வெள்ளி, 28 மே, 2010

பகுதி 15 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.
15
இயற்கை மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்யாமல் உடம்பிலுள்ள பிராணசக்தியை அதிகப்படுத்தி மலத்தை வெளியேற்றும் தந்திரங்களைக் கையாளுகின்றனர். உடம்பில் போதுமான பிராணசக்தி அதாவது உயிராற்றல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தானியங்கி இயந்திரம். அதற்கு ஒரு வாய்ப்புகொடுத்தால் தானே சூழ்நிலையுடனும் இயற்கையுடனும் சமநிலை எய்தும் ஆற்றல் பெறும். எண்ணங்களின் கோளாறுகளினாலோ, உணவென்று வேண்டாதவைகளை ருசி கருதி உட்கொள்வதினாலோ உண்டாகும் துன்பங்களை அறிவறிந்து மாற்றி அமைத்துக் கொண்டால் இப்போது நடைபெறுகின்ற வேண்டாத வேலைகள் பலவற்றை இல்லாமலே செய்து விடலாம்.

கோடானகோடி ரூபாய்கள் செலவிட்டு ஆராய்ச்சியாளர்களைத் தயார் செய்து மருந்தகங்களின் மூலம் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்து அவற்றிற்கு சந்தை தேட முயற்சிக்கும் வேலைகளின் பெரும்பகுதியைக் குறைத்து, அதனால் எஞ்சும் ஆற்றலையும், வேறு பல வசதிகளையும் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். இதனால் நவீன மருத்துவம் தவறானது என்ற அர்த்தமில்லை. அறிவியல் துறை வளர்ச்சியை உள்ளறிவுகொண்டு உகந்த அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

(இயற்கை இன்னும் வளரும்)

செவ்வாய், 25 மே, 2010

பகுதி 14 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறி உடலுக்கு வேண்டிய ஊட்டத்தைக் கொடுக்கிறது. உண்ணும் எல்லாப் பொருள்களுமே இரத்தமாக மாறி விடுவதில்லை. உடம்பில் ஊறும் செரிமானச் சுரப்பு நீர்களும், புளிமங்களும் அன்னக் குழம்புடன் சேர்ந்து பின்னர், அன்னரசமாகவும் அதிலிருந்து உறிஞ்சப்பட்ட சாரம் இரத்தமாகவும் மாறுகிறது. எஞ்சிய பொருள்கள் வேண்டாதவையாக பெருங்குடல் வழியாக வெளித்தள்ளப்படுகின்றன. இப்பொருள்கள் ஐவகை மலங்களாக அதாவது கரியமிலவாயு, வியர்வை, சிறுநீர், மலம், கபம் என வெவ்வேறு உறுப்புகளினால் வெளியேற்றப்படுகின்றன. இந்த வேலை அவ்வப்போது நடைபெற்றால் பரவாயில்லை. ஆனால், நாகரிக வாழ்வில் ஈடுபட்ட மனிதர்கள் பலர் இதனைக் காலாகாலத்தில் செய்வதில்லை. தடைபட்ட மலம் உள்ளே தங்கி நிற்கின்றது. உடலுள் உறையும் பிராணசக்தி காலங்கடந்து உடம்பில் நிற்கும் கழிவுப்பொருள்களை வெளித்தள்ளும் இயக்கமே நோய் எனப்படுகிறதென்று இயற்கை மருத்துவர்கள் நம்புகின்றார்கள்.

ஆதலால்தான் இவர்கள் நோயை நண்பனாகக் கருதுகின்றார்கள். நோய்க்கு இவர்கள் பயப்படுவதில்லை. தோன்றும் அறிகுறிகளைக் கண்டு அஞ்சுவதில்லை. காரணங்களைக் கண்டுகொண்டு அந்நியப் பொருள்கள் அதாவது உடற்கட்டுமானத்துக்க வேண்டாத உள்ளேயுள்ள பொருள்களை வெளியேற்ற உதவுகின்றனர்.

நவீனமுறை பயின்ற மருத்துவர்கள் எளிய இயற்கை மருத்துவச் சிகிச்சைகளைக் கையானாது அறிகுறிகளையே நோய் என்று நினைத்து அவற்றிற்குப் பரிகாரம் காண முயலுகின்றனர். அவர்கள் கையாளும் பரிகாரங்கள் மலத்தை வெளியேற்றாமல் உள்ளே அமுக்கி வைக்கவே செய்கின்றன. இதனை நவீன மருத்துவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. தங்களுடைய மருத்துவமும் மலத்தை வெளியேற்றவே செய்கிறதென்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன? சளி, இருமல், கோழை முதலிய நோய்க்குறிகள் நீங்க, சாப்பிடும் மருந்துகள் ஒவ்வொன்றிலும் அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கலந்திருப்பது வெள்ளிடைமலை. இவை மலத்தை நீக்குவதற்குப் பதிலாக மலம்தோன்றும் இடங்களிலுள்ள ஜவ்வு படலத்தையும் நரம்புகளையும் தளரச்செய்து செயலற்றவைகளாக்கி, ஸ்தம்பிக்க வைத்து விடுகின்றன. உடனடியாகக் குணம் இருப்பது போல் தோன்றுகின்றது. உண்மையில் நடப்பது வெளித்தள்ளும் ஆற்றல் குறைந்து, மருந்தின் வேகத்தால் மலங்கள் உள்ளொடுக்கி உயிரணுக்களிடையே பதுங்கிக் கொள்கின்றன. இதே போல் பாதரசம், ஈயம், துத்தநாகம் போன்ற மருந்துகளிலுள்ள விஷம் உள்ளுடம்பிலுள்ள இயக்கங்களைத் தடைசெய்து அல்லது மிகவேகமாகத் தூண்டி மல வெளியேற்றலுக்குத் தடையாகவே வேலை செய்கின்றன. இத்தகைய சிகிச்சைகள் நடைபெறும் பொழுதெல்லாம் தற்காலிகச் சுகம் கிடைப்பினும், மருந்தின் விஷமும் மலத்தின் விஷமும் கலந்து புதிய புதிய நோய்களாக உருவெடுகின்றன. ஆஸ்த்மா, இதயநோய், புற்றுநோய், கண்டமாலை, மேகநோய், நமட்டுச்சொறி முதலியவை தோன்றி மனிதர்களை அல்லற்படுத்துகின்றன. இத்தகைய நோய்களை நவீன மூலமும் குணப்படுத்த முயலுகிறது. ஆனால் இவை உருமாறி மறுபடியும் மறுபடியும் வந்து தொலைகின்றன. டாக்டர்களைக் கேட்டால் "ஆமாம், இவையெல்லாம் தீராத நோய்கள் புதிய மருந்துகளைக் கண்டு பிடித்துத்தான் இவைகளைப் போக்க முடியும். இவைகளுக்கு நடைமுறையில் உள்ள மருந்துகளை உட்கொண்டு காலங்கடத்துங்கள்" என்று சமாதானப்படுத்துகின்றனர். நீரழிவு நோயைக் குணப்படுத்த முடியாது ஆனால் நாள்தோறும் இன்சுலின் ஊசிபோட்டு எப்படியோ வாழலாம் என்ற ஆறுதல் கிடைக்கின்றது. அறுவையின் மூலமாகவோ அல்லது சுட்டுப்பொசுக்குவதன் மூலமாகவோ புற்றுநோயிலிருந்து தற்காலிகமாகத் தப்பலாம். அதை அறவே ஒழிக்க இதுவரை பரிகாரம் காணமுடியவில்லை என்கின்றனர்.

இதே கதைதான் ஆஸ்த்மா, க்ஷயம், மூலம், பெளந்திரம் போன்ற தீராத நோய்களுக்கும் இவைகளுக்குப் பெயரே தீராத நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்துள்ள 4000-க்கும் மேற்பட்ட நோய்களில் 60 சதவிகித நோய்கள் டாக்டர்களால் அதாவது நவீன மருந்துகளால் உண்டானவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இவான் இலிச் என்ற பேரறிஞர் Medical Mnemisis அதாவது "வைத்தியச் சாபத்தீடு" என்ற ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டுள்ளார்.

(இயற்கை இன்னும் வளரும்)