வெள்ளி, 28 மே, 2010

பகுதி 15 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.
15
இயற்கை மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்யாமல் உடம்பிலுள்ள பிராணசக்தியை அதிகப்படுத்தி மலத்தை வெளியேற்றும் தந்திரங்களைக் கையாளுகின்றனர். உடம்பில் போதுமான பிராணசக்தி அதாவது உயிராற்றல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தானியங்கி இயந்திரம். அதற்கு ஒரு வாய்ப்புகொடுத்தால் தானே சூழ்நிலையுடனும் இயற்கையுடனும் சமநிலை எய்தும் ஆற்றல் பெறும். எண்ணங்களின் கோளாறுகளினாலோ, உணவென்று வேண்டாதவைகளை ருசி கருதி உட்கொள்வதினாலோ உண்டாகும் துன்பங்களை அறிவறிந்து மாற்றி அமைத்துக் கொண்டால் இப்போது நடைபெறுகின்ற வேண்டாத வேலைகள் பலவற்றை இல்லாமலே செய்து விடலாம்.

கோடானகோடி ரூபாய்கள் செலவிட்டு ஆராய்ச்சியாளர்களைத் தயார் செய்து மருந்தகங்களின் மூலம் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்து அவற்றிற்கு சந்தை தேட முயற்சிக்கும் வேலைகளின் பெரும்பகுதியைக் குறைத்து, அதனால் எஞ்சும் ஆற்றலையும், வேறு பல வசதிகளையும் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். இதனால் நவீன மருத்துவம் தவறானது என்ற அர்த்தமில்லை. அறிவியல் துறை வளர்ச்சியை உள்ளறிவுகொண்டு உகந்த அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

(இயற்கை இன்னும் வளரும்)

செவ்வாய், 25 மே, 2010

பகுதி 14 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறி உடலுக்கு வேண்டிய ஊட்டத்தைக் கொடுக்கிறது. உண்ணும் எல்லாப் பொருள்களுமே இரத்தமாக மாறி விடுவதில்லை. உடம்பில் ஊறும் செரிமானச் சுரப்பு நீர்களும், புளிமங்களும் அன்னக் குழம்புடன் சேர்ந்து பின்னர், அன்னரசமாகவும் அதிலிருந்து உறிஞ்சப்பட்ட சாரம் இரத்தமாகவும் மாறுகிறது. எஞ்சிய பொருள்கள் வேண்டாதவையாக பெருங்குடல் வழியாக வெளித்தள்ளப்படுகின்றன. இப்பொருள்கள் ஐவகை மலங்களாக அதாவது கரியமிலவாயு, வியர்வை, சிறுநீர், மலம், கபம் என வெவ்வேறு உறுப்புகளினால் வெளியேற்றப்படுகின்றன. இந்த வேலை அவ்வப்போது நடைபெற்றால் பரவாயில்லை. ஆனால், நாகரிக வாழ்வில் ஈடுபட்ட மனிதர்கள் பலர் இதனைக் காலாகாலத்தில் செய்வதில்லை. தடைபட்ட மலம் உள்ளே தங்கி நிற்கின்றது. உடலுள் உறையும் பிராணசக்தி காலங்கடந்து உடம்பில் நிற்கும் கழிவுப்பொருள்களை வெளித்தள்ளும் இயக்கமே நோய் எனப்படுகிறதென்று இயற்கை மருத்துவர்கள் நம்புகின்றார்கள்.

ஆதலால்தான் இவர்கள் நோயை நண்பனாகக் கருதுகின்றார்கள். நோய்க்கு இவர்கள் பயப்படுவதில்லை. தோன்றும் அறிகுறிகளைக் கண்டு அஞ்சுவதில்லை. காரணங்களைக் கண்டுகொண்டு அந்நியப் பொருள்கள் அதாவது உடற்கட்டுமானத்துக்க வேண்டாத உள்ளேயுள்ள பொருள்களை வெளியேற்ற உதவுகின்றனர்.

நவீனமுறை பயின்ற மருத்துவர்கள் எளிய இயற்கை மருத்துவச் சிகிச்சைகளைக் கையானாது அறிகுறிகளையே நோய் என்று நினைத்து அவற்றிற்குப் பரிகாரம் காண முயலுகின்றனர். அவர்கள் கையாளும் பரிகாரங்கள் மலத்தை வெளியேற்றாமல் உள்ளே அமுக்கி வைக்கவே செய்கின்றன. இதனை நவீன மருத்துவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. தங்களுடைய மருத்துவமும் மலத்தை வெளியேற்றவே செய்கிறதென்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன? சளி, இருமல், கோழை முதலிய நோய்க்குறிகள் நீங்க, சாப்பிடும் மருந்துகள் ஒவ்வொன்றிலும் அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கலந்திருப்பது வெள்ளிடைமலை. இவை மலத்தை நீக்குவதற்குப் பதிலாக மலம்தோன்றும் இடங்களிலுள்ள ஜவ்வு படலத்தையும் நரம்புகளையும் தளரச்செய்து செயலற்றவைகளாக்கி, ஸ்தம்பிக்க வைத்து விடுகின்றன. உடனடியாகக் குணம் இருப்பது போல் தோன்றுகின்றது. உண்மையில் நடப்பது வெளித்தள்ளும் ஆற்றல் குறைந்து, மருந்தின் வேகத்தால் மலங்கள் உள்ளொடுக்கி உயிரணுக்களிடையே பதுங்கிக் கொள்கின்றன. இதே போல் பாதரசம், ஈயம், துத்தநாகம் போன்ற மருந்துகளிலுள்ள விஷம் உள்ளுடம்பிலுள்ள இயக்கங்களைத் தடைசெய்து அல்லது மிகவேகமாகத் தூண்டி மல வெளியேற்றலுக்குத் தடையாகவே வேலை செய்கின்றன. இத்தகைய சிகிச்சைகள் நடைபெறும் பொழுதெல்லாம் தற்காலிகச் சுகம் கிடைப்பினும், மருந்தின் விஷமும் மலத்தின் விஷமும் கலந்து புதிய புதிய நோய்களாக உருவெடுகின்றன. ஆஸ்த்மா, இதயநோய், புற்றுநோய், கண்டமாலை, மேகநோய், நமட்டுச்சொறி முதலியவை தோன்றி மனிதர்களை அல்லற்படுத்துகின்றன. இத்தகைய நோய்களை நவீன மூலமும் குணப்படுத்த முயலுகிறது. ஆனால் இவை உருமாறி மறுபடியும் மறுபடியும் வந்து தொலைகின்றன. டாக்டர்களைக் கேட்டால் "ஆமாம், இவையெல்லாம் தீராத நோய்கள் புதிய மருந்துகளைக் கண்டு பிடித்துத்தான் இவைகளைப் போக்க முடியும். இவைகளுக்கு நடைமுறையில் உள்ள மருந்துகளை உட்கொண்டு காலங்கடத்துங்கள்" என்று சமாதானப்படுத்துகின்றனர். நீரழிவு நோயைக் குணப்படுத்த முடியாது ஆனால் நாள்தோறும் இன்சுலின் ஊசிபோட்டு எப்படியோ வாழலாம் என்ற ஆறுதல் கிடைக்கின்றது. அறுவையின் மூலமாகவோ அல்லது சுட்டுப்பொசுக்குவதன் மூலமாகவோ புற்றுநோயிலிருந்து தற்காலிகமாகத் தப்பலாம். அதை அறவே ஒழிக்க இதுவரை பரிகாரம் காணமுடியவில்லை என்கின்றனர்.

இதே கதைதான் ஆஸ்த்மா, க்ஷயம், மூலம், பெளந்திரம் போன்ற தீராத நோய்களுக்கும் இவைகளுக்குப் பெயரே தீராத நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்துள்ள 4000-க்கும் மேற்பட்ட நோய்களில் 60 சதவிகித நோய்கள் டாக்டர்களால் அதாவது நவீன மருந்துகளால் உண்டானவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இவான் இலிச் என்ற பேரறிஞர் Medical Mnemisis அதாவது "வைத்தியச் சாபத்தீடு" என்ற ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டுள்ளார்.

(இயற்கை இன்னும் வளரும்)

சனி, 22 மே, 2010


பகுதி 13 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

நோய் நீக்கலுக்குக் காரணம்

மருந்து வேண்டாம். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு...

மனிதர்கள் அனைவரும் விரும்புவது நோயற்ற வாழ்வு. இதுவே குறைவற்ற செல்வம்.

நோயற்ற வாழ்வுதான் வாழ்வாங்கு வாழும் உயர் வாழ்வுக்கு அடிப்படையாகும். இதனாலேயே திருமூலரும் 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்று கூறியுள்ளார்.

நோய் நீக்கலுக்குக் காரணம்
"நோய் பல அல்ல" என்றும் "நோய் நமக்கு நண்பன்" என்றும் இதற்குமுன் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் நாம் ஏன் நோயின்றி வாழ முற்பட வேண்டும்? உடம்பு அழிந்து போகும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிதான் நோய். நோய் வந்தபோது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். உடம்பினுள் ஏதோ வேண்டாத பொருளோ, நச்சுப் பொருளோ தங்கி, அது நம் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது என்பதை நோய் காட்டுகிறது. வேண்டாத பொருள்களை வெளியேற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் நச்சுப் பொருள்கள் வெளியேறி விட்டால் உடல் ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்கும். அத்துடன் நீண்டநாள் வாழலாம். நச்சுப் பொருளை வெளியேற்ற முயற்சி செய்யாமல் நோயாளிகள் மருத்துவரிடம் போகின்றார்கள். மருத்துவர்களும் தங்களிடமுள்ள மருந்துகளைக் கொடுத்து நோயினை குணப்படுத்த முயலுகின்றனர்.

மருந்துகளின் தன்மை
ஆங்கில மருத்துவர்களிடமுள்ள மருந்துகளோ பெரும்பாலும் வெறி மயக்கப் பொருள்கள். ஆங்கிலத்தில் இதை 'டிரக்' (Drug) என்று சொல்கிறார்கள். Medicine (மெடிசின்), Drug (டிரக்) என்று ஆங்கிலத்தில் இரு வார்த்தைகள் உண்டு. தமிழில் இரண்டையும் மருந்து என்றுதான் சொல்லுகிறோம். அலோபதிக் மருந்துகளின் பெரும்பாலானவை டிரக்குகளே. மருந்துக் கடைகளில் தகுதி வாய்ந்த டாக்கடர்களுடைய சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை கொடுக்கமாட்டார்கள். இந்த மருந்துகளின் மீது விஷம் (Schedule H) என்று சிவப்பு எழுத்தால் எழுதப் பெற்றிருக்கும். விஷத்தை விஷத்தால் முறியடிக்க வேண்டும் என்ற கோட்பாடுடைய மருத்துவர்களுக்கு பூச்சி(வைரஸ்)களால் நோய் வந்துள்ளது. அப்பூச்சிகளை விஷத்தால்தான் கொல்லமுடியும் என்ற கொள்கையுடையோரும் இந்த நச்சு மருந்துகளை உபயோகிக்கின்றனர்.

மருந்துகள் செய்யும் வேலை.
இம்மருந்துகள் செய்யும் வேலைகளை பார்த்தாலும் இதை விளங்கிக் கொள்ளலாம். சில மருந்துகள் உயிரைக் குடிப்பன. இவை பூச்சி(வைரஸ்)களைக் கொல்வதுடன் மனிதனின் உயிராற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும்; குடிக்கும்.

ஏற்கனவேயுள்ள நச்சுப் பொருள்களுடன் இந்த நச்சுப் பொருளும் சேர்ந்து கொண்டு உணர்வை மரத்துப் போக செய்கின்றன. கொஞ்ச காலத்திற்கு வலி தெரிவதில்லை. நோய் தீர்ந்து விட்டதென ஒரு பிரமை ஏற்படுகிறது. உண்மையில் நோய் தீருவதில்லை. அது தெரியவில்லை அவ்வளவே. சில சமயங்களில் இந்த நச்சுப் பொருள்கள் இரத்தத்தில் கலந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கிருந்து அவை வெளியேற முயலும்போது துன்பம் ஏற்படுகிறது. மக்கள் அதனைப் புதிய நோய் என்று கருதுகின்றனர். பழைய நோய்தான் புதிய இடத்திற்கு வந்திருக்கிறதென்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. டாக்டர்களும் புதிய நோய்க்கு புதியதொரு சிகிச்சை செய்கிறார்கள்.

(இயற்கை இன்னும் வளரும்..)

செவ்வாய், 18 மே, 2010

பகுதி 12 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

உடல் உறுப்புகளின் தாங்கும் திறன்

மனிதனுடைய உடல் உறுப்புகள் வாழ்நாள் முழுவதும் சமைத்த உணவின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டே வருகின்றன. கழிவுகளை வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. பல வருடங்கள் கழித்து அக்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத பொழுது தான் அவைகள் வேலை நிறுத்தத்தில் (Strike) ஈடுபடுகின்றன. அதன் பிறகே புற்றுநோய், இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, சிறுநீரகம் வேலை செய்யாமை போன்ற நோய்கள் வருகின்றன.

இரத்தம் உடலிலிருந்து வெளியே வந்த சில நிமிடத்தில் அதில் உள்ள செல்கள் எல்லாம் இறந்துவிடுகின்றன. அதே போல் மாமிசங்களும் கெட்டுப்போக ஆரம்பித்து நேரம் ஆக ஆக முழு விஷப் பொருட்களாக மாறிவிடுகின்றன. அதைச் சமைக்கும் பொழுது அதில் விஷப் பொருள் மேலும் அதிகரிக்கின்றது. மிருகங்களிலிருந்து கிடைக்கும் புரதச் சத்துக்களே மிகவும் உயர்ந்த புரதம் என்று கூறுவது தவறாகும். அப்படியென்றால் அந்த உயர்ந்த புரதம் எப்படி உருவாக்கப்பட்டது. இலை, தழை போன்ற இயற்கை உணவுகளினால் தானே. சளி, இருமல், ஆஸ்துமா, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை உண்டாக்குவதற்கும் அவற்றை வளர்ப்பதற்கும் மிகவும் உதவி செய்கின்றவை சமைத்த உணவுகளான பால், வெண்ணெய், ஜாம், இனிப்புகள் அரிசி, மீன், முட்டை, மாமிசம் முதலியவைகளே ஆகும்.

இயற்கை உணவு சிறிதும் தராமல், ஒரு சமயம் இங்கிலாந்தில் தண்டனை பெற்ற சிறைச்சாலைக் கைதிகளுக்கு முட்டை, மீன், மாமிசம் முதலியவைகளை மட்டும் எண்ணெயில் பொரித்துக் கொடுத்ததில் அவர்கள் 28 நாட்களுக்குள் இறந்து விட்டார்கள். ஆனால் பட்டினி இருக்கும் மனிதன் 70 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். மாமிச உணவுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய விஷக்கழிவுப் பொருள்களே அந்தக் கைதிகளை விரைவில் கொன்றுவிட்டன. பாம்பின் வாயில் விஷம் உண்டாவது போல் எல்லா மிருகங்களும் விஷத்தை உற்பத்தி செய்கின்றன. மாமிசத்திலிருந்து விஷத்தை தனியாகப் பிரிக்க முடியாமல் மாமிசம் சாப்பிடும் மனிதன் விஷத்தையும் சேர்த்துச் சாப்பிடுகின்றான். சைவ உணவுகளை விட மாமிச உணவுகளைச் சாப்பிடும் பொழுது பத்து மடங்கு அதிகமாக யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இதை வெளியேற்ற கல்லீரல், சிறுநீரகம், இருதயம் நான்கு மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. சைவ உணவு உட்கொள்வோர் வெளியேற்றும் சிறுநீரில் யூரிக் அமிலம் 0.2 லிருந்து 0.7 கிராம்தான் ஒரு மணிநேரத்திற்கு. ஆனால் மாமிச உணவு கொள்வோர் ஒரு மணி நேரத்திற்கு 2 கிராம் யூரிக் அமிலம் வெளியேற்றுகின்றனர்.

உருளைக் கிழங்கு, ரொட்டி, தானியங்கள், பருப்புகள் நிறைந்த சமைத்த உணவுகளும், அமிலங்களையும் விஷத்தன்மைகளையும் உற்பத்தி செய்து நோய்களை உண்டாக்குகின்றன. தானியங்களிலும் பருப்புகளிலும் கிடைக்கும் எல்லாச் சத்துக்களையும் மிக எளிதாக, பழங்களிலிருந்தும் கொட்டைகளிலிருந்தும் (Fruits and nuts) பெற்று விடலாம். கொட்டைகள் என்பது இங்கே தேங்காய், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு போன்றவற்றைக் குறிக்கும். சமையல் என்பது ஒரு உபயோகமற்ற, தேவையில்லாத, நேரத்தை வீணாக்கும் செய்கையே. அது இல்லத் தலைவிகளை இருளில் மூழ்கடித்து சமையலறைக்கு அடிமைகளாக்கி விடுகின்றது.


இந்தத் தொடரில் அடுத்து வர இருக்கும் துணைத் தலைப்பு: 
மனிதன் நோயின்றி வாழ முடியாதா?


(இயற்கை இன்னும் வளரும்) 

திங்கள், 17 மே, 2010

சேவை செய்திகள்.

ஒரு முக்கிய அறிவிப்பு.
ஏழு நாட்கள் யோகா & இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம்.

இடம்: இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி, (தமிழ்நாடு)

நாள்: 18.052010 முதல் 24-05-2010 முடிய.

மனிதனுக்கு மருத்துவமே அவசியமில்லை என திருவள்ளுவர் கூறியுள்ளார்; ஆம், எதை உண்ண வேண்டும்? எப்போது உண்ண வேண்டும்: எவ்வாறு உண்ண வேண்டும்? எனும் இம்மூன்று வினாக்களுக்கு விடைகள் அறிந்தால், எங்கு அலைந்தும் உடல், உள நலம் கிட்டாதவர்கட்கு, எளிதில் மருந்தின்றி, அறுவையின்றி, மாற்று உறுப்பு பொருத்துதல் இன்றி, எளிதில் உடல்/உள நலம் கிட்டிவிடும்.

இந்த முகாமில் ''சீரோ பட்ஜெட்'' மருத்துவம் விளக்கம் அளிக்கப் படுகிறது. தம்பதியராக இம்முகாமில் கலந்து கொள்வது உயர்வு. இம்முகாமில் நோய் தராத, நோய் நீக்கும் உணவுகள் வழங்கப்படும்.

இந்திய அரசுக்கு சொந்தமான (NIN, PUNE) நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதி, பூனே இந்த முகாமை வழங்குகிறது. இணைந்து முகாமை நடத்துபவர்கள் Natural Life Centre, Kulasekaranpattinam, Tuticorin District (Tamil Nadu) PIN:628206.

நன்கொடை: நபர் ஒருவருக்கு முன்னூறு ரூபாய் மட்டுமே.
மேல் விவரங்கள் பெற: 9380873645 & 9944042986

முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கூட மேற்கண்ட தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திரு.மூ.ஆ.அப்பன் அவர்களிடம் மற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை அறியலாம்.

சனி, 15 மே, 2010

பகுதி 11 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


ஒரே அடிமரத்தைக் கொண்ட மரத்தில் பல கிளைகளும் இலைகளும் பூக்களும் காய்கறிகளும் இருப்பினும் மரம் ஒன்றேதான், அதுபோலவே உடலில் தோன்றும் நோய் ஒன்றதான் என்றாலும் மனித உடம்பின் வெவ்வேறு பாகங்களான தலை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்புக்குழி, கை, கால், முதலியவற்றின் வாயிலாக வெளி வரும்போது பலவாகத் தோற்றமளிக்கிறது. நாடகங்களில் பல வேடங்களில் ஒருவர் தரிக்கின்றார். ஒரே ஆள் சமயத்திற்கு ஏற்றமாதிரி  வேடந்தாங்கி நடிக்கின்றார். இருப்பினும் ஒரே ஆள்தான் பலவேஷம் தரிக்கின்றார் என்பது அறிவாளிகளுக்குத் தெரியும். சிறு குழந்தைகள், சாதாரண மக்கள் வெவ்வேறு ஆள் என்று நம்பி விடுகிறார்கள். நாடகத்தைப் பற்றி எவ்வித நம்பிக்கை கொண்டாலும் தீங்கு விளைவதில்லை. ஆனால் நோயைப்பற்றியோ முதற்காரணத்தைக் காணாமல் வெளித்தோற்றத்திற்குச் சிகிச்சை அளிப்பது பூரண குணத்தை கொடுப்பதில்லை. சில சமயங்களில் அரைக்குறைச் சிகிச்சைகளால் நோய் மேலும் உள்ளத்தள்ளப்பட்டு நாட்பட்ட நோயாகவும சீரழிக்கும் நோயாகவும் பின்னர்அதிகத் தொந்தரவைக் கொடுக்கலாம்.

எனவேதான் "நோய் ஒன்றே பல அல்ல" என்னும் அடிப்படையை இயற்கை மருத்துவ தத்துவம் வற்புறுத்துகின்றது.

மாலை ஐந்து மணி சுமாருக்கு மலர்ந்த முகத்துடன் நண்பர் சோமு எனது அறைக்குள் நுழைந்தார் 'ஐயா என் வயிற்று வலி இப்பொழுது பரவாயில்லை ஆனால் முழங்கால் இரண்டிலும் நல்ல வலி. இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்"

"சென்ற தடவை சந்தித்த போது நான் விரிவாகச் சொன்னது நினைவிருக்கலாம் அடிவயிற்றில் தொடர்ந்து காலையிலும், மாலையிலும் மண்பட்டி போட்டு வருகிறீர்களல்லவா? தொடர்ந்து செய்து வாருங்கள்.

"ஐயா! வயிற்றுவலி என்று நான் சொன்ன பொழுது எனக்கு உள்ள குறைபாடுகளைப் பற்றியெல்லாம் கேட்டு விசாரித்து நோய் ஒன்றுதான் பல அல்ல என்பதைப் பற்றிச் சொன்னீர்கள் வயிற்றுக்குப் படுக்கப் போகுமுன்னும் காலை எழுந்தவுடனும் நல்ல புற்றுமண்ணோ அல்லது களிமண்ணோ எடுத்து வந்து மண்பட்டி போட்டக்கொள்ள வேண்டுமென்று சொன்னீர்கள் நீங்கள் தெரிவித்தபடியே இரண்டு நாட்கள் செய்தேன். வலி மிகவும் குறைந்து விட்டது. ஏன்? வலியே இல்லையென்று கூட சொல்லலாம் அதன் பின்னால் மண்பட்டி போட்டுக் கொள்வதை நிறுத்தி விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் சுகமாக இருந்தது ஆனால் நேற்றும் இன்றும் தான் முழங்கால் மூட்டுக்களில் நல்ல வலி தயவு செய்து ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் எனக்கு வயிற்றுவலி இல்லை.

இவருக்கு இயற்கை மருத்துவத் தத்துவத்தை எப்படி விளங்க வைப்பது என்பதைப் பற்றி ஆழ்ந்து யோசித்தேன். வயிற்றுவலி வேறு, முழங்கால் வலி வேறு என்ற கருத்து நெடுநாள் இவர் மனதில் ஊறிப்போய் இருந்தது. ஒவ்வொரு நோய்க்கும் வெவ்வேறு மருத்துவம் என்ற எண்ணமும் பொதுவாக இவர் ஏற்றுக்கொண்டிருந்தது. ஒன்று இதனை இவருக்கு விளங்க வைப்பது அவ்வளவு எளிதாக எனக்குத் தோன்றவில்லை இருப்பினும் எனது முயற்சியை விட்டுவிடவில்லை. "ஐயா! குழந்தையாய் இருந்தபொழுது உங்களைச் சோமு என்றுதான் அழைத்தார்கள் பின்னர் வாலிபரானீர்கள் இப்போது சில குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறீர்கள் உங்கள் உருவத்தில் மாறுதல் வேலையில் மாறுதல், செயல்களில் மாறுதல் இருப்பினும் நீங்கள் சோமுதான் அதுபோல உங்கள் உடம்பில் தோன்றுகிற வலிகளுக்கும்; மூலகாரணம் ஒன்றே உடம்பினுள் வேண்டாத சில அந்நியப் பொருள்கள் தேங்கியிருக்கின்றன. அவற்றை வெளியேற்றும் முயற்சி நடக்கும் பொழுது உங்களுக்கு வலியோ துன்பமோ ஏற்படுகின்றது ஒரு தடவை வயிற்றின் மூலம் அழுக்கு வெளியேற முயன்று அதனால் உங்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மண்பட்டி போட்டதினால் குடல்களிலிருந்த உஷ்ணமும் துடிப்பும் குறைந்தன. அந்த அளவுக்கு அழுக்குகள் வெளியேறியுள்ளன. உங்கள் உடம்பில் காலப் போக்கில் சேர்ந்துள்ள அழுக்கு பரவலாக உடல்முழுவதும் இருக்கிறது. அதனை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வெளியேற்ற வேண்டும். பூரண குணமடையக் கொஞ்சம் நாளாகலாம் எனவேதான் தொடர்ந்து மண்பட்டி போடுங்கள் என்று சொன்னேன். இது இப்போது உங்களுக்கு விளங்குகிறதா?"

"நீங்கள் சொல்வது விளங்குகிறது வயிற்றுவலி இப்போது இல்லை; முழங்காலில் தான் வலி இருக்கிறது அதற்கு ஏதாவது பரிகாரம் வேண்டும்.

"அதற்குத்தான் அடிவயிற்றில் தொடர்ந்து மண்பட்டி போட வேண்டுமென்று சொல்கிறேன். அப்படியே செய்யுங்கள்"

"வயிற்று வலிக்கு மண்பட்டி போடுவது சரி  முழங்கால் வலிக்கும் அடிவயிற்றில் மண்பட்டி போடுங்கள் என்கிறீர்களே! அதுதான் விளங்கவில்லை மண்ணைக் குழைத்து முழங்காலில் போட்டுக் கொள்ளலாமா?"

"முழங்காலில் போட்டுக் கொள்வதை விட அடிவயிற்றில் மண்பட்டி முறையாகப் போடுவதன் மூலமாகத்தான் உங்களுக்கு விரைவில் பூரணசுகம் கிடைக்கும். நாம் சாப்பிடும் உணவு எப்படி உருமாறி இரத்தமாக உடவெல்லாம் பரவுகிறதோ அதுபோல நமது உடம்புக்கு வேண்டாத அந்நியப் பொருள்கள் நெடுநாள் தங்கியிருந்தால் அவை உருமாறி உயிரணுக்கள் பலவற்றுள்ளும் போய்ச் சேர்ந்து விடுகிறது. அவற்றை வெளியேற்றுவதற்குச் சிறந்தவழி. அடிவயிற்றில் மண்பட்டி போட்டுக் கொள்வதுதான் இதன்மூலம் நல்ல மலக்கழிவு ஏற்படும் உடலில் மூலாதாரத்தில் உள்ள உஷ்ணம் சமநிலைக்கு வரும். இரத்த ஓட்டமும் தடையின்றி நடைபெறும். இன்று உங்களுக்கு இருக்கிற முழங்கால் வலிக்குக் காரணமான வாதம் இரத்த ஓட்டத்தின் மூலம் பல வழிகளிலும் வெளியேறி இன்னும் சில தினங்களில் வலி குறைந்து விடும் இன்று முழங்காலில் தோன்றுகிற வலி குறைந்து இடுப்பிலோ முதுகிலோ கூட வரலாம். பயப்பட வேண்டிய தேவையில்லை. வயிற்றில் ஏற்படும்பொழுது அதனை வயிற்றுவலி என்றும் முழங்கால் வழியே வெளியேற முயலும்போது அதை முழங்கால் வலியென்றும், இடுப்புக்குப் பக்கமாக வந்தால் அதனை இடுப்பு வலி என்றும் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். அவ்வளவுதான், நோய் ஒன்றே எனவே தான் நமது மருத்துவமும் ஒன்று' என்று சொல்லி அனுப்பினேன்.

இந்த இயற்கை மருத்துவ தத்துவம் முதலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். 

அந்த எண்ணத்தை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து அது நம்பிக்கையாக மனத்தில் உறுதிப்பட வேண்டும். இல்லையேல் இந்த மருத்துவருக்கு ஏதோ மனக்கோளாறு என்று சொல்லி நோயாளிகள் வேறு மருத்துவரிடம் போய் விடுவார்கள். 

மாத்திரைகளை விழுங்குவதினாலோ, ஊசிகள் போட்டுக் கொள்வதினாலோ தற்கால சாந்தி கிடைப்பதனால் அத்தகைய மருத்துவர்களை நாடியே உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது தற்காலிக சாந்திக்குப் பின்னால் வரும் விளைவுகள் தங்கள் மருத்துவத்தினால் வந்தவை என்பதை விட்டுவிட்டு வேறு ஏதோ ஒரு வைரசினால் ஏற்பட்ட புது விளைவு என்று வாழ்நாள் முழுவதும் மருத்துவரை நாடி அவையும் உலகைத் திருத்துவது கடினமேயாயினும் மெய்யறிவைப் பரப்புவதில் தளர்ந்து விடாது முயல வேண்டும். 

சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தால் இயற்கை மருத்துவம் கூடிய விரைவில் பலருக்கும் பணிபுரியும் வாய்ப்பினைப் பெறும்.


சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
சமைத்த உணவுகளை உண்ணும் ஒரு ஆரோக்கியமான மனிதனின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல் முதலியவற்றை ஸ்கேனிங் செய்து பார்த்தால் அவை முழுவதும் சளி, கபம் போன்ற நோய் உண்டாக்கும் கசடுகள் நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக ஒரு ஸ்பாஞ்சை எடுத்து பசையில் முக்கினால் அது எப்படி இருக்குமோ, அது போல் மனிதனுடைய இலாஸ்டிக் தன்மைக் கூட குறைந்து விடுகின்றது. அதனால் சிறுநீரகம் சரிவர வேலை செய்ய முடிவதில்லை. நுரையீரல் சரியாக சுவாசிக்க உதவுவது இல்லை.

அந்த மனிதன் ஒரு வாரம் முழுவதும் உயிருள்ள உணவுகளான இலை, காய்கனி முதலியவற்றின் சாறுகளை மட்டும் சாப்பிட்டு உண்ணா நோன்பு இருந்தால், பசையில் முக்கிய ஸ்பாஞ்சைக் கழுவிச் சுத்தம் செய்த மாதிரி அவனது முக்கிய உடலுறுப்புகள் எல்லாம் சுத்தமடைகின்றன. இந்த உண்ணா நோன்பில் அவனுடைய உடலில் உள்ள ஜீவ சக்தி (Vital force) முழுவதும் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் தீவிரமாக இருக்கின்றது. உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும் பொழுது மனிதனுக்குச் சிறிது அசெளகரியம் இருக்கும். ஆகையினால் தான் ஒரு நேரம் பட்டினி இருந்தால் கூட எனக்குத் தலைவலி வந்து விடும் என்று சிலர் கூறுகின்றனர். அவன் பட்டினியிலிருந்து உடலை சுத்தப்படுத்த அவனுடைய ஜீவ சக்தியை உபயோகிக்காமல் மீண்டும் மீண்டும் ஓய்வு இல்லாமல் சாப்பிடுவதால், அவனுடைய ஜீவ சக்தி முழுவதும் வயிற்றில் உள்ள உணவை சீரணிக்க மட்டும் தான் பயன்படுத்தப்படுகின்றது. ஆகையினால் அவனுடைய உடம்பிலுள்ள நோய்ப் பொருள்களான கசடுகள் வளர்ந்து கொண்டே போய் கொடிய நோயாளியாகின்றான். நோயாளியான இந்த மனிதன் நோய்ப் பொருள்களான கசடுகளை வெளியேற்றாமல் மருந்துகளைச் சாப்பிடுகிறான். தேவைக்கு அதிகமான மருந்துகள் உடம்பில் உள்ள இரத்தத்தையும் உறுப்புகளையும் விஷமாக்குகின்றன. சிறுநீரகம் பழுதடைகின்றது.

இதனால் எந்த மருத்துகளினாலும் குணமடைய முடியாத நோயாளியாக, மனிதன் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சில சைவ குடும்பங்களில் மது, புகை, மாமிசம் போன்ற எந்த கெட்ட பழக்கங்கள் இல்லாவிட்டாலும், ரூமாடிஸம் என்ற கீல்வாத நோய்களால் அவதிப்படுகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் நெய், தயிர், எண்ணெயில் பொரித்து எடுத்த பலகாரங்கள் முதலியன ஆகும்.

இன்று உலகிலுள்ள மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டு வாழ முடியுமா என்று சோதனை செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்தச் சோதனையின் விளைவு தான் இன்று மனிதன் ஆயிரக்கணக்கான நோய்களுக்கு நடுவில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றான். உலகில் உள்ள எந்த உயி¡¢னங்களுக்கும் அவற்றின் ஆரோக்கியமான வாழ்விற்கு ஆபத்தில்லை. மனிதன் மட்டும் தான் சமைத்த உணவிற்கு அடிமையாகி, பழக்கமாகி நாவை அடக்காமல் சாவை வரவழைத்துக்கொள்கின்றான். 

இன்றைய உலகில் மனிதர்கள் சமைத்த உணவுகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்களே தவிர, இயற்கையான மரணத்தை யாரும் பெறுவதில்லை.

(இன்னும் இயற்கை மேலும் வளரும்)

ஞாயிறு, 9 மே, 2010


பகுதி 10 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

நோயின் மூலகாரணம் ஒன்றுதான். அதைக் கண்டுபிடித்துச் சரிசெய்வதே நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கான வழியாகும்.

வேண்டாத பொருள் தேங்கி நின்று நச்சுப் பொருள்களாக மாறி வெளியேறும் போது துன்பம் தருகின்றன. இந்த வெளியேற்றத்தில் ஏற்படும் துன்பமே வலியே நோய் எனப்படுவது என்றோமே, அப்படியானால் வெளியிலிருந்து உள் நுழையும் விஷங்களைப் பற்றி என்ன என்று வினவலாம்.

ஆம். வெறிநாய்க்கடி, தேள்/தேனீ கொட்டுதல், பூச்சிகள் எச்சமிடுதல், வண்டுகள் கடித்தல், தம்மை அறியாமலே தவறாக விஷப்பூண்டுகளை உண்பது போன்றவற்றால் வெளியிலிருந்தும் உடலில் உள்ள உயிரணுக்களுக்குள்ளும் திசுக் கூட்டங்களுக்குள்ளும் வேண்டாத பொருள்கள் நுழைகின்றன. இந்த நச்சுப் பொருள்களை வெளியேற்றுவதில் உள்ள துன்பம் பெரிதாக உள்ளதைக் காணலாம். வேறு, வேறு காரணங்களால் வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு இடங்கள் மூலமாக உட்சென்றாலும் அவை எல்லாம் வெளியேற்றப்பட வேண்டியவைகளே. அவைகளை அடக்கி வைக்கவோ, தற்காலிகமாக உடலில் உள்ள பொறி புலன்களின் உணர்வைக் குறைத்து வைக்கவோ முயற்சிப்பதால் நிலைத்த பயன் கிடைக்காது மாறாக அவை நாளடைவில் வேறு உருவத்தில் (side effects) வெளியேறும். அப்போது துன்பம் அதிகமாகும்.

கடிகாரம் காலம் காட்டுகின்றது. அதில் சிறிய முள் என்றும் பெரிய முள் என்றும் வெவ்வேறு முட்கள் உள்ளன. ஒன்று விநாடியும், மற்றொன்று நிமிடமும், பிரிதொன்று மணியும் காட்டுகின்றன. சில கடிகாரங்களில் கிழமையும் தேதியும் கூடக் காணலாம். இவற்றிற்கெல்லாம் பின்னணியில் வெவ்வேறு பல் சக்கரங்கள் உள்ளன. இவற்றிற்கிடையே தொடர்பு உண்டு. எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது முக்கியச் சுருள்கம்பி (Main spring) தான் இது நாளுக்கு குறைந்தது ஒரு தடவையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ சுழற்றி விடப் பட்டால் ஒரே சீரான வேகத்தில் காலம் முழுவதும் விரிந்து பிற சக்கரங்களும் சுழலுகின்றன.

(1) சுருள் கம்பியில் விசை குறைந்து விட்டாலோ

(2) சீதோஷ்ண மாற்றத்தால் கம்பி விரிந்து சுருங்கி வேகம் மாறுபட்டாலோ

(3) தூசு தும்புகளாலான வெளித்தடைகள் ஏற்பட்டாலோ காலம் காட்டுவதில் தடை உண்டாகும்

அதுபோலவே உடம்பும் பிராணசக்தியால் இயங்குகின்றது. பிராணசக்தி குறைந்தால் இயக்கம் குறைந்து மலத்தை வெளிப்படுத்தும் வேலை தடைப்படுகின்றது. இரண்டாவதாக சீதோஷ்ண மாற்றங்களில் கடிகாரம் வேகமாகவோ, மெதுவாகவோ போகிறமாதிரி வெப்ப மாற்றங்களாலும் சூழ்நிலை மாற்றங்களாலும் உடலும்; உடலியக்கமும் பாதிக்கப்படும் மூன்றாவதாக கடிகாரத்தில் வெளி அழுக்குகள் நுழைந்து சக்கரச் சுழற்சிகளைத் தடை செய்வது போல் வெளி அழுக்குகள் உடம்பினுள் நுழைவதால் உள் உறுப்புகளாகிய இருதயம், நுரையீரல், கல்லீரல் மண்ணீரல், சிறுநீர்ப்பிரித்தி (சிறுநீரகம்), தசைக்கோளங்கள் முதலியவற்றின் இயக்கம் தடைப்படலாம். இவற்றில் தடை ஏற்படும்பொழுது வேண்டாத பொருள்களும், நச்சுப்பொருள்களும் உடம்பினுள் தேங்கி நின்று உடலுக்குத் துன்பம் விளைவிக்கின்றன. இதைப் புரிந்து கொண்டால் நோய்க்கு இயற்கைவழி சிகிச்சை செய்வது எளிதாகும். மேலும் உடம்பில் வெவ்வேறு காரணங்களால் துன்பம் வந்தபோதிலும் மூல உருவம் ஒன்றுதான். அதாவது வேண்டாதவற்றை வெளியேற்றும் முயற்சி.

இவ்வேண்டாதவை உணவு முதலிய பருப்பொருளாக இருக்கலாம் அல்லது கருத்து, கற்பனை, எண்ணம் போன்ற நுண் பொருளாகவும் இருக்கலாம். நுண்ணுடம்பாகிய மனதில் ஏற்படும் நினைவு, குறைவுகளும் பருஉடம்பையும் பாதிக்கும். இதனையும் இவ்வொன்றுள் அடக்கிக் காண்பதும் சிகிச்சைக்கு உதவும்.

(இயற்கை வளரும்)

புதன், 5 மே, 2010

பகுதி 9 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


இயற்கை வாழ்வுக்கு அவ்வழியில் உடலில் தோன்றும் துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்கும் நோய்நாடலும் இன்றியமையாதன.

இதை உணர்ந்த பொய்யாமொழிப் புலவரும்
"நோய் நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
என்ற மருத்துவர் கடமையினை விளக்குகிறார்.

இயற்கை வாழ்வைப் போற்றும் பலர் நோய் நாடவே அவசியமில்லை என்ற கருத்துக் கொண்டுள்ளார்கள் வேறுசிலர் இதற்கு மாறாக நோய்நாடலை ஒரு சுவையாகவே வளர்ந்துள்ளனர். புற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது வாழ்க்கைத்தொழிலாகவே மருத்துவத்தைக் கொண்டுள்ள நிபுணர்கள் செய்வதையே தாங்களும் செய்கின்றனர். மிகச் சிலர்தான் வள்ளுவர் சொல்லுகின்ற நோய்முதல் நாடலை கருத்தில் கொண்டு முதலில் கவனம் செலுத்துகின்றனர். இக்காலத்தில் நோய்நாடும் முறை நன்க வளர்ந்துள்ளது. நோய் முதல் நாடும் முறை போதிய அளவுக்கு வளரவில்லை. இது ஆராய்ச்சிக்குரிய ஒன்று.

தலைவலி என்றவுடன் அது எந்த இடத்தில் நெற்றியிலா, வல இடப்பக்க பொட்டுக்களிலா, முண்மண்டையிலா, பின் மண்டையிலா என்று கேட்டு அறிந்து அந்த இடத்தில் பற்றுப் போடுகிறவர்கள் வலி உண்டாவது அதிகச் சூட்டினாலா, நரம்புத்துடிப்பினாலா என்று தெரிந்து வியர்வை உண்டு பண்ணும் ஒரு மருந்தைக் கொடுத்து சூட்டைக் குறைத்தோ, நரம்புத் துடிப்பினைத் தளர்த்தி விடும் உணர்வை மறத்துப்போகச் செய்யும் மயக்க மருந்துகளைக் கொடுத்தோ, குணப்படுத்துவோரும் உண்டு. ஆனால் இவற்றால் நோய் நீங்குவதில்லை. மேலும் இவர்கள் நோய் நாடினார்களேயல்லாமல் நோய்முதல் நாடவில்லை. தலைவலி எங்கு என்று கண்டார்கள். ஏன் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுமையில்லாமல் நோயமுதலைக் கண்டிருந்தால் இன்னும் சிறிது, ஆழமாகச் சென்று உண்மையைக் கண்டிருப்பார்கள்.

உலகில் உள்ள எல்லாபொருள்களும் அசைகின்றன. ஆண்டவன் கூட ஆடித்தான் தரிசனம் கொடுக்கிறான் இவன் கூத்துப்பெருமாள் ஆடும் கடவுள் ஒவ்வொன்றின் அசைவிற்கும் ஒரு அளவு உண்டு ஒரு வரையறையும் உண்டு கூடினாலோ, குறைந்தாலோ இசைவு குறைந்து துன்பம் நேரிடும்.

குறையும்போது, கூடும்போதோ துன்பமும் நோயும் தோன்றும். 'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்பார் வள்ளுவர்.

தலையில் உள்ள நரம்புத் துடிப்பு ஏன் கூடவோ குறையவோ செய்கின்றது? உடம்பின் தேவைக்கு நாம் உணவு உண்கின்றோம் அதில் வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டு விடுகின்றது. வேண்டாதது வெளியேற்றப்பட வேண்டும். இவை ஏதோ ஒரு காரணத்தால் அவ்வப்போது வெளியேற்றப்படாமல் உள்ளே வயிற்றிலோ, மலக்குடலிலோ தேங்கி நின்றால் அவை அழுகி அல்லது புளித்து நச்சுக் காற்றாகவும் நச்சுப் பொருள்களாகவும் மாறுகின்றன. இவையும் வெளியேறவே முயல்கின்றன. இவை வெளியேறும் முயற்சியில் அவ்வப்பகுதியில் துன்பம் ஏற்படுவதைதான் அந்தந்த இடத்தையும் வெளியேறும் பாங்கினையும் ஒட்டி வெவ்வேறு பெயர் கொடுக்கின்றோம். எனவே வேண்டாத பொருள்கள் வெளியேறும் முயற்சிதான் நோய்.

இது ஒன்றுதான் உண்மை. பிறவெல்லாம் பெயர்களேயாகும். பெயர்கள் பலவாயினும் நோய் ஒன்றுதான் இதனை ஆங்கிலத்தில் "யூனிட்டி ஆப் டிஸ்ஸிஸஸ்" (Unity of Diseases) என்கின்றனர். மனித இனம் ஒன்றே எனினும் குலத்தாலும் நிறத்தாலும், மொழியாலும், தொழிலாலும், இடத்தாலும், கூட்டத்தாலும் பிரித்து வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்.
எத்தனையோ பேதங்கள், இவைகள் கற்பிதம், நிரந்தரமல்ல.
நிலையானது ஒன்றே.
மனித இனம் ஒன்று என்பதுதான் உண்மை.
அதுபோலவே நோய்கள் நாலாயிரத்து நானூற்றி நாற்பது என்று பெயரிட்டழைத்த போதிலும் அவைகள் உண்மையில் அனைத்தும் ஒன்றே.
(இயற்கை இன்னும் வளரும்..)

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பகுதி 8 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


நோய் ஒன்றே; பல அல்ல.

இயற்கை மருத்துவம் உலகில் இப்பொழுது அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

விஞ்ஞானம் வளர்ந்துள்ள மேலை நாடுகளிலும் அறிஞர்கள் இதனை வரவேற்று ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர். ஆராய்ச்சி மனப்பான்மையுடைய அலோபதி வைத்தியர்கள் கூட இயற்கை முறைகளைக் கையாள ஆரம்பித்துள்ளனர். எனினும் இவர்கள் இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தாலும் அவற்றில் நம்பிக்கை பெருகும் அளவு தெளிவு பெறவோ முயலுவதில்லை. இதன் விளைவாகத்தான் சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் ஊசிபோடுதல், அலோபதி பொது மருந்துகள் ஆகியவைகளைக் கையாளுகிறார்கள். அதைப்போலவே இயற்கை மருத்துவத்தில் உள்ள முறைகளில் சிலவற்றை ஹைட்ரோபதி, குரோமோபதி, பிஸியோதெரபி என்கிற பெயர்களால் ஆங்கில முறை மருத்துவர்களான அலோபதிக் முறை மருத்துவர்களும் கையாளுகின்றனர். இவற்றால் முழுப்பயன் கிடைப்பது அரிதேயாகும். இயற்கை மருத்துவத்திற்கு அதன் அடிப்படைத் தத்துவங்களின் அறிவும் தெளிவும் மிக இன்றியமையாதது

எனவே முந்திய அத்தியாயங்களில் ஒன்றாகிய "நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதெற்கென அமைந்தது" என்பதைப் பற்றிப் பார்த்தோம். இங்கு "நோய் ஒன்றே பல அல்ல" என்னும் இன்னுமொரு அடிப்படை உண்மையைப் பற்றி ஆராய்வோம்.

நோய் ஒன்றுதான் என்றால் யாரும் ஆச்சரியப்படுவார்கள். அனுபவத்தில் தலையிலும், மார்பிலும், வயிற்றிலும் கைகால்களிலும், ஏன் அங்க அவயவங்கள் அனைத்திலும் வலி வந்து நம்மை வாட்டுவதை யார்தான் அறியார்? நோய்கள் பல என்பது தொன்றுதொட்டு பாமரர் முதல் அறிஞர் வரை எவரும் அறிந்த உண்மை இதனை மறுத்து நோய் ஒன்றுதான் என்பதன் பொருள் என்ன? இயற்கை மருத்துவர்கள் உலகை ஏமாற்ற விரும்புகின்றனரா? அப்படி இல்லை அவர்கள் கூட காதில் வலி ஏற்பட்டால் அதைக் காதுவலி என்றும் வயிற்று வலி ஏற்பட்டால் அதனை வயிற்று வலி என்றும் சொல்லுகின்றனர். உள்ளே உள்ள பொருள்கள் வாய்வழியாக வந்தால் அதை வாந்தி என்றும், மலவாய்வழியாக வந்தால் அதைக் கிராணி அல்லது பேதி என்றும், துன்பம் தோன்றும் இடம், இயல்பு முதலியவற்றை ஒட்டிப் பேரிட்டழைக்கின்றனர். ஆனால் பெயர்களே நோய்கள் அல்ல.

(இயற்கை வளரும்)

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

பகுதி 7 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம். 

ஆனால் போதிய வசதியுள்ள சாதாரண மக்கள் நேரம் தவறாது சாப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். உடலில் அழுக்கு சேர்ந்து சிறிது காலம் தாழ்த்தி பிராணசக்தியைக் கொண்டு அதனை வெளியேற்றுகின்ற போது துன்பம் ஏற்படுகிறது.

தும்மல் சாதாரணமாக வரப்போகிற காய்ச்சலுக்கு அறிகுறியாக இருக்கலாம். தும்மலுக்கு மருந்து ஏதும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் தலைவலி, தூக்கமின்மை, வயிற்றுக் கோளாறுகள் முதலியன வரலாம். காய்ச்சல் வந்துவிட்டால் உடம்பினுள் இருக்கும் வேண்டாப் பொருட்கள் உடம்பு முழுவதையும் போர்த்தியிருக்கும் தோல் வழியாக வெளி வந்துவிடும்.

