சனி, 22 மே, 2010


பகுதி 13 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

நோய் நீக்கலுக்குக் காரணம்

மருந்து வேண்டாம். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு...

மனிதர்கள் அனைவரும் விரும்புவது நோயற்ற வாழ்வு. இதுவே குறைவற்ற செல்வம்.

நோயற்ற வாழ்வுதான் வாழ்வாங்கு வாழும் உயர் வாழ்வுக்கு அடிப்படையாகும். இதனாலேயே திருமூலரும் 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்று கூறியுள்ளார்.

நோய் நீக்கலுக்குக் காரணம்
"நோய் பல அல்ல" என்றும் "நோய் நமக்கு நண்பன்" என்றும் இதற்குமுன் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் நாம் ஏன் நோயின்றி வாழ முற்பட வேண்டும்? உடம்பு அழிந்து போகும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிதான் நோய். நோய் வந்தபோது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். உடம்பினுள் ஏதோ வேண்டாத பொருளோ, நச்சுப் பொருளோ தங்கி, அது நம் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது என்பதை நோய் காட்டுகிறது. வேண்டாத பொருள்களை வெளியேற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் நச்சுப் பொருள்கள் வெளியேறி விட்டால் உடல் ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்கும். அத்துடன் நீண்டநாள் வாழலாம். நச்சுப் பொருளை வெளியேற்ற முயற்சி செய்யாமல் நோயாளிகள் மருத்துவரிடம் போகின்றார்கள். மருத்துவர்களும் தங்களிடமுள்ள மருந்துகளைக் கொடுத்து நோயினை குணப்படுத்த முயலுகின்றனர்.

மருந்துகளின் தன்மை
ஆங்கில மருத்துவர்களிடமுள்ள மருந்துகளோ பெரும்பாலும் வெறி மயக்கப் பொருள்கள். ஆங்கிலத்தில் இதை 'டிரக்' (Drug) என்று சொல்கிறார்கள். Medicine (மெடிசின்), Drug (டிரக்) என்று ஆங்கிலத்தில் இரு வார்த்தைகள் உண்டு. தமிழில் இரண்டையும் மருந்து என்றுதான் சொல்லுகிறோம். அலோபதிக் மருந்துகளின் பெரும்பாலானவை டிரக்குகளே. மருந்துக் கடைகளில் தகுதி வாய்ந்த டாக்கடர்களுடைய சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை கொடுக்கமாட்டார்கள். இந்த மருந்துகளின் மீது விஷம் (Schedule H) என்று சிவப்பு எழுத்தால் எழுதப் பெற்றிருக்கும். விஷத்தை விஷத்தால் முறியடிக்க வேண்டும் என்ற கோட்பாடுடைய மருத்துவர்களுக்கு பூச்சி(வைரஸ்)களால் நோய் வந்துள்ளது. அப்பூச்சிகளை விஷத்தால்தான் கொல்லமுடியும் என்ற கொள்கையுடையோரும் இந்த நச்சு மருந்துகளை உபயோகிக்கின்றனர்.

மருந்துகள் செய்யும் வேலை.
இம்மருந்துகள் செய்யும் வேலைகளை பார்த்தாலும் இதை விளங்கிக் கொள்ளலாம். சில மருந்துகள் உயிரைக் குடிப்பன. இவை பூச்சி(வைரஸ்)களைக் கொல்வதுடன் மனிதனின் உயிராற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும்; குடிக்கும்.

ஏற்கனவேயுள்ள நச்சுப் பொருள்களுடன் இந்த நச்சுப் பொருளும் சேர்ந்து கொண்டு உணர்வை மரத்துப் போக செய்கின்றன. கொஞ்ச காலத்திற்கு வலி தெரிவதில்லை. நோய் தீர்ந்து விட்டதென ஒரு பிரமை ஏற்படுகிறது. உண்மையில் நோய் தீருவதில்லை. அது தெரியவில்லை அவ்வளவே. சில சமயங்களில் இந்த நச்சுப் பொருள்கள் இரத்தத்தில் கலந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கிருந்து அவை வெளியேற முயலும்போது துன்பம் ஏற்படுகிறது. மக்கள் அதனைப் புதிய நோய் என்று கருதுகின்றனர். பழைய நோய்தான் புதிய இடத்திற்கு வந்திருக்கிறதென்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. டாக்டர்களும் புதிய நோய்க்கு புதியதொரு சிகிச்சை செய்கிறார்கள்.

(இயற்கை இன்னும் வளரும்..)

செவ்வாய், 18 மே, 2010

பகுதி 12 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

உடல் உறுப்புகளின் தாங்கும் திறன்

மனிதனுடைய உடல் உறுப்புகள் வாழ்நாள் முழுவதும் சமைத்த உணவின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டே வருகின்றன. கழிவுகளை வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. பல வருடங்கள் கழித்து அக்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத பொழுது தான் அவைகள் வேலை நிறுத்தத்தில் (Strike) ஈடுபடுகின்றன. அதன் பிறகே புற்றுநோய், இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, சிறுநீரகம் வேலை செய்யாமை போன்ற நோய்கள் வருகின்றன.

இரத்தம் உடலிலிருந்து வெளியே வந்த சில நிமிடத்தில் அதில் உள்ள செல்கள் எல்லாம் இறந்துவிடுகின்றன. அதே போல் மாமிசங்களும் கெட்டுப்போக ஆரம்பித்து நேரம் ஆக ஆக முழு விஷப் பொருட்களாக மாறிவிடுகின்றன. அதைச் சமைக்கும் பொழுது அதில் விஷப் பொருள் மேலும் அதிகரிக்கின்றது. மிருகங்களிலிருந்து கிடைக்கும் புரதச் சத்துக்களே மிகவும் உயர்ந்த புரதம் என்று கூறுவது தவறாகும். அப்படியென்றால் அந்த உயர்ந்த புரதம் எப்படி உருவாக்கப்பட்டது. இலை, தழை போன்ற இயற்கை உணவுகளினால் தானே. சளி, இருமல், ஆஸ்துமா, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை உண்டாக்குவதற்கும் அவற்றை வளர்ப்பதற்கும் மிகவும் உதவி செய்கின்றவை சமைத்த உணவுகளான பால், வெண்ணெய், ஜாம், இனிப்புகள் அரிசி, மீன், முட்டை, மாமிசம் முதலியவைகளே ஆகும்.

இயற்கை உணவு சிறிதும் தராமல், ஒரு சமயம் இங்கிலாந்தில் தண்டனை பெற்ற சிறைச்சாலைக் கைதிகளுக்கு முட்டை, மீன், மாமிசம் முதலியவைகளை மட்டும் எண்ணெயில் பொரித்துக் கொடுத்ததில் அவர்கள் 28 நாட்களுக்குள் இறந்து விட்டார்கள். ஆனால் பட்டினி இருக்கும் மனிதன் 70 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். மாமிச உணவுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய விஷக்கழிவுப் பொருள்களே அந்தக் கைதிகளை விரைவில் கொன்றுவிட்டன. பாம்பின் வாயில் விஷம் உண்டாவது போல் எல்லா மிருகங்களும் விஷத்தை உற்பத்தி செய்கின்றன. மாமிசத்திலிருந்து விஷத்தை தனியாகப் பிரிக்க முடியாமல் மாமிசம் சாப்பிடும் மனிதன் விஷத்தையும் சேர்த்துச் சாப்பிடுகின்றான். சைவ உணவுகளை விட மாமிச உணவுகளைச் சாப்பிடும் பொழுது பத்து மடங்கு அதிகமாக யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இதை வெளியேற்ற கல்லீரல், சிறுநீரகம், இருதயம் நான்கு மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. சைவ உணவு உட்கொள்வோர் வெளியேற்றும் சிறுநீரில் யூரிக் அமிலம் 0.2 லிருந்து 0.7 கிராம்தான் ஒரு மணிநேரத்திற்கு. ஆனால் மாமிச உணவு கொள்வோர் ஒரு மணி நேரத்திற்கு 2 கிராம் யூரிக் அமிலம் வெளியேற்றுகின்றனர்.

உருளைக் கிழங்கு, ரொட்டி, தானியங்கள், பருப்புகள் நிறைந்த சமைத்த உணவுகளும், அமிலங்களையும் விஷத்தன்மைகளையும் உற்பத்தி செய்து நோய்களை உண்டாக்குகின்றன. தானியங்களிலும் பருப்புகளிலும் கிடைக்கும் எல்லாச் சத்துக்களையும் மிக எளிதாக, பழங்களிலிருந்தும் கொட்டைகளிலிருந்தும் (Fruits and nuts) பெற்று விடலாம். கொட்டைகள் என்பது இங்கே தேங்காய், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு போன்றவற்றைக் குறிக்கும். சமையல் என்பது ஒரு உபயோகமற்ற, தேவையில்லாத, நேரத்தை வீணாக்கும் செய்கையே. அது இல்லத் தலைவிகளை இருளில் மூழ்கடித்து சமையலறைக்கு அடிமைகளாக்கி விடுகின்றது.


இந்தத் தொடரில் அடுத்து வர இருக்கும் துணைத் தலைப்பு: 
மனிதன் நோயின்றி வாழ முடியாதா?


(இயற்கை இன்னும் வளரும்) 

திங்கள், 17 மே, 2010

சேவை செய்திகள்.

ஒரு முக்கிய அறிவிப்பு.
ஏழு நாட்கள் யோகா & இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம்.

இடம்: இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி, (தமிழ்நாடு)

நாள்: 18.052010 முதல் 24-05-2010 முடிய.

மனிதனுக்கு மருத்துவமே அவசியமில்லை என திருவள்ளுவர் கூறியுள்ளார்; ஆம், எதை உண்ண வேண்டும்? எப்போது உண்ண வேண்டும்: எவ்வாறு உண்ண வேண்டும்? எனும் இம்மூன்று வினாக்களுக்கு விடைகள் அறிந்தால், எங்கு அலைந்தும் உடல், உள நலம் கிட்டாதவர்கட்கு, எளிதில் மருந்தின்றி, அறுவையின்றி, மாற்று உறுப்பு பொருத்துதல் இன்றி, எளிதில் உடல்/உள நலம் கிட்டிவிடும்.

இந்த முகாமில் ''சீரோ பட்ஜெட்'' மருத்துவம் விளக்கம் அளிக்கப் படுகிறது. தம்பதியராக இம்முகாமில் கலந்து கொள்வது உயர்வு. இம்முகாமில் நோய் தராத, நோய் நீக்கும் உணவுகள் வழங்கப்படும்.

இந்திய அரசுக்கு சொந்தமான (NIN, PUNE) நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதி, பூனே இந்த முகாமை வழங்குகிறது. இணைந்து முகாமை நடத்துபவர்கள் Natural Life Centre, Kulasekaranpattinam, Tuticorin District (Tamil Nadu) PIN:628206.

நன்கொடை: நபர் ஒருவருக்கு முன்னூறு ரூபாய் மட்டுமே.
மேல் விவரங்கள் பெற: 9380873645 & 9944042986

முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கூட மேற்கண்ட தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திரு.மூ.ஆ.அப்பன் அவர்களிடம் மற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை அறியலாம்.