சனி, 17 ஏப்ரல், 2010

பகுதி 6 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - மகரிஷி க. அருணாசலம்

பகுதி - 6

எனவே நோயைக் கண்டு அஞ்சாது அதனை நண்பனாகக் கருதி மூலகாரணத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். வெளியேற முயலும் நச்சுப் பொருள்கள் வெளியேறத் தக்க பரிகாரம் செய்தல் வேண்டும். ஆசனவாய் மூலமாகவோ, சிறுநீர் மூலமாகவோ வியர்வையாகவோ, சளியாகவோ, மூக்கின் வழியாகக் கரியமில வாயுவாகவோ மலங்களை வெளியேற்றுவதற்கான குளியல்கள் ஒத்தடம், மண்பூச்சு, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி முதலியவைகளைக் கையாள வேண்டும். இத்தகைய செலவற்ற எளிய இயற்கையை பயன்படுத்தும் முறைகளால் நிரந்தரமான பரிகாரம் கிடைக்கும்.

நோய் - தற்காலிகமானது
நோய் - மனிதன் தானாக வருவித்துக் கொள்வது
நோய் - தவறான பழக்க வழக்கங்களால் ஏற்படுவது

ஆழ்ந்த தன்னாராய்ச்சியாலும் கூர்ந்து கவனிப்பதாலும் தனது தவற்றைக் கண்டு கொள்ள முடியும் உடலியல் அறிவின் துணைகொண்டு தவறுகளைத் திருத்தலாம். இதன்மூலம் நீடித்த ஆரோக்கியம் கைவரும்.

இப்படி தனக்குத் தானே மருத்துவம் இயற்கை வழிநின்று செய்வதன் மூலம் இன்பம் பெருகும்.

நோய்க்கு அஞ்ச வேண்டாம், அது நமக்கு நண்பன்.

சமீபத்தில் நாங்கள் சிலர் சேர்ந்து ஜீப்பில் பிராயணம் செய்து கொண்டிருந்தோம். எங்களில் ஒருவருக்கு அடிக்கடி தும்மல் வந்து கொண்டே இருந்தது. உங்களுடைய உடம்பில் உயிராற்றல் இருக்கிறது என்பதற்கு இது அறிகுறி உடம்பிற்கு வேண்டாத பொருள்கள் உரிய காலத்தில் வெளியேற்றப்படாமல் தேங்கி நின்றதால் சளியாக மாறியுள்ளது. அதனை வெளியேற்ற பிராணசக்தியானது முயலுகிறது. அதன் அறிகுறிதான் தும்மல் தும்மலின் மூலம் சளி முழுவம் வெளியேற முடியாததால் மறுபடியும் உங்களுக்குத் தும்மல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அபாயம் ஒன்றுமில்லை. ஒருவேளைச் சாப்பாட்டை விட்டு விடுங்கள். பிராணனின் ஆற்றல் அதிகரிக்கும் அப்போது கபம் ஏதாவது ஒரு வழியில் வெளியே வந்து விடும். தற்காலத் துன்பத்தை நீக்குவதற்கு முயன்று ஏதாவது மருந்தைச் சாப்பிட்டு விடக்கூடாது மேல்நாட்டு மருத்துவர்கள் சளியை உண்டுபண்ணும் கிருமியைக் கண்டுபிடிக்க இன்னும் முயன்று கொண்டிருக்கிறார்கள். கண்டுபிடிக்கும் வரை உடனடியாகத் துன்பம் தவிர்க்கும் ஏதாவது ஒரு மருந்தைக் கொடுப்பார்கள். அதனால் நோய் அமுக்கி வைக்கப்படுமேயொழிய தீராது. நாளடைவில் சளியானது மூளையின் மூக்கினை எலும்புப் புழையழற்சிக் கோளாறு (Sinusitic) ஆகமாறும். இதனையும் இயற்கை வழியில் போக்காது மருந்துக்கு ஆளானால் சீரழிக்கும் நோயாகவும் இது மாறலாம் உபவாசம் இருப்பதன் மூலம் ஆகாச தத்துவத்திற்கு உடலுள் பெருமளவு இடமளித்து உயிர் ஆற்றலைப் (பிராணசக்தியை) பெருக்கிக் கொண்டால் உண்டதை சீரணிக்கவும், சீரணமான பின் எஞ்சியதைக் காலாகாலத்தில் வெளித்தள்ளவும் உதவும்.

எனது நண்பருக்கு என்னுடைய வைத்திய அறிவில் போதிய நம்பிக்கை இருப்பதற்கு நியாயமில்லை. எனவே அவர் என்னுடைய ''நோய்=நண்பன்'' கொள்கைக்குப் போதிய மதிப்புக் கொடுத்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் சாப்பாட்டில் கட்டுப்பாடாக இருந்தார். இரவில் தானிய உணவைத் தவிர்த்து பழ உணவு எடுத்துக் கொண்டார். அதிலும் கட்டுப்பாடாக இருந்து ஓரிரு பழங்கள் தான் சாப்பிட்டார். அன்று இரவு நல்ல தூக்கம். எனவே மறு நாள் காலையில் அவருக்குப் போதிய சுகம் கிடைத்தது சளி அவரை அதற்குமேல் தொந்தரவு செய்யவில்லை.

மறுநாள் வேறொரு நண்பருக்குத் தும்மல். அவர் அன்று வழக்கம் போல் சாப்பிட்டார். "Stuff the cold and starve the fever" என்னும் கோட்பாட்டினை நினைவுறுத்திக் கொண்டார். இது எப்படியோ உலக வழக்கில் வந்துவிட்டது. சளிக்குப் பரிகாரம் உபவாசம் என்பதை விஞ்ஞானிகள் பலர் ஏற்றுக் கொள்கின்றனர்.

(இயற்கை வளரும்..)

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

உணவே மருத்துவம்

அசைவம் உண்ணாதவரும், மது அருந்தாதவரும், சமைக்காத (தூய சைவ) இயற்கை உணவுகளை விரும்பி உண்பவரும், இயற்கை நலவாழ்வியல் முறைகளை கடைப் பிடிப்பவர்களும் நோயின்றி மகிழ்வுடன் வாழலாம். நண்பர் எழுதிய கவிதை ஒன்றை நமது வலைப்பூவுக்காக மீள் பதிவு செய்கிறேன். இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை கவிதை வடிவில் வடித்துத் தந்த நண்பருக்கு இதய நன்றி.

உணவே மருத்துவம்
உண்பதற்காகவே வாழாதீர்

உயிர் வாழ்ந்திடவே நாம் உண்போம்.
உண்ணும் உணவினில்தாம் நோய்கள்
உட்கார்ந்திருந்து நம் உயிர் பறிக்கும்
மாமிச உணவைச் சமைத்தபின்
மறுநாள் வைத்தே புசிக்காதீர்
சாமி சத்தியமாய்ச் சொன்னேன்
சமைத்ததை ஐந்து மணிக்குள் உண்.
குத்துதே குடையுதே மூட்டுவலி
குன்மம் பித்தம் வாய்வாம் நோய்
ரத்தசோகை பக்கவாதம்
நரம்புத் தளர்ச்சியும் உணவால்தான்.
பழைய குழம்பைச் சுடவைத்தே
பசிக்கு அடிக்கடி புசிக்காதீர்
குளிர்பத னத்தில் வைத்தெடுத்தே
குடலால் நோய்களை வளர்க்காதீர்.
யோகம் பெருகும் நல் உணவால்
ரோகமும் போகமும் உண்பதால்தாம்.
தாகம் என்றால் பருகுவீர்நீர்
தாறுமா றாய்மது குடிக்காதீர்
பழங்கள் கீரை காய்கறிகள்
பசுமை மாறா புதியனவாய்
கிழங்குகள் ஈந்திடும் உயிர்ச்சத்தையும்
கிரமமாய் உண்பதால் திடம் பெறலாம்.
உணவைக் குடித்தேநீர் உண்பீர்
உணவே மருந்தென உணர்ந்திடுவீர்
உணவில் மருத்துவம் ஒளிந்துள்ளதே
உறுதியாய் நம்பியே உயிர்காப்பீர்.
- பெருமத்தூர் சீராளன்
நன்றி : மூலிகை சஞ்சீவி இதழ், சூன் 2005

திங்கள், 12 ஏப்ரல், 2010

பகுதி 5 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

நோய் நமக்கு நண்பன். பகைவன் அல்ல.

துன்பம் தரும் ஒன்றை எப்படி நண்பனாகக் கருதுவது? இவ்வினா இயற்கையாக எழும் ஒன்று. இதை மேலும் ஆராய்தல் பயன்தரும். துன்பம் தருபவற்றுள் பலவகையுள சில துன்பத்திற்காகவே துன்பம் தருகின்றன. சில துன்பப்படும் ஒன்றில் நலன் கருதித் துன்பம் தருகின்றன. துன்பம் தரும் தனக்கு யாதொரு லாபமும் இல்லை. இந்த மூன்றாம் வகையைச் சேர்ந்தே நோய் தரும் துன்பம். நோய் துன்பம் தருவது. நோயாளி துன்பம் அடைவான். நோயாளி படும் துன்பத்தால் நோய்க்கு யாது பயன்? நோய் தான் அளிக்கும் துன்பத்தின் மூலம் உடலில் பிரச்சினை இருக்கின்றதென்பதைக் காட்டுகின்றது இதுவழியில் இருக்கும் பள்ளத்தை, இடையூறைக் காட்டும் சிவப்பு விளக்குப் போன்றது. இதை அறிந்து மேல் நடவடிக்கை எடுத்தால் நோயாளி பெரும் நன்மையடைவான். ஆதலால் தான் நோயாளி நோயினை நண்பனாகக் கருத வேண்டுமென்கின்றனர்.

"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு"
என்பது பொய்யாமொழி

நாவடக்கமின்றிக் கண்டதைக் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிட்டுக் காலாகாலத்தில் மலநீக்கம் செய்யாது இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழும் ஒருவனை இடித்துக்கூறி நல்வழிப்படுத்த வருவது நோய். அதனை நண்பனாகக் கருதி உபசரியாமல் பகைவனாகக் கருதி செயற்பட்டால் தனக்குத்தான் கேடு மிகுகின்றது. நண்பனாகக் கருதி வரவேற்று இயல்பறிந்து போற்றி உபசரித்தால் காலாகாலத்தில் நோய் போய் விடும். நண்பர்கள் என்றால் காலக்கெடுவின்றிக் கூடிக் குலவவேண்டும் என்பதில்லை. அவசியமான அளவுக்குத்தான் தொடர்பு இருக்க வேண்டும்.

நட்பு எது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காந்தியடிகள் தமது வாழ்க்கை அனுபவத்தில் கண்டதைக் கூறுவதைக் கவனிக்க வேண்டும். "சீர்த்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்த்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது... தனிப்பட்டு அன்னியோன்னியமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம்."

நோய் என்பது, பிராண சக்தி தனது வேலையைச் சிறிது காலந்தாழ்த்திச் செய்யும் போது ஏற்படுகின்ற துன்பம் என்பது நமக்குத் தெரியும். இத்துன்பத்தின் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அந்த நோயைப் போக்க வேண்டிய வழியையும் ஆராய்ந்து நோயுற்ற உடலுக்குப் பொருந்தும் படியான சிகிச்சைகளைச் செய்ய வேண்டுமென்பது திருவள்ளுவர் திருவாக்கு.

"நோய்நாடி, நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி, வாய்ப்பச் செயல்"

அவ்வப்போது வெளியே தள்ளப்படாமல் உடலினுள்ளேயே தங்கியிருக்கும் நீர்ப்பகுதி அனைத்தும் உடலினுள் உறிஞ்சப்படுகின்றது. இந்த நச்சு நீர் இரத்தத்தில் கலந்து பரவுகின்றது. இதனால் ஊட்டி வளர்க்கப் பெறும் கல்லீரல், சிறுநீரகம், கணையம், மண்ணீரல், இதயம் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலைவலி, தூக்கமின்மை, நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கீல்வாதம், காசம், மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் எல்லாம் வருகின்றன. இவற்றைக் கண்டு பயந்து டாக்டர்களிடம் சென்றால் அவர்கள் மூல காரணத்தை கண்டுபிடிக்காமல், நோயின் அறிகுறிகளுக்குப் பரிகாரமாக மாத்திரைகளையோ, ஊசி மருந்துகளையோ கொடுக்கின்றனர். இந்த நச்சு மருந்துகளால் தற்காலிகப் பரிகாரம் கிடைத்தாலும் நாளடைவில் பெரும் தீங்கே விளைகின்றது.

(இயற்கை வளரும்..)