சர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின்  324 -வது மாத கூட்டம்.

20-06-2010-ஆடுதுறை

வணக்கம்.  நான் சென்னையில் தென்னக இருப்புப்பாதை அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாக பணி புரிகிறேன். இப்போது எனது வயது ஐம்பத்து நான்கு.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு மே மாதம் ஆடுதுறையில் நடைபெற்ற ஒரு வார இயற்கை மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்ற இனிய நினைவுகளை மீண்டும் நன்றியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு பின்னர் தற்போது உங்களிடையே எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கும் திரு மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் திரு இராமலிங்கம் ஐயா அவர்களுக்கும் அவர்கள் மூலம் இந்த வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறேன்.

கடந்த முறை முகாமில் கலந்து கொண்ட போது நான் சந்தித்த திருவாளர்கள் மெய்யப்பன், இராமலிங்கம், யோகி தி.ஆ.கிருஷ்ணன் மற்றும் மூ.ஆ.அப்பன் ஆகியோரின் தொடர்புகளும் மேலான வழிகாட்டல்களும் இன்றளவும் எனக்கு கிடைத்து வருகிறது என்பது பெருமைக்குரிய மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

உங்களிடையே இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு நான் எவ்வாறு எனக்கு ஏற்பட்ட ''நீரிழிவு நோயினை'' மருந்தின்றி குணமாக்கிக் கொண்டேன் என்பது பற்றி.

முன்னரே இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்றிருந்தும் பணி மற்றும் கால மாறுபாடுகளின் காரணமாக என்னால் இயற்கை உணவினை தொடர்ந்து உண்டு வரஇயலாமல் போனது. எனினும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சந்தர்ப்பங்களில் யோகா பயிற்சி மற்றும் இயற்கை உணவுகளை மேற்கொண்டு வந்திருக்கிறேன். எனினும் பணி மும்முரம் காரணமாக ஏழு ஆண்டுகள் 2002 முதல் 2008 வரை இந்தியா முழுமையும் பயணம் செய்து நீண்ட நாட்கள் வெளியில் உணவு உண்ணவேண்டிய சூழ்நிலைகள் உருவானதால் எனக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னரே நான் உயர் இரத்த அழுத்தம், ஹைபர்டென்ஷன் போன்ற பாதிப்புகளால் இரயில்வே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று அங்கு தந்த ஆங்கில மருந்துகளை உண்டு வந்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக அதனுடன் சர்க்கரை வியாதியும் சேர்ந்து கொண்டது.  இரத்த பரிசோதனை செய்து கொண்ட போது கீழ்க் கண்ட அளவுகள் இருந்தன. 22-12-2007 - Blood Sugar (Fasting) 245 mgs/dl (Ref value: 70 to 100). அதன் பிறகு சித்தமருத்துவம் மேற்கொண்டேன். நிறைய லேகியங்கள், பொடிகள், கஷாயங்கள், உணவுக் கட்டுப்பாடுகள் மேற்கொண்ட பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது கிடைத்த அளவுகள்:
09-01-2008 -      Blood Sugar (Fasting) - 275 mgs/dl
         Blood Sugar (PP) - 469 mgs/dl


பிறகு எம்.வி. டையபெடிக் மருத்துவ மனையில் சென்று அங்கு பரிசோதனை செய்து கொண்டேன்.

02-02-2008        -  Blood Sugar (Fasting) - 217 mgs/dl
   Blood Sugar (PP) - 294 mgs/dl
என்று பரிசோதனை முடிவுகள் வந்தன.

அதன் பிறகு ஆங்கில மருத்துவத்தினை மேற்கொண்டேன். தொடர்ந்து ஒரு மாதம் மருந்துகள், உணவுக் கட்டுப் பாடுகள் கடைப் பிடித்த பின்னர் கிடைத்த பரிசோதனை முடிவுகள்

01-03-2008 -      Blood Sugar (Fasting) - 85 mgs/dll (Ref value: 70 to 100)
Blood Sugar ( P  P)    - 102 mgs/dl (Ref Value: 100 to 140)

மருந்துகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து வரவேண்டும் என்கிற ஆங்கில மருத்துவரின் அறிவுரை அடிப்படையில் நான் இரத்த அழுத்தத்துக்கும், சர்க்கரை நோய்க்கும் தொடர் சிகிச்சை மேற்கொண்டேன். ஆயினும் எனது உடல் உபாதைகள் குறைந்த மாதிரி தெரியவில்லை. Once a diabetic; always a diabetic. Once a heart patient; always a heart patient, என்று ஆங்கில மருத்துவர்கள் கூறிய சித்தாந்தம் எனக்கு அலுப்பு தட்டலாயிற்று.

ஏனெனில் மருந்துகளை உண்ணத் தவறி விட்டால் தொல்லைகள் அதிகமாக இருந்தன. சிகிச்சையின் போதும், உடல் வலி, சோர்வு போன்றவை தொடர்ந்து இருந்தன. உடல் உஷ்ணக் கட்டிகள் போன்றவைகள் அடிக்கடி வந்து தொல்லை தந்தன. சிறுநீர்த் தாரை எரிச்சல் ஒரு தொடர் கதையாகவே இருந்தது.

ஆங்கில மருந்துகள் சிறுநீரகங்களில் கற்களை உண்டாக்கும் என்று வேறு கூறினார்கள். அதுவும் இன்றி தொண்ணூறு கிலோ எடையுடன் இருந்தேன். உணவைக் குறைத்தாலும்  இடர்ப்பாடு; சாப்பிட்டாலும் இடர்ப்பாடு என்று இருதலைக் கொள்ளியாய் தவித்தேன்.

இந்த தொடர் தொல்லைகளில் இருந்து விடுபட எண்ணினேன். ஏற்கனவே மேற்கொண்ட இயற்கை உணவு முறைக்கு மாற முடிவு செய்தேன். கடந்த ஆண்டு மே மாதம் கும்பகோணத்தில் நடைபெற்ற இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்தேன். ஆனால் தேர்தல் பணிக்கு என்னை நியமித்ததால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. பிறகு திரு யோகி.கிருஷ்ணன் அவர்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தித்தேன்.

அவர் என்னிடம், ''நீங்கள் மீண்டும் தொடர்ந்து யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்; இயற்கை உணவினை எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக சாப்பிடுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குணமடைதல் விரைவாக இருக்கும்'' என்றார். அவரது அறிவுரையின்படி யோகம், மற்றும் இயற்கை உணவு முறைகளை பின்பற்றினேன்.


கடந்த டிசம்பர் மாதம் திரு மூ.ஆ. அப்பன் அவர்கள் பழனியில் நடத்திய ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொண்டேன்.

அப்போது முழு இயற்கை உணவு முறைக்கு மாறியது மட்டும் இன்றி ஆங்கில மருந்துகளை சாப்பிடுவதை அறவே நிறுத்தினேன்.

ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் பெற்ற நேரடி அனுபவங்களும், யோகி கிருஷ்ணன் மாஸ்டரிடம் பெற்று வரும் தொடர் யோகப் பயிற்சிகளும் எனக்கு இரத்த அழுத்தம், உடல் எடை, மற்றும் சர்க்கரை வியாதிகளின் பிடியில் இருந்து முழு விடுதலை பெற்று தந்தன.

மேற்குறிப்பிட தொல்லைகளின் சிம்ப்டம்ஸ் என்னிடம் இருந்து முழுமையாக அகன்று விட்டன. ஆகையினால் நான் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்களை ஆலோசிக்காமல் ஆங்கில மருந்துகளை கடந்த டிசம்பரில் இருந்து நிறுத்தி விட்டேன்.

பின்னர் திருவாளர்கள் கிருஷ்ணன் ஐயா மற்றும் மெய்யப்பன் ஐயா இருவரும் என்னை மருத்துவ பரிசோதனை செய்துபார்க்கும்படி அறிவுறுத்தினார்கள்.

அதன் பேரில் இந்த ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் மாதம் முதல் வாரத்தில் மேற்கொண்ட இரத்தம், மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் முடிவுகள் இதோ:

02-04-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 124 mg/dl
Urine Sugar: NIL
07-05-2010-  Blood Sugar (Fasting) - 97 mg/dl
Blood Sugar (PP) - 126 mg/dl
Urine Sugar: NIL
05-06-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 128 mg/dl
Urine Sugar: NIL

இப்போது முழு இயற்கை உணவு முறைகளை கடைப்பிடிக்கிறேன்.

வாரம் ஒரு நாள் உபவாசம், தொடர் யோகா பயிற்சிகள் என்னை ஆரோக்கியம் நிறைந்த ஒரு மனிதனாக மீட்டெடுத்து விட்டன.

வெய்யிலில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள் அதன் பொருளை முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

எனது நண்பர்கள் பலர் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து அவர்களும் யோகா/இயற்கை நலவாழ்வு முறைகளை பின்பற்றி பலன் அடைந்து வருகிறார்கள்.



நான் சொல்ல விரும்பும் செய்திகள்:
  • Once a diabetic, always a diabetic. Once a heart patient, always a heart patient எண்ணும் ஆங்கில மருத்துவ சித்தாந்தம் தவறானது.
  • உணவு மற்றும் வாழும் முறைகளிலும், எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுத்தாமல் வெறும் மருந்துகள் மூலமாக எந்த வியாதியையும் குணப் படுத்த முடியாது.
  • நான் எனது சர்க்கரை வியாதிக்கு இயற்கை நலவாழ்வியல் மூலம் குணம் பெற்ற போது, எனது உடல் எடை குறைந்தது; இரத்த அழுத்தம் நார்மல் நிலைக்கு வந்தது. அது மட்டுமின்றி எனக்கு பிறவியிலேயே இதயத்தில் எல்.வி.சி.டி எனப்படும் (Left Ventricular Conductivity Defect) குறைபாடு இருந்தது. அதன் காரணமாக யூரிக் ஆசிட் அதிகமாக இரத்தில் கலந்து போகும் தன்மையும் அதனால் எனது சிறுநீரகங்களுக்கு தொடர் தொல்லைகளும் இருந்ததன. யூரிசீமியா எனும் இந்த தொல்லைக்காக சிறுநீர்ப் பிரித்திகளை ஊக்குவிக்கும் மருந்துகளையும் சாப்பிட்டு வந்தேன். ஆனால் முழு இயற்கை உணவுக்கு மாறிய பின்னர் அந்த தொந்தரவும் என்னை விட்டு நீங்கி விட்டது. முன்னர் இந்த மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் சிறுநீர் போகும் இடத்தில் எரிச்சல் அதிகம் ஆகிவிடும். சில சமயம் இரத்தம் கூட வெளியேறும்.
  • ஆங்கில மருந்துகளால் ஏற்படுவன மோசமான பின்விளைவுகள். ஆனால் இயற்கை நலவாழ்வியலில் கிடைக்கும் குணம் பூரணமானது (holistic). ஒரு குறிப்பிட்ட வியாதியை மட்டுமின்றி உடல் முழுவதும் செயல்பட்டு நமக்கு தெரியாமல் இருக்கும் குறைபாடுகளையும் களைந்தெறியும் சக்தி இயற்கை நலவாழ்வியலுக்கு உண்டு என்பதை முழுமையாக நான் உணர்ந்தேன்.
  • அடுத்ததாகவும் நிறைவாகவும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. இயற்கை நலவாழ்வியல் உங்களை உங்களுக்கு ஏற்ற மருத்துவராக மாற்றுகிறது. மருந்தில்லா மருத்துவம் என்பதினால் செலவும் இல்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழம், காய்கறிகளை இயற்கையாக உண்பதினால் நமக்கு பொருளாதார அடிப்படையில், எரிவாயு (கேஸ்), மசாலா பொருட்கள், எண்ணை வகைகளுக்கான செலவு, உப்பு, சர்க்கரை, பால் பொருட்கள் மீதான செலவுகள் குறைகின்றன.
  • நோய் இல்லாமல் செயல் படுவதினால் அலுவலுக்கு விடுப்பு எடுத்தல், அலுவல் நேரங்களில் சோர்வாக இருத்தல், மருத்துவ மனைகளில் மருத்துவருக்காக காத்திருத்தல், தேவையற்ற அறுவை சிகிச்சைகளை பெறும் பொருள் செலவில் மேற்கொள்ளுதல், நோய் வாய்ப்படுபவரை கவனித்துக் கொள்ளுபவருக்கு ஏற்படும் தொல்லைகள், மருந்துக்கான பெறும் பொருள் செலவும், பக்க விளைவுகள், பின்விளைவுகள் போன்றவற்றை முழுமையாக தவிர்க்கலாம். மக்களின் ஆரோக்கியத்துக்காக அரசுகள் பெருமளவில் பணத்தை செலவு செய்வதை தவிர்ப்பதன் மூலம் மத்திய மாநில அரசுகள் அப்பணத்தை மக்கள் நல பணிகளில் நல்ல வழிகளில் செலவிடலாம்.
  • நல்ல உடல், நல்ல மனம், நல்ல சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் பெருகினால் சமுதாயத்திற்கு அவர்களது பங்களிப்புகள் மேம்பட்டதாக இருக்கும். நாட்டின் உற்பத்தியும் கூடும். மக்களிடையே நற்சிந்தனைகள் வளர்ந்து போட்டி பொறாமை போன்றவைகள் அகன்று, சகோதரத்துவம், அன்பு போன்றவை பெருகும்.
எனது வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையை தந்திருக்கும் இயற்கை நலவாழ்வியலை பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்ள நல்வாய்ப்பை ஏற்படுத்தி தந்த திரு மெய்யப்பன் ஐயாவுக்கும், திரு.ராமலிங்கம் ஐயாவுக்கும், மற்றுமுள்ள சங்க நிர்வாகிகள் எல்லாருக்கும், மற்றும் இங்கே பெருவாரியாக குழுமி இருக்கும் உங்கள் எல்லாருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி பாராட்டி வணங்கி விடை பெறுகிறேன்.  நன்றி.  வணக்கம்.