சனி, 14 ஜனவரி, 2012

வாழி நலம் சூழ... பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.


பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.


எண்ணம் யாவிலும் நெஞ்சினித்திட,
பேசிடும் சொற்களில் நாவினித்திட,
செயல்கள் தோறும் இனிமை விளைந்திட,

இனி வரும் நாளெல்லாம் 
எல்லோர் வாழ்விலும் நனி வளம் பெருகிட,
பொங்கும் மங்கலம் என்றும் தங்கிட,
என்னாணை அம்பலத்தான்
இன்னருள் வேண்டி யான்
வணங்குவன் நிதமும். 

வாழி நலம் சூழ...

' அன்பே சிவம்' அஷ்வின்ஜி.
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

புதன், 11 ஜனவரி, 2012

8. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - இரண்டாம் நாள் அனுபவப் பகிர்வுகள்

பழனி முகாம் அனுபவப் பகிர்வுகள்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் (தொடர்கிறது)

வாழை இலைக்குளியலை எடுத்து முன்பெப்போதுமில்லாத வகையில் புத்துணர்வு பெற்ற மகிழ்ச்சியுடன் அவரவர் அறைக்குச் சென்று உடை மாற்றல், சற்றுநேர ஆசுவாசம் என சுதாரித்துக் கொள்ளச் சென்றார்கள். சத்சங்க நிகழ்வுக்காக சுமார் ஐந்தரை மணியளவில் அனைவரும் பள்ளியின் பிரார்த்தனை ஹாலில் சத்சங்கம் ஒன்றிற்காக வந்து குழுமும்படி சொல்லப்பட்டது. நிகழ்வுக்கு முன்னதாக சிறிது நேரத்தை சேமித்துக் கொண்ட சில அன்பர்கள் விளையாட்டு மைதானத்தில் வாலிபால், கிரிக்கெட்டு போன்ற விளையாட்டுக்களை ஆடி மகிழ்ந்தார்கள்.

சதசங்கத்துக்கு அன்பர்கள் குழுமியதும் பேசிய தவத்திரு.சின்னசாமி, 'பிராண-தத்துவம்' எனும் தலைப்பில் பேசி செயல்முறையாக செய்துகாட்டி விளக்கம் தந்தார்கள். மிகச் சர்வசாதாரணமாக தாயுமானவர் பாடல்களும், திருமந்திரமும் அவரிடம் இருந்து வெளிப்பட்டதும் இன்றி அவற்றுக்கேற்ற பொருள் விளக்கமும் தந்தார்.

பிராணாயமத்தில் ஒரு வகையான கும்பகப் பிராணாயமத்தை அவர் அனாயாசமாக எங்களுக்குச் செய்து காட்டினார். மூச்சை உள்ளிழுத்து வெகுநேரம் வெளிவிடாமல் நிறுத்தும் அந்தர்-கும்பகம் என்ற பிராணாயாமத்தை இரண்டு நிமிடங்கள் வரை நிறுத்தியும், பின்னர் மூச்சை வெளியேற்றி விட்டு பகிர்-கும்பகம் எனும் மூச்சில்லாமல் இருக்கும் நிலையில் இரண்டு நிமிடங்களும் இருந்து காட்டி அனைவரையும் வியப்புக்குள் ஆழ்த்தினார். வாசியோகத்தைப் பற்றி நிறையப் படித்திருக்கும், பலருக்கு இந்த நேரடி அனுபவம் களிப்பூட்டுவதாக இருந்தது.

புளியமரத்து ஷெட்டு தவக்குடிலில் இரண்டு ஆண்டுகள் தனிமைத் தவம் இருந்து இந்த பிராணாயாமச் சாதனையை பயின்றதாக தெரிவித்தார். இதுவரை தனக்கு எந்தவிதமான நோயும் வந்ததில்லை,எனவே எந்தவிதமான வைத்தியமும் எடுத்துக் கொள்ள நேர்ந்ததில்லை என்று கூறி அனைவரையும் அசரவைத்தார் அந்த எழுபத்தைந்து வயது இளைஞர்.

இந்த பெரியவருடன் எங்களுக்கு தேடக் கிடைக்காத ஒரு அற்புதமான சத்சங்கம் நிறைவடைந்ததும், 'மெய்த்தவம்' திருச்செந்தில் அடிகள் பிரம்மசூத்திரத்தில் இருந்து சில முக்கிய பகுதிகளை அருமையாக விவரித்தார். அன்பர்களின் ஐயம் தெளிதலுக்குப் பின்னர் இரண்டாம் நாள் பயிற்சி நிறைவுக்கு வந்தது.

முகாமின் மூன்றாம் தினமான நாளைக்கு   கொடைக்கானலுக்கு இன்பச்செலவு செல்வதாக திட்டம் இருந்தது. கொடைக்கானலில் குளிர் அதிகம் என்பதால் அந்த பயணத்தை ரத்து செய்து விடலாம் என யோகா.முருகன்ஜி யோசனை சொன்னார். பெருவாரியான அன்பர்கள் இந்த முடிவினை ஒப்புக்கொண்ட போதிலும் சிலருக்கு இந்த எதிர்பாராத முடிவு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. எனினும் சூழ்நிலையை அனுசரித்து கொடைக்கானல் பயணத்தை ரத்து செய்ய அனைவரும் ஏகமனதாக ஒப்புக் கொண்டார்கள்.

அதற்கு மாற்று ஏற்பாடாக நாளைக் காலையில் அனைவரும் வரதமாநதி அணைக்கு செல்வது எனவும் அங்கு சத்சங்கம் மற்றும் தியானப் பயிற்சியை செய்து விட்டு, முகாமுக்குத் திரும்பி மதிய உணவுக்குப் பின்னர் பழனிக்கு சென்று மலைக் கோவில் மற்றுமுள்ள இதர கோவில்களைச் சுற்றிப் பார்ப்பது என்று முடிவானது.

காலை யோகப் பயிற்சிகளை வழக்கப்படி பள்ளி வளாகத்தில் செய்து முடித்த பின்னர் வரதமாநதி அணைக்கட்டுக்கு செல்வது என்று முடிவானது.அன்றிரவு உணவாக எல்லோருக்கும் அவல், பேரீச்சை மற்றும் பலவிதமான பழங்கள் வழங்கப்பட்டன. இரவு உணவுக்குப் பின்னர் அனைவரும் உறங்கச் சென்றோம். சென்னை இயற்கைப்பிரியனும், பழனி BSNL-பாஸ்கரும் அன்றிரவு எங்களுடன் டார்மிட்டரியில் தங்கினர்.
(பகிர்வுகள் தொடரும்)

7. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - இரண்டாம் நாள் அனுபவப் பகிர்வுகள்


பழனி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் (தொடர்ச்சி)

நேரம்: முற்பகல் நேரம். 
இடம்: ரங்கசாமி கரடு (பழனி-கொடைக்கானல் சாலை)  
நிகழ்வு: வாழை இலைக குளியல் 

ரங்கசாமிகரட்டில் உள்ள தோட்டத்திலும் ஒரு அழகான தவக்குடில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இரும்பு வணிகம் உரிமையாளர் திரு.மணி அவர்களது தந்தை தவத்திரு.சின்னசாமி அவர்கள் 75 வயது நிரம்பிய இளைஞர். கடந்த 25-ஆண்டுகளாக இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறார். இவர் திருப்பராய்த்துறை தபோவனம் சுவாமி சித்பவானந்தாவிடம் ஆன்மிகம், வேதாந்தம் பயின்றவர். 
தவத்திரு.சின்னசாமி ஐயா 
(நடுவில் அமர்ந்திருப்பவர்)

பிராண தத்துவம் என்ற தலைப்பில் எங்களுக்கு தவத்திரு.சின்னசாமி ஐயா அனுபவ உரை ஒன்றினை இன்று மாலை வழங்கிட இருக்கிறார். இது போன்ற பல இயற்கை நலவாழ்வியல் முகாம்களை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தின் முன்னோடி இயற்கை நலவாழ்வியல் அறிஞர்களில் ஒருவரான தவத்திரு.மு.இராமகிருஷ்ணன் அவர்களைக் கொண்டு பழனி கொடைக்கானல் மலைச்சாரலில் தேக்கந்தோட்டம் எனும் இடத்தில் முகாம் நடத்திய அனுபவசாலியான இவர் இப்போது தேக்கந்தோட்டத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதினால் அந்த இடத்தில் ஏற்பாடு செய்யஇயலவில்லை என எங்களிடம் கூறினார்.

ரங்கசாமி கரடு எனப்படும் இந்த இடம் ரங்கசாமி மலைச்சாரலில் உள்ள ஒரு இடம். ரங்கசாமி மலையின் உச்சியில் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. இந்த முறை எங்கள் பயணத் திட்டத்தில் இந்த மலைக் கோவில் இடம் பெறவில்லை. காலையில் புறப்பட்டால் மாலை தான் திரும்பி வர இயலும். கொஞ்சம் நெட்டுக் குத்தான கரடு முரடான மலைப்பாதை என்பதால் இந்த இடம் தேர்வாகவில்லை. அடுத்த முக்கிய காரணம், காட்டு யானைகளில் நடமாட்டம் சமீப காலமாக இந்த மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளது. 

இவரது தோட்டம் சற்று உயர்ந்த பகுதியில் இருக்கிறது. தவக்குடிலை தோட்டத்திலயே மிகவும் உயர்ந்த பகுதியில் அமைத்திருக்கிறார் திரு.சின்னசாமி ஐயா. இந்த உயர்ந்த பகுதியில் இருந்து பார்த்தால் பழனி மலை தெளிவாகத் தெரியும். அப்படியே வலதுபுறம் பார்வையிடும் போது நான்கு கி.மீ தொலைவில் உள்ள வரதமாதேவி அணைக்கட்டு தெளிவாகத் தெரியும். அதேபோல அணைக்கட்டில் இருந்து பார்த்தால் இந்தத் தவக்குடில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்தத் தோட்டத்தில் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. மலையை ஒட்டிய மின்வேலிக்கருகே ஒரு பெரிய கல்லாலமரம் அமைந்திருக்கிறது. இந்தக் கல்லாலின் அடியில் மிக விரைவில் ஒரு தட்சிணாமூர்த்தி திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருப்பதாக திரு.மணி (திரு.சின்னசாமி அவர்களின் மகன்)அவர்கள் ஞாயிறு அன்றே இந்த இடத்தை பார்வையிடச் சென்ற சமயத்தில் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த தோட்டத்தைப் போலவே எங்களது முகாமை ஒட்டிய ஊரான அண்ணா நகர் என்ற இடத்திலும் ஒரு தோட்டம் இருக்கிறது. அங்கேயும் ஒரு தவக்குடில் அமைந்துள்ளது. 

அண்ணா நகர் தோட்டத்தில் உள்ள மாமரங்கள் சூழ்ந்த தவக்குடில். 

இந்த இடத்தில்தான் முதலில் எங்களுக்கான முகாம் நடத்துவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.அடர்ந்த மாமரத் தோப்பின் நடுவில் ஒரு அழகிய  தவக்குடில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு குளியலறையும், கழிப்பறையும் கட்ட ஆரம்பித்த நிலையில் முகாம் துவங்குவதற்கு முன்னர் முடிக்கப்படாமல் இருப்பதினால் (காரணம் வீடு கட்டும் ஆட்கள் பற்றாக்குறை!) வேறு வழியின்றி முகாம் இடம் தற்போதைய இடமான புளியந்தோப்புஷெட்டுக்கு மாற்றப்பட்டதாம்.

யோகாச்சாரியாவுடன் நானும், நண்பர் ப்ரேமும் ஞாயிற்றுக்கிழமை அன்றே மூன்று தோட்டங்களையும் பார்வையிட்டோம்.வெள்ளையடித்தல், சிதைந்து போன இடங்களில் சிமென்ட் பூசுதல், மின் இணைப்புகள், குளிப்பறை, கழிப்பறைகளில் குழாய் வசதிகள் செய்தல், உடைந்திருந்த கதவுகளை சீரமைத்தல், அன்பர்கள் அமர வசதியாக மேடும் பள்ளமுமாக இருந்த இடத்தை சமன்படுத்துதல், செடிகொடிகளை அகற்றி சமநிலைப்படுத்தல் என்று பல உட்கட்டமைப்பு வேலைகளை தோட்ட உரிமையாளர் திரு.மணி அவர்கள் நேரடியாக ஆட்களை பார்வையிட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம்.

ஞாயிறு காலையில் புளியமரத்து ஷெட்டு முகாமுக்கு விஜயம்.
உரிமையாளர் திரு.மணியுடன் பிரேமும், நானும்.

 முகாமின் சூழல். மரகதப் பச்சையாய் புல்வெளிகள்.

 புளிய மரத்து ஷெட்டு முகாமில் உள்ள கிணற்றுக்கருகில் யோகாச்சாரியாவுடன்..

யோகாச்சாரியா, நண்பர் பிரேம்குமார் உடன்

புளியமரத்து ஷெட்டு தவக்குடிலில் 
ஞாயிறு அன்று நடந்த வேலைகள்.

தனியான ஒரு கொட்டகை போடப்பட்டு கீழே காயர் விரிப்பும் அதற்கு மேலே பெரிய கல்யாண ஜமுக்காளங்களும் போடப்பட்டு குழல் விளக்குகள் பொருத்தப்பட்டு திருவிழாக் கோலமாக புளியமரத்துஷெட்டு தோட்டத்தை மாற்றிக் கொண்டிருந்தார்கள். இதற்கான பெரும் பொருட்செலவுகளை திரு.மணி அவர்களே ஏற்றுக் கொண்டு இந்த இடத்தை தயார் செய்து கொடுத்தார் என்பதை நன்றியறிதலோடு நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று திரு.மணி அவர்களை போலவே அவரது தந்தை தவத்திரு.சின்னசாமி ஐயா அவர்கள் இன்று (செவ்வாய்) ரங்கசாமிகரடு தோட்டத்துக்கு முன்னரே சென்று குளிக்கத் தண்ணீர் வசதி போன்றவற்றை முன்னேற்பாடு செய்து விட்டு எங்களை வரவேற்கக் காத்திருந்தார். எங்கள் குழுவினர் வந்து சேர்ந்ததும் ஆண்கள் ஒரு இடத்திலும், பெண்கள் வேறொரு ஒரு இடத்திலுமாக வாழையிலைக் குளியலுக்கு தயாரானார்கள்.

சுமார் இரண்டு மணியளவில் அனைவரும்  வாழையிலைக் குளியல் எடுத்து முடிந்ததும், தோட்டத்துக்கு எதிரே அமைந்துள்ள மற்றொரு தோட்டத்தில் உள்ள பம்ப்ஷெட்டில் நீர் இறைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் பெண்கள் அனைவரும் குளித்து முடிக்க அதைத் தொடர்ந்து ஆடவர்கள் குளித்ததும் அனைவருக்கும், இளநீர் வழங்கப்பட்டது. மரத்தில் இருந்து நேரடியாக பறித்து உடனே சீவப்பட்ட இளநீர் அருந்த மிகவும் ருசியாக இருந்தது.

சென்னையில் நாம் அருந்தும் காய்கள் பல நாட்களாக லாரிகளில் வெய்யிலில் காய்ந்து வருவதினால் ருசி இருப்பதில்லை. அவற்றின் மருத்துவப் பயன்களும் பெருமளவில் குறைந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது. ஆனால் நாங்கள் குடித்த இளநீரின் மருத்துவ குணம் நூறு சதம் எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் பெருமகிழ்வு எய்தினோம். பின்னர் வழுக்கையை சுரண்டி சாப்பிட்டோம். சில இரண்டு மூன்று முறை இளநீர்களை கேட்டு வாங்கி அருந்தினார்கள். அன்பர்கள் திருப்தி அடையும் வரை வேண்டிய அளவுக்கு அருந்திட இளநீர் தரப்பட்டது. 

மனதும் வயிறும் நிறைய இளநீரும், அழுக்கும், அசதியும் தீரக் குளிக்கும் வசதியையும் செய்து தந்த தோட்ட உரிமையாளருக்கும், அனைத்து வசதிகளையும் இன்முகத்துடன் செய்து தந்த அவரது அன்புக் குடும்பத்தினருக்கும், எங்களது இதயநிறை நன்றிகளை தெரிவித்துவிட்டு அணிவரும் மீண்டும் ஹாஸ்டலுக்குத் திரும்பினோம்.
(பகிர்தல் தொடரும்)

பகுதி ஏழு >>>>

செவ்வாய், 10 ஜனவரி, 2012

6. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்

பகுதி ஆறு:

இரண்டாம் நாள் நிகழ்வுகள்: 
27.12.2011 செவ்வாய் காலை, முற்பகல், பிற்பகல், மாலை

எங்கள் தோட்டத்துக்கு எதிர்ப்புறம் மிகவும் பரந்த நிலப்பரப்பில், கொடைக்கானல் மலைச்சாரலில், பிரம்மாண்டமாய் அமைந்திருந்த வேலன் விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி எல்.கே.ஜி யில் இருந்து ப்ளஸ்டூ வரை வகுப்புக்களை கொண்டிருக்கிறது. நாங்கள் தங்கி இருந்த அந்த சமயத்தில் ப்ளஸ்டூ மாணவ மாணவியர் மட்டும் ஹாஸ்டலில் தங்கி இருந்தார்கள். அவர்களுக்கு இரவு பத்து மணி வரை சிறப்பு வகுப்புக்கள் (இது விடுமுறைப் பொழுது என்ற போதிலும்) நடந்து கொண்டிருந்தன. 

பள்ளி வளாகத்தில்...  
தோட்டக்காரர் தமது மகனுடன்.

பள்ளியில் பூத்துக் குலுங்கும் மலர்கள். 

 விதம் விதமான வண்ணங்களில்...

 முள்ளில் மலர்ந்த மலர்க் கூட்டம்.

பூ பார்க்க அழகாயிருக்கிறது.

தீவிரமான கல்வி போதிப்புகளிடையே மாணவர்களுக்கு குதிரை ஏற்றம், களரி, சிலம்பம், கத்தி வீச்சு, குங்க்பூ, கராத்தே, யோகா, நீச்சல் குளம் என்று அனைத்து வீரதீர விளையாட்டுக்களுடன், மற்ற விளையாட்டு மற்றும் தடகளப் பயிற்சிகளும் சொல்லித் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் சரளமாக பேசுதல், பேச்சுத் திறன், போன்ற பயிற்சிகளும், போட்டிகளும் நிகழ்த்தப் பட்டு திறமையாளர்களை அடையாளம் காணவும், ஆர்வமுள்ளவர்களுக்கு ஊக்கம் தருதல் போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட அறிவாலயமாக விளங்குகிறது இந்த வேலன் விகாஸ் பள்ளி. 

பள்ளி வளாகத்தில் 
 குதிரை மேய்ந்து கொண்டிருக்கிறது.

 விடுமுறை ஓய்வில்

அருமையான விளையாட்டுத் திடலுடன் ஹாஸ்டல் பிளாக் இணைந்திருக்கிறது. காலையில் நான்கு மணிக்கு அலாரம் வைத்து அனைவரையும் எழுப்பி யோகா செய்ய தயாராகி வெளியே வந்த போது காலை மணி ஆறு ஆகி இருந்தது. 

பள்ளி வளாகத்தின் பின்னணியில் கொடைக்கானல் மலையை பனி மேகங்கள் சூழ்ந்திருக்க, காற்றில் குளிர் அதிகம் தெரிந்தது. யோகப் பயிற்சிக்காக பிரார்த்தனை ஹாலில் அன்பர்கள் தத்தம் விரிப்புக்களுடன் வந்து சேர்ந்தார்கள்.நண்பர் பிரேம்குமார் யோகப்பயிற்சிகளை சொல்லித்தர ஆரம்பித்தார். சூரிய நமஸ்காரம், உடல் தளர்வுப் பயிற்சிகள், நின்ற நிலை ஆசனங்கள், அமர்ந்த நிலை ஆசனங்கள், குப்புறப் படுத்த நிலை ஆசனங்கள், மல்லாந்து படுத்த நிலை ஆசனங்கள், பிராணாயாமம் போன்றவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த சில பயிற்சிகள் சொல்லித் தரப்பட்டன. பின்னர் சாந்தி ஆசனம் என்று அழைக்கப்படும் யோகநித்ரா (அறிதுயில்) பயிற்சியை அனைவருக்கும் நான் அளித்தேன்.

ஒரு மணிநேர யோகாசனப் பயிற்சிக்குப் பின்னர் ஹாஸ்டல் காண்டீனில் இருந்து அனைவருக்கும் சூடான பிளாக்டீ வழங்கப்பட்டது. டீ அருந்திய பின்னர் வாலிபால் அரங்கில் நமது அன்பர்கள் சற்று நேரம் வாலிபால் ஆடி மகிழ்ந்தார்கள். எட்டு நடைப் பயிற்சி எனும் தமாஷான நடைப்பயிற்சியை அனைவரும் மேற்கொண்டோம். சென்னை நண்பர் நாகராஜன் சீரியசாக திடலைச் சுற்றி ஜாகிங் சென்று கொண்டிருந்தார்.

இன்று உபவாச தினம். மேலும் வாழைஇலைக் குளியல் இருப்பதினால் திடமான உணவுகளைத் தவிர்த்தாக வேண்டும். திரவ வடிவிலான சாறுகள், எலுமிச்சை, நெல்லி, தேன் கலந்த பானங்களை வேண்டும் போதெல்லாம் அருந்தலாம்.

காலை யோகாசார்யா முருகன்ஜி வந்து சேர்ந்தார். அவருடன் சென்னையைச் சேர்ந்த இயற்கைபிரியன் (இரத்தின சக்திவேல்) வந்திருந்தார். இவர் இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக சுமார் அறுபது புத்தகங்களை எழுதி இருக்கிறார். இயற்கை நலவாழ்வியல் முகாம்களில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதோடு அல்லாமல் தனது புத்தகங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்துவிடுவார். கலகலப்புடன் பழகிச்  சிரிக்கச் சிரிக்க உரை நிகழ்த்தி அனைவரையும் சிந்திக்க வைப்பதில் விற்பன்னர் இந்த இயற்கைப் பிரியன். குடந்தை அருகே உள்ள திருப்பனந்தாளில் நாளை தொடங்கவிருக்கும் சங்கப்பிரக்ஷாலனக்கிரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாமில் அவர் உரை நிகழ்த்த செல்லும் வழியில் இன்று பழனியில் இறங்கி எங்களோடு உரையாட வந்திருக்கிறார்.

அனைவரும் புறப்பட்டு ரங்கசாமிகரடுக்கு செல்ல ஆரம்பித்தோம். வாழையிலைக் கட்டு ஒரு டூவீலரில் எடுத்துச் செல்லப்பட்டது. இன்று வெய்யில் மிகவும் கம்மியாக அடித்தது. மேகமூட்டம் இருந்ததால் வெயிலில் அதிக உஷ்ணம் இல்லை. வாழை இலைக் குளியலுக்கு சுள்ளென்று வெயில் இருந்தால் நிறைய வியர்வை வெளியேறும். இந்த மாதிரி சூடுகுறைந்த வெயிலில் மண்குளியல் சாத்தியம் இல்லை என்பதால் அனைவருக்கும் வாழையிலைக் குளியல் தருவது என்று முடிவானது.

(பகிர்தல் தொடரும்)