திங்கள், 28 மார்ச், 2011

2. கனி இருப்ப...


கடந்த பதிவு ஒரு முன்னறிவிப்பாக வந்ததை நிறையப் பதிவுலக அன்பர்கள் பார்வை இட்டிருக்கிறார்கள் என்பதை கண்டேன். அனைவருக்கும் என் இதய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

நாட்டில் மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கான வசதிகள் உட்கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? அரசு சார்பான மக்கள் நலத்துக்கான முனைப்புக்கள் என்ன? தனியார் துறையின் ஈடுபாடும், முதலீடும், நோக்கமும் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
இன்றைய அளவில் நமது நாட்டில் மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் இல்லாத ஊரே இல்லை என்ற நிலை வந்து விட்டது. ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யூனானி, இயற்கை மருத்துவம் என்று பல பலவிதமான பாரம்பரிய மாற்று மருத்துவ முறைகள் இருப்பினும், அலோபதி என்னும் ஆங்கில முறை மருத்துவமே மிகவும் பிரபலமாகவும், மக்களால் விரும்பிச் சென்று எடுத்துக் கொள்ள கூடிய மருத்துவ முறையாகவும் இருக்கிறது.
ஆனால் தற்போது மருத்துவம் என்பது மிகப் பெரும் செலவுகளை உண்டாக்கக் கூடிய, தொடர் பக்க விளைவுகளை உண்டாக்கக் கூடிய, எப்போதுமே மருந்துகளை சாப்பிட வேண்டிய, மருத்துவர்களை தேடி ஓடக் கூடியதான ஒரு சாத்தானின் சங்கிலித் தொடராக மாறிவிட்டது. இதற்கான காரணங்கள் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளையும், நம் முன்னோர்கள் வாழ்கை முறையாக விட்டுச் சென்ற எளிமையான அருமையான, பின்பற்றுவதற்கு எளிதான இயற்கை நல வாழ்வியல் தத்துவங்களை கடைப் பிடிக்க மறந்து போனதே ஆகும்.
நச்சத் தன்மை கொண்ட மருந்துகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட விரும்புகிறீர்களா?
நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா?
மருத்துவ மனைகளில் நேரத்தையும் பணத்தையும், உற்றார் உறவினர்களின் உதவிகளை எதிர்பார்த்து, வைத்தியம் பார்த்துக் கொள்வதை தவிர்க்க விரும்புகிறீர்களா?
இதற்கான தீர்வு.
இயற்கை உணவுகளை தினமும் உண்பது.
யோகாசனங்கள் பயில்வது, அவற்றை தினமும் செய்வது.
தியான முறை ஒன்றினை கற்றறிந்து தினமும் தவறாமல் செய்வது.
பிராணாயாம முறைகளை தினமும் பின்பற்றுதல்.
நல்லோருடன் அடிக்கடி சந்தித்து அவர்களுடன் உரையாடி நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வது; நாம் கற்றுக் கொண்டவற்றை பற்றி மற்ற நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு சொல்லி அவர்களையும், இயற்கை நலவாழ்வியல் முறைகளைப் பின் பற்றச் சொல்லி ஆலோசனைகள் சொல்வது.
சரியான நபர்களிடம் மேற்கண்ட முறைகளை கற்றுக் கொள்வது.
அஷ்வின்ஜி.

தொடரும்.....

அடுத்த பகுதியை படிக்க: கனி இருப்ப. பகுதி மூன்று 

1. கனியிருப்ப...

1. கனியிருப்ப...

உலகெங்கும் உள்ள வலைப்பதிவர்களுக்கும், வலைப்பதிவு வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள்.

வலைப் பதிவுக்கு முற்றிலும் புதிதானவனான இந்த எளியவன் அண்மையில் துவங்கிய வாழி நலம் சூழ.. என்ற இந்த வலைப்பூவினை இந்த பதிவினை எழுதும் இன்று வரை சுமார் ஆறாயிரத்து நானூறு பேர்களுக்கு மேல் படித்திருக்கிறார்கள் என்பது உவகை தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.

நம் தாய்த்தமிழரில் பலர் இயற்கை நலவாழ்வியல் குறித்த ஆர்வம், ஈடுபாடு கொண்டோர் உலகெங்கிலும் பரவிக் கிடக்கிறார்கள், என்பதையே இது காட்டுகிறது. நீங்கள் காட்டி வரும் ஆர்வத்துக்கு முதற் கண் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டைய ரிஷிகள் தொடங்கி கடந்த சில நூறு ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டில் தோன்றிய பல இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டிகள் வரை நம்மிடையே அற்புதமான இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகளை விதைத்து விட்டுச் சென்று இருக்கிறார்கள்.

வாழ்ந்து காட்டி வழிகாட்டிய அவர்களை அடியொற்றி இன்றளவிலும் பலர் வாழ்ந்து காட்டி நம்மிடையே நலவாழ்க்கை வாழ வழி காட்டி வருபவர்கள் இருக்கிறார்கள்.

அந்த அறிஞர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும், இயற்கை நலவாழ்வியல் துறை வல்லுனர்களின் செயல்பாடுகள் பற்றியும் இந்த வலைப்பூவில் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

மனிதன் ஒருவன்தான் இப்பூவுலகிற்கு மிகப் பெரிய கேடுகளை விளைவித்து வருகிறான். இயற்கையின் வேறு எந்த படைப்பும் இந்தக் கொடிய காரியத்தை செய்யத் துணியவில்லை.

தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதாக எண்ணி செயல்பட்டு வரும் ஆறறிவு படைத்த மனித இனத்தின் இந்த தவறான செயல்பாடுகள் காரணமாக உலகின் அழிவு விரைவாக்கப் படுகிறதோ என்ற ஒரு அச்சம் தோன்றி உள்ளது.

சுற்றுப் புற சூழ்நிலைகளை மாசுபடுத்துதல், இயற்கை படைத்த தாவரங்களை நச்சு மயமாக்குதல், போன்ற பல பேரழிவுச் செயல்பாடுகளில் தொடர்ந்து அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் மனித குலம் ஈடுபட்டு வருகிறது.

ஓரிரு நற்செயல்களைத் தவிர அறிவியல் வளர்ச்சி பெரிய முன்னேற்றத்தை தந்து விடவில்லை என்பதை விஷயம் அறிந்தோர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.

வாழ்வியல் தத்துவங்களில் செயற்கைத் தன்மைகளை புகுத்தி வரும் நாம் கனி இருப்பக் காய் கவரும் மனப்பான்மையில் இருக்கிறோம்.

அணுசக்தியைக் கண்டுபிடித்ததால் ஜப்பானில் உலக போரின் போது ஏற்பட்ட நாசத்தையும், இப்போது ஆழிப் பேரலை காரணமாக ஜப்பானில் நிகழ்ந்து வரும் அணு உலைகளுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து போன்ற பின் விளைவுகளும் மனித குலத்திற்கு பெருமை தேடித் தருவனவாக இல்லை.

மனித இனம் முன்பொரு முறையும் இதே தவறைச் செய்திருக்கிறது. பேரழிவைச் சந்தித்திருக்கிறது என்பதை நமது வேதங்களும், விவிலியத்தின் பழைய ஏற்பாடும், சிலப்பதிகாரம் போன்ற பழம் பெரும் இலக்கியங்கள் உலகெங்கணும் பறை சாற்றி வருகின்றன.

நல்ல திசையில் செல்லாமல் இப்போது நாம் செய்து கொண்டிருப்பவை என்ன?

இனி எந்த ஒரு பேரழிவும் நேராமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை உணராமல் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால், நமது சந்ததியின் தொடர் வாழ்க்கைக்கு குழி பறிக்கிறோம் என்றுதான் பொருள்.

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனித ஆரோக்கியம் மேம்பட்டதா ? என்றால் இல்லை என்று தான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஆரோக்கியம் மேம்பட்டிருந்தால் தினம் தினம் ஏன் இத்தனை புதிய நோய்கள்?

தினம் தினம் ஏன் இத்தனை புதிய மருந்துகள்?

தினம் தினம் ஏன் இத்தனை புதிய மருத்துவ மனைகள்?

விளக்கினில் வீழும் விட்டில் பூச்சிகள் போல, பேரழிவினை நோக்கி இட்டுச் செல்லும் செயற்கை வாழ்வினை நாடி, இயற்கை நலவாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

செய்ய வேண்டுவன என்ன என்பதை அறிவதை விட இனி நாம் செய்யக் கூடாதது என்ன என்பதை நாம் முதலில் அறிந்து கொண்டாக வேண்டும். செய்யக் கூடாததை முதலில் கண்டறிந்து, அதன் பின்னர் அவற்றினை செய்வதை நிறுத்திய பிறகே செய்யத் தக்கனவற்றை நாம் செய்ய இயலும்.

இயற்கை நலவாழ்வியல் பற்றிய உலகின் பல அறிஞர்களின் சிந்தனைகளை "கனி இருப்ப" என்னும் இந்தத் தொடர் மூலம் நாம் அறியலாம்.

அடுத்து வரும் தொடர்களை தவறாமல் வாசியுங்கள். உங்கள் நலவாழ்க்கைக்கு தேவையான அரும் பெரும் நலவாழ்வியல் தத்துவங்களை இவை உங்களுக்கு தெரிவிக்கப் போகின்றன.

ஏற்கனவே பெரியோர் பலர் தந்த தத்துவங்களை இங்கே தொகுத்தளிக்கும் ஒரு சிறிய செயலைத் தான் நான் செய்யப் போகிறேன்.

இங்கே எனது பங்களிப்பு ஒரு தொகுப்பாளன் என்ற வகையில் தான் இருக்கும். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற அளவில் ஒரு அணிலின் பங்கேடுப்பாக என் பணி இருக்கும்.

உங்கள் அனைவரின் ஆர்வம் மட்டுமே நான் வேண்டும் ஆதரவு.

வருகிற தமிழ்ப் புத்தாண்டு நந்நாளில் (கர ஆண்டு:2011) இருந்து இந்தத் தொடர் துவங்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகோரின் நல வாழ்வில் அக்கறை கொண்ட மேலோர் பலரது தத்துவங்களை இங்கே வெளியிட அவர்களது ஆசிகள் எனக்கு தொடர்ந்து கிடைக்க இறைவனை பணிந்து வணங்கி வேண்டுகிறேன்.

இந்தத் துறையில் ஈடுபடக் காரணமாக இருந்து வரும் திருவாளர்கள் ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்க செயலாளர் திரு.இராமலிங்கம் ஐயா, எனது யோகா ஆசான் திருமூலர் யோகா மற்றும் இயற்கை உணவு ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர், யோகி டாக்டர் திரு. தி.ஆ.கிருஷ்ணன் ஐயா, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் குலசேகரன் பட்டினம் (திருச்செந்தூர்)திரு.மூ.ஆனையப்பன் ஐயா, மற்றும் யோகா ஆசிரியரும், இயற்கை உணவாளர், நெறியாளர், என்னை தினமும் ஊக்கப் படுத்தி வரும் இயற்கை நலவாழ்வியல் புரவலர் திரு.மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும், நல்ல நூல்கள் மூலமாக என்னை வழிப்படுத்திவரும் மறைந்த பல பேரறிஞர் பலருக்கு இந்த தொடரை நன்றி பாராட்டி சமர்ப்பிக்கிறேன்.

விரைவில் சந்திப்போம்.

வாழி நலம் சூழ..

அஷ்வின்ஜி.


அடுத்த பகுதியைப் படிக்க இங்கே: கனி இருப்ப...பகுதி இரண்டு.



ஞாயிறு, 27 மார்ச், 2011

மாற்றுமருத்துவம் என்றால் என்ன?

உலகளாவிய அளவில் கோலோச்சும் அலோபதி மருத்துவ முறைக்குப் பதிலீடாக அந்தந்தக் கலாச்சார மற்றும் வாழ்வியல் பிண்ணனிகளோடு பிணைந்திருக்கும் பாரம்பரியமான மருத்துவ முறைகள் (உ-ம்:இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா,ஹோமியோபதி,யுனானி,அக்குபஞ்சர், ரெய்கி, மலர் மருத்துவம் போன்றவை) மாற்று மருத்துவ முறைகள் என அழைக்கப்படுகின்றன.

அவற்றின் நம்பகத்தன்மை?
நூற்றாண்டுகளைத் தாண்டியும் தன் செல்வாக்கினை இழந்துவிடாமல் இன்னும் அலோபதியின் தாக்குதல்களை சமாளித்துத் தாக்குப்பிடிக்கும் திறன் ஒன்றுபோதாதா? இருக்கட்டும்...

ஆயுர்வேதத்தின்(ஆயுள்+வேதம்- வாழ்க்கையின் வேதம்) வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பாருங்கள்... இன்றைக்கு நவீன அறிவியல் முறை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே... அந்த காஸ்மெடிக் சர்ஜரி பற்றி புட்டுப் புட்டு வைக்கிறார் ஆயுர்வேதத்தின் மூலவர்களில் ஒருவரான சுஸ்ருதர். ரணசிகிச்சையும் சத்திர சிகிச்சையும் ஆயுர்வேதத்தில் வலிமையாகவே இருக்கின்றன.

தென்னாட்டின் பாரம்பரியமான சித் தவைத்திய மரபின் மூலிகைச் செல்வங்களைத் தானே அலோபதி தன் நவீன சோதனைச் சாலைகளில் பகுப்பாய்வு செய்து தன் சுயக் கண்டுபிடிப்பாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது?? (இல்லையென்று மறுப்போர்க்கு ஒரு கேள்வி... ஏன் ஆயுர்வேதம் மற்றும் சித்தாவின் முக்கிய மருந்தினங்களாகத் திகழும் வேம்பு, பாகற்காய், மஞ்சள் போன்றவற்றுக்கு திருட்டுத் தனமாக மேலைநாட்டு மருந்தியல் ஆய்வு நிறுவனங்கள் காப்புரிமை பெறுவதில் தீவிரம் காட்டுகின்றன?)

"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள் எண்: 948)" என்ற குறளின் பொருளை மிக முழுமையாய் நிறைவு செய்யும் வகையில் "நோய்க்கு மருந்தல்ல நோயாளிக்குத் தான் மருந்து" என்று கூறி மருத்துவத் துறையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது ஹோமியோபதி.. (டாக்டர் ஹானிமன் அல்லோபதி மருத்துவராக இருந்து அம்மருத்துவ முறையின் குறைபாடுகளை களைய ஹோமியோபதி முறையை கண்டு பிடித்தவர்.)

ஒரே மாதிரியான நோய் பலருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித மருந்து என்ற நடைமுறையிலும் நோயாளியின் உடல், மன மற்றும் சமூகக் கூறுகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சையை மேற்கொள்ளும் ஹோமியோவின் சிறப்புக்களை நானே அனுபவித்துப் பார்த்து வியந்திருக்கிறேன். எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.

மேலும் விரித்துக் கூறப்போனால் இது பெருந்தொடராக எழுதவேண்டிய பதிவாக மாறிவிடும்

ஏன் வேண்டும் மாற்றுமருத்துவம்?
அலோபதி மருத்துவமும், அதுசார்ந்த மருந்தியல் நிறுவனங்களும் நோயாளிகளை வெறும் வாடிக்கையாளர்களாக நுகர்வு பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் அவலம் இன்று தலைவிரித்து ஆடுகின்றது. எப்போது ஒரு மருத்துவன் "தான் முதல் போட்டு நடத்துகிறேன். எனவே தனக்குத் தன் முதலையும், வட்டியையும் மீட்டாக வேண்டும் (MBBS சீட்டுக்கு 50-100 லட்சங்களில் நன்கொடை??)" என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறானோ அப்போது அவன் உன்னதமான தொழில் noble profession செய்பவன் என்ற நிலையிலிருந்து லாபநோக்குடன் வியாபாரம் profittable profession செய்பவன் என்ற நிலைக்குக் கீழிறங்குகின்றான்.

பொதுவாகவே மக்களை வெறும் நுகர்வோராக மாற்றும் கலாச்சாரச் சீரழிவைத் தடுக்கவேண்டிய அவசியத்தில் தேசம் இருக்கும் நிலையில் மாற்று மருத்துவ முறைகள் இயல்பாகவே அதைச் செய்து வருகின்றன. உதாரணமாக பசுமை வளர்க்கும் கட்டாயத்தில் உலகம் இருக்கும்போது சித்த வைத்திய முறையும், ஆயுர்வேதமும் பசுமையான மரஞ்செடி,மூலிகைகளைச் சார்ந்திருப்பதை சுட்டிக்காட்டலாம்.

அதுமட்டுமல்லாமல் அலோபதி மருத்துவம் மனிதனை எந்திரமயமாக- தலையில் பிரச்சினை என்றால் தலைக்குத் தான் மருந்து, சிறுநீரகத்தில் கோளாறு என்றால் அங்கு மட்டும்தான் சிகிச்சை- என்ற அளவில்தான் பார்க்கின்றது. ஆனால் சித்தா, ஆயுர்வேதம்,ஹோமியோ போன்றவை மனிதனை ஒரு முழுமையான உயிர்த்தொகுப்பு என்ற கோணத்தில் அணுகுகின்றன.

மேலும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மூன்று வேளை உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு வறிய தேசத்தில் பெருமளவில் ஊக்குவிக்கப்பட வேண்டியதாய் இருக்கின்றன இம்மாதிரியான மாற்று மருத்துவ முறைகள்.

இந்த இடத்தில் சீனாவில் கலாச்சாரப்புரட்சி நடந்தபோது மாவோ அறிமுகப் படுத்திய 'வெறுங்கால் வைத்தியர்கள்' (மக்களைத் தேடிச்சென்று பாரம்பரியமுறையில் எளிமையாக வைத்தியம் செய்வது) என்ற திட்டமே சீனாவின் வைத்தியத் தேவையை மிக அதிக அளவில் ஈடுகட்டியது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும் உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது ஆய்வறிக்கை ஒன்றில் 70 சத நோய்களை சாதாரண மருத்துவ அறிவு இருந்தாலே குணப்படுத்தமுடியும்; அதற்கு 10-ம் வகுப்புக் கல்வித்தகுதி இருந்தாலே போதும் என்று கூறியிருக்கிறது. அதனடிப்படையில் கல்பாக்கத்தைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர் திரு.ராஜரத்தினம் என்பவர் தனது தொண்டமைப்பின் வாயிலாக மேற்கூறிய "வெறுங்கால் வைத்தியர்கள்" போன்றதொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் என்பதையும் உற்று நோக்க வேண்டும்.

என்ன செய்யவேண்டும்?
1) மாற்றுமருத்துவமுறைகளைப் பற்றிய மிகப்பெரும் ஆராய்ச்சிகளை அரசும் மக்கள் நலன்சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் முன்னெடுக்க வேண்டும்

2) மாற்றுமருத்துவம் பற்றிய தெளிவான கொள்கைத்திட்டத்தை அதற்குரிய கொளகை வகுப்பாளர்களைக் கொண்டு வகுத்திடல் வேண்டும்

3) மக்களிடையே இதுபற்றிய பிரச்சாரங்களை முறையான திட்டமிடலுடன் மேற்கொள்ள வேண்டும்

4) மாற்றுமருத்துவம் என்பது ஒரு தேசத்தின் சுயச்சார்பான பொருளாதாரத்திற்கு அவசியமானது என்ற புரிதலும், அக்கறையும் ஆட்சியாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வரவேண்டும்

5) பகாசுர பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளை தீவிரமாக ஒடுக்கிட அரசை வலியுறுத்தக் கோரி மக்கள்நலன் சார்ந்து இயங்கும் அனைத்து இயக்கங்களும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்

மாற்று மருத்துவம் பற்றிய இந்தக் கட்டுரை http://vinthaimanithan.blogspot.com/2010/07/dr.html வலைப்பூவில் இருந்து வெளியிடப்பட்டது. முழுதாக வாசிக்க விந்தைமனிதன் வலைப்பூவுக்குச் செல்லுங்கள்.
நன்றி: விந்தைமனிதன் வலைப்பூ.
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?