திங்கள், 2 மே, 2011

6. கனி இருப்ப... மனித உடல் எனும் மாபெரும் 'ஆ'ச்சரியம்

கனி இருப்ப.
(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்.)

முந்திய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்:






கனி இருப்ப... தொடர்கிறது....

பகுதி ஆறு:
'என்னை இறைவன் நன்றாக வைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே' என்பார் திருமூலர். உடம்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதையே மெய்யுணர்வு (அ) மெய்ஞானம் என்றும் கூறலாம். இதைத்தான் 'உள்ளத்திலே சீவன் உறைகின்றானென்று உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்ததேனே' என்பார் திருமூலர். உலகிலேயே மிகப் பெரிய பொய், நிலையாத இந்த உடல்தான் என்னும் மெய்யை உணர்த்துவதால்தான் பொய்யான இந்த உடலை மெய் என்றார்கள் ஞானிகள்.  ஆனால் உலக வாழ்வுக்கு இந்த உடல்தேவையாக இருப்பதினால் உடலை வளர்க்கும் உபாயம் பற்றி எல்லாம் ஞானிகள் கூறுகிறார்கள். மனித உடல் ஒரு அற்புதமான இறையருட்கொடை. உடலின் எல்லா உறுப்புகளும் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்களும் அறிவியலார்களும் வியந்து பாராட்டுகிறார்கள்.பல மில்லியன் ஆண்டுகளாக தொடர் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் மூலம் இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஓயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது.
  • கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. 
  • மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ 
  • நீரின் அளவு:மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.
  • இதயம்:இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.
  • பிட்யூட்டரி சுரப்பி:மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 
  • உடலின் வளர்ச்சி:ஒருமனிதன் 25 வயதில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குருத்தெலும்புகள்   காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். 
  • இதயத் துடிப்பு:ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும் நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 
  • சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான்.  வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும் முதுகில் உள்ள குருத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. 
  • ரோமங்கள் (முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. 
  • எலும்புகள்:குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம். 
இப்படி எண்ணற்ற வேலைகளை ஓயாமல் உடல் செய்து கொண்டே இருக்கிறது.  இந்த வேலைகள் நின்றுவிட்டால் வாழ்க்கை ஓட்டமும் நின்று விடுகிறது. இந்த செய்திகளை நான் திரு வடிவுடையானின் வலைப்பூவில் இருந்து எடுத்தாண்டிருக்கிறேன். அருமையான செய்திகளை தந்தமைக்கு நன்றி: திரு.வடிவுடையான் அவர்களின் வலைப்பூ:http://vcvadivudaiyan.com/blog/archives/282

(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி.

4 கருத்துகள்:

Chittoor Murugesan சொன்னது…

அஷ்வி ஜி,
நல்லா உழைச்சு அற்புதமா எழுதறிங்க. ந்ல்லாருக்கு. ஹ்யூமன் பாடி ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல பண்ற வேலைய
மெஷின் கொண்டு செய்ய வச்சா எத்தனை செலவாகும்னு ஒரு பட்டியல் போட்டா இன்னம் டர்ராவாய்ங்க.

உ.ம்: டயாலிசிஸ்,வென்டிலேட்டர்

Ashwin Ji சொன்னது…

தகைமை சால் அன்பர் முருகேசன் அவர்களுக்கு, தங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு இதய நன்றி. பின்னூட்டத்துக்கு கால தாமதமாக பதி இடுவதற்கு என்னை மன்னியுங்கள். நான் மூன்றாம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு பெருகமணி(திருச்சி)யில் நடைபெற்ற ஐந்து நாள் இயற்கை நலவாழ்வியல் முகாமில் கலந்து கொண்டு விட்டு இன்று தான் (ஞாயிறு இரவு பத்து மணிக்கு) இல்லம் திரும்பினேன். நீங்கள் சொன்ன மாதிரியே இயந்திரங்கள் இந்த பணிகளை செய்தால் என்ன செலவாகும் என்பதை விரைவில் பதிவிடுகிறேன். ஆதரவுக்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் மீண்டும் நன்றி.

அஷ்வின்ஜி

Chittoor Murugesan சொன்னது…

அஷ்வின் ஜி,
நல்ல விஷயங்களை எழுதுகிறீர்கள். இது நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒரு கருத்து:

1.உங்கள் நடை ரெம்ப டென்ஸ் (அடர்த்தி)
2.கிழவாடிங்க மனம் திரும்ப மாட்டாய்ங்க. சின்ன பசங்களை தான் திருத்த முடியும்.அவிக பாய்ண்ட் ஆஃப் வ்யூவ சேர்த்துக்கங்க

வாழ்த்துக்கள்

Ashwin Ji சொன்னது…

வணக்கம் திரு.முருகேசன்.
தங்களின் அன்பான ஆக்கபூர்வமான பின்னூட்டத்துக்கு இதய நன்றி. எனக்கு இப்போது ஐம்பத்தைந்து வயதாகிறது. கிழவாடி தான் நானும். :)))
தப்பித் தவறி வலைப்பூவில் விழுந்தவன் நான். மழைக்கு ஒதுங்கியது மாதிரி. ஜனரஞ்சகமாக எழுதுவதில் உங்கள் அளவுக்கு எனக்கு திறமை போதாது.இன்னும் பழக வேண்டும். பார்ப்போம்.
தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்துக்களை தாருங்கள்.
அன்புடன்,
அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக