சனி, 7 ஜனவரி, 2012

5. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்

பகுதி ஐந்து.

முதல் நாள் நிகழ்வுகள்: 26.12.2011(திங்கள்கிழமை)

முகாம் தொடங்கிய நாளான இன்று காலை முகாமில் ஒரு ஹோமம் செய்து விட்டு அனைவரும் பழனி நகரில் உள்ள தயாசதனில் நடந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டபின்னர் அனைவரும் மதிய உணவுக்காக மீண்டும் தவக்குடில் அமைந்திருந்த புளியமரத்துஷெட்டு முகாமுக்குத் திரும்பினோம்.

நாங்கள் வந்து சேர்ந்திருந்த போது குடந்தை ரமேஷ் (இயற்கை உணவுத் தயாரிப்பாளர்) தன்னந்தனியாளாக முப்பது பேருக்கு இயற்கை உணவினைத் தயார் செய்திருந்தார். நாங்கள் அனைவரும் கடும்பசியில் இருந்தோம். எல்லோரையும் வரிசையாக அமரவைத்து இலை போட்டு அதில் ஊறவைத்த பயறு, கார அவல், இனிப்பு அவல், பழக்கலவை, மற்றும் பலவிதமான பழங்கள் பரிமாறப்பட்டன. அனைவரும் இறைவணக்கம் சொல்லி விட்டு உணவை ருசித்துச் சாப்பிட்டோம்.

உணவுக்குப் பின்னர் அனைவருக்கும் ஒரு மணி நேரம் ஓய்வு தரப்பட்டது. மாலை நான்கு மணிக்கு அனைவருக்கும் யோகப் பயிற்சி அளிக்கப்பட்டது. யோகாசார்யா முருகன்ஜி யோகப் பயிற்சி அளித்தார். அவரிடம் யோகா பயிலும் ஹரிபிரசாத் (11வது படிக்கும் பள்ளி மாணவன்) சில கடினமான ஆசனங்களை சுலபமாகச் செய்து காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

யோகாசன வகுப்பிற்குப் பின்னர் சீர்-வளர்-சீர் திருச்செந்தில் அடிகள் (மெய்த்தவம்) பதஞ்சலி யோக சூத்திரத்தில்  இருந்து மிக மிக முக்கியமான சூத்திரங்களை அனைவருக்கும் புரியும்படியான எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக விளக்கினார். அனைவரும் ஆர்வத்துடன் குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். பலர் கேள்வி கேட்டு தங்கள் ஐயங்களை தெளிந்து கொண்டார்கள். இரவு முகாமில் தங்க வேண்டாம் எனவும், எதிரில் உள்ள வேலன் விகாஸ் பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் அனைவரும் தங்கிக் கொள்ளலாம் எனவும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடுங்குளிர், சரியான கழிப்பறை வசதி இல்லாமை, யானைகள் அலையும் பகுதி போன்ற காரணங்களால் இந்த மாற்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கிருஸ்துமஸ் விடுமுறை ஆதலால் ஹாஸ்டல் காலியாக இருந்ததாலும், இருபத்தி நான்கு மணி நேரமும் சுடுநீர் உள்பட, பாத்ரூம்-கழிப்பறை வசதியும், பாதுகாப்பான சூழ்நிலையும் என்பதினால் சென்னை, கோவை, பெங்களூரு, ஈரோடு போன்ற பல பகுதிகளில்  இருந்து வந்திருக்கும் விருந்தினர்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்கும் பொருட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது. முதல் மாடியில் தனித்தனியாக அமைந்திருந்த ஆடவர் மற்றும் பெண்கள் பகுதியில் டார்மிட்டரி அறைகள் ஒதுக்கப்பட்டன. ஹாஸ்டல் வார்டன் திரு சதீஷ் மற்றும் பள்ளித் தாளாளர்  உடன் இருந்து எங்களுக்கான வசதிகளைக் கேட்டு அன்புடன் கவனித்து வழங்கினார்கள்.

மறுநாள் காலையில் பள்ளி வளாகத்திலேயே யோகப் பயிற்சி, பின்னர் அவர்களை புளியமரத்துஷெட்டு முகாமில் இருந்து சுமார் இரண்டு கி.மீ தூரத்தில் இருந்த ரங்கசாமி மலைக்கு ஒட்டியதாக அமைந்திருந்த ரங்கசாமிகரடு என்ற பகுதியில் இருந்த மற்றொரு தோட்டத்தில் வாழைஇலைக் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முற்பகலில் கனமான உணவு ஏதும் இல்லாமல், கிட்டத்தட்ட உபவாச நிலையில் இந்த குளியலை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அனைவருக்கும்    நாளைப் பகல் போதில் உணவு வழங்கப்படமாட்டாது என்று சொல்லப்பட்டது. வாலை இலைக் குளியல் மூலம் உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கி கொள்ளலாம். வெயிலில் குறைந்த உடையுடன் தரையில் விரிக்கப்பட்ட இலையில் மல்லாக்க படுத்துக் கொண்டவுடன் உடல் முழுதும் வாழை இலையைச் சுற்றி முகம் உள்பட பார்சல் போல கட்டி விடுவார்கள். குறைந்தது அரைமணி நேரம் அதிகபட்சமாக முக்கால் மணி நேரம் அப்படியே வெய்யிலில் இருக்க வேண்டும். உடல் முழுதும் நன்றாக வியர்க்கும். அதன் பின்னர் பார்சலைப் பிரிக்கச் சொல்லி வெளியே வந்து சற்று நேரம் இளைப்பாறிய பின்னர் குளிக்க வேண்டும். அதன் பின்னர் இளநீர் வழங்கப்படும். இதுதான் நாளைய இயற்கை நலவாழ்வு நிகழ்ச்சி என்று அனைவருக்கும் விளக்கப்பட்டது.

காலை ஆறு மணிக்கு யோகப்பயிற்சி துவக்கப்படும் என்பதால் எல்லோரும் இரவு உணவினை முடித்து கொண்டு அனைவரும் தத்தம் டார்மிட்டரிக்கு செல்லும்படி வேண்டிக்கொள்ளப்பட்டோம். நானும், பிரேமும், குடந்தை ரமேஷும் மட்டுமாவது இரவு தவக்குடிலில் தங்கலாம் என்று இருந்தோம்.அதனைக் கேள்விப்பட்ட அடிகளாரும், முருகன்ஜீயும் எங்களையும் டார்மிட்டரியிலேயேதான் தங்கவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டார்கள்.

எங்களுக்கு இந்த ஏற்பாடு திருப்தி அளிக்கவில்லை. பள்ளியின் இரவுக காவலர் திரு.ஸ்டீபனிடம் இது குறித்து விசாரித்தோம். சோலார் மின்வேலியினால் தோட்டம் பாதுகாக்கப்பட்டு இருந்தாலும், சிலசமயம் வேலிக்கு அந்தப் பக்கமாக உள்ள மரங்களைச் சாய்த்து வேலியின் மேல் தள்ளி மின்தொடர்பைத் துண்டித்து விட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து விடுவது உண்டாம். அப்படி ஒரு அசம்பாவிதம் கொஞ்ச மாதங்களுக்கு முன்னர் இதே தோட்டத்தில் நடந்திருப்பதினால், முன்பின் அனுபவம் இல்லாத வெளியூர்க்காரர்களைத் தோட்டத்தில் இரவுநேரத்தில் அனைவரையும் தங்கவைப்பதில் அமைப்பாளர்களுக்கு தயக்கமும் பயமும் சங்கடமும் இருந்தது. 

மேலும் ஒரு ஒற்றை யானை இப்போது இந்தப் பகுதியில் அடிக்கடி தென்படுவதாக ஊர்மக்கள் பேசிக் கொண்டார்கள். எது (எ)ப்படி இருப்பினும் முதல் நாள் இரவின் யானைப்பிளிறல்கள் மத்தியில் உறங்கும் த்ரில்லிங் அனுபவத்தை இழந்த சோகத்தில் நாங்கள் உறங்கச் சென்றோம். 

(பகிர்வுகள் தொடரும்)


பகுதி ஆறு >>>>

வெள்ளி, 6 ஜனவரி, 2012

16. கனி இருப்ப....:படித்ததில் பிடித்தது. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

பகுதி 16.
கனி இருப்ப.. தொடர்கிறது.

இந்த தொடரில் இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக நான் படித்தவற்றை, பார்த்தவற்றை, கேட்டவற்றை பகிர்ந்து வருகிறேன். சமீபத்தில் 'இயற்கை வாழ்க்கை முறை'  எனும் தலைப்பிட்ட வலைப்பூவில் படித்த செய்திகளை நலவாழ்வியல் ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். அருமையானதொரு பதிவை வெளியிட்ட 'இயற்கை வாழ்க்கைமுறை' வலைப்பூ ஆசிரியருக்கு நன்றி.

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

இயற்கை:
இயற்கை இயற்கையாகவே இருக்கிறது.
இயற்கையில் தான் எல்லாமே இருக்கிறது.
இயற்கையாகவே அதில் எல்லாம் இருக்கிறது.
இயற்கையாகவே அது பரிணமித்தது.

இது தான் மெய்ஞ்ஞானமும்,விஞ்ஞானமும் கண்ட ஒரே ஒரு உண்மை.

அந்த இயற்கையின் பகுதிகள் தான் இந்த அண்ட சராசங்கள், பஞ்ச பூதங்கள், அதில் ஒன்றான இந்த பூமி, தாவரங்கள், அனைத்து கோடி ஜீவராசிகள், இறுதியாக தோன்றிய மனிதர்கள்.

இந்த இயற்கையில் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தே தான் இருக்கின்றன, அதன் விளைவாக எல்லாம் எப்போதும் ஒரு ஒழுங்கமைப்போடு இயங்கி வருகின்றன, இந்த ஒழுங்கமைப்பில் மாற்றம் வரும்போது தான் துன்பங்கள் ஏற்படுகின்றன.

இயற்கையின் ஒழுங்கமைப்பில் ஏற்படும் மாற்றம் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனும் இந்த உண்மையை உணராத ஒரே ஒரு இயற்கையின் வினோதமான பிராணி தான் மனிதன்.


இந்த 21 ம் நூற்றாண்டில் மனிதன் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முழுமையாக இயற்கைக்கு எதிராகவும், மாறாகவும் வாழ்ந்து வருகிறான். அதன் விளைவாக இனிமேலும் இந்த பூமி இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற அவலமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளான்.


தான் இயற்கையின் ஒரு சிறு பகுதியே என்ற உண்மையை உணராததின் காரணத்தால் இயற்கைக்கு தன்னால் இயன்ற அளவிலான தீங்குகளை இழைத்தும், தானும் துன்பப்பட்டு, இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் துன்பத்தில் ஆழ்த்தும் கொடிய செயல்களை மனிதன் செய்து வருகிறான். 


இதன் விளைவாகத் தான், பூமியை காப்பாற்ற பல போராட்டங்களும், நடவடிக்கைகளும் தேவைப்படுகின்ற ஒரு அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். இதில் என்ன வெட்கக்கேடான விஷயம் என்றால் "உலகில் தான் வாழும் வீட்டையே (பூமி) அழித்து வாழ்கிற ஒரே ஒரு அதிசய பிராணி மனிதன்" மட்டும் தான்.  இதில் மற்றொரு வியப்பிலும் வியப்பு என்ன என்றால் இந்த மனித பிறவிக்கு மட்டும் தான் பகுத்து அறிய கூடிய ஆறாவது அறிவு உள்ளது என்பது தான். “WHAT A STRANGE CREATURE MAN IS THAT HE FOULS HIS OWN NEST” –RICHARD M.NIXON


மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய் நொடிகள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சயமாக வாழ முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம்.அன்றாட வாழ்வில் இரசனையற்ற, அழகற்ற, செயற்கையான துன்பம் விளைவிக்கின்ற செயல்களை மட்டுமே செய்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வின் அர்த்தம் புரியாமலும், வாழ்வின் நோக்கம் தெரியாமலும், செயற்கையான பொருள்களின் துணையோடு வாழ்வதையே இன்பம், மகிழ்ச்சி என்ற தவறான புரிதலுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


“THE REALITY IS THAT IN THE MUCH OF THE INDUSTRIALIZED SOCIETIES, WE ARE COMPLETELY ADDICTED TO OUR COMFORTS, WE ARE A SOCIETY OF ADDICTS” – JULIA BUTTERFLY HILL


எப்போதுமே நமது மனம் ஒரு வித வெறுமையுடன் இருப்பதற்கும், பூரண மகிழ்ச்சி கிடைக்காமல் அல்லல்படுவதற்கும், என்ன கிடைத்தாலும், எப்படி வாழ்ந்தாலும் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே ஆகும்.


நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும், செயல்களும், நோக்கங்களும், பழக்க வழக்கங்களும் இயற்கைக்கு எதிரானதாக/மாறானதாக அமைந்துள்ளது. அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கு ஆணிவேர். இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு.  இதனை மறந்து/அறியாது இயற்கையை விட்டு விலகி நகரமய சூழலில் செயற்கையான பொருட்களுடன் நம் வாழ்வை அமைத்து கொண்டதே, இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு போனதற்கு காரணம்.


இயற்கை வாழ்க்கை முறை

இயற்கை எப்படி நிலம், நீர்,,வாயு, நெருப்பு.ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதோ அது போன்றே நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது...


"அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே"


இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் தேகமும் அந்த அளவு பவித்திரமானது.இதை அறிந்த நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிவாழ கற்றுக்கொண்டார்கள். அதனாலே நம் முன்னோர்களால் நோய் நொடி இல்லாமல் வாழமுடிந்தது. அந்த இயற்கையோடு இனிமையாக வாழும் கலைகளை வாழ்க்கை முறைகளாக வகுத்து வைத்தார்கள். நாமோ பகுத்தறிவு,  பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நமது முன்னோர்கள் சொல்லி வைத்த நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்றொன்றாக தொலைத்து கொண்டிருக்கிறோம்.


உலகில் உள்ள லட்சோபலட்ச உயிர்களும் இயற்கையையே ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன. அவைகள் எந்த வித மருத்துவ முறைகளோ, மருத்துவமனைகளோ, மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லாமல் நோயின்றி வாழ்கின்றன.ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை சாப்பிட்டு, உடலுழைப்பு இல்லாமல், அருந்த வேண்டியதை அருந்தாமல், கழிக்க வேண்டியதை சரிவர கழிக்காமல், உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு தானும் அவதிப்பட்டு அடுத்தவரையும் அவதிக்கு உள்ளாக்கி இயற்கைக்கு எதிராக நோய்நொடியுடன் காலம் கழிக்கிறான். இயற்கை வாழ்க்கை முறையை விடுத்து மற்ற மருத்துவ முறைகளை பின்பற்றுவதால் நாட்டில் நாளுக்கு நாள் நோய்கள் அதிகமாகின்றன. ஒரு நோயை குணப்படுத்த மருந்து உண்டால் பல புது நோய்கள் வருகின்றன. எனவே இந்த மருத்துவ முறை ஒரு பொருத்தமான தீர்வாக இருக்க முடியாது. 


குறைந்த பட்ச தேவைகள், சுகங்கள் கூட இன்றைய நிலையில் மனிதனுக்கு எட்டாக்கனியாகி விட்டது. நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த கஷ்டத்திற்கெல்லாம் மூல காரணம்.


இவையெல்லாம் இயற்கைக்கும், இயற்கை தர்மத்திற்கும் எதிராக செயல்பட்டதால் இயற்கை நமக்கு விதித்த தண்டனைகள். இந்த தண்டனையிலிருந்து வெளிப்பட இயற்கை வாழ்க்கை முறையை நம்பி சரணடைவதே வழியாகும். நல்ல வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.


நோய்கள், நோயாளிகள் அதிகமாக இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் மக்கள் இந்த உண்மையை அறிந்து கொண்டு இப்போது யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது, முளைக்கட்டிய பயறுகள் உண்பது, தண்ணீர் அதிகமாக குடிப்பது, புலால் உண்பதை நிறுத்துவது என்று பல இயற்கை முறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.


அவர்கள் எப்படி இதை அறிந்து கொண்டார்கள் என்றால், புறவாழ்க்கைத் தேவையின் உச்சத்தை அவர்கள் தொட்டு கையை சுட்டு கொண்டார்கள்.


நாம் என்னவென்றால் “இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசைப்படாதே” என்பதற்கு இணங்க நம்முடைய மூதாதையர்கள் கொடுத்த உன்னத அறிவை விட்டு விட்டு தவறான பாதையில் பயணித்து எல்லா துன்பங்களையும் வலிய வரவழைத்து கொள்கிறோம்.


இதைத் தான் நமது தேசப்பிதா தீர்க்க தரிசனமாக சொல்லி வைத்தார் அன்றே. “GOD FORBID THAT INDIA SHOULD EVER TAKE TO INDUSTRIALISM AFTER THE MANNER OF WEST ,IT WOULD STRIP THE WORLD BARE LIKE LOCUSTS” - MOHANDAS GANDHI


நோய்கள் எத்தனை? எந்த உறுப்பில் வந்திருக்கிறது? எத்தனை நாளாக இருக்கிறது என்பது இங்கு பிரச்னை அல்ல.  “எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும்”. அதனால் எரிவது என்ன என்று உணர்ந்து வாழும் வாழ்க்கை முறையை மாற்றிகொண்டால் இனிமையாக வாழலாம். எந்த நோயாக இருந்தாலும் இந்த முறையில் பரிபூரண குணம் அடையலாம். "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்கிறது குறள் மறை. அதற்கு முதலில் தேவை நம்முடைய மனமாற்றம் ஒன்றே.இவற்றிற்கெல்லாம் தீர்வு இயற்கை வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது. இயற்கையாக ஆரோக்கியத்தை கொடுக்கும் இயற்கை வாழ்க்கை முறையை விட்டு எல்லா பிரச்னைக்கும் மருந்துகளையும் வைத்தியர்களையும் தேடி அலைகிறோம். நாமிழந்த நம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை மறுபடியும் கொண்டு வர முடியாமலிருக்கிறோம், முயலாமலிருக்கிறோம். இனியாவது விழித்துக்கொண்டு நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே, நம் வீட்டிலேயே இருக்கிறது என்று அறிந்து கொண்டு மாற்றதை நோக்கி பயணிப்போம்.


"மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமற்றது". எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வோம் இனிமையாக.


நன்றி:இயற்கை வாழ்க்கை முறை(வலைப்பூ) இணைப்பு: http://iyarkaivazhkaimurai.blogspot.com

முக்கிய அறிவிப்பு: சென்னையில் இயற்கை நலவாழ்வியல் தொடர்பான ஒரு நாள் நேரடிப் பயிற்சி முகாம் வருகிற எட்டாம் தேதி (௦08-01-2012) அன்று பெருங்களத்தூர் சதானந்தபுரம் எனும் ஊரில் நடைபெற உள்ளது. இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகள் வாயிலாக நேரடிப் பயிற்சி பெற ஒரு அற்புத வாய்ப்பு. ஆர்வமுள்ள இயற்கை நலவாழ்வியல் அன்பர்கள் அந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் தொடர்பான அழைப்பிதழைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

வாழி நலம் சூழ...

பொதுநலம் கருதி வெளியிட்டவர்:

அஷ்வின்ஜி @ A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), சென்னை.
மேலும் விவரங்கள் பெற:94444171339

(தொடர்ந்து கனியும்...)

புதன், 4 ஜனவரி, 2012

4: பழனியில் நடைபெற்ற உடல் மன ஆன்மீக இயற்கை நலவாழ்வு முகாம்-ஆல்பம்.



 26-12-2012: முதல் நாள் மதிய நேரத்து இயற்கை உணவு 

 26-12-2012: முகாமில் திருச்செந்தில் அடிகள், யோகாசார்யா முருகன்.

27-12-2012: இரண்டாம் நாள் முகாமில் திருச்செந்தில் அடிகள் அருளுரை.

 27-12-2012 - இரண்டாம் நாள் முகாமில் யோகாசார்யா முருகன் பேசுகிறார்.

 28-12-2011-மூன்றாம் நாள்: வரதமாநதி அணைக்கட்டில் யோகாசார்யா முருகனுடன் ஒரு சத்சங்கம்.

28-12-2011 - நல வாழ்வு பயில வந்த அன்பர்களுடன் முகாம் அமைப்பாளர்கள். 

 29-12-2011:- நான்காம் நாள் - குதிரையாறு அணைக்கட்டில்.

குதிரையாறு அணைக்கட்டில் 
கொடைக்கானல் மலை பின்னணியில் 

 மலை அருவியை நோக்கி 
மலைப்பாதையில் நீண்ட நடைப்பயணம்.

 அருவிக்கு செல்லும் பாதையில்
கண்ணைக் கவரும் இயற்கை அழகு.

எங்களை மேல நடக்க விடாமல் செய்த 
நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு.

 அணைக்கட்டின் பின்புறமாக ஒரு பார்வை.

 நீரில் நிற்கும் ஒரு மரம்.

 போகுமிடம் வெகு தூரமில்லை.

 அடடா என்ன அழகு !!!

ஆலவிழுதுகளின் இடையே பிரேம்.

 எங்கெங்கு காணினும் பசுமை பசுமை பசுமை....

பசுமை நிறைந்த காட்சி.....

 நடக்க நடக்க நீளும் பாதை.......

 எங்களோட வராத நீங்க எல்லாரும் 
இதை நிச்சயமா மிஸ் பண்ணிட்டீங்க என்கிறாரா பிரேம்?

அருவியில் நீர் விழும் அழகு....

பொங்கிப் பிரவகிக்கும் நீரருவி.....

 மெய்யாவே ரொம்ப சில்லுன்னு இருக்கு!!!! என்கிறார் பிரேம்.

வாய்ப்புக்கு இதய நன்றி இறைவா 
என்கிறார் அஷ்வின்ஜி.

இந்தக் குளியலை மறக்க முடியுமா? 
(திருமதி தமிழரசி, திருமதி பாஸ்கர்)

 ஆனந்தக் குளியலில் பிரேம்.

 30-12-2012: ஐந்தாம் நாள்.அடிகளாரின் இல்லத்தில் 
பழனி ஆண்டவருக்கு அபிஷேகம்.

 அருள் மிகு பழனி ஆண்டவர்.

 திருநீறு அபிஷேகத்தில் திருமுருகன்.

அருகே சிவலிங்கத்துடன் 
ராஜ அலங்காரத்துடன் காட்சி தரும் பழனி ஆண்டவர்.

 ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பழனி ஆண்டவர்.

 அடிகளாரின் இல்லத்தில் அன்பர்கள் சத்சங்கம்.

 30-12-2011: நாள் ஐந்து: நிறைவு நாளில் யோகாசாரியா இல்லத்தில்.

 முகாம் நிறைவு நாளில், அன்பர்கள் அனுபவங்களை 
கவனத்துடன் கேட்கிறார் அடிகளார்.

 அடிகளார் சிந்தனையில் அடுத்த முகாம் எப்போது?.

யோகாசார்யா முருகன்: முகாம்தானே?  வரும் மார்ச்சில் வச்சிடலாம்.!.

முகாமின் அனுபவங்களை அடுத்த இரு இடுகைகளில் பகிர்ந்து நிறைவு செய்ய உள்ளேன். எனது நண்பர் திரு.கே.நாகராஜனின் அனுபவப் பகிர்வினை ஆங்கிலத்தில் தொகுத்து உள்ளார். அதனை அப்படியே ஆங்கிலத்தில் இங்கே இடுவது சாலப் பொருந்தும் என எண்ணுகிறேன். தமிழாக்கம் செய்தால் அவரது உணர்வுகள் சரியாக வெளிப்படாமல் போய்விடக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

பொறுமையுடன் படித்துவரும் அன்பர்களுக்கு இதய நிறை நன்றி மற்றும்  பணிவான வணக்கங்களுடன்.

(பகிர்வுகள் தொடரும்)

பகுதி ஐந்து >>>>>

பகுதி மூன்று: பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்

3. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்

பகுதி மூன்று:

26-12-2011 (திங்கள் கிழமை) முதல் நாள் நிகழ்வுகள். 

என்னுடன் அன்பர்கள் ப்ரேம், பன்னீர்செல்வம் மற்றும் ரமேஷ் அதிகாலை எழுந்து குளித்து தயாராகி சுக்குக் கஷாயம் தயாரித்துக் கொண்டிருக்கையில் மற்ற அன்பர்கள் ஒவ்வொருவராக முகாமுக்கு வந்து சேர்ந்தார்கள். மிகச் சரியாக காலை ஏழு மணிக்கு திருச்செந்தில் சுவாமிகள் ஒரு யாகத்தினை வளர்த்து அருளாசி வழங்கி இந்த முகாமை துவங்கி வைத்தார்கள். இந்த வைபவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதமும், சூடான சுக்கு பானகமும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் புளியமரத்து சேட்டு முகாமில் இருந்து அனைவரும் பழனி நகருக்கு காரிலும், இருசக்கர வாகனங்களிலும் அழைத்து செல்லப்பட்டனர். காலை பத்து மணி அளவில் பழனி நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள சாயிசதன் அரங்கில் முகாம் தொடக்க விழா துவங்கியது.விழாவிற்கு வந்திருந்தோரை யோகாசார்யா முருகன் அவர்கள் வரவேற்று பேசிய பின் பாரம்பரிய முறைப்படி குத்து விளக்கேற்றி முகாம் துவக்கி வைக்கப்பட்டது.திரு.சிவகுமார்,(பழனி நகராட்சி ஆணையர்), திரு.ரமேஷ்(உரிமையாளர், கற்பகம் ஜுவல்லரி), அவரது துணைவியார் திருமதி.ரமேஷ்,  திரு.மணி (உரிமையாளர், தமிழ் நாடு இரும்பு வணிகம்) அவர்கள், திருமதி மணி ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்கள்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று பேசிய பழனி நகராட்சி ஆணையர் திரு சிவகுமார், உடல், மன, ஆன்மீக நலத்தின் சிறப்பம்சங்களைப் பற்றியும்,இந்த காலகட்டத்தில் ஒவ்வொருவரும் நலமாக வாழ வேண்டிய கட்டாயத்தைப் பற்றியும், யோகா, ஆன்மிகம், இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் எவ்வாறு இதற்கு உதவுகின்றன என்பது பற்றி பேசி முகாம் வெற்றியடைய வாழ்த்தினார்.

பிரமுகர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. தவத்திரு.திருச்செந்தில் அடிகள் மெய்த்தவம் பற்றி அருளுரை ஆற்றி முகாம் சிறப்பாக அமைய அருளாசி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து 'இயற்கைச் செம்மல்' தஞ்சை கோ.சித்தர் (இயற்கை வேளாண்விஞ்ஞானி) முக்கிய உரையாற்றினார். இன்றைய காலகட்டத்தின் மக்களும், அரசுகளும் இயற்கை நலவாழ்வியல் பற்றி கவலைப்படாமல் தங்கள் உடல்நலம் மட்டுமின்றி, சுற்றுப் புற சூழல்களையும் எந்த அளவுக்கு மாசுபடுத்தி கொண்டிருக்கிறார்கள், மரபணு மாற்றத்தினால் விளைவிக்கப்படும் காய், கனிகளின் தீய அம்சங்கள், மற்றும் இயற்கை உணவின் நன்மைகளைப் பற்றியும், இயற்கை நலவாழ்வியல் பற்றியும் அவர் ஆற்றிய பேருரை விழிப்புணர்வூட்டுவதாக அமைந்தது. பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சித்தர் அனைவரது ஐயங்களுக்கு பதிலளித்தார்.

நன்றி உரைக்குப் பின்னர் தொடக்க விழா நிறைவடைந்தது. மதிய உணவுக்காக அனைவரும் மீண்டும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இயற்கை உணவினை மதிய உணவாக அருந்தியதும் அனைவரும் சற்று நேரம் ஓய்வு எடுத்தோம்.
அடுத்த பதிவு >>>>>
(பகிர்வுகள் தொடரும்)

திங்கள், 2 ஜனவரி, 2012

சென்னையில் ஒரு நாள் இயற்கை மருத்துவ முகாம்.

ஒருநாள் இயற்கை மருத்துவ முகாம்.

சென்னையில் ஒரு நாள் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இயற்கை மருத்துவத்தில் ஆர்வமுள்ள அன்பர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

நாள்: 08.01.2012 (ஞாயிற்றுக் கிழமை)
இடம்: சதானந்தபுரம் (பெருங்களத்தூர்), சென்னை.

கால அட்டவணை:(காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை)
07.00 to 07.15 : பதிவு.
07.15 to 08.30 : யோகாசனம், பிராணாயாமம்.
08.30 to 09.00 : ஜலநேத்தி.
09.00 to 09.15 : பூசனிச் சாறு.
09.15 to 10.15 : வகுப்பு.
10.15 to 10.30 : எலுமிச்சைச் சாறு.
10.30 to 12.00 : வாழை இலைக் குளியல்/மண் குளியல்.
12.00 to 13.00 : இயற்கை உணவுத் தயாரிப்பு.
13.00 to 15.00 : இயற்கை உணவு உண்ணுதல் பயிற்சி / ஓய்வு.
15.00 to 15.50 : வகுப்பு.
15.50 to 16.00 : சுக்குக் காப்பி.
16.00 to 17.00 : யோகாசனம்.
17.00 : நிறைவு.

இயற்கை உணவு அட்டவணை:
(அடுப்பில்லா சமையல் முறையில் தயாரித்தது)
முளை கட்டிய பச்சைப் பயிறு. 
காய்கறிப் பசுங்கலவை.
பீட்ரூட் ஊறுகாய்.
காலி ஃப்ளவர் பசும்பொரியல்.
வெண்பூசனிக் கூட்டு.
மல்லி அவல்.
தேங்காய்ச் சட்னி.
பழக்கலவை.

கொண்டு வரவேண்டியவை.
யோகா செய்ய ஏற்ற உடை.
துண்டு - 2
விரிப்பு.
மாற்று உடை.

நன்கொடை: ரூ.200/-

தொடர்பு முகவரி: 
திரு.இளம்வழுதி,
123/5, காந்தி ரோடு,
நியூ பெருங்களத்தூர் (வழி)
சென்னை 600063
கைபேசி எண்: 9444447922 

முகாமில் இருபது பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  எனவே உடனடியாக உங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

2. பழனி யோகா-இயற்கை வாழ்வியல் முகாம் அனுபவப் பகிர்வுகள்.

பகுதி இரண்டு: பழனி யோகா-இயற்கை வாழ்வியல் முகாம் அனுபவப் பகிர்வுகள்.

யோகா, ஆன்மிகம் இணைந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் ஒன்றினை கடந்த வாரம் (26-12-2011 to 30-12-02011) பழனியில் வெற்றிகரமாக நிகழ்ந்தது.  இந்த முகாமில் பங்கேற்ற அன்பர்கள் பெரிதும் பயன்பெற்று மகிழ்ந்தார்கள். 

பழனியை சேர்ந்த யோகாசார்யா திரு.ஆர்.முருகன்(யோக பூரண வித்யா)அவர்களும், தவத்திரு.திருச்செந்தில் அடிகள் (மெய்த்தவம்) அவர்களும், அருட்கொடையாளர் திரு.மணி (தமிழ்நாடு இரும்பு வணிக உரிமையாளர்) அவர்களும், இந்த முகாம் வெற்றிகரமாக நடைபெற   பெரிதும் உதவினர். 

இந்த முகாமில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து: 
  1. திரு.A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), இயற்கை நலவாழ்வியல் ஆர்வலர் மற்றும் முகாம் அமைப்பாளர்.
  2. திரு.B..பிரேம்குமார், P.G.Dip(Yoga), யோகா ஆசிரியர், இயற்கை நலவாழ்வியல் ஆர்வலர் மற்றும் தொழிலதிபர்.
  3. திரு.V..பன்னீர்செல்வம், (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்)
  4. திரு.K. நாகராஜன், ஆன்மீக செல்வர்.
  5. திரு.N.பாஸ்கர், (ஐ.டி.நுட்பவியல்,சோலாரிஸ் குழுமம், சென்னை)
பெங்களூருவில் இருந்து:
  1. திரு.K. நச்சினார்க்கினியன், மென்பொருள் பொறியாளர்.
  2. திருமதி ராதா இனியன்
  3. அவர்களது மகள் செல்வி. நவீனா (பள்ளி மாணவி)
  4. அவர்களது உறவினர் செல்வி. எஸ்.அபிதா. (CA பயிலுனர்)
கோவையில் இருந்து:
  1. திருமதி.பரிமளாதேவி (இல்லத்தரசி)
பழனியில் இருந்து 
  1. திரு.B.பாஸ்கரன், (BSNL), பழனி
  2. செல்வன்.ஹரி பிரசாத், (பள்ளி மாணவர்)
  3. திருமதி.செல்லத்தாயி, தலைமை ஆசிரியை, பழனி,
  4. திருமதி.யோகமணி (இல்லத்தரசி)
ஈரோடு சிவகிரியில் இருந்து:
  1. திருமதி.M.தமிழ்ச்செல்வி, யோகா ஆசிரியர்.
மற்றும் பழனி நகரில் இருந்து பல அன்பர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள்.

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் பன்னிரண்டாவது கி.மீ தொலைவில் புளியமரத்து ஷெட் என்கிற ஊரில் தமிழ்நாடு இரும்பு வணிகம் நிறுவன அதிபர் திரு.மணி அவர்களுக்கு சொந்தமான தோப்பில் இருக்கும் உள்ள ஒரு ஆன்மீக மையத்தில் முகாம் அமைக்கப்பட்டது. தோட்ட உரிமையாளர் திரு.மணி அவர்கள் நேரடியாக வந்திருந்து அனைத்து வசதிகளும் சரியாக செய்யப்படிருக்கிறதா என்று மேற்பார்வை இட்டார்கள்.

டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி அன்றே அன்பர்கள் ஒவ்வொருவராக பழனிக்கு வந்து சேர்ந்த வண்ணம் இருந்தார்கள். அவர்களை யோகாச்சார்யா முருகன் அவர்கள் வரவேற்று லட்சுமிபுரத்தில் உள்ள அவரது யோகா பயிற்சி மையத்தில் தங்க வைத்தார்கள். 

நானும், பிரேமும் இயற்கை உணவு தயாரிப்பாளர் திரு.ஆ.சா.ரமேஷ் (கும்பகோணம்) உடன் சேர்ந்து கொண்டு ஐந்து நாட்கள் முகாமுக்குத் தேவையான பொருட்களை ஞாயிற்றுக்கிழமை அன்று திரட்டினோம். சென்னை அன்பர் திரு.பன்னீர்செல்வம் எங்களுடன் உதவியாக சேர்ந்து கொண்டார்.

அனைத்து பொருட்களையும், ஒரு மினி லாரியில் ஏற்றிக் கொண்டு இரவு சுமார் ஒன்பது அளவில் முகாமுக்கு கொண்டு சென்றோம். அன்றைய இரவு முகாமில் தங்கினோம். நாங்கள் தங்கி இருந்த இடம் யானைகள் கடக்கும் பாதையை ஒட்டி இருப்பதினால் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தது.

கொடைக்கானல் மலைச்சாரலில் அமைந்த இந்தத் தோட்டத்தில் ஒரு எளிமையான அமைதியான தவக்குடில் அமைந்துள்ளது. பல தவ சிரேஷ்டர்கள் இங்கே ஆண்டுக் கணக்கில் தங்கி தவம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, எங்களுக்கும் இங்கே தங்க வாய்ப்பு கிடைத்திருப்பதே பெரிய பாக்கியம் என்று எண்ணி மகிழ்ந்தோம்.

கீழே பல ஜமுக்காளங்களை விரித்தும், அதில் படுத்து பல போர்வைகளைப் போர்த்திக் கொண்டும் உறங்க முயற்சித்த எங்களை தூங்க விடாமல் சிலிர்க்க வைக்கும் குளிரில் நாங்கள் அன்று இரவுப் பொழுதினைக் கழித்தோம்.  நள்ளிரவு நேரத்தில் யானைகளின் பிளிறல்கள் எங்கள் காதில் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தன. அது மட்டுமின்றி நள்ளிரவின் அமைதியை குலைக்கும் இரவுப் பூச்சிகளின் பல்வேறுவிதமான சப்தங்களின் மத்தியில் நாங்கள் அந்த ஞாயிற்றுக் கிழமையின் இரவுப் பொழுது ஒருவாறாகாக்  கரைந்தது.  
(பகிர்வுகள் தொடரும்)


அடுத்த பதிவுக்கு 

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

1. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம் அனுபவ பகிர்வுகள்.

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

யோக பூர்ணா வித்யா அமைப்பும், மெய்த்தவம் அமைப்பும் இணைந்து பழனியில் நடத்திய ஐந்து நாள் யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம் (26-12-2011 to 30-12-2011) வெற்றிகரமாக நிறைவேறியது. 

அன்பர்கள் பார்வைக்கு சில புகைப்படங்களை கீழே தந்திருக்கிறேன்.

தவக் குடில்
(புளியமரத்து ஷெட்டு, பழனி-கொடைக்கானல் சாலை) 

 மெய்த்தவ திருச்செந்தில் அடிகளார் நிகழ்த்திய ஹோமம்.
யோகாச்சார்யா முருகன் (இரு கைகளும் கூப்பி இருப்பவர்)
முகாம் தொடக்க வைபவம்.

தவக்குடில் உரிமையாளர், 
தமிழ் நாடு இரும்பு வணிக அதிபர் திரு.மணி 
(வெள்ளை வேட்டி சட்டையுடன் இருப்பவர் )

 பழனி சாய் சதனில் முகாம் தொடக்க விழா.

மெயத்தவம் திருச்செந்தில் அடிகளார் 
அருளுரை வழங்குகிறார்.

முகாம் அனுபவப் பகிர்வுகளை நாளை முதல் படங்களுடன் தொடராக தரவிருக்கிறேன். முகாமில் கலந்து கொண்ட அன்பர்களின் எண்ணங்களையும் இறுதியில் பதிய இருக்கிறேன். 

தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன். இந்த முகாம் போலவே அடிக்கடி நடைபெற உள்ள முகாம்களை பற்றி "வாழி நலம் சூழ.." வலைப்பூவில் தொடர் பதிவுகளை வெளியிட உள்ளேன். 

அன்பர்கள் தங்கள் பகுதியில் நடை பெறும் முகாம் பற்றிய அறிவிப்புகளை, பதிவுகளை இங்கே வெளியிட அழைக்கிறேன். நீங்கள் விரும்பினால் உங்கள் பகுதியில் வந்து இதுபோன்ற முகாம் நடத்தித்தர நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான விவரங்களை எனது மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.
(பகிர்தல் தொடரும்)