இந்தக் காய்ச்சல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். இதனை ஹே·பீவர் (hayfever) என்று சொல்கிறார்கள். இதற்கும் வைக்கோலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பொதுவாக இக்காய்ச்சல் மரங்களும், செடிகளும் பூத்துக்குலுங்கும் காலத்தில் வருகிறது. அச்சமயங்களில் காற்றில் பூக்களிலுள்ள மகரந்தத்தூள் பரவலாகக் கலந்திருப்பதால் இதைச் சுவாசிக்கும் சிலருக்கு அழற்சியினால் காய்ச்சல் வருகிறது என்று நினைக்கிறார்கள். தும்மல் வரும் சமயம் மூக்கில் ஒருவித அரிப்பு இருக்கும். அதைப்போக்க எபி டிரைன் சல்பேட் மூக்குத்துளி (Nose drops) சொட்டு மருந்து போட்டு தற்காலிகக் குணம் பெறுகிறார்கள். ஆனால் அழுக்குகள் வெளிவருவதற்கு அவை உதவமாட்டா இதற்கு சிறந்த மருத்துவம் உபவாசம்தான். காய்ச்சல் காலமாகிய மூன்று நாட்களும் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரண்டு வேலை புனர்பாகக் கஞ்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் காய்ச்சலும் நின்று விடும் உடம்பிலுள்ள அழுக்கும் குறைந்து தும்மலுக்கு நிரந்தரப் பரிகாரம் காணலாம்.

தும்மல் என்பது அறிகுறிதான் உடம்பிலுள்ள அழுக்கை வெளியேற்ற பிராணசக்திக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மேலும் உணவு உட்கொண்டு பிராண சக்தியைச் செரிமான வேலையில் ஈடுபடுத்தினால் நோய் அதிகரிக்குமேயொழிய குறையாது.

இந்த உண்மையைத்தான் 'நோய் நமக்கு நண்பன்' அது நாற்சந்தியிலுள்ள கைகாட்டி மரம் போல் நமக்கு வழிகாட்டி உதவுகிறது என்று இயற்கை வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

இது நோயைப்பற்றிய நல்ல ஒரு மனப்பான்மை

இதனைப் புரிந்து கொள்ளாது நோயைக் கண்டு பயப்படுகிறவர்கள் எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

(இயற்கை வளரும்)

சனி, 17 ஏப்ரல், 2010

பகுதி 6 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - மகரிஷி க. அருணாசலம்

பகுதி - 6

எனவே நோயைக் கண்டு அஞ்சாது அதனை நண்பனாகக் கருதி மூலகாரணத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். வெளியேற முயலும் நச்சுப் பொருள்கள் வெளியேறத் தக்க பரிகாரம் செய்தல் வேண்டும். ஆசனவாய் மூலமாகவோ, சிறுநீர் மூலமாகவோ வியர்வையாகவோ, சளியாகவோ, மூக்கின் வழியாகக் கரியமில வாயுவாகவோ மலங்களை வெளியேற்றுவதற்கான குளியல்கள் ஒத்தடம், மண்பூச்சு, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி முதலியவைகளைக் கையாள வேண்டும். இத்தகைய செலவற்ற எளிய இயற்கையை பயன்படுத்தும் முறைகளால் நிரந்தரமான பரிகாரம் கிடைக்கும்.

நோய் - தற்காலிகமானது
நோய் - மனிதன் தானாக வருவித்துக் கொள்வது
நோய் - தவறான பழக்க வழக்கங்களால் ஏற்படுவது

ஆழ்ந்த தன்னாராய்ச்சியாலும் கூர்ந்து கவனிப்பதாலும் தனது தவற்றைக் கண்டு கொள்ள முடியும் உடலியல் அறிவின் துணைகொண்டு தவறுகளைத் திருத்தலாம். இதன்மூலம் நீடித்த ஆரோக்கியம் கைவரும்.

இப்படி தனக்குத் தானே மருத்துவம் இயற்கை வழிநின்று செய்வதன் மூலம் இன்பம் பெருகும்.

நோய்க்கு அஞ்ச வேண்டாம், அது நமக்கு நண்பன்.

சமீபத்தில் நாங்கள் சிலர் சேர்ந்து ஜீப்பில் பிராயணம் செய்து கொண்டிருந்தோம். எங்களில் ஒருவருக்கு அடிக்கடி தும்மல் வந்து கொண்டே இருந்தது. உங்களுடைய உடம்பில் உயிராற்றல் இருக்கிறது என்பதற்கு இது அறிகுறி உடம்பிற்கு வேண்டாத பொருள்கள் உரிய காலத்தில் வெளியேற்றப்படாமல் தேங்கி நின்றதால் சளியாக மாறியுள்ளது. அதனை வெளியேற்ற பிராணசக்தியானது முயலுகிறது. அதன் அறிகுறிதான் தும்மல் தும்மலின் மூலம் சளி முழுவம் வெளியேற முடியாததால் மறுபடியும் உங்களுக்குத் தும்மல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அபாயம் ஒன்றுமில்லை. ஒருவேளைச் சாப்பாட்டை விட்டு விடுங்கள். பிராணனின் ஆற்றல் அதிகரிக்கும் அப்போது கபம் ஏதாவது ஒரு வழியில் வெளியே வந்து விடும். தற்காலத் துன்பத்தை நீக்குவதற்கு முயன்று ஏதாவது மருந்தைச் சாப்பிட்டு விடக்கூடாது மேல்நாட்டு மருத்துவர்கள் சளியை உண்டுபண்ணும் கிருமியைக் கண்டுபிடிக்க இன்னும் முயன்று கொண்டிருக்கிறார்கள். கண்டுபிடிக்கும் வரை உடனடியாகத் துன்பம் தவிர்க்கும் ஏதாவது ஒரு மருந்தைக் கொடுப்பார்கள். அதனால் நோய் அமுக்கி வைக்கப்படுமேயொழிய தீராது. நாளடைவில் சளியானது மூளையின் மூக்கினை எலும்புப் புழையழற்சிக் கோளாறு (Sinusitic) ஆகமாறும். இதனையும் இயற்கை வழியில் போக்காது மருந்துக்கு ஆளானால் சீரழிக்கும் நோயாகவும் இது மாறலாம் உபவாசம் இருப்பதன் மூலம் ஆகாச தத்துவத்திற்கு உடலுள் பெருமளவு இடமளித்து உயிர் ஆற்றலைப் (பிராணசக்தியை) பெருக்கிக் கொண்டால் உண்டதை சீரணிக்கவும், சீரணமான பின் எஞ்சியதைக் காலாகாலத்தில் வெளித்தள்ளவும் உதவும்.

எனது நண்பருக்கு என்னுடைய வைத்திய அறிவில் போதிய நம்பிக்கை இருப்பதற்கு நியாயமில்லை. எனவே அவர் என்னுடைய ''நோய்=நண்பன்'' கொள்கைக்குப் போதிய மதிப்புக் கொடுத்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் சாப்பாட்டில் கட்டுப்பாடாக இருந்தார். இரவில் தானிய உணவைத் தவிர்த்து பழ உணவு எடுத்துக் கொண்டார். அதிலும் கட்டுப்பாடாக இருந்து ஓரிரு பழங்கள் தான் சாப்பிட்டார். அன்று இரவு நல்ல தூக்கம். எனவே மறு நாள் காலையில் அவருக்குப் போதிய சுகம் கிடைத்தது சளி அவரை அதற்குமேல் தொந்தரவு செய்யவில்லை.

மறுநாள் வேறொரு நண்பருக்குத் தும்மல். அவர் அன்று வழக்கம் போல் சாப்பிட்டார். "Stuff the cold and starve the fever" என்னும் கோட்பாட்டினை நினைவுறுத்திக் கொண்டார். இது எப்படியோ உலக வழக்கில் வந்துவிட்டது. சளிக்குப் பரிகாரம் உபவாசம் என்பதை விஞ்ஞானிகள் பலர் ஏற்றுக் கொள்கின்றனர்.

(இயற்கை வளரும்..)

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

உணவே மருத்துவம்

அசைவம் உண்ணாதவரும், மது அருந்தாதவரும், சமைக்காத (தூய சைவ) இயற்கை உணவுகளை விரும்பி உண்பவரும், இயற்கை நலவாழ்வியல் முறைகளை கடைப் பிடிப்பவர்களும் நோயின்றி மகிழ்வுடன் வாழலாம். நண்பர் எழுதிய கவிதை ஒன்றை நமது வலைப்பூவுக்காக மீள் பதிவு செய்கிறேன். இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை கவிதை வடிவில் வடித்துத் தந்த நண்பருக்கு இதய நன்றி.

உணவே மருத்துவம்
உண்பதற்காகவே வாழாதீர்

உயிர் வாழ்ந்திடவே நாம் உண்போம்.
உண்ணும் உணவினில்தாம் நோய்கள்
உட்கார்ந்திருந்து நம் உயிர் பறிக்கும்
மாமிச உணவைச் சமைத்தபின்
மறுநாள் வைத்தே புசிக்காதீர்
சாமி சத்தியமாய்ச் சொன்னேன்
சமைத்ததை ஐந்து மணிக்குள் உண்.
குத்துதே குடையுதே மூட்டுவலி
குன்மம் பித்தம் வாய்வாம் நோய்
ரத்தசோகை பக்கவாதம்
நரம்புத் தளர்ச்சியும் உணவால்தான்.
பழைய குழம்பைச் சுடவைத்தே
பசிக்கு அடிக்கடி புசிக்காதீர்
குளிர்பத னத்தில் வைத்தெடுத்தே
குடலால் நோய்களை வளர்க்காதீர்.
யோகம் பெருகும் நல் உணவால்
ரோகமும் போகமும் உண்பதால்தாம்.
தாகம் என்றால் பருகுவீர்நீர்
தாறுமா றாய்மது குடிக்காதீர்
பழங்கள் கீரை காய்கறிகள்
பசுமை மாறா புதியனவாய்
கிழங்குகள் ஈந்திடும் உயிர்ச்சத்தையும்
கிரமமாய் உண்பதால் திடம் பெறலாம்.
உணவைக் குடித்தேநீர் உண்பீர்
உணவே மருந்தென உணர்ந்திடுவீர்
உணவில் மருத்துவம் ஒளிந்துள்ளதே
உறுதியாய் நம்பியே உயிர்காப்பீர்.
- பெருமத்தூர் சீராளன்
நன்றி : மூலிகை சஞ்சீவி இதழ், சூன் 2005

திங்கள், 12 ஏப்ரல், 2010

பகுதி 5 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

நோய் நமக்கு நண்பன். பகைவன் அல்ல.

துன்பம் தரும் ஒன்றை எப்படி நண்பனாகக் கருதுவது? இவ்வினா இயற்கையாக எழும் ஒன்று. இதை மேலும் ஆராய்தல் பயன்தரும். துன்பம் தருபவற்றுள் பலவகையுள சில துன்பத்திற்காகவே துன்பம் தருகின்றன. சில துன்பப்படும் ஒன்றில் நலன் கருதித் துன்பம் தருகின்றன. துன்பம் தரும் தனக்கு யாதொரு லாபமும் இல்லை. இந்த மூன்றாம் வகையைச் சேர்ந்தே நோய் தரும் துன்பம். நோய் துன்பம் தருவது. நோயாளி துன்பம் அடைவான். நோயாளி படும் துன்பத்தால் நோய்க்கு யாது பயன்? நோய் தான் அளிக்கும் துன்பத்தின் மூலம் உடலில் பிரச்சினை இருக்கின்றதென்பதைக் காட்டுகின்றது இதுவழியில் இருக்கும் பள்ளத்தை, இடையூறைக் காட்டும் சிவப்பு விளக்குப் போன்றது. இதை அறிந்து மேல் நடவடிக்கை எடுத்தால் நோயாளி பெரும் நன்மையடைவான். ஆதலால் தான் நோயாளி நோயினை நண்பனாகக் கருத வேண்டுமென்கின்றனர்.

"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு"
என்பது பொய்யாமொழி

நாவடக்கமின்றிக் கண்டதைக் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிட்டுக் காலாகாலத்தில் மலநீக்கம் செய்யாது இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழும் ஒருவனை இடித்துக்கூறி நல்வழிப்படுத்த வருவது நோய். அதனை நண்பனாகக் கருதி உபசரியாமல் பகைவனாகக் கருதி செயற்பட்டால் தனக்குத்தான் கேடு மிகுகின்றது. நண்பனாகக் கருதி வரவேற்று இயல்பறிந்து போற்றி உபசரித்தால் காலாகாலத்தில் நோய் போய் விடும். நண்பர்கள் என்றால் காலக்கெடுவின்றிக் கூடிக் குலவவேண்டும் என்பதில்லை. அவசியமான அளவுக்குத்தான் தொடர்பு இருக்க வேண்டும்.

நட்பு எது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காந்தியடிகள் தமது வாழ்க்கை அனுபவத்தில் கண்டதைக் கூறுவதைக் கவனிக்க வேண்டும். "சீர்த்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்த்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது... தனிப்பட்டு அன்னியோன்னியமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம்."

நோய் என்பது, பிராண சக்தி தனது வேலையைச் சிறிது காலந்தாழ்த்திச் செய்யும் போது ஏற்படுகின்ற துன்பம் என்பது நமக்குத் தெரியும். இத்துன்பத்தின் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அந்த நோயைப் போக்க வேண்டிய வழியையும் ஆராய்ந்து நோயுற்ற உடலுக்குப் பொருந்தும் படியான சிகிச்சைகளைச் செய்ய வேண்டுமென்பது திருவள்ளுவர் திருவாக்கு.

"நோய்நாடி, நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி, வாய்ப்பச் செயல்"

அவ்வப்போது வெளியே தள்ளப்படாமல் உடலினுள்ளேயே தங்கியிருக்கும் நீர்ப்பகுதி அனைத்தும் உடலினுள் உறிஞ்சப்படுகின்றது. இந்த நச்சு நீர் இரத்தத்தில் கலந்து பரவுகின்றது. இதனால் ஊட்டி வளர்க்கப் பெறும் கல்லீரல், சிறுநீரகம், கணையம், மண்ணீரல், இதயம் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலைவலி, தூக்கமின்மை, நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கீல்வாதம், காசம், மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் எல்லாம் வருகின்றன. இவற்றைக் கண்டு பயந்து டாக்டர்களிடம் சென்றால் அவர்கள் மூல காரணத்தை கண்டுபிடிக்காமல், நோயின் அறிகுறிகளுக்குப் பரிகாரமாக மாத்திரைகளையோ, ஊசி மருந்துகளையோ கொடுக்கின்றனர். இந்த நச்சு மருந்துகளால் தற்காலிகப் பரிகாரம் கிடைத்தாலும் நாளடைவில் பெரும் தீங்கே விளைகின்றது.

(இயற்கை வளரும்..)

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - மகரிஷி க. அருணாசலம் - பகுதி-4

இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செய்முறைகளும்)
- மகரிஷி க. அருணாசலம்

பகுதி-4

நலவாழ்வைப் பாதிப்பவைகளை 1. பரம்பரை, 2. சூழ்நிலை, 3. தனியாள் என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

பரம்பரையிலிருந்து பெறுகிற நோய்நொடிகள், எண்ணப் போக்குகள் முதலியன உடலைப் பாதிக்கும் சூழ்நிலையும் மனித வாழ்வைப் பாதிக்கிறது. கெட்ட காற்று, கெட்ட தண்ணீர் போன்றவை இன்றைய நிலையில் மனிதனுடைய ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் முக்கிய இடம் பெறுகின்றன.

தனிப்பட்டவர்களும், தங்களுடைய வேண்டாத பழக்க வழக்கங்களால் தமக்கும் சமூகத்திலுள்ள மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பவர்களாக மாறுகின்றனர்.

இதைப்போலவே நலவாழ்வை நிர்ணயிப்பவைகளையும் மனநிலை, ஆன்மநிலை, உடல்நிலை என்று முக்கூறாகப் பிரிக்கலாம்.

இம்மூன்று நிலைகளையும் செம்மைப்படுத்துவது கல்வி, கேள்விகளேயாகும்.

நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
"அஞ்சி அஞ்சித் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே"
என்று அவர் காலத்தில் இந்திய மக்களின் நிலைமையை நினைத்து வருந்திப் பாடியுள்ளார் மகாகவி பாரதியார். இந்தியா சுதந்திரம் பெற்று நாற்பது ஆண்டுகளாகியும் இன்னும் பெரும்பாலும் இதே நிலைமை தான். "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" உண்மைதான். எனினும் நோய்நொடிகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? "எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார். கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்." ஆரோக்கிய வாழ்வைப் பொறுத்த வரை, படித்துப் பட்டம் பெற்றவர் கூட இன்னும் கண்ணிலாக் குழந்தைகள் போலத்தான் நடந்து கொள்கின்றனர். பயத்தால், கண்டதையெல்லாம் செய்து மேலும் மேலும் துன்பத்தை விலைக்கு வாங்குகின்றனர். பெரும்பாலும் பயம் தான் காரணம்.

நோயைப் பெரும் பகைவனாகக் கருதி அஞ்சுதல் பேதமையிலும் பேதமை. நோய், கிருமிகளால் வருகின்றது என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்தக் கிருமிகளைக் பெரும் பகைவர்களெனக் கருதி அவைகளைக் கொல்வதற்காக நச்சுப் பொருட்களை உண்டு மேலும் சிக்கலாக்குகின்றனர். கிருமிகள் சாகலாம்; சாகின்றன. ஆனால் நச்சு மருந்துகள் உடலில் தங்கி வேறு பலவிதப் பயங்கர வியாதிகளை உண்டு பண்ணுவது இவர்களுக்கு விளங்குவதில்லை. கிருமிகள் நோயால் வளருகின்றன. இந்த உண்மை அறிவு வந்தால் இவர்கள் நோயின் மூலகாரணத்தைக் கண்டு அதனை நீக்குவர். அப்போது நோயும் போகும். கிருமிகளும் குறையும்.

பொருந்தா உணவு, அமித(தேவைக்கதிகமான) உணவு, தவறான பழக்க வழக்கங்கள், விபரீதமான எண்ணங்கள் முதலியவற்றால் உடலில் நச்சுப் பொருள் உண்டாகிறது. அவ்வப்போது மலநீக்கம் சரியாக நடந்தால் துன்பமில்லை ஏதாவது காரணத்தால் இதில் தயக்கம் ஏற்பட்டுக் காலந் தாழ்ந்தால் உடம்பில் கிருமிகள் பல்கி உஷ்ணமோ, வலியோ வீக்கமோ ஏற்படுகின்றது. இது உடம்பினுள் உறையும் பிராணசக்தியின் காலந்தாழ்த்திய முயற்சி. அதற்கு உதவியாகச் சூரியக்குளியல், தொட்டிக் குளியல், எனிமா முதலியன மூலம் மலத்தை வெளியேற்றினால் நோய் தணியும். அதற்கு மாறாக மருந்துகளை உட்கொள்ளுவதால் நோய் உருமாறுகின்றதே ஒழிய ஆரோக்கிய நிலை திரும்புவதில்லை. இதனாலேயே தான் இயற்கை மருத்துவர்கள் நோயினை நண்பனாகக் கருத வேண்டும் என்கின்றனர்.
(இயற்கை இன்னும் வளரும்..)

புதன், 31 மார்ச், 2010

மகரிஷி க. அருணாசலம் - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - பகுதி 3

3

ஆரோக்கிய வாழ்க்கை எது ?

ஒருவர் மற்றொருவரைக் காணும்பொழுது ‘நலமா?’ என்று கேட்கின்றோம். அவரும் நலமே என்று பதில் அளிக்கிறார். அதன் பொருள் என்ன? மனிதனுக்கு பருஉடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்று உடல்கள் இருக்கின்றன. நமது புறக்கண்ணிற்குத் தோன்றுவது பருஉடல் ஒன்றேதான். எனினும் இப்பரு உடலின் உள்ளும் புறமுமாக மற்ற இரு உடல்களும் சுரந்தும் மறைந்தும் இருக்கின்றன என்பது சிந்திப்பவர்களுக்கு இலகுவில் புலப்படும் இந்த மூன்று உடல்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, ஒரேவழி உராய்தலின்றி இயங்குவதிலே நலவாழ்வு அமைந்துள்ளது.

நல்வாழ்வை ஆரோக்கியம் என்றும் சுகம் என்றும் கூறுகின்றோம். ஆரோக்கியம் தான் ஆக்க வாழ்விற்கு அடிப்படையானது. நலமற்ற விவசாயி தன்கு வேறு எத்தனை வசதிகளிருப்பினும் விளைவைப் பெருக்க முடியாது. எத்தனை நவீன இயந்திரங்கள் இருந்தபோதிலும் நலமில்லாத உழைப்பாளியால் தொழில் துறையில் நுகர்வுப் பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியாது. விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் வளர்ச்சி இருந்தபோதிலும் நலம் இல்லையேல் நம்மால் வாழ்க்கை இன்பங்களை அனுபவிப்பது இயலாததாகும். குடும்ப சமூக வாழ்க்கைகளையும் கூட செவ்வனே நடத்த முடியாது.

பொதுவாக, நோயின்மையே ஆரோக்கியம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் ஆரோக்கியத்திற்கு மூன்று பக்கங்கள் இருக்கின்றன. ஒரு பொருளுக்கு அகலம், நீளம், உயரம் என்ற மூன்று பக்கங்கள் இருப்பது போல ஆரோக்கியத்திற்கு உடல், மனம், சமூகம் என்ற மூன்று பக்கங்கள் உண்டு. உடற்குறை மனதைப் பாதிக்கும். மனநிலையும் உடலைப் பாதிக்கவே செய்யும். சமூகச்சூழல் இரண்டையும் பாதிக்கும். இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதுபோலவே ஆன்ம உணர்வும், உடலையும், மனதையும் மாற்றவல்லது.

மனிதர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க எண்ணி அரசுகள் மருந்தகங்களைப் பெரும் செலவில் நடத்துகின்றன. ஆனால் மனக்குறைவின் காரணமாகவும், சமூகச் சூழலின் போக்குகளாலும் மனிதனுக்கு சுகக் குறைவு ஏற்படுகிறது. சுகக்குறைவை நோயென நினைத்து ஒருவன் மருந்தகங்களுக்குச் சென்றால் பல பரிசோதனைகளுக்குப் பின்னால் உடலும், உடலுறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவே டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் பாவம்! அவன் என்ன செய்வான்? சோர்வும், பிணிநிலையும் அவனை வருத்துகின்றன. எல்லாம் சரியாய் இருக்கிறது. ஆனால் உடலால் உழைக்க முடியவில்லையே என்று வருந்துகின்றான். நவீன முறைகளில் இதனை மனநோய் என்று சொல்கின்றனர். சில சமயங்களில் இந்த மனநோய் உடலையும் சமூக வாழ்வையும் கூடப் பாதிக்கும். மனதிலே ஆரம்பித்தது இருதயநோயாக மாறுகிறது. மனநோய் நகர வாழ்வில் நாம் நாள்தோறும் காணும் உண்மை ஏதாவது ஒரு காரணத்தால் கோபம் உண்டாகிறது. இது மனதிலேதான் ஆரம்பிக்கிறது. முகம் சிவப்பதும், நாடி நரம்புகள் துடிதுடிப்பதும், நிலை தடுமாறி தாறுமாறாகப் பேசுவதும் கோபத்தின் விளைவுகளாகும். அது இதற்கு மேலும் சென்று எதிரில் உள்ளவர்களைக் கையிற் கிடைத்ததைக் கொண்டு அடித்து விபரீதமாகக் கொலையில் முடிவதைக்கூட நாம் கேட்டுள்ளோம். கோபத்தில் பித்தநீர் அமிலத்தன்மை அடைந்து உடல் அழற்சியினை ஏற்படுத்துகின்றது. அதனால் ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

திடீரென ஏற்படும் பயம், சிலசமயங்களில் இதயத் துடிப்பை நிறுத்தும் பயத்தால் உடம்பு நடுக்குறும். உணர்ச்சி மிகும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்கள் ஏற்படும். குருதியில் சர்க்கரையின் அளவுமிகுந்து ஏற்கனவே நீரழிவு நோயுள்ளவர்களாயிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். பயத்தால் வயிற்றோட்டம் உண்டாகலாம். சிறுவர்கள் பயமுறுத்தலுக்கு ஆளாகும்போது நடுநடுங்கி, நரம்பு தளர்ந்து சிறுநீர் கழிக்கின்றனர். எதிர்மறையான வெறுப்பு, திகைப்பு, பயம் போன்றவை உடலை உலரச்செய்து, குருதி குன்றி பலத்தை போலவே அன்பு, ஆதரவு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்லுணர்வுகள் உடலை வளர்த்து இன்ப வாழ்வைக் கொடுக்கும்.

சுகம் பிறரால் கொடுபடக்கூடியதல்ல. அதனை நாமேதான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இதற்கு வேண்டியவை எல்லாம் சுயஅறிவும், சரியான வழி நடத்தலுமேயாகும். தன்னுடைய சூழலுடன் இணைந்து வாழும் ஒருவன் எப்பொழுதுமே மகிழ்ச்சியுடனும், நலமுடனும் இருக்க முடியும். மாறிவரும் சமூக வாழ்வு மக்களின் உடல், மனவாழ்வினைப் பாதிப்பதைப் போலவே மக்களின் உடல் மனவாழ்வு சூழலையும் பாதிக்கும் இன்றைய மாறிவரும் தொழில் நுணுக்க வளர்ச்சி தனி வாழ்வையும், இல்வாழ்க்கையையும் பெரிய அளவில் மாற்றி உள்ளது. இயந்திரங்களால் கடின உழைப்பை நீக்கிக்கொள்ள வசதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பலர் பார்த்தையே பார்த்தும், செய்ததையே செய்தும் சலிப்படைந்து போயிருக்கிறார்கள். கூடிவிளையாடும் ஆடல், பாடல்களும், கூத்துகளும், திருவிழாக்களும் சிலரது வாழ்வில் புத்துணர்வு அளித்து மகிழ்ச்சியூட்டு-கின்றனவாயினும், நவீன வாழ்க்கை முறை எதிர்பாராத புத்தம் புதிய நோய்நொடிகளையும் உண்டு பண்ணி மனிதனை வேண்டாத பழக்கவழக்கங்களுக்கு ஆளாக்கியுள்ளன.

(இயற்கை வளரும்..)

திங்கள், 29 மார்ச், 2010

இயற்கை மருத்துவம் - மகரிஷி க.அருணாசலம். 2 அற்புதமான தானியங்கியாகிய இவ்வுடலில் சமநிலை ஏன் தவறுகின்றது?

2
அற்புதமான தானியங்கியாகிய இவ்வுடலில் சமநிலை ஏன் தவறுகின்றது?

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் சமநிலை தவற இடமிருக்காது. ஆனால் பெரும்பாலோர் இயற்கைக்கு முரணாக வாழ்கின்றனர். எனவே நோயின் பெருக்கம். சூரியனுடன் எழுந்து வேலைகளைக் கவனித்துப் பின் சூரியன் மறையும் போது ஓய்வு கொள்வது இயற்கை வாழ்வு. நல்ல காற்றோட்டம் இல்லாததும் இயற்கை ஒளியும் இல்லாததுமான செயற்கைச் சூழலில் நமது வேலைகள் நடக்கின்றன. நமது நடை, உடை, பாவனைகளும் இயற்கை அன்னையிடமிருந்து நம்மைப் பிரித்து வைப்பனவாகவே உள்ளன. எனவே போதுமான ஆகாயக்கூறு நமது உடலில் இல்லாதபோது வலியும், துன்பமும் ஏற்படுவது இயல்பே.

நமது உணவுப் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் செயற்கை மயமாக ஆகியுள்ளது. தேவையைக் கருதியில்லாமல் நாவின் சுவை கருதிச் சாப்பிடுகின்றோம். பசித்துப் புசிப்பதில்லை. காலம் கருதிச் சாப்பிடுகின்றோம். எந்த உணவு எந்தக் குறைவை நிறைவு செய்யும் என்ற அறிவும் நம்மில் மிகப் பெரும்பாலோருக்கு இல்லை. இயற்கை உணவின் இடத்தை செயற்கை உணவு பிடித்துக் கொண்டுள்ளது. பல தடவைகள் உண்கின்றோம். அவசர அவசரமாக உண்கின்றோம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. புதிய செயற்கைப் பானங்கள் பல பழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றால் உடம்புக்கு வேண்டாத அளவு சிலவகை உணவுகள் சேர்ந்து விடுகின்றது. வேறு சிலவகை இல்லாது போகின்றன. பயன் நோய் நிலை. இதனை நீக்க மருத்துவர்களையும் மருந்துகளையும் நாடுகின்றோம்.

நம்மீது உள்ள கருணையால் திருவள்ளுவர் நோயின்றி வாழ நமக்கு ஒரு எளிய வழி காட்டுகின்றார்.

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’.

பசித்துப் புசித்தலும் அற்றதறிந்து அருந்துதலும் இயற்கை வழி இயற்கையுடன் இயைந்து வாழவேண்டும் என்பது மருந்தில்லா மருத்துவமாகிய இயற்கை மருத்துவ தத்துவங்களில் அடிப்படையானது. இதனை அறிந்து கடைப்பிடித்தால் ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

உடலில் பஞ்சபூதங்களின் சேர்க்கை அதனதன் விகிதாச்சாரப்படி சமநிலையில் இருக்கும்போது நமது உடம்பு இருப்பதே நமக்குத் தெரியாது. சமநிலை தவறும் போதுதான் கையோ, காலோ, மூக்கோ, மார்போ இருப்பது நமக்குத் தோன்றுகிறது. இது ஆரோக்கியம் குறைந்த நிலை. ஆரோக்கியமாக இருக்கும் மனிதன் எப்போதும் ஆனந்தமாக இருப்பான். இதைத்தான் அன்றாட வாழ்க்கையில் நாம் இயற்கை விதிகளுக்கு முரணான பழக்கவழக்கங்களிலும், செயல்களிலும், சிந்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதனால் துன்பம் ஏற்படுகின்றது. இக்கோணல் வழியிலிருந்து திரும்பி நேர்மையான இயற்கை வழியில் சிக்கலற்ற எளிமையான பாதையில் செல்லும் இயற்கை வாழ்வின் ரகசியத்தைக் காட்டுவதே இயற்கை மருத்துவத்தின் குறிக்கோளாகும்.

(இன்னும் வரும்..)

வியாழன், 25 மார்ச், 2010

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?

இந்த கட்டுரை துணை எழுத்து என்னும் வலைப்பூவில் வெளியானது. வலைப்பூ உரிமையாளரின் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படுகிறது.

===========================================

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?

சில மாதங்களாக இந்திய பத்திரிக்கைகள் விரட்டிக் கொண்டுள்ள பிடி கத்தரிக்காய்க்குப் பின்னால் உள்ள கதை மிக பெரியதும், ஆபத்துமானதும் ஆகும்.பிடி கத்தரிக்காய் என்பது Trans Genetic என்று சொல்லப்படும் மரபணு மாற்றப்பட்ட அல்லது மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் ஆகும்.கத்தரிக்காய் உடன் Cry1Ac என்ற மரபணுவை செலுத்தி இந்த வகை பிடி கத்தரிக்காய் உருவாக்கப்பட்டது.இந்த Cry1Ac என்ற மரபணு Bacillus thuringiensis என்ற, மண்ணில் காணப்படும் பாக்டிரியாவில் இருந்து பெறப்பது ஆகும்.

இந்த மாபெரும் சோதனையை 8 ஆண்டு காலமாக செய்து முடித்த இந்திய நிறுவனம் Maharashtra Hybrid Seeds Company Limited.(Mahyco). ஆனால், இது Monsanto என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து செய்த கண்டுபிடிப்பாகும்.

இந்த கதை தொடங்கியது சென்ற வருடம் அக்டோபரில்.Mayco தனது கண்டுபிடிப்பை Genetic Engineering Approval Committee (GEAC) of India விடம் சமர்பித்து, இந்தியாவில் இந்த பிடி கத்தரிக்காய் விதைகளை விற்பதற்கு அனுமதி வாங்கி விட்டது. எந்த ஒரு செயல் முறை நிரூபணமும் இல்லாத இந்த பிடி கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய கொந்தளிப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

பொதுவாக மரபணு மாற்றப்பட்ட விதைகளினால் ஏற்படும் நன்மைகள் என்று சொல்லப்படுவதில், மிக முக்கியமானவைகள் - பயிர்கள், பூச்சிகளுக்கு எதிரான அதிகப்படியான எதிர்ப்பு சக்தியுடன் வளரும் மற்றும் பல மடங்கு அதிக விளைச்சல் தரும் என்பதேயாகும்.இந்தியளவில் ஆண்டு ஒன்றுக்கு 1000 கோடி ருபாய் வரை பூச்சிகளால் கத்தரிக்காய் விளைச்சலுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகிறது.எனவே இந்த பிடி கத்தரிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்ற மாயை அரசால் உருவாக்கப்பட்டது.

விவசாய துறை அமைச்சர் சரத் பவார் GEAC அனுமதி வழங்கிய பிறகு மத்திய அரசால் இதை ஒன்றும் செய்ய முடியாது என்று மிக சீரியஸ் ஆக காமெடி செய்து பின்னர் இது சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கவனிக்க வேண்டியது என்று சொல்லி ஒதுங்கி விட்டார்.

அதன் பின்னர்தான் இதன் கடுமையான விளைவுகளை சுற்று சூழல் ஆதரவாளர்கள் கத்தி கத்தி சொன்ன பிறகு மீடியாக்கள் விழித்து கொண்டு நாடு முழுவதும் இதன் வீரியம் தெரிய தொடங்கியது.

ஏன் இந்த பிடி கத்தரிக்காய்க்கு இவ்வளவு எதிர்ப்புகள்...?மரபணு மாற்றப்பட்ட உயிர்களில் அது கத்திரிக்காயை இருந்தாலும் காயத்திரியாய் இருந்தாலும், பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆவதர்க்கான சாத்திய கூறுகள் மிக அதிகம்.அதுவும் பிடித்தது பிள்ளையாரா இல்லை குரங்கா இன்று கண்டறிவதற்கே 40-50 வருடங்கள் ஆகலாம்.

அதாவது இப்போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பயிர் செய்து, விளைந்த கத்திரிக்காயை நாம் அவியல் வைத்து சாப்பிட்டு, பின் நமக்கு திருமணமாகி, நமக்கு ஒரு குழந்தை பிறந்து அவனுக்கோ அல்லது அவளுக்கோ 20 வயது ஆகும்போது, அவர்களுக்கு தீடீர் என்று வரும் வியாதிக்காக மருத்துவரிடம் செல்லும்போதுதான் அன்று அவியல் சாப்பிட்ட கத்திரிக்காயில் இருந்த பிரச்சனைகள் குறித்து உண்மைகள் வெளிப்படும்.

இந்த பிடி கத்தரிக்காய் மூலம் கிட்னி முதல் நுரையீரல் வரை பாதிக்க வாய்ப்பு உண்டு என்று சர்வதேச நாடுகள் அறிவித்த போதும் இதை GEAC எப்படி அனுமதித்தார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுப்பப்பட்டது.ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இந்த பிடி கத்தரிக்காய்யை தடை செய்து உள்ளது.

இந்த அனுமதிக்குப் பின்னால் GEAC விஞ்ஞானிகளுக்கும், அமெரிக்க நிறுவனமான Monsanto விற்கும் அமெரிக்க அரசின் தூண்டுதலினால் மிக பெரிய லாபி நடந்திருக்கக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டது.

GEAC இதற்கான அனுமதியை, விஞ்ஞானிகளின் வெறும் பேப்பர் நிரூபணங்களை வைத்து கொடுத்ததுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று.

இந்தியாவில் ஜனநாயகம் தோற்றுபோவது, இது போன்ற இடங்களில் தான்.ஒரு வேளை இது பெரிய பிரச்னை ஆக்கப்படாமல், நாடு முழுவதும் இந்த விதைகள் பயிரிடப்பட்டு நாம் அனைவரும் மரபணு மாற்றப்பட்ட அவியல் உண்டிருந்தால், நமக்கு அடுத்த சந்ததி கண்டிப்பாக அதற்கான விலையை கொடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும்.

நம்முடைய சமுதாய பொறுப்பின்மையும், சகிப்புத்தன்மையும் பல இடங்களில் காசாக்கப்படுகின்றன, சில இடங்களில் பல ஆயிரம் உயிர்களை பலி வாங்குகின்றன.

நம்மை சுற்றி நடப்பவற்றை நாம் கேள்வி கேட்காமல் கடந்து போவதால் தான், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நம்மை மிக சுலபமாக ஏமாற்றுகிறார்கள்.

அதிஷ்டவசமாக பிடி கத்தரிக்காய் விசயத்தில் அப்படி எதுவும் நடக்க வில்லை.ஆனால் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எவ்வளவோ முடிவுகள், நாள் தோறும் நம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு தான் வருகின்றன.அதை வெளியே கொண்டு வந்து தடுக்கும் திறமையும் உரிமையும் ஊடகங்களுக்கு மட்டுமே உள்ளன.
நன்றி: http://thunaiezhuthu.blogspot.com/2010/03/blog-post.html

புதன், 24 மார்ச், 2010

இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - 1

இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செய்முறைகளும்)
- மகரிஷி க. அருணாசலம்

நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கென அமைந்தது. உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் உடம்பைப் போல மனித உடம்பும் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும் தன்மையது. நிலையற்ற தன் இயல்பைக் கண்ட மெய் ஞானியர் சிலரும், சித்தர்கள் பலரும் இதனை இழிவாகவே கருதியுள்ளனர். சைவ சமயக்குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் இதனை,

''பொத்தை யூன்கவர் புழுப்பொதிந்துளுத்தகம்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதி நின்றிடர் கடற்
கழித்தலைப் படுவேனை.''

என்று பாடுகின்றார். பிறரும் இதனைப் ‘புன்புலால் யாக்கை’ என்றும் காற்றடைத்த பை என்றும் கருதி அலட்சியம் செய்துள்ளனர். திருமூலர் போன்ற யோகியர் கூட ‘உடம்பினை முன்னம் இழுக்கென்றி'ருந்திருக்கின்றனர். அவர்கள் இவ்வுடம்புள்ளே ‘உத்தமன்’ இருப்பதைக் கண்ட பின்னரே 'உடம்பினை ஓம்பும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்து'ள்ளனர். ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பது இவர்கள் கண்ட உண்மை. 'ஊன் உடம்பு ஆலயம்' இதனை உரிய வகையில் போற்றிப் பேண வேண்டுமென்பது இவர்களது உறுதியான முடிவு.

மனித உடல் அற்புதமான இயந்திரம். இது புரதம், மாவுப் பொருள், சர்க்கரை, கொழுப்பு, தாது உப்புக்கள், தண்ணீர் முதலியவைகளாலும் ஓரளவு பலவித வைட்டமின்கள் சேர்க்கையாலும் ஆனது என்று புறக்கருவிகள் கொண்டு ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இந்தப் பொருள்கள் ரசாயன முறையில் கூடுவதாலேயே உயிரும் தோன்றுகிறது. அதற்கு தனியே இருப்புக் கிடையாது என்பது இவர்களது கூற்று. மெய்ஞானியர்களோ இதற்கு மாறாக இப்பொருள்களைக் கூட்டுவதே உயிர்தான் இவ்வுயிரைப் பலரும் பல பெயரிட்டு அழைக்கின்றனர். ஜீவன் என்றும், ஆத்மா என்றும், பிராணசக்தி என்றும் பலர் பலவாறாகக் கூறுகின்றனர். உடல் பஞ்ச பூதங்களாலானது என்பது இவர்கள் கண்டது பஞ்சபூதங்களே புரதம், சர்க்கரைப்பொருள், மாவுப் பொருள், கொழுப்பு, தாதுப்பொருள், வைட்டமின் முதலியவையாக உருவெடுத்துள்ளன. இப்பொருட்கள் எல்லாம் சேர்ந்து 30 சதவிகிதம்தான். உடம்பின் எடையில் எஞ்சிய எழுபது சதவிகிதமும் தண்ணீர் இது மட்டுமல்லாமல் காற்றும் ஆகாயமும் மனித யாக்கையை பிணைத்து வைத்து இயக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

திருவள்ளுவர் போன்றவர்கள் வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள். பஞ்சபூதங்களைத்தான் இவர்கள் முக்கூறிட்டுக் கூறுகின்றனர். ஆகாயமும் காற்றும் சேர்ந்து வாதமாகவும், சூடு, பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும், கபமாகவும் பெயரிடப்படுகின்றன. ஒன்றை ஐந்தாகவும், மூன்றாகவும் பகுத்துப் பேசுவது நமது மரபு. தத்துவங்களை முப்பத்தாறாகவும், தொண்ணூற்றாறாகவும் பேசுவதும் உண்டு. விரிதலும், சுருங்குதலும் வசதி கருதியேயாகும்.

உண்மை என்னவென்றால் நுண்மையிலும் நுண்மையான ஒன்றாகிய இம்முதற்பொருளின் தன்மை அல்லது குணம். அறிவும் ஆனந்தமும் உடையது என்று பருமையிலிருந்து உண்மைக்கு ஆழ்ந்த தியானத்தின் மூலம் சென்ற சித்தர்கள் கண்டு கூறுகின்றனர்.

இந்நுண் பொருளே தனது ஆற்றலினால் அருவப் பொருளாகவும், அருவுருவப் பொருளாகவும், உருவம் தாங்கிய பருப்பொருட்களாகவும் மலர்ந்துள்ளது. இதனைத் திருமூலர் திருமந்திரப் பாடல் ஒன்றில் தெளிவாக விளக்குகின்றார்.

'ஒன்றவன்தானே, இரண்டவன் இன்னருள்
மூன்றுள் நின்றனன், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச்
சென்றனன், தானிருந்தான் உணர்ந்து எட்டேன்’

இவ்வாறு மூலப்பொருளாகிய அவ்வொன்றே பலவாக உருவெடுத்துள்ளது.

இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, ரசம் முதலியவற்றின் கூட்டால் ஆனது இவ்வுடம்பு என்பது சாதாரண மக்களும் பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூடியது. இதனையே துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்ற அறுசுவைகளின் சேர்க்கையாலும் உண்டாவது எனலாம். துவர்ப்பும் புளிப்பும் வாதம்; உப்பும் கசப்பும் பித்தம்; இனிப்பும் காரமும் கபம் என முப்பொருளாகப் பிரிக்கலாம். இப்படி பிரித்தறிதல் உடல் ஓம்பலுக்கு உதவியாக இருக்கும்.

இந்த உடம்பு தன்னிறைவுடையது; தானியங்கி. இதனுள் நாம் உணவுப்பண்டங்களைப் போட்டால், அவற்றை உயிர் பண்டங்களாக்கி, உடல் வளர்ச்சிக்கும் வேலையால் உண்டாகும், குறைவை நிரப்புவதற்கும் உடல் தானே பயன்படுத்திக் கொள்கின்றது.

உடல் ஒரு அற்புத இயந்திரம். இதனைப் பார்த்தே பிற இயந்திரங்களும் ஆக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையாகாது. இது தனக்கு வேண்டிய பொருள்களைத்தானே உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பெரிய பாக்டரி. இதில் எத்தனையோ பிரிவுகள் இயங்குகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றுவதை எண்ணி எண்ணி வியப்பிலாழ்கின்றனர் அறிஞர் அனைவரும்.

பஞ்சபூதங்கள் அல்லது வாத, பித்த, கபம் என்னும் முப்பொருள்களும் சரியான அளவில் இருப்பதே ஆரோக்கியநிலை. இதில் ஏதாவதொன்று மிகுதியாகவோ, குறைவாகவோ இருப்பது நோயின் அறிகுறி. இதனைத்தான் திருவள்ளுவர் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்கின்றனர். இம்மூன்றின் சமநிலை தவறியபோது உடம்புக்குத் துன்பம் உண்டாகும். மிகுதியானதைக் குறைப்பதும் குறைவை நிறைப்பதும் ஆரோக்கியத்திற்கு வழிகோலும்.

(இயற்கை வளரும்...)

ஞாயிறு, 21 மார்ச், 2010

பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க!

அன்பர்களே. அமெரிக்க மோகத்தில் மேல்நாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு உடல் நலத்தை இந்தியர்களாகிய நாம் கெடுத்துக் கொண்டு வருகிறோம்.
ஆனால் அமெரிக்கர்கள் நமது பாரம்பரிய உணவு வழக்கங்களே சிறந்தவை என்று இந்திய உணவு முறைகளை பின்பற்ற தொடங்கி விட்டார்கள். அவர்களது வியாபாரம் தடை படாமல் இருக்க பெப்சி, கோக், லேய்ஸ், குர்கூரே மற்றும் பர்கர், பீட்சா போன்றவைகளை நம்மிடையே மார்க்கெட் செய்கிறார்கள். கீழே வரும் கட்டுரை உண்மை நிலையை விளக்குகிறது.
====================================================

அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும், 'பர்கர்' வகை தான், 'ஹாட் டாக்ஸ்' என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர் தான் காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்த பின், இப்போது குழந்தைகளை இதன் பிடியில் இருந்து மீட்க பெற்றோர் போராடி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது, மதிய வேளையில் சாப்பிடும் உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால், உறைந்த கொழுப்பு உள்ள உணவு வகைகள் டிபன் பாக்சில் அதிகம் இடம் பிடிக்கின்றன; போதாக் குறைக்கு, 'ஹாட்டாக்ஸ்' பர்கரையும் குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவதால், பள்ளிப் பருவத்திலேயே ஒபிசிட்டிக்கு ஆளாகி விடும் ஆபத்து ஏற்படுகிறது; அதனால், புரோட்டீன், நார்ச்சத்துள்ள உணவுகளுக்கு மாற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதன் விளைவு, இப்போது அமெரிக்கர்கள் பலரும், நம்மைப் போல காய்கறி, பழங்களுக்கு மாறி வருகின்றனர்; கேக், ஐஸ்கிரீம், பர்கர், பிட்சா, கூல் டிரிங்ஸ்களை குறைத்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கான சத்துணவுகளை பட்டியலிட்டுள்ளது அமெரிக்க சுகாதார நலத்துறை. அதில் உள்ளவை—

* அரிசி, கோதுமை உட்பட தானிய வகை உணவு தினமும் முக்கியம்.
* சுகாதாரமான நொறுக்குத்தீனி பாப் கார்ன்.
* கேரட், வெள்ளரி, தக்காளி,வெங்காயம் கொண்டு தயாரிக்கப்பட்ட வெஜ் சாலட்.
* குழந்தைகளாக இருந்தால் பிசைந்த உருளைக்கிழங்கு உணவு.
* திராட்சை, பாதாம் உட்பட உலர்ந்த பழங்கள்.
* பழங்கள் அல்லது பழச்சாறுகள்.
* மீன், முட்டை, பால்.
* புரோட்டீன் தரும் சோயாபீன்ஸ்.
*வேர்க்கடலை போன்ற கடலை வகைகள்.
* பசலைக்கீரை உட்பட கீரை வகைகள்.


அமெரிக்காவில் உள்ள சராசரி மக்கள், தங்கள் வாழ்க்கை முறையை பல வகையில் மாற்றி வருகின்றனர். முந்தைய அதிபர் கிளின்டன், இந்தியா வந்தபோது, நம் திருமண, குடும்ப கலாச்சாரத்தை பார்த்து வியந்தார்.

அதுபோல, 'நான் ஒரு மகளை பெற்ற தந்தையாக கவலைப்படுகிறேன்; அவளை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்' என்று சமீபத்திய மாஜி அதிபர் புஷ் , இந்தியா வந்தபோது கூறினார்.

இப்படி அதிபர்கள் மட்டுமல்ல, சாதாரண அமெரிக்கர்களும், இந்தியாவை பார்த்து தான் தங்களை மாற்றி வருகின்றனர். குறிப்பாக, சத்துணவுகள் என்றால், இந்தியாவின் உணவுப்பழக்கம் தான் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் உணர்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் பல ஆண்டாக கொடிகட்டிப் பறந்த ஹாட் டாக்ஸ் என்ற பர்கர் உணவு வகை, இப்போது குட்டீஸ்களின் லஞ்ச் பாக்சில் இடம் பெறுவதில்லை. அதற்கு பதிலாக, பழங்கள் தான் இடம் பெறுகின்றன.
- எஸ்.ஏ.குருராஜ்
(நன்றி: தினமலர் மார்ச் 20,2010,12:56 IST)
***