ஞாயிறு, 27 மார்ச், 2011

மாற்றுமருத்துவம் என்றால் என்ன?

உலகளாவிய அளவில் கோலோச்சும் அலோபதி மருத்துவ முறைக்குப் பதிலீடாக அந்தந்தக் கலாச்சார மற்றும் வாழ்வியல் பிண்ணனிகளோடு பிணைந்திருக்கும் பாரம்பரியமான மருத்துவ முறைகள் (உ-ம்:இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா,ஹோமியோபதி,யுனானி,அக்குபஞ்சர், ரெய்கி, மலர் மருத்துவம் போன்றவை) மாற்று மருத்துவ முறைகள் என அழைக்கப்படுகின்றன.

அவற்றின் நம்பகத்தன்மை?
நூற்றாண்டுகளைத் தாண்டியும் தன் செல்வாக்கினை இழந்துவிடாமல் இன்னும் அலோபதியின் தாக்குதல்களை சமாளித்துத் தாக்குப்பிடிக்கும் திறன் ஒன்றுபோதாதா? இருக்கட்டும்...

ஆயுர்வேதத்தின்(ஆயுள்+வேதம்- வாழ்க்கையின் வேதம்) வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பாருங்கள்... இன்றைக்கு நவீன அறிவியல் முறை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே... அந்த காஸ்மெடிக் சர்ஜரி பற்றி புட்டுப் புட்டு வைக்கிறார் ஆயுர்வேதத்தின் மூலவர்களில் ஒருவரான சுஸ்ருதர். ரணசிகிச்சையும் சத்திர சிகிச்சையும் ஆயுர்வேதத்தில் வலிமையாகவே இருக்கின்றன.

தென்னாட்டின் பாரம்பரியமான சித் தவைத்திய மரபின் மூலிகைச் செல்வங்களைத் தானே அலோபதி தன் நவீன சோதனைச் சாலைகளில் பகுப்பாய்வு செய்து தன் சுயக் கண்டுபிடிப்பாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது?? (இல்லையென்று மறுப்போர்க்கு ஒரு கேள்வி... ஏன் ஆயுர்வேதம் மற்றும் சித்தாவின் முக்கிய மருந்தினங்களாகத் திகழும் வேம்பு, பாகற்காய், மஞ்சள் போன்றவற்றுக்கு திருட்டுத் தனமாக மேலைநாட்டு மருந்தியல் ஆய்வு நிறுவனங்கள் காப்புரிமை பெறுவதில் தீவிரம் காட்டுகின்றன?)

"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள் எண்: 948)" என்ற குறளின் பொருளை மிக முழுமையாய் நிறைவு செய்யும் வகையில் "நோய்க்கு மருந்தல்ல நோயாளிக்குத் தான் மருந்து" என்று கூறி மருத்துவத் துறையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது ஹோமியோபதி.. (டாக்டர் ஹானிமன் அல்லோபதி மருத்துவராக இருந்து அம்மருத்துவ முறையின் குறைபாடுகளை களைய ஹோமியோபதி முறையை கண்டு பிடித்தவர்.)

ஒரே மாதிரியான நோய் பலருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித மருந்து என்ற நடைமுறையிலும் நோயாளியின் உடல், மன மற்றும் சமூகக் கூறுகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சையை மேற்கொள்ளும் ஹோமியோவின் சிறப்புக்களை நானே அனுபவித்துப் பார்த்து வியந்திருக்கிறேன். எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.

மேலும் விரித்துக் கூறப்போனால் இது பெருந்தொடராக எழுதவேண்டிய பதிவாக மாறிவிடும்

ஏன் வேண்டும் மாற்றுமருத்துவம்?
அலோபதி மருத்துவமும், அதுசார்ந்த மருந்தியல் நிறுவனங்களும் நோயாளிகளை வெறும் வாடிக்கையாளர்களாக நுகர்வு பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் அவலம் இன்று தலைவிரித்து ஆடுகின்றது. எப்போது ஒரு மருத்துவன் "தான் முதல் போட்டு நடத்துகிறேன். எனவே தனக்குத் தன் முதலையும், வட்டியையும் மீட்டாக வேண்டும் (MBBS சீட்டுக்கு 50-100 லட்சங்களில் நன்கொடை??)" என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறானோ அப்போது அவன் உன்னதமான தொழில் noble profession செய்பவன் என்ற நிலையிலிருந்து லாபநோக்குடன் வியாபாரம் profittable profession செய்பவன் என்ற நிலைக்குக் கீழிறங்குகின்றான்.

பொதுவாகவே மக்களை வெறும் நுகர்வோராக மாற்றும் கலாச்சாரச் சீரழிவைத் தடுக்கவேண்டிய அவசியத்தில் தேசம் இருக்கும் நிலையில் மாற்று மருத்துவ முறைகள் இயல்பாகவே அதைச் செய்து வருகின்றன. உதாரணமாக பசுமை வளர்க்கும் கட்டாயத்தில் உலகம் இருக்கும்போது சித்த வைத்திய முறையும், ஆயுர்வேதமும் பசுமையான மரஞ்செடி,மூலிகைகளைச் சார்ந்திருப்பதை சுட்டிக்காட்டலாம்.

அதுமட்டுமல்லாமல் அலோபதி மருத்துவம் மனிதனை எந்திரமயமாக- தலையில் பிரச்சினை என்றால் தலைக்குத் தான் மருந்து, சிறுநீரகத்தில் கோளாறு என்றால் அங்கு மட்டும்தான் சிகிச்சை- என்ற அளவில்தான் பார்க்கின்றது. ஆனால் சித்தா, ஆயுர்வேதம்,ஹோமியோ போன்றவை மனிதனை ஒரு முழுமையான உயிர்த்தொகுப்பு என்ற கோணத்தில் அணுகுகின்றன.

மேலும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மூன்று வேளை உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு வறிய தேசத்தில் பெருமளவில் ஊக்குவிக்கப்பட வேண்டியதாய் இருக்கின்றன இம்மாதிரியான மாற்று மருத்துவ முறைகள்.

இந்த இடத்தில் சீனாவில் கலாச்சாரப்புரட்சி நடந்தபோது மாவோ அறிமுகப் படுத்திய 'வெறுங்கால் வைத்தியர்கள்' (மக்களைத் தேடிச்சென்று பாரம்பரியமுறையில் எளிமையாக வைத்தியம் செய்வது) என்ற திட்டமே சீனாவின் வைத்தியத் தேவையை மிக அதிக அளவில் ஈடுகட்டியது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும் உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது ஆய்வறிக்கை ஒன்றில் 70 சத நோய்களை சாதாரண மருத்துவ அறிவு இருந்தாலே குணப்படுத்தமுடியும்; அதற்கு 10-ம் வகுப்புக் கல்வித்தகுதி இருந்தாலே போதும் என்று கூறியிருக்கிறது. அதனடிப்படையில் கல்பாக்கத்தைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர் திரு.ராஜரத்தினம் என்பவர் தனது தொண்டமைப்பின் வாயிலாக மேற்கூறிய "வெறுங்கால் வைத்தியர்கள்" போன்றதொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் என்பதையும் உற்று நோக்க வேண்டும்.

என்ன செய்யவேண்டும்?
1) மாற்றுமருத்துவமுறைகளைப் பற்றிய மிகப்பெரும் ஆராய்ச்சிகளை அரசும் மக்கள் நலன்சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் முன்னெடுக்க வேண்டும்

2) மாற்றுமருத்துவம் பற்றிய தெளிவான கொள்கைத்திட்டத்தை அதற்குரிய கொளகை வகுப்பாளர்களைக் கொண்டு வகுத்திடல் வேண்டும்

3) மக்களிடையே இதுபற்றிய பிரச்சாரங்களை முறையான திட்டமிடலுடன் மேற்கொள்ள வேண்டும்

4) மாற்றுமருத்துவம் என்பது ஒரு தேசத்தின் சுயச்சார்பான பொருளாதாரத்திற்கு அவசியமானது என்ற புரிதலும், அக்கறையும் ஆட்சியாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வரவேண்டும்

5) பகாசுர பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளை தீவிரமாக ஒடுக்கிட அரசை வலியுறுத்தக் கோரி மக்கள்நலன் சார்ந்து இயங்கும் அனைத்து இயக்கங்களும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்

மாற்று மருத்துவம் பற்றிய இந்தக் கட்டுரை http://vinthaimanithan.blogspot.com/2010/07/dr.html வலைப்பூவில் இருந்து வெளியிடப்பட்டது. முழுதாக வாசிக்க விந்தைமனிதன் வலைப்பூவுக்குச் செல்லுங்கள்.
நன்றி: விந்தைமனிதன் வலைப்பூ.
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக