சனி, 30 அக்டோபர், 2010

6. ஆரோக்கியம் ஆனந்தம்.
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
இரதி லோகநாதன், கோவை
16.  கேள்விகள் பல;  ஆனால் பதில் ஒன்று

(1) மனிதனுக்கு மட்டும் ஏன் வியர்க்கிறது?

(2)ஏன் பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறந்தாலும் சோர்வடைவதில்லை? ஏன் மனிதனுக்கு சிறிது தூரம் பயணம் செய்தவுடன் பயணக்களைப்பு ஏற்படுகிறது?

(3) ஏன் மனிதனுக்கு மட்டும் இரத்த அழுத்தம், நீரழிவு நோய், புற்று நோய், வலிப்பு நோய், தொழு நோய் போன்ற நோய்கள் வந்து தன் ஆயுட்  காலம் முடியுமுன்னரே இறக்கிறான்?

(4) பணம் இருந்தும் மனிதன் ஏன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை?

(5) ஏன் மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்?

(6) ஏன் மனிதன் தான் இறந்த பிறகு சிறு தூசியை கூட எடுத்துச் செல்ல முடியாது என தெரிந்தும் பணம், புகழ் என முட்டாள்தனமாக  அலைகிறான்?

(7) உண்பது நாழி, உடுப்பது இரண்டே எனும் பொழுது ஏன் மனிதர்கள் ஆடை அணிகலன்கள் மேல் மோகம் கொண்டு அலைகிறார்கள்?

(8) பணமும், படிப்பும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்றால் படித்த பணக்கார மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

விடை: ஏனென்றால் மனிதன் மட்டுமே உணவை சமைத்து உண்கிறான்.

17.  யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், உடற்பயிற்சிகள் சில உண்மைகள்

இயற்கை உணவை உண்ண ஆரம்பித்த உடன் உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும்.  குரங்குகள், அணில்கள் போன்ற  விலங்குகள் மரத்திற்கு மரம் தாவி குதித்தாலும் கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படுவதில்லை.  அவை ஜிம்முக்கோ யோகா வகுப்புக்கோ   செல்வதில்லை. இயற்கை  உணவு உண்டால் நாம் பல யோகாசனங்களை  சுலபமாக செய்யலாம். தினசரி யோகா   உடற்பயிற்சி செய்ய தேவையில்லை.  அந்த நேரத்தை நாம் தியானம் செய்ய பயன்படுத்தலாம்.  

உடற்பயிற்சியினால் வெளிப்புற தசை வளர்ச்சி மட்டுமே அதிகரிக்கும்.  உள் உறுப்புகள் உறுதியாகாது.  நோயில்லாமல் இருக்கவும் உத்திரவாதமில்லை.  பலவான்கள் எனக் கூறிக் கொள்ளும் பலர் வாழ்க்கையின் சிறிய பிரச்னைகளை சந்திக்க கூட பயப்படுவர்.  இயற்கை  உணவும் தியானமும் மட்டுமே உடல், மனம் இரண்டையும் வலுவாக்கும்.  நோயற்ற வாழ்விற்கும் உட்புற மனமகிழ்ச்சிக்கும் இயற்கை உணவே  சிறந்தது.  உடற்பயிற்சியால் எடையை வேண்டுமானால் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆரோக்கியத்திற்கு உத்திரவாதமில்லை.

18. பயனுள்ள புத்தகங்களின் பட்டியல்

(1) இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - மூ.அ.அப்பன்
(2)நம் நலம் நம் கையில்  -  தேவேந்திர வோரா
(3)எளிய முறை உடற்பயிற்சி - வேதாத்திரி மகரிஷி

மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு

(1)எது மனித உணவு? - ம.கி. பாண்டுரங்கம், சென்னை
(2)நோயின்றி வாழ முடியாதா? -  மூ. இராமகிருஷ்ணன்
(3)தென்னைச் செல்வம் - கே.எஸ். லெட்சுமணன்
(4) வாழைச் செல்வம் - கே.எஸ்.லெட்சுமணன்
(5)இயற்கை மருத்துவம் - க. அருணாச்சலம்
(6) மருந்தில்லா மருத்துவம் - கே.ஆர். வேலாயுதராஜா

19.  இயற்கை சிகிச்சை முறைகள்

    (1) வாழையிலைக் குளியல்
    (2) மண் குளியல்
    (3) நீராவிக் குளியல்
    (4) முதுகு தண்டுக் குளியல்
    (5) இடுப்புக் குளியல்
    (6) கண் குவளை
    (7) மூக்கு குவளை
    (8) எனிமா
    (9) ஈரத்துணிப்பட்டி
    (10) ஈரமண் பட்டி
    (11) சூரிய ஒளி குளியல்

அடுத்த பதிவில் இருந்து மேலே குறிப்பிட்ட இயற்கை சிகிச்சை முறைகளைப் பற்றிய விளக்கங்கள் தொடரும்....

நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

குரு வணக்கம்.

எனது யோகா ஆசான் திரு. யோகி. தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் நெல்லையில் ஒரு விழாவில் கலந்து கொள்ளச் சென்று இருந்த போது தினமலர் தினசரிக்கு தந்த பேட்டியை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.





பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2010,03:43 IST
தினமலர் முதல் பக்கம் » பொது செய்தி »தமிழ்நாடு

வெளிநாட்டினர் யோகாவை விரும்புவது ஏன்?  
நெல்லையில் யோகா குரு கிருஷ்ணன் விளக்கம்


திருநெல்வேலி: "வெளிநாட்டினர் யோகாவை விரும்புவது ஏன்' என நெல்லையில் யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் விளக்கம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் தி.ஆ.கிருஷ்ணன். இவர் 8 வயதில் யோகாசனங்களை கற்க துவங்கினார். சிவானந்தா ஆசிரமத்தில் யோகாசனங்களை கற்றார். யோகக்கலை வல்லுநர்கள் சுத்தானந்த பாரதி, கீதானந்தா, திரேந்திர பிரம்மச்சாரி, ஆசனா ஆண்டியப்பன் உள்ளிட்டோரிடம் யோகாசனங்களை கற்று தேர்ந்தார். இளமைக்காலத்தில் பல மாநிலங்களுக்கும் சென்று யோகாசன பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றுள்ளார். யோகக்கலையில் 60 ஆண்டுக்கால அனுபவம் கொண்ட இவர் பல பட்டங்களை பெற்றுள்ளார். சென்னையில் திருமூலர் யோகா, இயற்கை உணவு ஆய்வு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் நான்கு மையங்களில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு யோகா, இயற்கை உணவு குறித்து டிப்ளமோ முதல் ஆய்வுப்படிப்பு வரை பயிற்சி அளித்து வருகிறார். தாய்லாந்து, சீனா, ஜப்பான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று யோகா பயிற்சி அளிக்கிறார்.

நெல்லையில் யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் கூறியதாவது:

வெளிநாட்டு உடற்பயிற்சி முறைகளால் உடல்தசை அழகு பெறும். ஆனால் யோகா செய்தால் உடல் மெலிந்து உள் உறுப்புகள் வலிமை பெறும். உடல், மனம், ஆன்மாவை யோகாசனங்கள் ஒருங்கிணைக்கும். நாளமில்லா சுரப்பிகளை சீராக இயங்கச்செய்வதால் உடல் சக்தி பெறும். பிராண சக்தி அதிகரிக்கும். மனம் திடமாகும். இதனால் வெளிநாட்டினர் யோகாவை விரும்பி கற்கின்றனர். வடமாநிலங்களில் யோகா பயிற்சி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. தமிழகத்தில் யோகக்கலை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களில் யோகா படிப்புகள் துவக்கப்பட்டுள்ளது.
 
யோகா பயிற்சி நிலையங்களில் ஏராளமானோர் ஆர்வத்துடன் படிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா கற்பிக்கப்படுகிறது. கோயில்களில் மக்களுக்கு யோகா கற்றுத்தரப்படுகிறது. தியானம் சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படவுள்ளது. தமிழகத்தில் யோகாசன ஆசிரியர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் அளிக்க வேண்டும். ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும். யோகக்கலையை வளர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும். யோகக்கலைக்கு வெளிநாடுகளில் மவுசு உள்ளது. யோகா கற்றவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் சிறந்த வாய்ப்புக்களை பெறலாம்.

தினமும் பயிற்சி:
தினமும் காலையில் உட்கார்ந்து, மல்லாக்க, குப்புறப்படுத்து, நின்று செய்யக்கூடிய சில ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம் செய்துவந்தால் உடல்நிலை நன்கு இருக்கும். நோய்கள் ஏற்படாது.  ஆசனங்களை தினமும் செய்ய வேண்டும். "ஆசனம் பாதி, அசனம் (உணவு) பாதி' என்பர். ஆசனங்கள் செய்தால் மட்டும் போதாது. இயற்கை உணவு முறை பின்பற்ற வேண்டும். பச்சைக்காய்கறிகள், தேங்காய், அவல், பழவகைகள், பழச்சாறுகள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கை உணவு உண்டு ஆசனங்களை செய்துவந்தால் நோய்நொடியின்றி என்றும் இளமையுடன் வாழலாம். மனவளர்ச்சியற்றோர், தொழு நோயாளிகள் கூட ஆசனங்கள், இயற்கை வைத்திய முறையில் குணமடைந்துள்ளனர்.
 
மலச்சிக்கல் நோய்க்கு அடிப்படை. 
புலால் உணவால் உடலில் கழிவுகள் தேங்கி மலச்சிக்கல் ஏற்படும். எனவே இயற்கை உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இளைய தலைமுறையினர் தினமும் அதிகாலை 4 மணிக்கு படுக்கையில் இருந்து எழ வேண்டும். நாள்தோறும் யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம் செய்ய வேண்டும். கட்டுப்பாடு, நுண்ணறிவு வளர புலால் உணவை தவிர்க்க வேண்டும். பழங்கள், பச்சைக்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் கூறினார்.

நன்றி: தினமலர் இணையம் : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105015

புதன், 27 அக்டோபர், 2010

5. ஆரோக்கியம் ஆனந்தம்.
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
இரதி லோகநாதன், கோவை.

 11.  பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை

(1) சக்தி தரும் உணவுகள்: செவ்வாழை, பேரிச்சம்பழம், முந்திரி பருப்பு மற்றும் சாறுள்ள பழங்கள், பழச்சாறுகள்.
(2) தேங்காயை பச்சையாக உண்ணும் போது கொலஸ்ட்ரால் ஆகாது.  அதை சமைக்கும் பொழுது தான் கொலஸ்ட்ராலாக மாறுகிறது.  பச்சை  தேங்காயை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். அதில் எந்த தீங்கும் இல்லை.  உடலும் பருமன் ஆகாது.  மற்ற கொட்டை பருப்புகளுக்கும்  இதுவே பொருந்தும்.
(3) பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரைக்கு நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி) வராது.  
(4) உடல் பருமனுக்கு: உயரத்திற்கு தகுந்த எடை இயற்கை உணவில் தானாகவே வந்து விடும்.
(5) மெலிந்த உடலுக்கு: முளை கட்டிய பயிறு வகைகள் எடையை அதிகரிக்க உதவும்.

12. சைவ, அசைவ மற்றும் இயற்கை உணவிற்குள்ள வித்தியாசங்கள்
சைவ உணவிற்கும் இயற்கை உணவிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை  உணவு என்பது உணவை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது.  சைவ உணவு என்பது இயற்கை உணவை சமைத்து சாப்பிடுவது. 

சைவ/அசைவ உணவு                 இயற்கை உணவு

(1) கொல்லும் வலிமை               இழுக்கும் வலிமை
   (சிங்கம், புலி, சிறுத்தை)         (யானை)
 
(2) நீண்ட நேரம் வேலை            நீண்ட நேரம் சோர்வு
    செய்ய வலு இருக்காது           இல்லாமல் உழைக்கலாம்
 
(3) அஜீரணம் மற்றும் மலச்        அஜீரணம், மலச்சிக்கல்
    சிக்கல் இருக்கும்                     இருக்காது
 
(4) நோயற்ற வாழ்விற்கு             நோயற்ற வாழ்விற்கு
      உத்தரவாதமில்லை                உத்திரவாதம்
 
(5) வெறுப்பு                                     கருணை
 
(6) காமம்                                           காதல்                 
 
(7) பிடிவாதம்                                 வைராக்கியம்
 
(8) அமைதியின்மை                        அமைதி
 
(9) கோபம்                                      பொறுமை
 
(10) ஆடம்பரம்                              எளிமை
 
(11) உலக ஆசைகள்                      தெய்வீக ஆசைகள்
 
(12) கோழைத்தனம்                       கம்பீரம், தைரியம்
 
(13) சுயநலம்                                 பொது நலம்
 
(14) சோம்பேறித்தனம்                  சுறுசுறுப்பு
 
(15) சோர்வு                                   பலம்    
 
    இயற்கை உணவு நம் மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.  நம் குணங்களிலும் நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை காணலாம்.

13. இயற்கை உணவினால் நம் சுவாசத்தில் ஏற்படும் மாற்றம்
நம் சுவாசம் ஆழமாக ஆக நம் ஆயுட்காலம் அதிகரிக்கும்.  வேகமாக மூச்சு விடும் விலங்குகள் (எ.க நாய்) சிறிது காலமே வாழும்.  ஆனால்  ஆமை 300 வருடங்கள் வாழ காரணம் அதன் ஆழமான மூச்சே ஆகும்.  மனிதர்களாகிய நாம் நம் ஆயுட்காலத்தை நம் உணவை வைத்து தீர்மானி த்துக் கொள்ளலாம்.  ஆழமாக சுவாசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.  வேகமாக மூச்சு விடுபவர்கள் நோயாளிகளாக இருப்பார்கள்.

இயற்கை உணவு உண்ணும் போது நம் உடல் தூய்மை அடைகிறது. நம் உடல் தூய்மை அடைய அடைய நம் சுவாசமும் ஆழமாகும்.  இதனால் நாம் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சி மற்றும் கவலை அற்ற மனநிலையுடனும் வாழலாம். 

14. இயற்கை உணவு உண்ண ஆரம்பிப்பது எப்படி?
சமைத்த உணவிலிருந்து இயற்கை உணவிற்கு மாறுவதற்கு மிகுந்த மனஉறுதியும் சுயகட்டுப்பாடும் தேவை. முதலில் ஒரு வேளை  இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கலாம்.  (காலை சிற்றுண்டி அல்லது இரவு உணவை இயற்கை உணவாக உண்ணலாம்.) அளவு கிடையாது.   எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். பிறகு சிறிது காலம் கழித்து அதையே இரண்டு நேரமாக அதிகரிக்கலாம்.  பிறகு ஒரு நாள் முழு  இயற்கை உணவிற்கு மாறமுடியும்.  இதனிடையில் நாம் அசைவம், பால் மற்றும் பால் பொருட்களை விட சிறிது சிறிதாக முயற்சி செய்ய வேண் டும்.  இது சிறிய வியாதிகளுக்கு பொருந்தும்.  கேன்சர், சிறுநீரக பிரச்னை, இதய நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் முழு இயற்கை  உணவிற்கு உடனடியாக மாற வேண்டும்.

முதலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் போது சிறிது சிரமமாகவே இருக்கும்.  சமைத்த உணவை நினைத்தே நாக்கும்  மனமும் ஏங்கும். நம் முன்னோர்கள் பழங்காலத்திலேயே சமைத்து உண்டு வந்துள்ளார்கள்.  அது பழக்கமாக நம் ஒவ்வொரு செல்லிலும் பதிந்து ள்ளது.  அதனால் நாம் இந்த பழக்கத்தை விட்டு வெளியே வர பொறுமையாக முயற்சிக்க வேண்டும். முதலில் பசி போன்ற ஒரு சங்கட உணர்ச்சி  இருந்து கொண்டே இருக்கும். குடிகாரன் குடிக்கு அடிமையாகி உள்ளதை போல  மனித குலமே சமைத்த உணவுக்கு அடிமையாக உள்ளது.  அதனால் குடிப்பது நல்லது என்று யாரும் முட்டாள்தனமாக கூறமாட்டார்கள். மெதுவாக இயற்கை உணவிற்கு நம் உடல் பழகி விடும். சமைத்த  உணவின் மேல் உள்ள ஆசையை குறைக்க தியானம் உதவும்.

வருமுன் காப்பது நல்லது.  நமக்கு பிடித்த பழங்களையும் கொட்டைபருப்புகளையும் நிறைய உண்ணலாம்.  கொட்டை பருப்புகள்  கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  வெறும் பழங்கள் மட்டும் போதாது. சிறிது காலம் கழித்து நாம் உண்ணும் அளவு குறைவதை  காணலாம். ஆரோக்கியமான உடலுக்கு சிறிதளவு உணவே போதுமானது. 

15.  சாப்பிடும் முறை
மோனோ டயட் (ஒரு நேரத்தில் ஒரு உணவை சாப்பிடுவது) நல்லது.  பல விதமான பழக் கலவை அல்லது காய்கறிக்  கலவையாக (சாலட்) உண்ணாமல் ஒரு நேரத்தில் ஒரு பழத்தையோ அல்லது ஒரு கொட்டை பருப்பையோ மட்டும் உண்பது.

பல வித உணவுகளை கலந்து உண்ண வேண்டுமென்றால் முதலில் கொட்டைபருப்புகளை உண்டு பிறகு பழங்களை உண் ணவேண்டும். கலோரி கணக்குகள் தேவையில்லை.  நம் உயரத்திற்கு ஏற்ற எடை தானாக வந்து விடும்.

இயற்கை உணவை பொருத்த வரை அளவு தேவையில்லை.  நமக்கு பசி உணர்வு மறையும் வரை எவ்வளவு வேண்டுமானாலும்  உண்ணலாம்.  தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம்.  

இயற்கை உணவிற்கும் சமைத்த உணவிற்கும் ஜீரண முறை வேறுபடுவதால் இரண்டையும் ஒரே நேரத்தில் கலந்து உண்ணாமல் இருப்பது நல்லது.   அஜீரணக் கோளாறை தவிர்க்க உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும்.  நீரையும், பழச்சாறுகளையும் உமிழ்நீருடன் நன்றாக கலந்து குடிக்க வேண்டும். 

(தொடரும்) 
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.
வேண்டுகோள்: இந்த கொள்கைகள் பரவா உதவுங்கள். உங்கள் வாக்குகளை அளியுங்கள். நன்றி.