சனி, 12 பிப்ரவரி, 2011

6. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் 
முனைவர் பொற்கோவின் ''நல்ல உடல் நல்ல மனம்''
(டாக்டர் பொற்கோ சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தராக  இருந்தவர்)


முனைவர் பொற்கோ

1982-ல் வெளியான டாக்டர் பொற்கோவின் ''நல்ல உடல், நல்ல மனம்'' என்னும் இந்த அரிய நூலின் மதிப்புரையில் முனைவர் ந.சஞ்சீவி, (அந்நாளைய சென்னைப் பல்கலைக் கழக தமிழ் துறை தலைமை பேராசிரியர்) இவ்வாறு கூறுகிறார்:
"எண்வகை யோக நிலைகளையும், எண்வகைச் சித்திகளையும் டாக்டர் பொற்கோ அறிவோடும் அனுபவத்தோடும் குழந்தைகளுக்கும் புரியும் வகையில்-முதியவர்களும் குழந்தைகளாகிப் புரிந்து கொள்ளும் வகையில் - விளக்கியிருத்தல் வியப்பும் விம்மிதமும் தருகிறது. படிப்படியாக (Step-by-Step) பதஞ்சலியும் பாராட்டும் வகையில் யோக வாழ்வுக்கு ஒரு பால பாடத்தையே டாக்டர் பொற்கோ அவர்கள் அமைத்திருத்தல் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் குழந்தைகளுக்கும் பெரிய யோகம்தான் ! ஆசிரியரின் பண்பட்ட பகுத்தறிவும், முதிர்ந்த மொழியியல் அறிவும் தகவு சான்ற தனித் தமிழ் உணர்வும் நூலின் பல்வேறு இடங்களிலும் பளிச்சிடுகின்றன." 
இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திரு அ. மெய்யப்பன் (இவர் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் சென்னையில் வாழும் இவர் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் ஆசிரியர்/பயிற்சியாளராக சேவை புரிந்து வருகிறார். இயற்கை நலவாழ்வியல் முகாம்களை நடத்துவதில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்) எழுதுகிறார்:-
"இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயின்று வந்த பயிற்சியையும், பல்வேறு நூல்களை ஆய்ந்து பெற்ற அறிவையும் சாறாகப் பிழிந்து தமிழ் மக்கள் பயன் அடைய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு அறிஞர் பொற்கோ அவர்கள் கோதமன் என்ற புனைபெயரில் கட்டுரையாக தொடர்ந்து விளையாட்டுக் களஞ்சியம் என்ற மாத இதழில் 'நல்ல உடல் நல்ல மனம்' என்ற தலைப்பில் எழுதி வந்தார்கள். அந்தக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றால் மேலும் பொதுமக்களுக்குப் பயன் தரும் என்பதால் நூல் வடிவம் தந்துள்ளார்கள்....
யோகாசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், அட்டமா சித்திகள் என்னும் மன ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சி என்பன போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கிய யோகக் கலை என்ற அருங்கலை பற்றித் தமிழ் தெரிந்த அனைவரும் படித்துப் புரிந்து கொண்டு பயிற்சி செய்து பயன் பெறத்தக்க வகையில் இந்நூல் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும், சுவை பொருந்தியதாகவும் அமைந்துள்ளது.....  மனத்தை செம்மைப் படுத்தவும், உயர் நிலைக்கு மனத்தைக் கொண்டு செல்லவும், நிம்மதி பெறவும், மனதை நடு நிலையில் வைத்துக் கொள்ளவும், உள்ளொளியில் ஒன்றவும், உள்ளொளியில் ஒன்றியவர்கள் தொடர்ந்து இன்பமயம் என்னும் பேற்றைப் பெறவும் உதவுகின்ற வகையில் அறிஞர் பொற்கோ அவர்கள் உருவாக்கி உலகுக்குத் தந்துள்ள 32 இன்பமயப் பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன." 
"நவில் தோறும் நூல் நயம் போலும்" என்ற மாதிரி, அட்டாங்க யோகம், அட்டமா சித்திகளைப் பற்றி நூலாசிரியர் எளிமையான தமிழில் ஆர்வத்துடன் படிப்பவர் எவரும் புரிந்து கொள்கிற வகையில் விளக்கி இருக்கும் பாங்கு போற்றி வணங்கத்தக்கது.  சான்றாக நூல் ஆசிரியர் அட்டாங்க யோகம் என்னும் எட்டுப் படிநிலைகளை தெளிவான தமிழில் விளக்குகிறார். எண்பதுகளில் நான் யோகம் தியானம், அட்டமாசித்தி பற்றி அறிந்து கொள்ள முயன்று அப்போது கிடைத்த புத்தகங்களில், வடமொழி/தமிழ் மொழிக் கலப்புடன் (மணிப்ரவாள நடையில்) எழுதப் பெற்ற விளக்கங்கள் எனக்கு குழப்பத்தையே தந்தன. யோகம், தியானம் பற்றிய சரியான புரிதல் தோன்ற தடைகள் இருந்தன. ஆனால் இந்த விளக்கங்களைப் படித்த பின்னர்தான் எனக்கு தெளிவு ஏற்பட்டது.  நான் தெளிவு பெற உதவிய அந்த விளக்கங்களை இங்கே காண்போம்.
  1. இயமம் : தக்கனவும் தகாதவும் (சமூக ஒழுக்கங்கள்)
  2. நியமம் : சரியும் தவறும் (தனி மனித ஒழுக்கங்கள்)
  3. ஆசனம்: ஆதனம் (ஒரு அருமருந்து.)
  4. பிராணாயாமம்: மூச்சு நடை (மூச்சாற்றலை ஒழுங்கு படுத்துதல்)
  5. பிரத்தியாகாரம் : விழிப்பு நிலை (மன ஆற்றலை சிதற விடாமல் ஒரு இலக்கில் திரட்டுவது).
  6. தாரணை : திரட்டிய ஆற்றலை ஒரு இலக்கில் செலுத்துவது.
  7. தியானம் : மன ஆற்றலை அந்த இலக்கிலேயே நிலை நிறுத்துவது.
  8. சமாதி : நிலை கொண்ட மனத்தின் அமைதி அனுபவம்-(பேரின்பநிலை )
இந்த விளக்கங்களை படித்த பின்னர்தான்,  நமது உடல், மன இயக்கங்களை ஆளும் கலையை படித்து உண்மைநிலைதெளிதல் என்பதையே முன்னோர்கள் சச்சிதானந்தம் (சத்து-உண்மை, சித்து-அறிவு, ஆனந்தம்-பேரின்பநிலை) என்று கூறி உள்ளார்கள் என்பதை,  உண்மை அறிவே இன்பமயம் என்பதை நான் புரிந்து கொண்டேன்.  இது போன்றே அட்டமாசித்திகளைப் பற்றி குழந்தைகளும் கூட மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் முனைவர் பொற்கோ ஐயா அவர்கள் விளக்கி எழுதி உள்ளார்கள். 

இந் நூல் பற்றிய விவரம்: 
  • நூலின் தலைப்பு:  நல்ல உடல், நல்ல மனம்.
  • பக்கங்கள்: 150
  • வெளியீடு: பூம்பொழில் வெளியீடு, 16, 6-வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை - 20
  • விலை ரூ.30
  • இந்நூல் கிடைக்கும் இடங்கள்: 
  1. பாரி நிலையம், பிராட்வே, சென்னை 108
  2.  தமிழ் நூலகம், ஆழ்வார்பேட், சென்னை 18
  3.  ஐந்திணைப் பதிப்பகம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5
எனக்கு இந்நூல் அறிமுகமான விதம்: 
நான் 1992இல்  ஆடுதுறை இயற்கை மருத்துவ முகாமில் முதல் முறையாக பயிற்சி பெற்ற போது இந்நூலை திரு மெய்யப்பன் ஐயா அவர்கள் எனக்கு அன்புப் பரிசாக கையொப்பம் இட்டு வாழ்த்திப் பரிசளித்தார்கள். கடந்த திசம்பரில் (2010), முனைவர் பொற்கோ அவர்களை எனது யோகா ஆசான் திரு.தி.ஆ.கிருஷ்ணனின் இல்லத்தில் சந்தித்து அவரிடம் அறிமுகமும், ஆசியும் பெற்ற போது மிகவும் மகிழ்ந்தேன். இந்நூலைப் பற்றி வலைப்பூவில் எழுதலாமா? என்று கேட்டபோது அன்புடன் மகிழ்ந்து வாய்மொழியாகவே அனுமதி தந்து ஆசியும் தந்த பெரியவர், கற்றுணர்ந்த முனைவர் பொற்கோ அவர்கள் எனக்கு நல்ஆசியும் தந்தார்கள்.  பாடல்களை எல்லோரும் படித்து பயன் பெறத் தக்க வகையில் வெளியிட எனக்கு அனுமதி அளித்த முனைவர் ஐயா அவர்களுக்கும், இயற்கை நலவாழ்வியல் துறையில் தக்க அறிவும், பயிற்சியும் பெற்றிட எனக்கு எல்லா வகையிலும் ஊக்கமும், நல்லாதரவும் அளித்து வரும், திரு. மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் எனது இதய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


வாழி நலம் சூழ.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

5. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் 
சுவாமி சிவானந்தர் அருளிய 'இயற்கை மருத்துவம்'


இயற்கை நலவாழ்வியல் அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த வலைப்பூவில் பதிவிடுவதில் நீண்ட இடைவெளி நேர்ந்து விட்டது. காக்க வைத்தமைக்கு மன்னியுங்கள். இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக தமிழில் நிறைய நூல்கள் உள்ளன. 


அவற்றை எல்லாம் கண்டெடுத்து உங்களிடையே ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திட பெரிதும் முனைந்து கொண்டிருக்கிறேன். நிறையப் புத்தகங்களை சேகரித்து விட்டேன். அவற்றைப் படித்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.


அந்த வரிசையில், ஐந்தாவது புத்தகமாக நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் புத்தகம், இமயஜோதி ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அருளிய ''இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure) என்கிற அரியதொரு நூல். 


இந்த புத்தகத்தை கடந்த மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான  பொக்கிஷம் இந்நூல். 

இந்நூல் துவக்கத்தில் படிப்போரை கவரும் வரிகள்:
ஓம் சத்குரு பரமாத்மனே நம:
ஓம்.

எங்கும் நிறைந்துள்ள சிகிச்சை தரும் சக்திக்கு,
நம்மை பாதுகாக்கும் இயற்கை அன்னைக்கு,
இயற்கை மருத்துவத்தை ஊக்குவிப்போர்,
பின்பற்றுவோர் அனைவருக்கும்,
அதுபோலவே
பெரும் அளவில் மனித சமுதாயத்தின்
அனைவரும் உடல் நலமும், நீண்ட ஆயுளும்,
அமைதியும், மகிழ்ச்சியும் பெறுமாறு
இந்நூல் அன்புக் காணிக்கை.
ஓம்.

மேலும் சுவாமி சிவானந்தர் கூறுகிறார்: 

ஓம்.

8, செப்டம்பர் 1951

அமிழ்தத்தின் செல்வா,

உடல் நலமே பெருஞ் செல்வம்.

உன் வாழ்வின் உண்மையான அடித்தளம் உடல் நலமே. 

வலிமை வாய்ந்த உடம்பை வளர்த்துக் கொள்.

இயற்கையுடன் இணக்கம் கொள்.

உடல் நலம் பற்றிய, உடல் நல நூல்களைப் பற்றிய விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பாயாக.

அழியாத பேரின்பத்தை அனுபவிப்பாயாக.

உடல் நலம், அமைதி, நீண்ட ஆயுள், கைவல்யம் ஆகியவற்றை ஆண்டவன் உன் மீது பொழிவாராக.
- சுவாமி சிவானந்தா.

இந்த நூல் 33 அத்தியாயங்களையும், பின் இணைப்பாக இயற்கை மருத்துவக் கொள்கைகள் (ஒரு மீள் பார்வை) பற்றிய ரத்தினச் சுருக்கமான ஒரு கட்டுரையையும் கொண்டது.

இந்நூலை அருளிய சுவாமி சிவானந்தர் ஒரு மருத்துவர் என்பது இப்புத்தகத்திற்கு மேலும் வலிவையும், பொலிவையும், அதிகாரத்தையும் கூட்டுகிறது. ஆன்மீகமும், உடல் நலமும் இணைந்த பேரருளாளர் அல்லவா சுவாமி சிவானந்தர் ?

இந்நூலில் ஒவ்வொரு பக்கமும் அனுபவித்து படிக்க வேண்டிய செய்திகள் நிறைந்திருக்கிறது.

ஆசிரியரின் முகவுரைப் பகுதியில் இருந்து முக்கியமான சாரம்சத்தை மட்டும் இங்கே அன்பர்களின் பார்வைக்கு இடுகிறேன். 

ஒரே ஒரு நோய் தான் உண்டு.

அதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு.

அதற்கு ஒரே ஒரு சிகிச்சை தான் உண்டு.

அந்த ஒரு நோய்:-
தவறான முறையில் வாழ்வதாகும்.

அந்த ஒரு காரணம்:- 
நீரில் உருவாகும் பொருள்களும், நோயை உண்டாக்கும் மலங்களும், உடம்பில் தேங்குவதாகும்.

அந்த ஒரு சிகிச்சை:-
உண்ணா நோன்பு, எனிமா ஆகியவற்றால் அழுக்குகளையும், மலங்களையும் வெளியேற்றல், விவேகமான உணவுத் திட்டம், நீர், கதி ரொளி,காற்று ஆகியவற்றால் குணம் பெறல் முதலியனவாகும்.

இயற்கை மருத்துவம் எப்போதும் இயற்கையான சிகிச்சை முறைகளையே பின்பற்றுகிறது. நீராடல், வெயில், ஓய்வு, பயிற்சி, எனிமா, பட்டினின், தூய காற்று, நீவி விடல் (மசாஜ்), கவனம் மிகுந்த விவேகத்துடன் கூடிய சரியான உணவு முதலிய இயற்கையான செயல்களின் உதவியையே அது பெறுகிறது. மருந்துகளை அது ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை.

வேதங்கள் அல்லது இமய மலை போல இயற்கை மருத்துவ முறையும் மிகவும் தொன்மை வாய்ந்தது. உடல் நலம் பேணவும், சிகிச்சை செய்யவும் (தற்போது) உள்ள முறைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அதுவே மிகவும் தொன்மை வாய்ந்தது. கிறித்துவுக்கு நான்கு நூற்றாண்டுகட்கு முன்பு (460-377 BC) வாழ்ந்த ஹிப்போ க்ரேடஸ் (Hipocrates)என்பார் இயற்கை மருத்துவ முறையின் உறுதி மிக்க ஆதரவாளராக இருந்தார். கதிரொளி, தூய காற்று, தண்ணீர், பயிற்சி, ஓய்வு, சரியான உணவு, நீராடல், நீவுதல் முதலிய இயற்கை நலவாழ்வியல் சிகிச்சை முறைகளை பயன்படுத்தி, மனித குலத்துக்கு நிகரற்ற பயன்களையும், அழியாப் புகழையும் பெற்றார். அவர் இயற்கை மருத்துவ முறையின் தந்தை ஆவார். (இப்போது கூட மருத்துவப் படிப்பினைத் துவங்கும் முன்னர் மருத்துவ மாணவர்கள் ஹிபோக்ரேடஸ் உறுதி மொழி (Hypocrates Oath) என்ற ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வதை ஒரு மரபாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளுக்கும் இப்போதைய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும், மருந்துகளுக்கும் இடைவெளி மிகவும் நீண்டு விட்டது என்பதுதான் சோகம்!)

இயற்கை மருத்துவ முறை ஒரு சாதாரண மனிதரை, டாக்டரிடம் சென்று, காத்திருக்கும் அறையில் கடினமும், கவலை மிகுந்த பல மணி நேரங்களைக் கழிப்பதில் இருந்தும், டாக்டருடைய மனிதாபிமானமற்ற கட்டணங்களில் இருந்தும் விடுவிக்கிறது.

இயற்கை மருத்துவம் மிகவும் மலிவானது; அதே நேரத்தில் சிகிச்சை முறைகளில் மிகவும் சிறந்ததும், பாதுகாப்பு மிகுந்ததும் ஆகும்.

இயற்கைக்கு திரும்புக. 
ஊசி, மருந்து வில்லைகள், திரவ மருந்து ஆகியவற்றிகாக காலத்தையும், சக்தியையும், பணத்தையும் வீணாக்க வேண்டாம். 


இயற்கையின் விதிகள் மிகவும் சுலபமானவை. இயற்கை அன்னையிடம் (இயற்கை) மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன; அவற்றை உட்கொள்வதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவளுக்கு (டாக்டர் ஃ பீஸ்) கட்டணம் எதுவும் தரவேண்டியதில்லை. 


எளிமையான, இயற்கையான வாழ்க்கையை நடத்துக. உடல் நலம் பற்றிய விதிகளையும் பின்பற்றுக. தூய்மையை பேண வேண்டும். தெய்வீகத் தன்மைக்கு அடுத்தபடியாக இருப்பது தூய்மையே. நோய்கள் அணுகாத நிலையைப் பெறுவதுடன், நீங்கள் உயர்ந்த தரம் மிகுந்த உடல் நலத்தையும், வலிமையையும், நீண்ட ஆயுளையும் அனுபவித்து மகிழ்வீர்கள். 

எல்லா நோய்களையும் குணப்படுத்துவது இயற்கைதான் (Doctor treats; Nature cures).ஒரு டாக்டர் தம்முடைய விவேகமற்ற சிகிச்சையினால் ஒரு நோயாளியைக் கொன்று விடக்கூடும்; அல்லது நோயின் உக்கிரத்தை அதிகரித்து விடக்கூடும்.

விவேகமான முறையில் மருந்துகளை பயன்படுத்துவது தான் இயற்கைக்கு உதவியாக இருக்கிறது. உடல் நலத்துடன் இருக்கும் போதும், நோயுற்று இருக்கும்போதும், உயிரின் செயல்களுக்கு தெய்வீக சக்தி ஆதரவாக இருக்கிறது. 

மிகையான உணவாலும், தவறான உணவாலும், விவேகமற்ற உணவாலும், குற்றங்கள் உள்ள உணவாலும், உடம்பில் அழுக்குகளும், மலங்களும் தேங்கி விடுகின்றன. உடம்பில் இருந்து இந்த அழுக்குகளும், மலங்களும் வெளியேற்றப்பட்டால் எல்லா நோய்களும் குணமாகி நிறைவான உடல் நலத்தை மனிதன் அனுபவிக்க முடிகிறது. இதுவே இயற்கை மருத்துவத்தின் நிறைவான கொள்கை.

கதிரொளி சிகிச்சை, நீர் சிகிச்சை, காற்றின் சிகிச்சை, உணவின் சிகிச்சை, பட்டினி கிடத்தல் இவை எல்லாவற்றின் ஒரே நோக்கம் உடம்பில் இருந்து அழுக்குகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி நிறைவான உடல் நலம், வலிமை, சக்தி ஆகியவற்றை நிச்சயப்படுத்துவதே ஆகும்.

இப்புத்தகத்தில் சுவாமி சிவானந்தர் ஒவ்வொரு நோயையும் எவ்வாறு இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என்று விரிவாக அலசியிருக்கிறார். இப் புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், சொல்லும் படித்து, பின்பற்றி அனுபவிக்க வேண்டியவை. அன்பர்கள் இப்புத்தகத்தை சொந்தமாக்கி பயன்படுத்தி நலவாழ்வு வாழலாம். 


அதேபோல, இந்நூலில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நலவாழ்வு பெற்ற அன்பர்கள், தமது நண்பர்கள், உறவினருக்கு பரிசாக அளித்து அவர்கள் வாழ்விலும் இயற்கை ஒளியை ஏற்றலாம்.

நவில் தோறும் நூல் நயம் போலும், படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் இந்த நூல் பற்றிய விவரங்கள்...

புத்தகத்தின் பெயர்: 'இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure)

ஆசிரியர்: இமய ஜோதி ஸ்ரீ ஸ்வாமி சிவானந்தா (தமிழாக்கம்: திரு.டாக்டர் ப.உருத்திரமணி, M.A., Ph.D.,

பக்கங்கள்: 526 (Hard Bound Edition). எட்டாவது பதிப்பு -2007 

பண்பாளர்கள் நால்வர் கொடுத்த பெறும் பண உதவிகளால் வெளியாகி இருக்கும் விலை மதிப்பற்ற இந்த நூலின் விலை: ரூபாய் நூறு மட்டுமே. (டாக்டருக்கு மீண்டும் மீண்டும் நாம் கொடுக்கும் ஆலோசனை கட்டணத்தை விட இந்நூலின் விலை பல மடங்கு குறைவு என்பதை கவனியுங்கள். இந்த முதலீடு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், டாக்டர்கள் மற்றும் நச்சுக்கள் நிறைந்த செயற்கை மருந்துகளில் இருந்தும் காக்க வல்ல சக்தி கொண்டது)

வெளியிடுவோர்: தெய்வீக வாழ்க்கை சங்கம், சிவானந்தா ஆஸ்ரமம், சுவாமி சிவானந்தா சாலை, இராசிபுரம்-637408, நாமக்கல் மாவட்டம், தமிழ் நாடு.

உங்கள் பொன்னான நேரத்தை இந்தப் பதிவினை படிக்க செலவிட்டமைக்கு என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். 

வாழி நலம் சூழ. 

-- 
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
ஆன்ம நலம் பெற : www.vedantavaihavam.blogspot.com