ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

யார் சுகவாசி?

மூச்சு இரைக்காமல் மாடிப்படிகளில் லாவகமாக ஏற முடிந்தவர்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர்களால் மட்டுமே முடியக்கூடியது இது.வயிறு பெருத்தால் வாழ்வு சுருங்கும்.அதுபோல தொப்பையுள்ளவர்களால் மூச்சு இரைக்காமல் மாடிப்படி ஏறமுடியாது.  எனவே வயிறு சுருங்கி இருத்தல் வேண்டும்.  (உணவிலும் தோற்றத்திலும்).

சம்மணம் போட்டு அமர்ந்து உண்பவர்
நாகரீகத்தின் தாக்கம் வீடுகள் தோறும் சாப்பாட்டு மேசை. சாப்பாட்டு மேசையில் ஆண்டுக்கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு மூட்டுகள் மடங்குவது சிரமம்.  எனவே மூட்டுவலி நிச்சயம் இருக்கும்.  இவர்கள் தரையில் அமர்ந்து சம்மணம் போட்டு சாப்பிட்டு (வர வேண்டும்) வந்தால் மூட்டு வலி போயோ போச்!

காலையில் பழைய சோறு சாப்பிட முடிந்தவர்
ஆம்! பழையமுதும், நீராகாரமும் உடலுக்குச் சத்தானதும், உடலை வளர்க்கக் கூடியதும் ஆகும்.  அதுவும் அளவோடு உண்ண வேண்டும்.  கூடவே வெங்காயம் தொட்டுக் கொள்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்.
சோற்று நீர் இரண்டையும் போக்கும்.

புலால் உணவு, எண்ணெயில் பொரித்தவை, கோலா பானங்கள், பிளாஸ்டிக் பைகளில்/பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீர், ஐஸ் உணவுகள், ஃபிரிட்ஜ் இவைகளை தவிர்த்து/ஒதுக்கி வாழ்பவர். 

      உணவு தூய்மையானால் அறிவு தூய்மையாகும்
      அறிவு தூய்மையானால் நினைவு தூய்மையாகும்
      நினைவு தூய்மையானால் எல்லாத் துன்ப முடிச்சுகளும் விலகும்!

புலால் உணவு
மனித உடலமைப்பு, பற்கள், உணவுக்குழாய், மலப்பாதை இவையெல்லாம் மென்மையான உணவுகளை உண்ணவும்/செரிக்கவும், கழிவுகளை அகற்றவும் ஏற்றவாறு அமைந்துள்ளது. புலால் உணவுகள் மெல்லுவதற்கும், பின்பு அவை செரிமானம் ஆவதற்கும் கடினமானவை.  மலச்சிக்கலை உண்டு பண்ணுபவை.  எனவே, உடலுக்கு ஒவ்வாத புலால் உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்தவை
எண்ணெயில் பொரிக்கப்படும் பண்டங்கள் செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.  மேலும், செரிமான நீரை உற்பத்தி செய்யும் திறனையும் எண்ணெய் பொருள்கள் தடுத்துவிடும்.

குளிர் பானங்கள்
மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்துமிக அதிக விலைக்கு விற்பனையாகும் பானங்கள் இவை.  தூய்மையற்ற குடிநீரும், உடலுக்குத் தீங்கிழைக்கும் இரசாயனக் கலவைகளைக் கொண்டது.

குடிநீர்
தரமற்ற குடிநீரை, அசுத்தக் கிருமிகள் அடங்கிய குடிநீரை பயன்படுத்துதல் கூடாது.  இதனால் வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் ஏற்படும்.

ஐஸ் பொருள்கள்
இவற்றிலும் நச்சுக் கிருமிகள் உற்பத்தியாகி நம் உடலுக்கும், குடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.  குழந்தைகள் விரும்பி உண்பதால் தொண்டைச் சதைவளர்ச்சி ஏற்பட்டு அவர்களுக்கு துன்பம் விளைக்கும்..

குளிர்சாதனப்பெட்டி
இதனை சவப்பெட்டி என்கிறது இயற்கை மருத்துவம். ஏனெனில் மீதூண் விரும்பேல் என்ற முதுமொழிக்கு மாறாக, மீதமாகும் உணவுப் பொருள்களை இதில் வைத்தே சாப்பிடுகின்றார்கள்.  எனவே அவை செத்த உணவாகக் கருதப்பட வேண்டும்.

மூன்று பெட்டிகள் நமக்குத் தேவையில்லாதவை :
Fridge: சவப்பெட்டி
Television: முட்டாள் பெட்டி
Washing Machine: சோம்பேறிப் பெட்டி.

காலா காலத்தில் உறங்கச் செல்பவர்
உறக்கம் மனிதர்களுக்கு கிடைத்த வரம்.  படுத்தவுடன் கண் மூடியவுடன் தூங்க முடிந்தவர் அதிர்ஷ்டக்காரர். அப்படித் தூங்க வேண்டுமானால் உடல், மனம், எண்ணம் இவைகளைச் சீராக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.  

அவாவின்மை, உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு, நற்சிந்தனைகள், ஒத்தும் உதவியும் வாழும் உளப்பாங்கு இவை இருந்தால் உறக்கம் தானே ஓடி வரும்.

காலை மாலை மலம் கழிப்பவர் 
நாம் யாரிடமும் கடன் வாங்க வில்லையா? நாம் தான் ஒரு லட்சாதிபதி. நாம் மலச்சிக்கலின்றி வாழ்கிறாறோ? நாம் தான் ஒரு கோடீஸ்வரர். ஆம்!  அன்றாடம் மலம் கழிவது உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். மலச்சிக்கல் பல சிக்கலைக் கொண்டு வரும்.  எனவே, அன்றாடம் காலை/மாலை அல்லது ஒரு வேளை கண்டிப்பாக மலங்கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  மூன்று வேளை மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டு விட்டு ஒரு முறையாவது மலம் கழிக்க வேண்டாமா?

ருசிக்கு உண்ணாமல் பசிக்கு உண்பவர்
திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தின் 10 குறள்களிலும் உணவே மருந்து என்பதை அறிவுறுத்துகிறார்.

      அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
      துய்க்க துவரப் பசித்து -குறள் : 944

பசி வயிற்றைக் கிள்ளுகிறது என்போம். உணவின் சுவை கூடக் கூட அளவின்றி சாப்பிடத் தோன்றும். அளவு மீறினால் அமுதமும் நஞ்சாகும் அல்லவா?  எனவே ருசி பார்த்து உண்ணாமல், நன்றாகப் பசித்த பிறகு அளவோடு உண்ண வேண்டும்.  நாக்குக்கு அடிமையானால், நலம் கெட்டு நடை பிணமாவோம்.  துணை உணவுகளான சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, தொடுகறிகளை தவிர்த்தால் அளவாகச் சாப்பிட ஏதுவாகும். 

மாதம் இருநாள் உண்ணா நோன்பு இருப்பவர்
நம் உடல் என்னும் இயந்திரம் சலிக்காமல் தொடர்ந்து உழைத்து வருகிறது.  நாம் பயன்படுத்தும் மிதிவண்ட, மோட்டார் சைக்கிள், கார் போன்ற இயந்திரங்களுக்கு ஓவர்ஹாலிங் (Overhauling) செய்வது போல உடலுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஓய்வு தேவையல்லவா?  எனவே, மாதமிருமுறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.  நீரைக் குடித்தவாறோ அல்லது சாற்றைக் குடித்தவாறோ உண்ணா நோன்பு இருக்கலாம்.

சினம் தவிர்த்து, பிறர் குற்றம் மன்னித்து மறந்து, அன்பு, பொறுமை, கற்பு,  அடக்க ஒழுக்கம் போன்ற குணங்களை பின் பற்றி வாழ முடிந்தவர்கள் தான் சுகவாசி எனப்படுவர். 

            இருக்கும் வரை சுகவாசி!
            அன்றாடம் நீ யோசி!!
            இதை இறக்கும் வரை நீ விசுவாசி!!!


இந்தப் பதிவினை அனுப்பிய திரு மா.உலகநாதன் அவர்களுக்கு என் நன்றி: 
அவரது முகவரி:
மா. உலகநாதன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்
இணைச்செயலாளர்
ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்
திருநீலக்குடி.
செல் : 9442902334
இ.மெயில்: worldnath_131149@yahoo.co.in

நலவாழ்வு நாடுவோர் நலம் வேண்டி வெளியிடுபவர்:
அஷ்வின்ஜி,
வாழி நலம் சூழ.