வெள்ளி, 6 ஜனவரி, 2012

16. கனி இருப்ப....:படித்ததில் பிடித்தது. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

பகுதி 16.
கனி இருப்ப.. தொடர்கிறது.

இந்த தொடரில் இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக நான் படித்தவற்றை, பார்த்தவற்றை, கேட்டவற்றை பகிர்ந்து வருகிறேன். சமீபத்தில் 'இயற்கை வாழ்க்கை முறை'  எனும் தலைப்பிட்ட வலைப்பூவில் படித்த செய்திகளை நலவாழ்வியல் ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். அருமையானதொரு பதிவை வெளியிட்ட 'இயற்கை வாழ்க்கைமுறை' வலைப்பூ ஆசிரியருக்கு நன்றி.

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

இயற்கை:
இயற்கை இயற்கையாகவே இருக்கிறது.
இயற்கையில் தான் எல்லாமே இருக்கிறது.
இயற்கையாகவே அதில் எல்லாம் இருக்கிறது.
இயற்கையாகவே அது பரிணமித்தது.

இது தான் மெய்ஞ்ஞானமும்,விஞ்ஞானமும் கண்ட ஒரே ஒரு உண்மை.

அந்த இயற்கையின் பகுதிகள் தான் இந்த அண்ட சராசங்கள், பஞ்ச பூதங்கள், அதில் ஒன்றான இந்த பூமி, தாவரங்கள், அனைத்து கோடி ஜீவராசிகள், இறுதியாக தோன்றிய மனிதர்கள்.

இந்த இயற்கையில் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தே தான் இருக்கின்றன, அதன் விளைவாக எல்லாம் எப்போதும் ஒரு ஒழுங்கமைப்போடு இயங்கி வருகின்றன, இந்த ஒழுங்கமைப்பில் மாற்றம் வரும்போது தான் துன்பங்கள் ஏற்படுகின்றன.

இயற்கையின் ஒழுங்கமைப்பில் ஏற்படும் மாற்றம் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனும் இந்த உண்மையை உணராத ஒரே ஒரு இயற்கையின் வினோதமான பிராணி தான் மனிதன்.


இந்த 21 ம் நூற்றாண்டில் மனிதன் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முழுமையாக இயற்கைக்கு எதிராகவும், மாறாகவும் வாழ்ந்து வருகிறான். அதன் விளைவாக இனிமேலும் இந்த பூமி இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற அவலமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளான்.


தான் இயற்கையின் ஒரு சிறு பகுதியே என்ற உண்மையை உணராததின் காரணத்தால் இயற்கைக்கு தன்னால் இயன்ற அளவிலான தீங்குகளை இழைத்தும், தானும் துன்பப்பட்டு, இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் துன்பத்தில் ஆழ்த்தும் கொடிய செயல்களை மனிதன் செய்து வருகிறான். 


இதன் விளைவாகத் தான், பூமியை காப்பாற்ற பல போராட்டங்களும், நடவடிக்கைகளும் தேவைப்படுகின்ற ஒரு அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். இதில் என்ன வெட்கக்கேடான விஷயம் என்றால் "உலகில் தான் வாழும் வீட்டையே (பூமி) அழித்து வாழ்கிற ஒரே ஒரு அதிசய பிராணி மனிதன்" மட்டும் தான்.  இதில் மற்றொரு வியப்பிலும் வியப்பு என்ன என்றால் இந்த மனித பிறவிக்கு மட்டும் தான் பகுத்து அறிய கூடிய ஆறாவது அறிவு உள்ளது என்பது தான். “WHAT A STRANGE CREATURE MAN IS THAT HE FOULS HIS OWN NEST” –RICHARD M.NIXON


மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய் நொடிகள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சயமாக வாழ முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம்.அன்றாட வாழ்வில் இரசனையற்ற, அழகற்ற, செயற்கையான துன்பம் விளைவிக்கின்ற செயல்களை மட்டுமே செய்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வின் அர்த்தம் புரியாமலும், வாழ்வின் நோக்கம் தெரியாமலும், செயற்கையான பொருள்களின் துணையோடு வாழ்வதையே இன்பம், மகிழ்ச்சி என்ற தவறான புரிதலுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


“THE REALITY IS THAT IN THE MUCH OF THE INDUSTRIALIZED SOCIETIES, WE ARE COMPLETELY ADDICTED TO OUR COMFORTS, WE ARE A SOCIETY OF ADDICTS” – JULIA BUTTERFLY HILL


எப்போதுமே நமது மனம் ஒரு வித வெறுமையுடன் இருப்பதற்கும், பூரண மகிழ்ச்சி கிடைக்காமல் அல்லல்படுவதற்கும், என்ன கிடைத்தாலும், எப்படி வாழ்ந்தாலும் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே ஆகும்.


நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும், செயல்களும், நோக்கங்களும், பழக்க வழக்கங்களும் இயற்கைக்கு எதிரானதாக/மாறானதாக அமைந்துள்ளது. அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கு ஆணிவேர். இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு.  இதனை மறந்து/அறியாது இயற்கையை விட்டு விலகி நகரமய சூழலில் செயற்கையான பொருட்களுடன் நம் வாழ்வை அமைத்து கொண்டதே, இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு போனதற்கு காரணம்.


இயற்கை வாழ்க்கை முறை

இயற்கை எப்படி நிலம், நீர்,,வாயு, நெருப்பு.ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதோ அது போன்றே நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது...


"அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே"


இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் தேகமும் அந்த அளவு பவித்திரமானது.இதை அறிந்த நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிவாழ கற்றுக்கொண்டார்கள். அதனாலே நம் முன்னோர்களால் நோய் நொடி இல்லாமல் வாழமுடிந்தது. அந்த இயற்கையோடு இனிமையாக வாழும் கலைகளை வாழ்க்கை முறைகளாக வகுத்து வைத்தார்கள். நாமோ பகுத்தறிவு,  பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நமது முன்னோர்கள் சொல்லி வைத்த நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்றொன்றாக தொலைத்து கொண்டிருக்கிறோம்.


உலகில் உள்ள லட்சோபலட்ச உயிர்களும் இயற்கையையே ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன. அவைகள் எந்த வித மருத்துவ முறைகளோ, மருத்துவமனைகளோ, மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லாமல் நோயின்றி வாழ்கின்றன.ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை சாப்பிட்டு, உடலுழைப்பு இல்லாமல், அருந்த வேண்டியதை அருந்தாமல், கழிக்க வேண்டியதை சரிவர கழிக்காமல், உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு தானும் அவதிப்பட்டு அடுத்தவரையும் அவதிக்கு உள்ளாக்கி இயற்கைக்கு எதிராக நோய்நொடியுடன் காலம் கழிக்கிறான். இயற்கை வாழ்க்கை முறையை விடுத்து மற்ற மருத்துவ முறைகளை பின்பற்றுவதால் நாட்டில் நாளுக்கு நாள் நோய்கள் அதிகமாகின்றன. ஒரு நோயை குணப்படுத்த மருந்து உண்டால் பல புது நோய்கள் வருகின்றன. எனவே இந்த மருத்துவ முறை ஒரு பொருத்தமான தீர்வாக இருக்க முடியாது. 


குறைந்த பட்ச தேவைகள், சுகங்கள் கூட இன்றைய நிலையில் மனிதனுக்கு எட்டாக்கனியாகி விட்டது. நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த கஷ்டத்திற்கெல்லாம் மூல காரணம்.


இவையெல்லாம் இயற்கைக்கும், இயற்கை தர்மத்திற்கும் எதிராக செயல்பட்டதால் இயற்கை நமக்கு விதித்த தண்டனைகள். இந்த தண்டனையிலிருந்து வெளிப்பட இயற்கை வாழ்க்கை முறையை நம்பி சரணடைவதே வழியாகும். நல்ல வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.


நோய்கள், நோயாளிகள் அதிகமாக இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் மக்கள் இந்த உண்மையை அறிந்து கொண்டு இப்போது யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது, முளைக்கட்டிய பயறுகள் உண்பது, தண்ணீர் அதிகமாக குடிப்பது, புலால் உண்பதை நிறுத்துவது என்று பல இயற்கை முறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.


அவர்கள் எப்படி இதை அறிந்து கொண்டார்கள் என்றால், புறவாழ்க்கைத் தேவையின் உச்சத்தை அவர்கள் தொட்டு கையை சுட்டு கொண்டார்கள்.


நாம் என்னவென்றால் “இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசைப்படாதே” என்பதற்கு இணங்க நம்முடைய மூதாதையர்கள் கொடுத்த உன்னத அறிவை விட்டு விட்டு தவறான பாதையில் பயணித்து எல்லா துன்பங்களையும் வலிய வரவழைத்து கொள்கிறோம்.


இதைத் தான் நமது தேசப்பிதா தீர்க்க தரிசனமாக சொல்லி வைத்தார் அன்றே. “GOD FORBID THAT INDIA SHOULD EVER TAKE TO INDUSTRIALISM AFTER THE MANNER OF WEST ,IT WOULD STRIP THE WORLD BARE LIKE LOCUSTS” - MOHANDAS GANDHI


நோய்கள் எத்தனை? எந்த உறுப்பில் வந்திருக்கிறது? எத்தனை நாளாக இருக்கிறது என்பது இங்கு பிரச்னை அல்ல.  “எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும்”. அதனால் எரிவது என்ன என்று உணர்ந்து வாழும் வாழ்க்கை முறையை மாற்றிகொண்டால் இனிமையாக வாழலாம். எந்த நோயாக இருந்தாலும் இந்த முறையில் பரிபூரண குணம் அடையலாம். "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்கிறது குறள் மறை. அதற்கு முதலில் தேவை நம்முடைய மனமாற்றம் ஒன்றே.இவற்றிற்கெல்லாம் தீர்வு இயற்கை வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது. இயற்கையாக ஆரோக்கியத்தை கொடுக்கும் இயற்கை வாழ்க்கை முறையை விட்டு எல்லா பிரச்னைக்கும் மருந்துகளையும் வைத்தியர்களையும் தேடி அலைகிறோம். நாமிழந்த நம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை மறுபடியும் கொண்டு வர முடியாமலிருக்கிறோம், முயலாமலிருக்கிறோம். இனியாவது விழித்துக்கொண்டு நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே, நம் வீட்டிலேயே இருக்கிறது என்று அறிந்து கொண்டு மாற்றதை நோக்கி பயணிப்போம்.


"மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமற்றது". எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வோம் இனிமையாக.


நன்றி:இயற்கை வாழ்க்கை முறை(வலைப்பூ) இணைப்பு: http://iyarkaivazhkaimurai.blogspot.com

முக்கிய அறிவிப்பு: சென்னையில் இயற்கை நலவாழ்வியல் தொடர்பான ஒரு நாள் நேரடிப் பயிற்சி முகாம் வருகிற எட்டாம் தேதி (௦08-01-2012) அன்று பெருங்களத்தூர் சதானந்தபுரம் எனும் ஊரில் நடைபெற உள்ளது. இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகள் வாயிலாக நேரடிப் பயிற்சி பெற ஒரு அற்புத வாய்ப்பு. ஆர்வமுள்ள இயற்கை நலவாழ்வியல் அன்பர்கள் அந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் தொடர்பான அழைப்பிதழைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

வாழி நலம் சூழ...

பொதுநலம் கருதி வெளியிட்டவர்:

அஷ்வின்ஜி @ A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), சென்னை.
மேலும் விவரங்கள் பெற:94444171339

(தொடர்ந்து கனியும்...)

4 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

படிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

Ashwin Ji சொன்னது…

இது அநியாய ஃ பாஸ்ட். :)))
மின்னல் பின்னூட்டத்துக்கு நன்றி.

karthik சொன்னது…

இயற்கை வாழ்வியல் கருத்துக்கள் பிரமிப்பூட்டுகிறது. எத்தனை நாட்கள் என் வாழ் நாள் இயற்கையிலிருந்து தடம் புரண்டு விட்டது என வருத்தம் தொற்றிக்கொண்டது. இன்றிலிருந்து முடிந்தவரை இயற்கை மீறா வாழ்வுமுறை அனுசரிக்க முடிவு செய்துள்ளேன். வாழ்க வளமுடன்.

Ashwin Ji சொன்னது…

வாங்க கார்த்திக். இயற்கை நலவாழ்வியளுக்கு உங்கள் மீள்வரவு நல்வரவாகுக. நான் முப்பதாவது வயதில் இந்தத் துறையில் தீவிரமாக நுழைந்தேன். பின்னர் இருபது ஆண்டுகள் வழுக்கி விட்டேன். எனது ஐம்பத்தைந்தாவது வயதில் மீண்டு வந்திருக்கிறேன். எனக்குத் தான் இழப்பு அதிகம். ஆனா நீங்க அதிர்ஷ்டக்காரர்தான்.
நன்றி.
அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக