திங்கள், 3 டிசம்பர், 2012

யோக நலமே வாழ்வின் வளம் - சங்கப்ரக்ஷாலன க்ரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாம்..



நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, ஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக  அஜீரணம், வாயு உபத்திரவம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்(அசிடிடி) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன. 

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோக வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும். 

யோகம் என்ற சொல் பல படிநிலைகளை கொண்டது. அஷ்டாங்க ஆசனம் என்று எட்டு அங்கங்களை கொண்டது. வெறும் ஆசனங்களை செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பிராணாயமம் மட்டுமே செய்வது அல்லது ஒரு தியான வகையை தொடர்ந்து செய்வது போன்றவை சிறப்பான பலன்களைத் தருவதில்லை. 

ஆசனம், பிராணாயாமம், பந்தம், கிரியை, முத்திரை என்று பல முறைகள் உள்ளன. இவற்றில் நல்ல பயிற்சி பெற்ற ஒருவர் செய்யும் தியானம் நல்ல பலன்களைத் தரும்.

முறையாக குருமுகமாக யோகாசனங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள், மேற்கண்ட முறைகளைப் பற்றியும், க்ரியாக்கள் எனப்படும் சுத்தம் செய்யும் வழி வகைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடம்பினுக்குள்ளே அமைந்திருக்கும் கருவிகளை சுத்தம் செய்ய க்ரியாக்கள் பெருமளவில் பயன்படுகின்றன.

கிரியாக்கள் பல உண்டு: ஜல நேத்தி, சூத்திர நேத்தி, சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா (லகு சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா), வாமன தவுத்தி (குஞ்சால் க்ரியா), பஸ்தி கிரியா, கபாலபாதி, த்ராடகா, அக்னிசாரக்ரியா என பலவகையான கிரியாக்கள் உள்ளன.

இவற்றை நன்கு கற்றுத் தேர்ந்த யோகா மாஸ்டர் மூலமாக பயில்வதே நல்லது.

எல்லோரும் எளிமையாக செய்து பயன் பெற ஜலநேத்தி கிரியா உதவுகிறது. ஜலநேத்தி பற்றி அறிய இங்கே சொடுக்கவும். அதைப்போலவே தங்கும் மலத்தால் ஏற்படும் தீமைகளை களைய அஹிம்சா எனிமா பயன்படுகிறது. அதைப்பற்றிய பதிவு இந்த தளத்தில் முன்பு வெளியானது. அஹிம்சா எனிமா பற்றிய விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.  உடலை சுத்தப் படுத்தி, திரி தோஷங்கள் (வாத, பித்த, கபம்) சரியான விகிதத்தில் உடலில் இயங்கிட சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் பழங்காலத்திய யோகியர் வாழ்க்கை முறை உதவுகிறது.

குடலைக் கழுவி உடலை வளர் என்னும் முதுமொழியின் பயிற்சி வடிவமே சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா எனலாம்.

இரைப்பை, (சிறு-பெருங்) குடல்களை சுத்தப் படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், இரத்த சுத்திகரிப்புக்கும், இந்த கிரியா பயன்படுகிறது.

எளிமையான லகு சங்கப் பிரக்ஷாலனா செய்முறை:

காலையில் உணவு உண்பதற்கு முன்னதாக, தண்ணீர் கூட அருந்தாமல் வெறும் வயிற்றில் இந்த கிரியாவை செய்ய வேண்டும்.

உப்புக் கரைந்த இளம் சூடான தண்ணீரை இரண்டு கப்புக்களை குடித்து விட்டு, கீழ்க்கண்ட ஆசனங்களை செய்ய வேண்டும்:

தாடாசனம், திர்யக தாடாசனம், கடி சக்ராசனம், திர்யக புஜங்காசனம், உதாரகர்ஷானாசனா போன்ற ஆசனகளை செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு இந்த ஆசனங்களை செய்தல். மற்றும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு, இந்த ஆசனங்களை செய்தல். அதாவது மூன்று முறை செய்தல். பின்னர் குடித்த தண்ணீரை வெளியற்ற வேண்டும். இதற்கு சில கிரியாக்கள் உள்ளன.

முன்பே குறிப்பிட்டபடி தேர்ந்த யோகா மாஸ்டரின் உதவியுடன் இந்த கிரியாவை செய்தல் வேண்டும்.

ஒரு இனிய செய்தி:

இம்மாதம் (அதாவது டிசம்பர் இரண்டாயிரத்துப் பன்னிரண்டு) இருபத்தேழு, இருபத்தெட்டு, இருபத்தொன்பது, முப்பது  தேதிகளில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ கயிலை மாமுனிவர் கலையரங்கத்தில் நான்கு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமினை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.

நான்கு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். முக்கியமாக பூரண சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் முழு வயிறு மற்றும் குடல் சுத்திகரணப் பயிற்சி இங்கே சொல்லித் தரப்படும். ஆர்வம் உள்ளவர்கள் சங்கப்ரக்ஷாலனக் கிரியாவைக் கற்றுக் கொள்ளலாம்இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள யோகியர்களும், யோகினிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள் :27-12-2012 (பிற்பகல் இரண்டு மணிக்கு)
முகாம் நிறைவடையும் நாள்: 30-12-2012 (மாலை நான்கு மணிக்கு)

இடம்: குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளி, 
திருப்பனந்தாள் - 612504, 
தஞ்சை மாவட்டம்.

முகாம் கட்டணம்: ரூ.1000 (ஆயிரம்) மட்டுமே.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்பது, முப்பத்துநான்கு, நாற்பத்துநான்கு, இருபத்தேழு, அறுபத்துநான்கு, இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு திசம்பர் திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முகாம் பற்றிய விவரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.

திரு.இராமலிங்கஅம் அவர்கள்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
கைபேசி: 9486768930 
இல்லம்: 0435-2472816

வாழி நலம் சூழ...