வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

5. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் 
சுவாமி சிவானந்தர் அருளிய 'இயற்கை மருத்துவம்'


இயற்கை நலவாழ்வியல் அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த வலைப்பூவில் பதிவிடுவதில் நீண்ட இடைவெளி நேர்ந்து விட்டது. காக்க வைத்தமைக்கு மன்னியுங்கள். இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக தமிழில் நிறைய நூல்கள் உள்ளன. 


அவற்றை எல்லாம் கண்டெடுத்து உங்களிடையே ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திட பெரிதும் முனைந்து கொண்டிருக்கிறேன். நிறையப் புத்தகங்களை சேகரித்து விட்டேன். அவற்றைப் படித்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.


அந்த வரிசையில், ஐந்தாவது புத்தகமாக நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் புத்தகம், இமயஜோதி ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அருளிய ''இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure) என்கிற அரியதொரு நூல். 


இந்த புத்தகத்தை கடந்த மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான  பொக்கிஷம் இந்நூல். 

இந்நூல் துவக்கத்தில் படிப்போரை கவரும் வரிகள்:
ஓம் சத்குரு பரமாத்மனே நம:
ஓம்.

எங்கும் நிறைந்துள்ள சிகிச்சை தரும் சக்திக்கு,
நம்மை பாதுகாக்கும் இயற்கை அன்னைக்கு,
இயற்கை மருத்துவத்தை ஊக்குவிப்போர்,
பின்பற்றுவோர் அனைவருக்கும்,
அதுபோலவே
பெரும் அளவில் மனித சமுதாயத்தின்
அனைவரும் உடல் நலமும், நீண்ட ஆயுளும்,
அமைதியும், மகிழ்ச்சியும் பெறுமாறு
இந்நூல் அன்புக் காணிக்கை.
ஓம்.

மேலும் சுவாமி சிவானந்தர் கூறுகிறார்: 

ஓம்.

8, செப்டம்பர் 1951

அமிழ்தத்தின் செல்வா,

உடல் நலமே பெருஞ் செல்வம்.

உன் வாழ்வின் உண்மையான அடித்தளம் உடல் நலமே. 

வலிமை வாய்ந்த உடம்பை வளர்த்துக் கொள்.

இயற்கையுடன் இணக்கம் கொள்.

உடல் நலம் பற்றிய, உடல் நல நூல்களைப் பற்றிய விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பாயாக.

அழியாத பேரின்பத்தை அனுபவிப்பாயாக.

உடல் நலம், அமைதி, நீண்ட ஆயுள், கைவல்யம் ஆகியவற்றை ஆண்டவன் உன் மீது பொழிவாராக.
- சுவாமி சிவானந்தா.

இந்த நூல் 33 அத்தியாயங்களையும், பின் இணைப்பாக இயற்கை மருத்துவக் கொள்கைகள் (ஒரு மீள் பார்வை) பற்றிய ரத்தினச் சுருக்கமான ஒரு கட்டுரையையும் கொண்டது.

இந்நூலை அருளிய சுவாமி சிவானந்தர் ஒரு மருத்துவர் என்பது இப்புத்தகத்திற்கு மேலும் வலிவையும், பொலிவையும், அதிகாரத்தையும் கூட்டுகிறது. ஆன்மீகமும், உடல் நலமும் இணைந்த பேரருளாளர் அல்லவா சுவாமி சிவானந்தர் ?

இந்நூலில் ஒவ்வொரு பக்கமும் அனுபவித்து படிக்க வேண்டிய செய்திகள் நிறைந்திருக்கிறது.

ஆசிரியரின் முகவுரைப் பகுதியில் இருந்து முக்கியமான சாரம்சத்தை மட்டும் இங்கே அன்பர்களின் பார்வைக்கு இடுகிறேன். 

ஒரே ஒரு நோய் தான் உண்டு.

அதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு.

அதற்கு ஒரே ஒரு சிகிச்சை தான் உண்டு.

அந்த ஒரு நோய்:-
தவறான முறையில் வாழ்வதாகும்.

அந்த ஒரு காரணம்:- 
நீரில் உருவாகும் பொருள்களும், நோயை உண்டாக்கும் மலங்களும், உடம்பில் தேங்குவதாகும்.

அந்த ஒரு சிகிச்சை:-
உண்ணா நோன்பு, எனிமா ஆகியவற்றால் அழுக்குகளையும், மலங்களையும் வெளியேற்றல், விவேகமான உணவுத் திட்டம், நீர், கதி ரொளி,காற்று ஆகியவற்றால் குணம் பெறல் முதலியனவாகும்.

இயற்கை மருத்துவம் எப்போதும் இயற்கையான சிகிச்சை முறைகளையே பின்பற்றுகிறது. நீராடல், வெயில், ஓய்வு, பயிற்சி, எனிமா, பட்டினின், தூய காற்று, நீவி விடல் (மசாஜ்), கவனம் மிகுந்த விவேகத்துடன் கூடிய சரியான உணவு முதலிய இயற்கையான செயல்களின் உதவியையே அது பெறுகிறது. மருந்துகளை அது ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை.

வேதங்கள் அல்லது இமய மலை போல இயற்கை மருத்துவ முறையும் மிகவும் தொன்மை வாய்ந்தது. உடல் நலம் பேணவும், சிகிச்சை செய்யவும் (தற்போது) உள்ள முறைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அதுவே மிகவும் தொன்மை வாய்ந்தது. கிறித்துவுக்கு நான்கு நூற்றாண்டுகட்கு முன்பு (460-377 BC) வாழ்ந்த ஹிப்போ க்ரேடஸ் (Hipocrates)என்பார் இயற்கை மருத்துவ முறையின் உறுதி மிக்க ஆதரவாளராக இருந்தார். கதிரொளி, தூய காற்று, தண்ணீர், பயிற்சி, ஓய்வு, சரியான உணவு, நீராடல், நீவுதல் முதலிய இயற்கை நலவாழ்வியல் சிகிச்சை முறைகளை பயன்படுத்தி, மனித குலத்துக்கு நிகரற்ற பயன்களையும், அழியாப் புகழையும் பெற்றார். அவர் இயற்கை மருத்துவ முறையின் தந்தை ஆவார். (இப்போது கூட மருத்துவப் படிப்பினைத் துவங்கும் முன்னர் மருத்துவ மாணவர்கள் ஹிபோக்ரேடஸ் உறுதி மொழி (Hypocrates Oath) என்ற ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வதை ஒரு மரபாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளுக்கும் இப்போதைய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும், மருந்துகளுக்கும் இடைவெளி மிகவும் நீண்டு விட்டது என்பதுதான் சோகம்!)

இயற்கை மருத்துவ முறை ஒரு சாதாரண மனிதரை, டாக்டரிடம் சென்று, காத்திருக்கும் அறையில் கடினமும், கவலை மிகுந்த பல மணி நேரங்களைக் கழிப்பதில் இருந்தும், டாக்டருடைய மனிதாபிமானமற்ற கட்டணங்களில் இருந்தும் விடுவிக்கிறது.

இயற்கை மருத்துவம் மிகவும் மலிவானது; அதே நேரத்தில் சிகிச்சை முறைகளில் மிகவும் சிறந்ததும், பாதுகாப்பு மிகுந்ததும் ஆகும்.

இயற்கைக்கு திரும்புக. 
ஊசி, மருந்து வில்லைகள், திரவ மருந்து ஆகியவற்றிகாக காலத்தையும், சக்தியையும், பணத்தையும் வீணாக்க வேண்டாம். 


இயற்கையின் விதிகள் மிகவும் சுலபமானவை. இயற்கை அன்னையிடம் (இயற்கை) மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன; அவற்றை உட்கொள்வதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவளுக்கு (டாக்டர் ஃ பீஸ்) கட்டணம் எதுவும் தரவேண்டியதில்லை. 


எளிமையான, இயற்கையான வாழ்க்கையை நடத்துக. உடல் நலம் பற்றிய விதிகளையும் பின்பற்றுக. தூய்மையை பேண வேண்டும். தெய்வீகத் தன்மைக்கு அடுத்தபடியாக இருப்பது தூய்மையே. நோய்கள் அணுகாத நிலையைப் பெறுவதுடன், நீங்கள் உயர்ந்த தரம் மிகுந்த உடல் நலத்தையும், வலிமையையும், நீண்ட ஆயுளையும் அனுபவித்து மகிழ்வீர்கள். 

எல்லா நோய்களையும் குணப்படுத்துவது இயற்கைதான் (Doctor treats; Nature cures).ஒரு டாக்டர் தம்முடைய விவேகமற்ற சிகிச்சையினால் ஒரு நோயாளியைக் கொன்று விடக்கூடும்; அல்லது நோயின் உக்கிரத்தை அதிகரித்து விடக்கூடும்.

விவேகமான முறையில் மருந்துகளை பயன்படுத்துவது தான் இயற்கைக்கு உதவியாக இருக்கிறது. உடல் நலத்துடன் இருக்கும் போதும், நோயுற்று இருக்கும்போதும், உயிரின் செயல்களுக்கு தெய்வீக சக்தி ஆதரவாக இருக்கிறது. 

மிகையான உணவாலும், தவறான உணவாலும், விவேகமற்ற உணவாலும், குற்றங்கள் உள்ள உணவாலும், உடம்பில் அழுக்குகளும், மலங்களும் தேங்கி விடுகின்றன. உடம்பில் இருந்து இந்த அழுக்குகளும், மலங்களும் வெளியேற்றப்பட்டால் எல்லா நோய்களும் குணமாகி நிறைவான உடல் நலத்தை மனிதன் அனுபவிக்க முடிகிறது. இதுவே இயற்கை மருத்துவத்தின் நிறைவான கொள்கை.

கதிரொளி சிகிச்சை, நீர் சிகிச்சை, காற்றின் சிகிச்சை, உணவின் சிகிச்சை, பட்டினி கிடத்தல் இவை எல்லாவற்றின் ஒரே நோக்கம் உடம்பில் இருந்து அழுக்குகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி நிறைவான உடல் நலம், வலிமை, சக்தி ஆகியவற்றை நிச்சயப்படுத்துவதே ஆகும்.

இப்புத்தகத்தில் சுவாமி சிவானந்தர் ஒவ்வொரு நோயையும் எவ்வாறு இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என்று விரிவாக அலசியிருக்கிறார். இப் புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், சொல்லும் படித்து, பின்பற்றி அனுபவிக்க வேண்டியவை. அன்பர்கள் இப்புத்தகத்தை சொந்தமாக்கி பயன்படுத்தி நலவாழ்வு வாழலாம். 


அதேபோல, இந்நூலில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நலவாழ்வு பெற்ற அன்பர்கள், தமது நண்பர்கள், உறவினருக்கு பரிசாக அளித்து அவர்கள் வாழ்விலும் இயற்கை ஒளியை ஏற்றலாம்.

நவில் தோறும் நூல் நயம் போலும், படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் இந்த நூல் பற்றிய விவரங்கள்...

புத்தகத்தின் பெயர்: 'இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure)

ஆசிரியர்: இமய ஜோதி ஸ்ரீ ஸ்வாமி சிவானந்தா (தமிழாக்கம்: திரு.டாக்டர் ப.உருத்திரமணி, M.A., Ph.D.,

பக்கங்கள்: 526 (Hard Bound Edition). எட்டாவது பதிப்பு -2007 

பண்பாளர்கள் நால்வர் கொடுத்த பெறும் பண உதவிகளால் வெளியாகி இருக்கும் விலை மதிப்பற்ற இந்த நூலின் விலை: ரூபாய் நூறு மட்டுமே. (டாக்டருக்கு மீண்டும் மீண்டும் நாம் கொடுக்கும் ஆலோசனை கட்டணத்தை விட இந்நூலின் விலை பல மடங்கு குறைவு என்பதை கவனியுங்கள். இந்த முதலீடு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், டாக்டர்கள் மற்றும் நச்சுக்கள் நிறைந்த செயற்கை மருந்துகளில் இருந்தும் காக்க வல்ல சக்தி கொண்டது)

வெளியிடுவோர்: தெய்வீக வாழ்க்கை சங்கம், சிவானந்தா ஆஸ்ரமம், சுவாமி சிவானந்தா சாலை, இராசிபுரம்-637408, நாமக்கல் மாவட்டம், தமிழ் நாடு.

உங்கள் பொன்னான நேரத்தை இந்தப் பதிவினை படிக்க செலவிட்டமைக்கு என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். 

வாழி நலம் சூழ. 

-- 
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
ஆன்ம நலம் பெற : www.vedantavaihavam.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக