புதன், 11 ஜனவரி, 2012

8. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - இரண்டாம் நாள் அனுபவப் பகிர்வுகள்

பழனி முகாம் அனுபவப் பகிர்வுகள்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் (தொடர்கிறது)

வாழை இலைக்குளியலை எடுத்து முன்பெப்போதுமில்லாத வகையில் புத்துணர்வு பெற்ற மகிழ்ச்சியுடன் அவரவர் அறைக்குச் சென்று உடை மாற்றல், சற்றுநேர ஆசுவாசம் என சுதாரித்துக் கொள்ளச் சென்றார்கள். சத்சங்க நிகழ்வுக்காக சுமார் ஐந்தரை மணியளவில் அனைவரும் பள்ளியின் பிரார்த்தனை ஹாலில் சத்சங்கம் ஒன்றிற்காக வந்து குழுமும்படி சொல்லப்பட்டது. நிகழ்வுக்கு முன்னதாக சிறிது நேரத்தை சேமித்துக் கொண்ட சில அன்பர்கள் விளையாட்டு மைதானத்தில் வாலிபால், கிரிக்கெட்டு போன்ற விளையாட்டுக்களை ஆடி மகிழ்ந்தார்கள்.

சதசங்கத்துக்கு அன்பர்கள் குழுமியதும் பேசிய தவத்திரு.சின்னசாமி, 'பிராண-தத்துவம்' எனும் தலைப்பில் பேசி செயல்முறையாக செய்துகாட்டி விளக்கம் தந்தார்கள். மிகச் சர்வசாதாரணமாக தாயுமானவர் பாடல்களும், திருமந்திரமும் அவரிடம் இருந்து வெளிப்பட்டதும் இன்றி அவற்றுக்கேற்ற பொருள் விளக்கமும் தந்தார்.

பிராணாயமத்தில் ஒரு வகையான கும்பகப் பிராணாயமத்தை அவர் அனாயாசமாக எங்களுக்குச் செய்து காட்டினார். மூச்சை உள்ளிழுத்து வெகுநேரம் வெளிவிடாமல் நிறுத்தும் அந்தர்-கும்பகம் என்ற பிராணாயாமத்தை இரண்டு நிமிடங்கள் வரை நிறுத்தியும், பின்னர் மூச்சை வெளியேற்றி விட்டு பகிர்-கும்பகம் எனும் மூச்சில்லாமல் இருக்கும் நிலையில் இரண்டு நிமிடங்களும் இருந்து காட்டி அனைவரையும் வியப்புக்குள் ஆழ்த்தினார். வாசியோகத்தைப் பற்றி நிறையப் படித்திருக்கும், பலருக்கு இந்த நேரடி அனுபவம் களிப்பூட்டுவதாக இருந்தது.

புளியமரத்து ஷெட்டு தவக்குடிலில் இரண்டு ஆண்டுகள் தனிமைத் தவம் இருந்து இந்த பிராணாயாமச் சாதனையை பயின்றதாக தெரிவித்தார். இதுவரை தனக்கு எந்தவிதமான நோயும் வந்ததில்லை,எனவே எந்தவிதமான வைத்தியமும் எடுத்துக் கொள்ள நேர்ந்ததில்லை என்று கூறி அனைவரையும் அசரவைத்தார் அந்த எழுபத்தைந்து வயது இளைஞர்.

இந்த பெரியவருடன் எங்களுக்கு தேடக் கிடைக்காத ஒரு அற்புதமான சத்சங்கம் நிறைவடைந்ததும், 'மெய்த்தவம்' திருச்செந்தில் அடிகள் பிரம்மசூத்திரத்தில் இருந்து சில முக்கிய பகுதிகளை அருமையாக விவரித்தார். அன்பர்களின் ஐயம் தெளிதலுக்குப் பின்னர் இரண்டாம் நாள் பயிற்சி நிறைவுக்கு வந்தது.

முகாமின் மூன்றாம் தினமான நாளைக்கு   கொடைக்கானலுக்கு இன்பச்செலவு செல்வதாக திட்டம் இருந்தது. கொடைக்கானலில் குளிர் அதிகம் என்பதால் அந்த பயணத்தை ரத்து செய்து விடலாம் என யோகா.முருகன்ஜி யோசனை சொன்னார். பெருவாரியான அன்பர்கள் இந்த முடிவினை ஒப்புக்கொண்ட போதிலும் சிலருக்கு இந்த எதிர்பாராத முடிவு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. எனினும் சூழ்நிலையை அனுசரித்து கொடைக்கானல் பயணத்தை ரத்து செய்ய அனைவரும் ஏகமனதாக ஒப்புக் கொண்டார்கள்.

அதற்கு மாற்று ஏற்பாடாக நாளைக் காலையில் அனைவரும் வரதமாநதி அணைக்கு செல்வது எனவும் அங்கு சத்சங்கம் மற்றும் தியானப் பயிற்சியை செய்து விட்டு, முகாமுக்குத் திரும்பி மதிய உணவுக்குப் பின்னர் பழனிக்கு சென்று மலைக் கோவில் மற்றுமுள்ள இதர கோவில்களைச் சுற்றிப் பார்ப்பது என்று முடிவானது.

காலை யோகப் பயிற்சிகளை வழக்கப்படி பள்ளி வளாகத்தில் செய்து முடித்த பின்னர் வரதமாநதி அணைக்கட்டுக்கு செல்வது என்று முடிவானது.அன்றிரவு உணவாக எல்லோருக்கும் அவல், பேரீச்சை மற்றும் பலவிதமான பழங்கள் வழங்கப்பட்டன. இரவு உணவுக்குப் பின்னர் அனைவரும் உறங்கச் சென்றோம். சென்னை இயற்கைப்பிரியனும், பழனி BSNL-பாஸ்கரும் அன்றிரவு எங்களுடன் டார்மிட்டரியில் தங்கினர்.
(பகிர்வுகள் தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக