைக்கு குதிரையாறு அணைக்கட்டுக்கு செல்லலாம், பின்னர் மலையேறிச் சென்று அருவியில் குளித்து மகிழலாம் என்றெல்லாம் வண்ணக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்த அந்த இரு இளம்பெண்கள் விவரிக்க இயலாத ஒரு சோகத்துடன் விடை பெற்றது இன்னமும் எங்கள் கண்களில் நிழலாடுகிறது.
(பகிர்தல் தொடரும்)  

வரவிருப்பது-நான்காம் நாள் நிகழ்வு-வியாழக்கிழமை(29-12-2011) நாள் முழுதும்- குதிரையாறு அணைக்கட்டு-மலை ஏறும் பயிற்சி-அருவியில் குளித்தல்-மலைக் கோவிலில் நிகழ்ந்த மாகேசுவர பூசை.