சனி, 8 பிப்ரவரி, 2014

நினைத்தது நிறைவேற குபேரத் தியானம் - 2


வசதியாக மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். கைகளை நீட்டித் தொடைகளுக்கு அருகில் அரையடி தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைகள் மேல் நோக்கி வானத்தைப் பார்த்து இருக்கட்டும். 

கைகள் இரண்டிலும் குபேர முத்திரையை வைத்துக்கொள்ளுங்கள்.

குபேர முத்திரை

கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் நுனியில் சேர்த்து வைத்து மற்ற இரண்டு விரல்களையும் மடித்து உள்ளங்கையைத் தொடுமாறு வைத்துக் கொள்க.

கால்களைச் சற்றுத் தோள்களின் அளவுக்கு [ஒன்றரை அடி அளவுக்கு] அகட்டி வையுங்கள்.

கால் சுண்டு விரல்கள் தரையில் படுமாறு வைத்துக் கொள்ளுங்கள்.கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். அப்படி மூச்சை உள்ளிழுத்து  வெளி விடும் போது உங்கள் உடலைத் தளர்த்துங்கள். 

இப்பொழுது நம் கவனத்தை ஒரு முனைப் படுத்திக் கால் விரல்களில் தொடங்கி உச்சந் தலை வரை செல்ல வேண்டும். மெல்ல மெல்ல உடலிலுள்ள இறுக்கம் குறைந்து கால் முதல் தலை வரை உடல் லேசாவதை உணருங்கள். நிம்மதியாக அமைதியாக இருங்கள்.

உங்கள் கவனத்தை மெல்ல இரண்டு கால் விரல்களின் மீது செலுத்துங்கள்.  கவனம் அங்கேயே இருக்கட்டும்.

மெதுவாகக் கால் விரல்களை அசைத்து விட்டுப்  பழைய நிலையில் வைக்கவும்.

இப்பொழுது மனதால் நினையுங்கள்.  இந்தக் கால் விரல்கள் ஓய்வு பெறுவதை உணருங்கள். மெல்லக் கால்விரல்களில் இருந்த இறுக்கம் எல்லாம் வெளியேறுவதை உணருங்கள். கால் விரல்கள் இருப்பதே தெரியாதது போல மிகவும் லேசாகிப் போவதை உணருங்கள். கால் விரல்கள் முழுதும் குளிர்ந்து ஓய்வில் புத்துணர்வு பெற்றதை உணருங்கள்.

இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் பாதங்களில் பதியட்டும். உங்கள் உடலைத் தாங்கி நிற்கும். இந்தப் பாதங்களில் இருந்து இறுக்கம் தளர்வதை உணருங்கள். அவையும் பாரத்திலிருந்து நீங்கி ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். அப்படியே உங்கள் கவனம் குதிகால்களுக்குச் செல்லட்டும். உடல் பாரம் நீங்கி ஓய்வில் அவை புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். 

இப்பொழுது உங்கள் கவனத்தைக் கணுக்கால்களில் பதியுங்கள். கணுக்கால்களில் இருந்த இறுக்கம்நீங்கி அவை ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். இப்பொழுது உங்கள் கவனம் உங்கள்கால்களில் இருக்கட்டும். கால்களில் இருந்த இறுக்கம் நீங்கி அவை ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள்.

உங்கள் கால்கள் மிக லேசாக நிம்மதியாக இருப்பதை உணருங்கள். அப்படியே உங்கள் கவனம் முழங்கால்களுக்குச் செல்லட்டும். இங்கிருந்த இறுக்கம் முழுவதும் விலகிப் போவதை உணருங்கள். மெல்ல மெல்ல முழங்கால்கள் மிகவும் லேசாகி விட்டன. இங்குள்ள இறுக்கமும் தளர்ந்து விட்டது. முழங்கால்கள் ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். சற்று நேரம் இதை உணர்ந்து அப்படியே மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்கள் கவனத்தைத் தொடைப் பகுதிக்குக் கொண்டு செல்லுங்கள். அங்கிருந்த இறுக்கம் முழுவதும் விலகி விடுவதை உணருங்கள். தொடைத் தசைகளும் எலும்புகளும்  மிகவும் லேசாகிப் போவதை உணருங்கள். இந்த உணர்வை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்கள் கவனம் இடுப்புப் பகுதிக்குப் போகட்டும். அங்கிருந்த இறுக்கம் முழுவதும் முற்றிலும் விலகுவதை உணருங்கள். இடுப்பில் உள்ள தசைகளும் எலும்புகளும் இவ்வாறே ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். இப்பொழுது உடம்பின் கீழ்ப் பாதி முழுவதும் ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். சற்றே இந்த உணர்வை அனுபவித்து மகிழுங்கள். ஒரு முறை நினைத்த உறுப்பை மீண்டும் நினைக்காதீர்கள். அப்படியே உங்கள் கவனம் முதுகு எலும்புகளின் மேல் செல்லட்டும். ஒவ்வொரு எலும்பிலிருந்தும் இறுக்கம் நீங்கி ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள்.

உங்கள் கவனம் இப்பொழுது வயிற்றுப் பகுதிக்குப் போகட்டும். அங்கிருந்த இறுக்கம் விலகுவதை உணருங்கள். இந்தப் பகுதி மிகவும் லேசாகி விட்டது. சுவாசிப்பதனால் அடி வயிற்றுப் பகுதி மெதுவாக அசைவதை உணருங்கள். மெல்ல வயிற்றைத் தளர விடுங்கள். இந்தப் பகுதி மிகவும் நிம்மதியாக இருப்பதை உணருங்கள். 

உங்கள் கவனத்தை இப்பொழுது நெஞ்சு விலா எலும்புகளுக்குக் கொண்டு செல்லுங்கள். இங்கிருந்த அழுத்தம் இறுக்கம் எல்லாமே நீங்கி இந்தப் பகுதி மிகவும் லேசாகி விடுவதை உணருங்கள். ஓய்வில் அவை புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள்.

(தொடரும்)

நன்றி:
பொறியாளர் அ.மெய்யப்பன், B.E., M.B.A., PG Dip in Yoga
யோகா ஆசிரியர் மற்றும் இயற்கை நல வாழ்வியல் நெறியாளர்.
சென்னை-600004

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

செய்து பார்ப்போம்... விளக்கத்திற்கு நன்றி...

Ashwin Ji சொன்னது…

வணக்கம் தனபாலன் ஜி. வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

கோமதி அரசு சொன்னது…


வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லி தந்த எளியமுறை உடற்பயிற்சியில் உடம்பைத் தளர்த்துதல் அல்லது ஒய்வு தரும் பயிற்சி என்று பெயர்.
குபேரத் தியானம் அதைப் இருக்கிறது.
அருமையான தியானத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
தொடர்கிறேன்.

Ashwin Ji சொன்னது…

உண்மைதான் அம்மா. பெயர்கள் வேறு வேறு.
செயல்பாடு என்னவோ ஒன்றுதான். கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.

கருத்துரையிடுக