திங்கள், 16 ஜனவரி, 2012

9. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் அனுபவப் பகிர்வுகள்.மூன்றாம் நாள் நிகழ்வுகள் 

மூன்றாம் நாள் நிகழ்வுகள் :- 28-12-2011: புதன் கிழமை காலை/முற்பகல்

திட்டமிட்டபடி அனைவரும் அதிகாலையிலேயே விழித்து யோகப்பயிற்சிக்குத் தயாரானோம்.

காலை மணி ஆறு
பள்ளியின் பின்னணியில் ஓங்கி உயர்ந்த கொடைமலை முகடுகளில் பனி கவிழ்ந்திருந்த காட்சியைக் காணக் காண மனசுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.

சிலீரென பனிக்காற்று வீசிக் கொண்டிருந்த அந்த இனிய காலைப் பொழுதில், பள்ளிப் பிரார்த்தனை மையத்தில் கூடிய அன்பர்களுக்கு நண்பர் பிரேம்குமார் சூரியநமஸ்காரம், பிராணாயாமம், மற்றும் சில எளிய பயிற்சிகளை கற்றுத் தந்தார்.

நிறைவாக சாந்தி ஆசனப் பயிற்சியை நான் அளித்து பயிற்சியை முடித்தோம்.  ஹாஸ்டல் கேண்ட்டீனில் இருந்து அனைவருக்கும் சூடான பிளாக்டீ கொண்டு வந்து வழங்கப்பட்டது. யோகப் பயிற்சியும், பிளாக்டீயும் சேர்ந்து தந்த புத்துணர்வில், கிடைத்த கொஞ்ச நேரத்தில் அன்பர்கள் சிலர் மைதானத்தில் வாலிபால் விளையாடினார்கள். எட்டுநடைப் பயிற்சி கற்றுத் தரப்பட்டது. பலதரப்பட்ட வாழ்க்கை பின்னணியில் இருந்து வந்திருக்கும் நாங்கள் எங்கள் வயதினை மறந்து குழந்தைப் பருவத்திற்குப் பின்னோக்கி பயணித்து எங்களை மறந்து கொண்டிருந்தோம்.

அடுத்த நிகழ்வுக்கு செல்லவேண்டுமே என்ற நினைவில் நாங்கள் எங்கள் டார்மிட்டரிக்கு சென்று சிறிது தேரத்தில் குளித்து விட்டு தயாரானோம்.  வரதமாநதி அணைக்கட்டுக்குச் சென்றோம். எங்களது முகாமில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் இருக்கிறது வரதமாநதி அணைக்கட்டு. இதன் உயரம் 65 அடி. இந்த அணையில் இருந்து கிடைக்கும் நீரை பயன்படுத்தி,  பழனி வட்டாரத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களின் 6,500 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. 


கடந்த முறை நான் வந்திருந்த போது நிரம்பி வழிந்த அணை.
கொடைக்கானல் மலைச்சாரலில் இருந்து பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு மூலமாக நீர்வரத்து பெற்று பழனி, திண்டுக்கல் மாவட்டக் கிராமங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றன.  குதிரையாறு அணைக்குத் நாளை செல்வதாகாக பயணத்திட்டம் உள்ளது. கடந்த முறை நாங்கள் ஷண்முக நதிக்கு நீர் கொண்டு சேர்க்கும் ஷண்முகம்பாறை என்ற இடத்துக்குச் சென்று வந்த நினைவுகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது. தனியார் நிலத்தின் வழியாக அனுமதி பெற்றுத் தான் இந்தப் பாறைக்குச் செல்ல இயலும். இந்தமுறை மாற்றாக வேறு ஒரு இடத்துக்கு செல்லலாமே என்று குதிரையாறு அணைக்குச் செல்லும் வாய்ப்பை யோகாச்சாரியா முருகன்ஜி உருவாக்கினார்.

காலை மணி எட்டு
நாங்கள் ஒரு பஸ்சில் ஏறி அணைக்கட்டு இருந்த இடத்தை அடைந்தோம். பஸ் நிறுத்தத்தில் இருக்கும் ஒரு மூதாட்டியின் கடையில் அனைவருக்கும் சூடான சுக்கு கஷாயம் கிடைத்தது. சிலர் ஒரு கோப்பைக்கு மேலேயே கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். பரிவுடனும் அக்கறையுடனும் எங்களை உபசரித்த அந்த மூதாட்டியுடன் நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இவருக்கு ஒரே மகன். கணவனை இழந்தவர். மகன் எந்த வேலையிலும் இல்லாமல் வெட்டியாக திரிந்து குடித்து பொழுதினை போக்கிக் கொண்டிருக்க அகவை ஐம்பத்தேழிலும் டீ, தோசை சுட்டு விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். நல்ல வேளையாக தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் தொகுப்பூதியம் பெறும் சமையல்காரர் பணியினை செய்து வருவதால் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது. தன் கையே தனக்குதவி என்று இந்த வயதிலும் உழைப்பு மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார் இந்தப் பெண்மணி.

அந்த மூதாட்டியின் அன்பான உபசரிப்புக்கு நன்றி தெரிவித்து, அணைக்கட்டை நோக்கி அனைவரும் நடந்தோம். கடந்த 2009 ஆண்டு இறுதியில் பழனியில் நடைபெற்ற இதே போன்றதொரு முகாமில் கலந்து கொள்ள நானும் பிரேமும் வந்திருந்த போது கூட இந்த அணைக்கட்டுக்கு நாங்கள் வந்திருந்தோம். 

அப்போது அணைக்கட்டு நிறைய தண்ணீர் நிறைந்து காணும் இடமெங்கும் பிரவாகமாக தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. இப்போது அந்த அளவிற்கு தண்ணீர் வரத்து அணையில் இல்லை. அணை ஓரளவுக்கு நிறைந்திருக்க, நீர் அணையின் மேற்புறமாக வழியவில்லை. கீழ்ப்புறமாக திறந்திருந்த வழியாக நீர் பிரவகித்து வெளியேறிக் கொண்டிருந்தது. 
 முகாமின் உணவுத் தயாரிப்பாளர் குடந்தை ரமேஷ்.

 அணையில் இருந்து வெளியேறும் சொற்ப நீர்.

 பாசனத்துக்காக கீழ்ப் பகுதி வழியாக வெளியேற்றப்படும் நீர்.

 ரம்யமான இயற்கைக் காட்சி.

தாய் மடியை நினைவு படுத்தும் மரகதப் பசுமை 

அந்தச் சூழ்நிலை மாசுபடியாத காற்று, சுத்தமான நீர்ப்பரப்பு, பறவைகளின் காலை நேர பூபாளராகங்கள் என சுற்றுப்புறம் மிகவும் அமைதியாக இருந்தது. நாம் குழந்தையாக இருந்தபோது நிம்மதியாகப் படுத்திருந்த தாய்மடி தந்த உணர்வும் நிம்மதியும் எங்களை ஆட்கொண்டது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பழநி வரதமாநதி அணையை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பழநி-கோடைக்கானல் ரோட்டில் வரதமாநதி அணை உள்ளதால் நிறைய சுற்றுலாப் பயணிகள் இந்த அணையைக் கடந்து செல்கிறார்கள்.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில், குளுமையான சூழலை வழங்கும் பசுமையான மரங்கள் பல உள்ளன. இவை தவிர குடும்பத்தினருடன் பொழுது போக்குவதற்கான பூங்காவும் உள்ளது. பண்டிகை காலம் மட்டுமின்றி வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில், இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கையோடு கொண்டு வரும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட பின்னர் சுற்றுலா வருவோர் விட்டெறியும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை அகற்றாமல் சுற்றுச்சூழல் மாசுபடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

அனுமதி இலவசம் என்பதாலோ என்னவோ அணையை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பது சுகாதார சீர்கேடுகளில் இருந்து தென்படுகிறது. அணை அருகே மலைக்குன்றில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு அறையும், பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால், இங்குள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலை செடிகளுக்குள் மறைந்து காணப்படுகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு அமைப்புகளும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இவற்றை பயன்படுத்தும் வகையில் சீரமைத்து, அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.இதுபற்றி நாளிதழ்களில் பலமுறை செய்திகள் வெளியிட்டும் நிர்வாகம் பாராமுகமாக இருப்பதாக இந்தப் பகுதி மக்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள்.

காலை மணி ஒன்பது:
நாங்கள் அனைவரும் அணைக்கட்டில் ஏறி சென்று பின்னணியில் பரவிக் கிடக்கும் நீர்ப் பரப்பை கண்களால் அளக்க முயன்று தோற்றுப் போனோம். இயற்கை அழகை அனைவரும் தம்முடன் கொண்டு வந்திருந்த காமிராவுக்குள் போட்டி போட்டுக் கொண்டு படங்களாக சேமித்துக் கொண்டார்கள். 





கொஞ்ச நேரம் அழகை ரசித்த பின்னர் ஒரு அமைதியான இடம் பார்த்து கொண்டு வந்த விரிப்பினை விரித்து அமர்ந்தோம்.அனைவருக்கும் பலவிதமான பழங்கள் சாப்பிடத் தரப்பட்டன. 

சிந்தனை விருந்துக்கு முன்னர் கொஞ்சம் கனி விருந்து.

யோகசாரியாவுடன் முகாம் அன்பர்கள்.

கடந்த முறை முகாமுக்கு வந்திருந்த செந்தில் அவர்களின் தம்பி.

சற்று நேரத்தில் யோகாசாரியா முருகன்ஜி வந்து சேர்ந்தார். தியான பயிற்சி துவங்குவதற்கு முன்னதாக முருகன்ஜி என்னைப் பேச அழைத்தார். பயிற்சி பெறும் மாணவனாக வந்த என்னை அழைத்த வியப்பின் மேலீட்டால் தயங்கிய நான் முதலில் நன்றிகளைத் தெரிவித்து எனது எண்ணங்களை பகிரத் தொடங்கினேன்.

(பகிர்வுகள் தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக