புதன், 25 டிசம்பர், 2013

யோக நலமே வாழ்வின் வளம்: பகுதி நான்கு: சங்கப்ரக்ஷாலனா க்ரியா.

யோக நலமே வாழ்வின் வளம்: பகுதி மூன்று: சங்கப்ரக்ஷாலனா க்ரியா.

இனி வருவது இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி.

சிறப்பான உணவு.
சங்கப்பிரச்சாலனாக் கிரியை முடித்துச் சரியாக 45நிமிடம் கழித்துச் சிறப்பாகச் செய்யப்பட்ட கிச்சடியைக் கண்டிப்பாக உண்ண வேண்டும். இந்த உணவைச் சரியான நேரத்தில் உண்ணுதல் அவசியம்.

இந்தப் பயிற்சியைச் செய்த பின்னர், உடலின் இசைவு [ரிதம்]தற்காலிகமாகக் குழம்பும்;குடலின் செரிமான சக்தி சற்றே பாதிக்கப்படும். ஆயினும் 45நிமிடம் முடிந்த பிறகு செரிமான உறுப்புகள் செயலாற்றத் துவங்கும்.

கிச்சடியில் உள்ள மூன்று பொருள்கள் செரிமானம் சரிவர நடக்கத் துணை செய்யும். நெய் குடல் சுவர்களில் தடவிச் செல்ல உதவும். குடலில் புது லைனிங் உருவாவதற்கு நெய் அவசியம் தேவை. பச்சரிசி எளிதில் செரிக்க உதவும். அதில் உள்ள கார்போஹைடிரேட் குடலில் சளிப்படலம் உண்டாக உதவும். பாசிப் பருப்பு எளிதில் செரிக்கக் கூடிய புரதச் சத்தாகும். கிச்சடி முழுதான சத்துள்ள உணவாகும். போதுமான கிச்சடியை உண்ண வேண்டும். அப்போது தான் குடல் சுவர்களில் லைனிங் உண்டாகவும் குடலில் சுருக்கங்கள் உண்டாகாது  தடுக்கவும் உதவும. குடலில் அதிக அளவு கிச்சடி இருப்பது குடலைச் சீர் செய்வதோடு குடலின் சுருங்கி விரிந்து முன் தள்ளும் இயக்கமான (Peristolic movement)மண்புழு நகர்வதைப் போன்ற குடல் இயக்கத்துக்கும் உதவும். செரிமானமின்மை கழிச்சல் மலச்சிக்கல் இவை வராதிருக்க உதவும்.

மேலும்ஓய்வு.
கிச்சடி உண்டபின் ஓய்வு கொள்க. மூன்று மணி நேரம் தூங்கக் கூடாது. தூங்கினால் உடல் சோம்பலையும் தலைவலியையும் உண்டு பண்ணும். இதற்குப் பிறகு அன்று முழுவதும் ஓய்வு. மறுநாளும் ஓய்வு. அப்போது மௌனம் கடைப்பிடித்து உடல் வேலை மூளை வேலைகளைத் தவிர்ப்பது நல்லது.

இரண்டாம் உணவு.
மாலை உணவிற்கும் கிச்சடி தயார் செய்க. முதல் உணவு உண்ட ஆறு மணி நேரம் கழித்து பசி இல்லையெனினும் வயிறு நிறைய உண்க.

இடம்.
அதிகக் காற்றோட்டமுள்ள இடத்தில் தோட்டத்தில் பயிற்சி செய்க. கழிவறைகள் போதுமானதாக உள்ள இடத்தில் செய்க. நண்பர்கள் குழாம் உள்ள இடத்தில் செய்க. உடலைத் தளர்வாகவும் மனதை லேசாகவும் வைத்துக் கொள்க.

சீதோஷ்ணம்
அதிகக் குளிரோ வெயிலோ இல்லாத சமயம் நல்லது. மழைக் காலம் கூடாது. கோடை காலம் கூடாது. ஆண்டுக்கு இருமுறை செய்யலாம்.தேவையான நேரம்: அன்றும் மறுநாளும் ஓய்வு.

முன்னெச்செரிககை
மலக்குடலில் இருந்து தண்ணீர் தெளிவாக வந்த பின்பும் பயிற்சியைத் தொடரக் கூடாது. மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளிவரத் தொடங்கும் போதே சிறிது கலங்கலாக இருக்கும் போதே பயிற்சியை நிறுத்திக் கொள்வது சிறந்தது ஓய்வு கொள்ளும் 45நிமிடம் தூங்கக் கூடாது. தூங்கினால தலைவலி தடுமன் வரலாம். முதல் உணவு உண்டு இரண்டு மணி நேரத்துக்குத் தண்ணீர் குடிக்கக்கூடாது. குளிர்ந்த நீர் செரிமான மண்டலத்தைக குளிர்விக்கும். எனவே குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் குடலில் புதுலைனிங் உடலால் புதிதாக உருவாக்கப்பட்டது என்பதால் அது லைனிங்கைக் கழுவிக் கொண்டு சென்று விடும். காற்றாடி ஏசி கூடாது.உடலைச் சூடாக வைத்திருக்க வேண்டும்.கம்பளியால் உடலை மூடுக. நடுப்பகல் சூரியஒளி தீ. எனவே உடற்பயிற்சிகூடாது. மற்றும் மன அழுத்தம் கூடாது

உணவுக் கட்டுப்பாடு.
ஒரு மாதத்திற்குத் கீழ்க்கண்ட உணவுப் பொருட்களை உண்பதை தவிர்க்கவும். இரசாயனம் கலந்த உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்பு அதிகக்காரம் கொண்ட உணவு வகைகள். மற்றும் அமில உணவு, மாமிச உணவு, ஊறுகாய், இனிப்பு, சாக்லேட், ஐஸ்கிரீம், இரசாயனம் கலந்த செயற்கை பானங்கள் கூடாது.

பால், தயிர், மோர், புளிப்புப் பழங்கள், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி இவற்றைக் குறைவாக உண்க. கள், சிகரெட், டீ, காபி, வெற்றிலை போன்ற மயக்கம் தருபவை வேண்டாம்.  இயற்கை உணவு கொள்க. தூய உணவு உண்க. ஏனெனில் செரிமான உறுப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

எச்சரிக்கை.
வழிகாட்டு முறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். பின்பற்றுவது பக்க விளைவுகள் இல்லாதிருக்க உதவும்.

நன்மைகள்
செரிமானக கோளாறுகளான செரிமானமின்மை, வாயு, அமிலம், மலச்சிக்கல் ஆகியவை அகலும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் முதலான செரிமான உறுப்புகளைச் சீர்படுத்தும். நீரிழிவு, உடல்பருமன், அதிக கொலஸ்ட்ரால், அதிக லிப்பிட் லெவல்ஸ் ஆகியவை குறையும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். ஒவ்வாமை அகலும். மூட்டு வலி அகலும். ஆஸ்த்துமா, தொடர்  தடுமன், சைனஸ் அகலும்.

ரத்தத்தைச் சுத்தம் செய்து தோல் நோய்களை அகற்றும். பரு கட்டி எக்ஸிமா அகலும். பிராண உடம்பைப் புதுப்பிக்கும். நாடிகளில் உள்ள அடைப்பை அகற்றும். சக்கரங்களைத் தூய்மை செய்யும்.

ஐந்து பிராணன்களின் இயைபு கூடும். சக்தி கூடும் மனம் மேல் நிலைக்குச் செல்லும். இக் கிரியைக்குப் பிறகு ஆன்மீக சாதனை செய்வது பல நன்மைகளைத் தரும்.

பயிற்சிக் குறிப்பு.
மேலே குறிப்பிட்ட ஐந்து ஆசனங்களும் மண்புழு இயக்கத்திற்கும் செரிமான மண்டலத்தில் உள்ள வால்வுகள் நரம்புகள் தசைகள் திறம்பட வேலை செய்ய உதவும். இரைப்பைக்கு வெளியே உள்ள பைலோரிக் வால்வு [PYLORIC VALVE] திறக்கும். பிறகு சிறுகுடல் முடிவில் உள்ள [ILEOCAECAL VALVE] வால்வு திறக்கும் மலக்குடல் முடிவில் குதத்தில் எருவாயில் உள்ள ஸ்பின்க்டர் [SPINCTER] சுருக்குதசை வேலை செய்யும்.

நிறைவு.

அன்பர்களுக்கு வணக்கம். இதுவரை இந்த கட்டுரையை படித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.இக் கட்டுரையை மனமுவந்து இங்கே வெளியிடத் தந்த திருவாளர் மின்பொறியாளர் ஆ.மெய்யப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

'யோகநலமே வாழ்வின் வளம்' எனும் கருத்தை வலியுறுத்தும் வகையிலான  பதிவுகளை இந்த வலைப்பூவில் தொடர்ந்து நீங்கள் காணலாம். யோக நலம் தொடர்பான கட்டுரைகளை வாழி நலம் சூழ வலைப்பதிவில் வெளியிட விரும்பினால் எங்களுக்கு அனுப்பலாம். சேவையை நோக்கமாகக் கொண்டு இந்த வலைப்பூ செயல்படுவதினால் அதே மனப்பான்மை கொண்டோர் மட்டுமே கட்டுரைகளை அனுப்பவும். சன்மானம் நன்றியறிதல் வடிவில் மட்டுமே தரப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். அன்பர்கள் அனைவருக்கும் வாழி நலம் சூழ...வின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

பயனுள்ள கட்டுரை. வந்து கற்றுக்கொள்கிறேன்.

Ashwin Ji சொன்னது…

தங்களது ஆசியும், பாராட்டும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. தாங்கள் சென்னை வரும் போது சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

கருத்துரையிடுக